கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், விடைத்தாள் திருத்துபவர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அவிசாவளை, மாதோல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று (23) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பயணிகள் இறங்குவதற்காக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் உடல் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு சந்திரனால் ஏற்படும் சனி கிரகணத்தை காணக்கூடிய அரிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18 ஆண்டுகளுக்கு பின்பு காணப்படும் சனியின் சந்திரகிரகமானது இன்று 24ஆம் திகதி காணப்படும் என்று கூறப்படுகின்றது இந்த நிகழ்வானது மீண்டும் 2037ஆம் ஆண்டு மக்களுக்குப் புலப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தின் மாபெரும் கிரகமான சனியின் அபூர்வ நிகழ்வு இன்று நள்ளிரவில் சந்திரனிடம் இருந்து மறைகிறது. அதன்படி, சந்திரன் சனி கிரகத்திற்கு முன்னால் செல்லும்போது, அது பூமியின் கண்ணுக்கு தெரியாததாக மாறி, சுமார் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் சந்திரனால் மறைக்கப்படும்.
இந்த அரிய நிகழ்வை தங்கள் கண்களால் காணும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வானது இலங்கையை தவிர இந்தியா , மியான்மர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்தை வெவ்வேறு காலகட்டங்களில் காண முடிகிறது.
வெறும் கண்களால் இந்நிகழ்வினைக் காணமுடியும் என்றாலும், சனியின் வளையங்களைக் காண்பதற்கு சிறிய தொலைநோக்கி பயன்படுத்த வேண்டும்.
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளமையுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
துவிச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் மாறி முற்பட்ட சமயத்தில் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயங்களுக்குள்ளாகியமையுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை CCTV காணொளி உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.
பதுளை(Badulla) – பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் தனது பத்து வயது மகளை தவறாக செயற்பாட்டிற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(22.07.2024) இடம்பெற்றுள்ளது.
பசறை வெல்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில், பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் கடந்த இரண்டு மூன்று தினங்களாக மாற்றங்கள் காணப்பட்டுள்ளன.
மாற்றம் குறித்து சிறுமியின் தாயார் கேட்டபோது, கடந்த 19ஆம் திகதி தாய் வயல் வேலைக்குச் சென்ற போது தந்தையால் தனக்கு நேர்ந்த கொடுமை தொடர்பாக சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியின் தாய் பசறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகநபரான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது, பாதிக்கப்பட்ட சிறுமி பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வைத்திய பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரான சிறுமியின் தந்தை பசறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணம் மோசடியாக பெற்ற 18 வயதுடைய யுவதியும், யுவதியின் காதலனும்கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேக நபரான யுவதியான காதலி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்று இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, யுவதியின் தோழி தனது ஏ.ரி.எம் அட்டையைப் பயன்படுத்தி 10 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்ற பின் ஏ.ரி.எம் அட்டையை தனது கையடக்கத் தொலைபேசியின் அட்டைக்குள் வைத்துள்ளார்.
இதனை அவதானித்த யுவதி, புகைப்படம் எடுப்பதாகக் கூறி தனது தோழியின் கையடக்கத் தொலைபேசியை பெற்றுக்கொண்டு அதிலிருந்த ஏ.ரி.எம் அட்டையைத் திருடியுள்ளார்.
பின்னர், இருவரும் தங்களது வீட்டிற்குச் சென்ற பின்னரே தோழி தனது ஏ.ரி.எம் அட்டை காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். அதிர்ச்சியடைந்த தோழி யுவதியின் வீட்டிற்குச் சென்று அவரது பையை சோதனையிட்ட போது தனது ஏ.ரி.எம் அட்டையைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து, யுவதியின் தோழி இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த நிலையில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்டதாகக் கூறப்படும் 310,000 ரூபா பணம் யுவதியின் காதலனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – பன்றிகெய்தகுளம் பகுதியில் தனிநபர் ஒருவரால் அரச காணியை 16 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு அப் பகுதி சமூக அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரதச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேற்று (22.07) வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோருடன் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, வவுனியா, பன்றிக்கெய்தகுளம் மற்றும் அதனையண்டிய பகுதிகளில் கூட பலர் காணியின்றி இருக்கும் போது வெளிமாவட்டத்தவர்கள் உள்ளடங்களாக புதிதாக 16 குடும்பங்களை எமது கிராமத்தில் குடியமர்த்த வெளிநாட்டில் இருந்து வந்து நிற்கும் தனிநபர் ஒருவர் முயற்சி செய்கின்றார்.
அரதசாங்கத்தால் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட காணியினை முறையான மாற்றீடு செய்யாது அரச காணியில் தனிநபர் தான் விரும்பிய குடும்பங்களை குடியமர்த்த முயல்கிறார். இதனை ஏற்க முடியாது. எமது மாவட்டத்தில் பலர் காணியில்லாது இருக்கின்ற நிலையில் வெளி மாவட்த்தில் இருந்து மக்களை குடியமர்த்த முயல்வது பிழையான செயற்பாடு.
அடுத்து, எமது மாவட்டத்திற்கு என 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் அனுமதி வழங்காது வேறு அரசியல்வாதிகள், வேறு மாவட்ட எம்.பிகள் எமது மாவட்டத்தில் குடியேற்றத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கியதாக குடியமர்த்தும் வெளிநாட்டு நபர் கூறுகின்றார். இதற்கு எமது மாவட்ட எம்.பிகளே முடிவு காண வேண்டும். இத்கு எமக்கு தீர்வு வேண்டும் என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதன்போது, அரச சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த காணி தனிநபரால் வழங்க முடியாது. அதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டது என இதன்போது மாவட்டஅரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதியளித்ததாக பொது மக்கள் தெரிவித்தனர்.
வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் சமீபகாலமாக நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது.
இதன் விளைவாக தங்க நகைகளை அடமானம் வைக்கும் செயற்பாடு பொதுமக்களிடத்தில் வேகமாக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகளில் அடமான முன்பணம் பெற்ற குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கர்நாடகத்தில் 25 விரல்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்தவர் பாரதி (வயது 35). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பாரதி பிரசவத்திற்காக ராபகவி டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.
அதாவது வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையை பார்த்து மருத்துவர்களும் மற்றும் குழந்தையின் குடும்பத்தினரும் ஆச்சரியம் அடைந்தனர். குழந்தை தொடர்பில் மருத்துவர்கள் கூறுகையில்,
“பாரதியின் குழந்தைக்கு 25 விரல்கள் உள்ளன. மற்றபடி குழந்தையின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” என்றனர்.
மணமகன் திட்டியதற்காக திருமணமாகி முன்றே நிமிடத்தில் பெண் ஒருவர் விவாகரத்து செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விசித்திர சம்பவம் துபாயில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், துபாயில் ஒரு தம்பதி உறவினர்களை அழைத்து மிகவும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தவுடன் அத்தம்பதி அங்கிருந்து புறப்பட்டனர்.
அப்போது மணமகள் திடீரென கால் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவருக்கு கை கொடுத்து உதவி செய்வதற்கு பதில், மணமகன் மணப்பெண்னை திட்டிய சம்பவம் தான் விவாகரத்து செய்ய காரணமாகியுள்ளது.
இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்திருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மணமகள் கீழே விழுந்தவுடன் கோபம் அடைந்த மணமகன், ”முட்டாள் பார்த்து நடக்கமாட்டாயா” என புத்தம் புது மனைவியை திட்டியுள்ளார்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தன்னை தனது கணவர் முட்டாள் என்று கூறி அவமரியாதை செய்ததை மணமகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இப்போதே இப்படி என்றால் எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வாரோ என்று நினைத்த மணமகள், உடனே இந்த திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து நீதிபதியை அழைத்து, தனக்கு உடனே விவாகரத்து வேண்டும் என்று கேட்டார்.
நீதிபதியும் அவர்களுக்கு உடனே விவாகரத்து வழங்கிவிட்டார். திருமணமாகி வெறும் 3 நிமிடத்தில் இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் துபாயில் இதுதான் மிகவும் குறுகிய கால திருமணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் மணப்பெண்ணுக்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அம்பலாங்கொடை, துயலையில் வசித்து வந்த மணீஷா செவ்வந்தி என்ற திருமணமாகாத யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரரின் திருமண நிகழ்வு ஹிக்கடுவ, பின்னதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. தேனிலவை கழிப்பதற்காக கடந்த 18ஆம் திகதி அஹுங்கல்லை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.
மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாயும், தங்கையும், தங்கையின் காதலனுடன் புதுமண தம்பதிகளிடம் நலன் விசாரிப்பதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
இதன்போது, குறித்த யுவதி மற்றும் அவரது காதலன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில், யுவதி நீரில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு (Bread) கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ (Nalin Fernando) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களில் பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்காவிட்டால் கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.
பேக்கரி உற்பத்தியாளர்களை சந்தித்து பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் தீர்வு ஒன்றை எடுக்க நேரிடும் என பேக்கரி உற்பத்தியாளர்களிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சண்ட்விட்ஜ் மற்றும் சாதாரண பாண் ஆகியனவற்றின் விலையை குறைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 450 கிராம் எடையுடைய பாணின் விலை மக்களினால் உணரக் கூடிய வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ உறுதியளித்துள்ளார்.
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிக்குள் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடத்திய விசாரணையில் அது மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருடையது என தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடம் வினவியபோது, முச்சக்கரவண்டியை 33 வயதுடைய தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம பிரதேசத்தில், நீராடச் சென்ற தாய் மற்றும் இரண்டு மகள்களின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த தாயின் இரண்டாவது கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் மூவரும் கல்வல பகுதிக்கு நீராடச் சென்ற நிலையில், குறித்த பெண்ணின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை இரண்டு பிள்ளைகளின் சடலங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன திஸ்ஸமஹாராமய சமகுலிய பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.பி. மனோரி சுரங்கிகா என்ற 32 வயதான தாய் மற்றும் 9 வயதான தேவ்மி தெஹன்சா மற்றும் 14 வயதான நேத்மி நிமான்சா ஆகிய மூவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நாட்களில் கொடிகஹவெவ பிரதேசத்தில் குழாய் நீர் இல்லாததால் அப்பகுதி மக்கள் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சென்று ஆடைகளை துவைத்து குளிப்பதை வழமையாக கொண்டிருக்கின்றனர்.
இதன்படியே, நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் இந்த இரண்டு பிள்ளைகளும் தாயும் ஆடைகளை துவைக்கவும் குளிக்கவும் கல்வல நோக்கிச் சென்றதை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்.
கணவர் பணிக்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் எவரும் இல்லாத நிலையில் , குவாரிக்கு அருகில் இருந்த ஆடைகள், பிள்ளைகளின் செருப்பு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டு காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டதாகவும், அன்றிரவு தாயாரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு, அனுமதிச் சட்டத்தை மீறி குவாரி நடத்தப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் குவாரி மூடப்பட்டுள்ளது. எனினும் இருபது அடிக்கு மேல் ஆழமாக தோண்டப்பட்ட குவாரியை மூட உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்தநிலையில், குவாரியை மூடியிருந்தால் இதுபோன்ற விபத்து நடந்திருக்காது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
உயிரிழந்த இரண்டு பிள்ளைகளும் கவுந்திஸ்ஸபுர மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருவதாகவும், மூத்த மகள் நெத்மி நிமான்சா ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவி எனவும், நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் தேவ்மி தெஹன்சா வகுப்பறையில் புத்திசாலியான பிள்ளை எனவும் அதிபர் ஹர்ஷ கட்டகே தெரிவித்துள்ளார்
நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ் செய்துகொண்டிருந்த இளம்பெண் 300 அடி உயர பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் ரீல்ஸ் செய்வதற்காகவும், வீடியோ போடுவதற்காகவும் பலரும் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் துணிச்சலான விடயங்களை செய்து வருகின்றனர். சில நேரம் அது ஆபத்தில் முடிகிறது.
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது அவர் நீர்வீழ்ச்சியின் அருகே ரீல்ஸ் செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 300 அடி உயர பள்ளத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர், ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்தனர்.
இதையடுத்து, 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு பள்ளத்தாக்கில் இருந்து பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அருகே ஜிஎஸ்டி சாலையில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் மஞ்சுளா. இருவரும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு மஞ்சுளாவுக்கும், அவரது மாமியார் சித்ராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் மணிமங்கலம் பகுதியில் கணவருடன் மஞ்சுளா தனியாக சென்றுள்ளார்.
இந்நிலையில் மஞ்சுளாவுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட 12 சவரன் தங்க நகைகளை மஞ்சுளாவின் மாமியார் சித்ரா வாங்கி மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. நகையை பலமுறை கேட்டும் மாமியார் தராததால் மணிமங்கலம் காவல்நிலையத்தில் மாமியார் மீது மஞ்சுளா புகார் அளித்தார்.
மேலும் நகையை ஜூன் 15ம் தேதி தருவதாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் சித்ரா கடிதம் எழுதியுள்ளார்.இந்நிலையில் மஞ்சுளா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், இது கொலை என்றும், மஞ்சுளாவின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் மணிமங்கலம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மஞ்சுளாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டபோது,
அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் குரோம்பேட்டை காவல் ஆய்வாளர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.