இலங்கையை உலுக்கிய மாணவியின் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று நடத்தப்பட்டதில், பலத்த காயங்களினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (8) பிற்பகல் தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக பாடசாலை சீருடையில் சென்ற குறித்த மாணவி, சிறிது நேரத்திலேயே பலமுறை தற்கொலைக்கு முயன்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு அறையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்குள் அவர் பல தடவைகள் குதிக்க முயற்சித்தமை அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

எனினும் இந்த மாணவியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பு, கொம்பனி வீதி அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் நெருங்கிய தோழி இந்த சிறுமி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை தனது நண்பர்களின் மரணத்தினால் கடந்த சில மாதங்களாக தனது மகள் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக மாணவியின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதேவேளை பாடசாலை மாணவி ஒருவர் கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு, தாமரை கோபுரத்தின் முகாமைத்துவ நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் , கடந்த 7 ஆம் திகதி கொழும்பு, தாமரை கோபுரத்திலிருந்து கீழே குதித்து 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொழும்பு, தாமரை கோபுரத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு எமது இரக்கங்களைத் தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இன்றையதினம் (09.10) நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல உத்தரவிட்டது.

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட வழக்குகளை தொடரப்பட்டிருந்தது.

அது தொடர்பில் ஒக்டோபர் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ம் திகதி உத்தரவிட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

நாட்டில் இன்றும் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகபட்சமாக 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வன்னியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வேட்புமனுத்தாக்கல்!!

வன்னிமாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவினை அகிலஇலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இன்றையதினம் (09.10.2024)தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னித்தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியானது சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இதனையடுத்து இன்று மதியம் வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ்தூபி்க்கு சென்ற வேட்பாளர்கள் அங்கு அஞ்சலியில் ஈபட்டிருந்தனர். அதன்பின்னர் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் சுப
நேரத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தனர்.

இதன்போது வன்னிமாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன்,மற்றும் ஏனைய வேட்பாளர்கள், சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

முள்ளியவளையில் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

முல்லைத்தீவு, முள்ளியவளை நகர் பகுதி வீதியில் மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு வகுப்பிற்காக உயர்தர மாணவி ஒருவர் சென்றுள்ளார்.

குறித்த மாணவி வகுப்பினை முடித்து விட்டு பேருந்து நிலையம் நாேக்கி நடந்து சென்ற போது முள்ளியவளை பிராந்திய சுகாகார சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனின் வாயில் துணியை திணித்து கொலை செய்த மனைவி!!

அனுராதபுரத்தில் கணவனை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நொச்சியாகம, வல்பலகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றில் குடும்ப தகராறு இடம்பெறுவதாக நொச்சியாகம பொலிஸாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பொலிஸார் வீட்டுக்குள் ஒருவர் மயங்கிக் கிடந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர், வைத்தியர்கள் பரிசோதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

38 வயதுடைய இந்த நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகவும், அவ்வாறான நேரங்களில் அயலவர்களையும் திட்டியதாகவும் தெரியவந்துள்ளது.

கணவனை கத்துவதனை தடுக்க அவரது வாயை துணியை திணித்ததால் அவர் மயக்கமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்னர். உயிரிழந்தவரின் சடலம் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அவரது 42 வயது மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் உப்புல் தரங்கவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!!

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதாக உப்புல் தரங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

உப்புல் தரங்க தற்பொழுது இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  உப்புல் தரங்கவை விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டி பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த லெஜன்ட்ரோபி ரி20 கிரிக்கெட் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்வதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக உப்புல் தரங்க முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளில் உப்புல் தரங்க இன்று சாட்சியமளிக்க தவறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டி தொடரில் உப்புல் தராங்க கண்டி ஆர்மி அணிக்காக விளையாடியிருந்ததுடன் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜையான யோகி பட்டேல் என்பவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு உப்புல் தரங்கவை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த அழுத்தம் தொடர்பில் உப்பு தரங்க முறைப்பாடு செய்திருந்தார். இன்றைய தினம் உப்புல் தரங்கவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட இருந்தது.

இந்த நிலையில் உப்புல் தரங்க நீதிமன்றிற்கு அறிவிக்காது அமெரிக்க நேஷனல் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். எனவே அவருக்கு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் மதிய உணவு நிறுத்தப்பட்டதா?

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த தகவல் அனைத்தும் பொய்யானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் தொடரும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் பயணித்த பாம்பால் பதறிப்போன பயணிகள்!!

குருநாகலில் இருந்து நேற்று காலை (7) மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்ற , சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்த நிலையில் , இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

பயணிகள் போட்ட சத்தத்தில் பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதை அடுத்து பயணிகள் அலறியடித்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும், பாம்பின் பயத்தால் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்து அதே பஸ்ஸில் பயணம் செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.

துடிதுடித்து உயிரிழந்த தாய், மகன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் மின் கட்டணம் கட்டி விட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி. இவரது மனைவி ஜெயஸ்ரீ (32).

இவர்களது மகன் ஆலன் (15). அரசு பள்ளி ஒன்றில் ஆலன் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் நூலகம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் சென்றுள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்தி விட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஜி.எஸ்.டி., சாலையில் ஒரகடம் சந்திப்பின் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.

இதில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்த யுவராஜ் (54) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தொடர்ந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து மோதியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுநீர் கழிப்பதில் தகராறு : உறங்கிக்கொண்டிருந்தவர் மீது தாக்குதல்!!

டெல்லியில் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட தகராறில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய்யுள்ளது.

காணொளியில், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் நபர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் போர்வையை விலக்கி கட்டையால் தாக்க தொடங்குகிறார்.

பின்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் அங்கிருந்து தப்பித்து செல்கிறார். சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், ஆர்யன் என்பவரை கைது செய்தனர்.

ஆர்யன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் வேலை பார்த்து வந்த ராம்பால் அதை தடுத்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியமை விசாரணையில் தெரிய வந்தது.

வறுமையில் இருந்து செல்வந்தர் : கோடீஸ்வரரான இலங்கையின் துப்புரவுத் தொழிலாளி!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசிக்கும் இலங்கையில் பிறந்த வினுல் கருணாரத்ன துப்புரவுத் தொழில் செய்து கோடீஸ்வரராகியுள்ளார்.

இதனை அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஒன்று, ”இது ஒரு உண்மையான வறுமையில் இருந்து செல்வந்தரின் கதை” (“ராக்ஸ் டு ரிச்சஸ் ஸ்டோரி” (rags to riches story) என்று குறிப்பிட்டுள்ளது.

25 வயதான கருணாரத்ன தனது பகுதிநேர வேலையை முழு நேர வேலையாக மாற்றிக்கொண்டதாக செய்திச்சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் வினுல் கருணாரத்ன தனது கனவு கார் மற்றும் இலங்கையில் உள்ள தனது பெற்றோருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் அளவுக்கு சம்பாதித்துள்ளார்.

“நீங்கள் எவ்வளவு வேகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு வேலைகளைச் செய்து முடிக்க முடியும், மேலும் அதிகப் பணம் சம்பாதிக்க முடியும்” என்று அவர் தமது நேர்காணல் செய்த தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.

இதேவேளை இணைய மற்றும் கையடக்கபேசி சந்தையை வழங்கும் அவுஸ்திரேலிய நிறுவனமான Airtasker இன் தரப்பட்டியலின்படி, சிறந்த 10 வருமானம் ஈட்டுபவரில் கருணாரத்னவும் உள்ளடங்கியுள்ளார்

ஏர்டாஸ்கர் தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஃபங் இது தொடர்பில் கூறும்போது, கடினமாக உழைப்பதன் மூலம் எவரும் தீவிரமாக பணம் சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவி தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 16 -18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ள நிலையில், அவர் வண்ணமயமான ஆடைகளை அணிந்து தாமரை கோபுரத்திற்கு தனியாக சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் கைப்பை தாமரை கோபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு கையடக்க தொலைபேசியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியில் உள்ள கண்காணிப்பு அறையில் அவர் இருந்ததாகவும், 3ஆவது மாடியில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மருதானை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர், கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் கொள்ளுப்பிட்டியை சேர்ந்த ராத்யா குணசேகர என்ற மாணவி எனவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் தோழி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இருவரின் மரணத்தினால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்த நிலையில் மாணவின் விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து மாணவி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மாணவி வீழ்ந்தமை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நோக்கி சென்ற பயணிகள் பேருந்துகள் மீது தாக்குதல்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்துகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பேருந்தின் கண்ணாடி உடைந்த நிலையில், அதன் சாரதி காயமடைந்துள்ளார். வெவ்வேறு பகுதிகளில் வைத்து மூன்று பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

கொழும்பில் இருந்து யாழ் சென்ற தனியார் அதிசொகுசு பேருந்து மீதும், பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற பேருந்து மீது கிளிநொச்சியில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பதுளை – யாழ்ப்பாணம் பேருந்து, பரந்தன் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

எனினும் இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் தொடர்பில் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் கடை ஒன்று தீக்கிரை : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

முல்லைத்தீவு – சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் இன்று (08.10.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன் இருந்த களஞ்சியசாலை ஒன்றுமே தீயில் எரிந்துள்ளது.

 

இதன்போது குறித்த வீதிவழியாக சென்ற அரச பேருந்து சாரதி, நடத்துனர் இதனை அவதானித்து அயல்வீட்டினரின் உதவியுடன் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் திட்டமிட்ட செயற்பாடா அல்லது மின் ஒழுக்கினால் ஏற்பட்ட தீயா என பல கோணங்களில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்தோடு மின்சார சபையினர் , தடயவியல் பொலிஸார் இணைந்து மேலதிக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலுக்காக 13 பேரை கொன்ற இளம் பெண் : சினிமாவை மிஞ்சிய சம்பவம்!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள் 13 பேரை இளம்பெண் விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் , சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து 13 பேரும் உயிரிழந்தனர். பிரேத பரிசோதனையில் அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

அதாவது உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தந் நிலையில் அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடும் ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலன் யோசனைபடி அவர் அரங்கேற்றியுள்ளார். அதாவது வீட்டில் ரொட்டி சமைக்க பயன்படுத்தும் கோதுமை மாவில் விஷத்தை கலந்துள்ளார்.

இதுதெரியாமல் சம்பவத்தன்று அந்த கோதுமை மாவில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் ரொட்டி சமைத்து சாப்பிட்டு அனைவரும் உயிரிழந்துள்ளனர். பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில் இச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.