கிரிக்கெட் விளையாடிய 18 வயது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.

மேற்படி கல்லூரியில் தரம் 13 இல் கல்வி பயிலும் தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் நதீஸ் (வயது – 18) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (04) பாடசாலை இடைவேளை நேரத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பிடி எடுப்பதற்காக ஓடிய குறித்த மாணவன், கால் தடுக்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் தலைப்பகுதி பாடசாலை கட்டடமொன்றின் சுவரில் மோதியுள்ளது. இதனால் அவரின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவன், டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் திம்புள்ள – பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 19 வயது யுவதி பரிதாப மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று முன்தினம் (04.10) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டது.

இதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

யானைகளுக்கு அஞ்சி பிள்ளைகளுடன் மரத்தில் வாழும் குடும்பம்!!

அநுராதபுரம், மஹாவிலாச்சிய பகுதியில் இளம் குடும்பம் ஒன்று யானைகளுக்கு அஞ்சி மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வீட்டில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வாழ்ந்து வருகின்றனர்.இது தொடர்பில் வீட்டின் உரிமையாளர் தெரிவிக்கையில்,

போதுமான வாழ்வாதாரம் இல்லாத காரணத்தினால் நிரந்தர வீடு ஒன்றைக் கட்ட முடியாமல் மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். பணம் இல்லாத காரணத்தினால் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

வீட்டில் நானும் எனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றோம். எனது மூத்த மகள் 18 வயதுடையவர், இளைய மகன் 5 வயதுடையவர் ஆவார்.

மூத்த மகள் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றாள். நான் கூலி வேலை செய்து எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

நாங்கள் இதற்கு முன்னர் இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள எமது உறவினர்களுடன் ஒன்றாக வசித்து வந்தோம். பின்னர் உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மஹாவிலாச்சிய பகுதிக்கு சென்றோம்.

இங்கு நபரொருவர் எங்கள் மீது இரக்கப்பட்டு காணி ஒன்றை வழங்கியபோதும், அந்த காணி விவசாய நடவடிக்கைகளுக்கு சொந்தமானது என தெரிவித்து பிரதேச மக்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், மஹாவிலாச்சிய பிரதேச செயலாளரின் தலையீட்டில் அந்த காணி உத்தியோகபூர்வமாக எங்களுக்கு வழங்கப்பட்டது. இதனியடுத்து காணியில் அறை ஒன்றை கட்டுவதற்கு அத்திவாரம் இட்டோம்.

ஆனால் போதுமான பணம் இல்லாத காரணத்தினால் அறை கட்டும் பணி இடைநிறுத்தப்பட்டது. அதன் பின்னர், யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இந்த மரத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றோம் என கூறிய அவர், தாங்கள் வசிப்பதற்கு வீடு அமைக்க உதவி புரியுமாரும் கோரிக்கை விடுத்துள்ளார்.

விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் : கிளிநொச்சி பொலிசார் அதிரடி!!

நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் நடத்துனவர்களுக்கு உறக்க நிலையை தணிக்க கொத்தமல்லி தேனீர் வழங்கி வருகின்றார்கள்.

அந்த வகையில் கிளிநொச்சி வீதி போக்குவரத்து பொலிஸார் இவ்வாறான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

நாட்டில் கடந்த சில நாட்களாக தங்க விலையானது ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வந்த நிலையில், இன்றையதினம் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

யாழில் இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை : தவிக்கும் உறவுகள்!!

யாழில் இளம் குடும்பப் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரை கடந்த 30.09.2024 அன்று தொடக்கம் காணவில்லை என அவரது கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த தனபாலன் பகிதா (வயது 35) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவர் தொடர்பான விடயங்களை தெரிந்தவர்கள், கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்பு இலக்கம் – +94 75 389 6732

ஜோர்தானில் உயிரிழந்த இலங்கை பெண் : பெற்றோர் விடுக்கும் கோரிக்கை!!

ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த போது சுகவீனமடைந்து உயிரிழந்த மகளின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொஸ்கொட வதுரவெல பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர் உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயதான நதிஷானி திஸாநாயக்கவின் சடலத்தையே ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று ஜோர்டானில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் நதிஷானி வேலைக்குச் சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதற்காவும் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் மனைவி : யாழில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணை

இருப்பினும், கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்கமைய, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

ஒரே நேரத்தில் படிப்பிலும் விளையாட்டிலும் சாதித்த முல்லைத்தீவுப் பெண்!!

வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo) விளையாட்டிலும் பதக்கத்தினை பெற்று இரணைப்பாலை கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

படிப்பிற்கு விளையாட்டு சம நேரத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இரண்டிலும் சாதனை படைக்கலாம் எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மாணவி கூறியுள்ளார்.

மேலும், தனது வெற்றிக்கு துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

பெருமை சேர்த்த மாணவி

அத்துடன், குறித்த மாணவி வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.

குறித்த மாணவியின் தந்தை இது தொடர்பாக கூறும்போது,

“விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் படிப்பு பின்தங்கிவிடுமோ என பயமாகவே இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் எனது மகள் விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.

அத்துடன், எனது மகளின் எதிர்கால இலக்கினை அடைய எனது முழு ஆதரவு இருக்கும்” என கூறியிருந்தார்.

கடந்த மாதம் 28,29,30 ஆகிய திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி : பொருட்களின் விலைகளில் ஏற்படும் மாற்றம்!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவினால் இந்த மாற்றம் ஏற்படும் எனவும், அத்தகைய விலை நிவாரணம் கிடைக்க கணிசமான காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக ரூபாயின் பெறுமதி வலுவடையும் போது இறக்குமதி பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பது கட்டாயமாகும். எனினும் அதனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.

பொருட்களின் விலை

அது காலத்துடன் முறையாக இடம்பெற வேண்டும். பொருட்கள் ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்துவதற்கு ஒரு காலப்பகுதி எடுத்துக் கொள்ளும்.

இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் சுமையை மக்கள் மீது வர்த்தகர்கள் திணிக்கும் போதிலும் அதன் பெறுமதி வலுவடையும் போது நன்மையை மக்களுக்கு வழங்கும் ஒரு நடைமுறையை காணமுடிவதில்லை.

பூகோள நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ நடந்து சென்று மகளின் திருமணத்தில் கலந்துகொண்ட தந்தை!!

அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார்.

குறித்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசித்து வருகிறார்.

இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார்.

அந்த 2 பகுதிகளுக்கும் இடையே இருந்த தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டதால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதேவேளை, மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார்,

இதனையடுத்து கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணித்தியாலத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார்.

அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மட்டக்களப்பில் மனைவி கொலை : தேடப்பட்டுவந்த கணவன் திருகோணமலையில் சடலமாக மீட்பு!!

திருகோணமலையில் உள்ள இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமர தோட்டம் ஒன்றிலிருந்து இன்றையதினம் (03-10-2024) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்டவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் களுதாவளையில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையில் இருந்து தப்பித்து மூதூருக்கு வந்து தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு பொலிஸார் வருகை தந்து தடயியல் பரிசோதனை செய்தனர்.

அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாணவன் கொலை : நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது!!

மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (3) மாணவன் கல்வி பயின்ற கலைமகள் தமிழ்ப் பாடசாலைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.

மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம்.யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன் கடந்த முதலாம் திகதி தனது நண்பரின் காதலி என கூறப்படும் 16 வயது மாணவியை சந்திப்பதற்காக மேலும் இரு நண்பர்களுடன் சென்றுள்ளார்.

காதலியின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, காதலியின் சகோதரி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கர்ப்பிணியான சகோதரி தரையில் வீழ்ந்ததுடன் இதனால் கோபமடைந்த அவரது கணவன், மாணவர்கள் மூவரையும் தாக்கியதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது, ​​மாணவியின் தந்தை, மற்றொரு சகோதரி மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் மோதலில் ஈடுபட்டனர்.

தடிகளாலும் பாதுகாப்பு தலைக்கவசத்தாலும் அவர்களை தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்து தரையில் விழுந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவனின் சடலத்தின் இறுதிச் சடங்குகள் இன்று (04) நடைபெறவுள்ளன.

மற்றைய இரு நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வயதுடைய மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரியின் கணவர், மேலும் இருவர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.

வாழைப்பழம் தொண்டையில் சிக்கி வயோதிபர் பலி!!

பலாங்கொடை வெலிகபொல பிரதேசத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கிதில் 74 வயதுடைய வயோதிபரான பியதாஸ, உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அவர் உட்கொண்ட வாழைப்பழத்தில் ஒரு துண்டு, தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் “தனது கணவன், உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டார். அதன்பின்னர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டார்.

அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில், அவசர, அவசரமாக அழைத்துவந்தோம் எனினும், உயிரிழந்துவிட்டார் என பிரதான சட்ட வைத்தியர் முன்னிலையில் பியதாஸவின் மனைவி சாட்சியமளித்தார்.

 

வெள்ளவத்தையில் பரபரப்பு : கடற்கரையில் ஆணொருவரின் சடலம்!!

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்று (03) பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்

உயிரிழந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் 05 அடி 04 அங்குலம் உயரமுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஓய்வூதியங்களை ரத்து செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் 11.09.2024 இலிருந்து நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, 11.09.2024 க்கு பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.