கேரள மாநிலம், தெங்கனா குட் ஷெப்பர்ட் பள்ளியின் விளையாட்டு ஆசிரியையும், முன்னாள் தேசிய வீராங்கனையுமான மனு ஜான் (50) காலை பள்ளியில் பணியில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தேசிய அளவில் கேரளாவுக்காக பல விருதுகளை வென்றுள்ள மனு, எம்ஜி பல்கலைக்கழக கிராஸ்-கன்ட்ரி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
மனு தனது களத்தில் உச்சக்கட்டத்தில் இருந்த போது, முன்னாள் பல்கலைக்கழக பயிற்சியாளர் பி.வி.வெல்சியின் கீழ் அஞ்சு பாபி ஜார்ஜ், அஜித் குமார், சாக்கோ மற்றும் சினிமோளிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவைத்தின் அப்பாசியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருவல்லா நீராட்டுபுரத்தைச் சேர்ந்த மேத்யூ முலக்கல், அவரது மனைவி லினி ஆபிரகாம் மற்றும் அவர்களது குழந்தைகளான ஐசக் மற்றும் ஐரின் ஆகியோர் இந்த தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அப்பாசியாவின் அல் ஜலீப் பகுதியில் குடும்பத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
விடுமுறைக்காக கேரளா சென்றிருந்த மேத்யூ குடும்பத்தினர், விடுமுறை முடிந்து கேரளாவில் இருந்து திரும்பி வந்து, தீ விபத்து குறித்து தெரியாமல் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஏசி வென்டிலேட்டர் வழியாக அறைக்குள் கசிந்த புகையை நான்கு பேரும் சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மின்சுற்று காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குவைத் தீயணைப்பு மீட்புப் படை மேலும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
கேரளாவில் விடுமுறையை கழித்துவிட்டு நேற்று தான் இந்த குடும்பம் குவைத் திரும்பியது. மேத்யூ ராய்ட்டர்ஸில் பணிபுரிகிறார். அவரது மனைவி லினி அதான் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டனிலிருந்து வருகை தந்த மகன் கடந்த வியாழக்கிழமை (18.07) கடுமையான மனவேதனையின் காரணமாக மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – காரைநகர் மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
இதன்போது இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் எனவும், ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காரைநகர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது.
இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான முன்பதிவு செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் குடிவரவுத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக சுமார் 5 மில்லியன் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கடந்த ஜனவரியில் கோரப்பட்டது.
எனினும் சில மேம்படுத்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பயோமெட்ரிக் அணுகல் தொடர்பான விடங்களில் ஜப்பான் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு என்பன இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று பார்த்து மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
அங்கு பெய்துவரும் கடுமழை காரணமாக ராஜநாகம் இருப்பிடத்தை விட்டு வெளியே வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது.
12 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி மரத்தின் கிளைகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இதனையடுத்து அதுதொடர்பில் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வீதியில் இரண்டு மகிழுந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பத்தேகம மற்றும் பின்னதுவைக்கு இடையில் இன்று (21) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி பயணித்த மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி பின்னால் வந்த மற்றுமொரு மகிழுந்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது குழந்தையும், இரண்டு பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பத்தேகம மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பின்னதுவ தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துருகிரிய மற்றும் மத்துகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் கதிர்காமத்திலிருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடன பாட செய்முறைப் பரீட்சை கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற நிலையில் தனது மகள் செல்ல மறுத்ததால் தாயொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதன்போது யாழ். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தாய் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.
அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்த வேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(19) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு , சட்டவிரோத காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும் , காதலனையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் ஊரை விட்டு சென்று இருந்தார்.
இது தொடர்பில் கணவனால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பெண்ணையும் , அவரது காதலனான இளைஞனையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற விசாரணைகளை அடுத்து இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
மூதூர் 25 வயதான இளம் யுவதி வினோதினி கொலை தொடர்பான வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 7 பேருக்கும் மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் விசாரணையை திருகோணமலை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்துள்ளார். யுவதியின் கொலை வழக்கு இன்றைய தினம் (19) மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.தஸ்னீம் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் வழக்கு தொடுனரான மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சந்தேக நபர்களான 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் திருப்திகரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் விசாரணைகள் பக்கச்சார்பாக இடம்பெறுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதுவதாக விண்ணப்பித்திருந்தார்.
அதோடு, இந்த வழக்கு விசாரணையை வேறு தரப்பினருக்கு கையளித்து முறையான விசாரணையை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும் வாதங்களை முன்வைத்தனர்.
குற்றவாளிகள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் பொலிஸாரின் விண்ணப்பங்களுக்கேற்ப 2ஆம், 3ஆம், 4ஆம், 6ஆம் எதிராளிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
வழக்கில் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிபதி சந்தேக நபர்களுக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியலை நீடித்தார். அதோடு, இந்த வழக்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றவும் கட்டளை பிறப்பித்திருந்தார்.
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகரைச் சேர்ந்த நடேஷ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண் காணாமல் போயிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதான சந்தேக நபரான யுவதியின் காதலன் உட்பட அவரது தந்தை, சிறிய தந்தை, சகோதரி, வீட்டில் வேலை செய்யும் நபர், ஜேசிபி வாகனத்துடன் தொடர்புடைய 2 நபர்கள் உட்பட 7 பேர் மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையில் வீதியில் சென்ற பெண்கள் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி நகருக்கு அருகில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடையொன்றுக்கு அருகில் இருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.
பலத்த காயமடைந்த நான்கு பெண்களும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மத்துகம – பொல்கம்பலா பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த கார் கோட்டையில் இருந்து காலி நகரை நோக்கி பயணித்த நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் அதன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளங்கள் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பிட்டார்கள்.
அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி தெரிவித்துள்ளார்.
தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் காரணமாக இடம்பெய்ர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.
நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.
தோட்ட வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள்.
இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.
எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.
வடமாகாண இஸ்லாமிய காலசார போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வவுனியா, சூடுவெந்தபுலவு அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் குறித்த நிகழ்வு நேற்று (19.07) பாடசாலையில் இடம்பெற்றது. வடமாகாண இஸ்லாமிய கலாசார விழாவானது நேற்று முன்தினம் (18.07) முருங்கன் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது களிகம்புக் கலை கோலாட்டம் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களான ஆர்.எம்.அர்க்கம், ஏ.எம.சியா, என்.எம்.றிஸ்னி, என்.றிஸ்கான், எப்.எம்.பசால், என்.எம்.முப்தி, ஆர்.எம்.இமாஸ், எம்.எம்.பாசித், எச்.எம்.ஹஸ்னி ஆகிய மாணவர்கள் 2ம் இடத்தையும், கிராத் போட்டியில் அதே பாடசாலை மாணவி ஜே.ஜெனீரா 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்போது குறித்த மாணவர்கள் வெற்றியாளர் என பட்டி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியில் வீடு ஒன்று உடைந்துவீழ்ந்தநிலையில் அதிஸ்டவசமாக இருவர் உயிர் பிழைத்தனர்.
குறித்த வீட்டில் நேற்று (19.07) மதியம் கணவனும் மனைவியும் தங்கியிருந்துள்ளனர். இதன்போது வீடு திடீர் என்று உடைந்து வீழ்ந்தது. குறிப்பாக வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் கூரைப்பகுதி என்பன முற்றாக உடைந்து வீழ்ந்தது.
அனர்த்தம் இடம்பெற்ற சமயத்தில் கணவனும் மனைவியும் வீட்டிற்கு வெளியில் இருந்தமையால் பாரிய அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டது.
இதேவேளை சிறிநகர்பகுதியில் 1996 ஆம் ஆண்டு பொதுமக்கள் குடியேற்றப்பட்ட நிலையில் 50 ற்கும் மேற்ப்பட்ட வீடுகள் வசிப்பதற்கு தகுதியற்ற நிலையில் இருக்கின்றது.
தமக்கான வீட்டுத்திட்டம் ஒன்றை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிடமும் பலமுறை கோரிக்கை முன்வைத்துள்ள நிலையிலும் அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று கிராமமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு கடலில் பயணித்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின் உதவியுடன் அப்பெண்ணை குறிக்கட்டுவான் இறங்குதுறை நோக்கி அழைத்து வந்துள்ளனர். இதன்போது அப்பெண் படகினுள் குழந்தையை பிரசவித்துள்ளார்.
தொடர்ந்து தாயையும் சிசுவையும் குறிக்கட்டுவான் அழைத்து வந்து , அங்கு தயார் நிலையில் இருந்த அம்பியூலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இரத்தக் காயங்களுடன் நபரொருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (18) பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 54 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இந்த சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.