ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த போது சுகவீனமடைந்து உயிரிழந்த மகளின் சடலத்தை விரைவில் இலங்கைக்கு கொண்டு வருமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொஸ்கொட வதுரவெல பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர் உரிய அதிகாரிகளிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோர்தானில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த 25 வயதான நதிஷானி திஸாநாயக்கவின் சடலத்தையே ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று ஜோர்டானில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் நதிஷானி வேலைக்குச் சென்றதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
வயதான பெற்றோரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், வீட்டினை முழுமையாக கட்டி முடிப்பதற்காவும் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் மனைவி லண்டனிலும், பிள்ளைகள் கொழும்பிலும் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணை
இருப்பினும், கடந்த வாரங்களாக அவர் குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார். அவரை கைப்பேசியில் அழைத்த நண்பர் அவரை தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் விடுதிக்கு வந்து அறை கதவினை திறந்து பார்த்தவேளை அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கமைய, அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வைத்தியராகி நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே எனது இலக்கு என க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியினை பெற்ற யூட்வசீகரன் டிவோன்சி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை கிராமத்தை சேர்ந்த குறித்த மாணவி ஒரே நேரத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் 9 ‘ஏ’ சித்திகளை பெற்றதோடு, தைக்வொண்டோ (Taekwondo) விளையாட்டிலும் பதக்கத்தினை பெற்று இரணைப்பாலை கிராமத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
படிப்பிற்கு விளையாட்டு சம நேரத்தில் கொடுக்கும் முக்கியத்துவத்தில் இரண்டிலும் சாதனை படைக்கலாம் எனவும், அதற்கு தான் ஒரு எடுத்துக்காட்டு எனவும் மாணவி கூறியுள்ளார்.
மேலும், தனது வெற்றிக்கு துணைநின்ற பயிற்றுவிப்பாளர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார்.
பெருமை சேர்த்த மாணவி
அத்துடன், குறித்த மாணவி வைத்தியராக வருவதே தனது இலக்கு எனவும், அதனையும் அடைவேன் எனவும் அவர் கூறியிருந்தார்.
குறித்த மாணவியின் தந்தை இது தொடர்பாக கூறும்போது,
“விளையாட்டில் ஆர்வம் காட்டும் நேரம் படிப்பு பின்தங்கிவிடுமோ என பயமாகவே இருந்தது. ஆனால் ஒரே நேரத்தில் எனது மகள் விளையாட்டிலும் படிப்பிலும் சாதனை படைத்தது எமக்கு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றது.
அத்துடன், எனது மகளின் எதிர்கால இலக்கினை அடைய எனது முழு ஆதரவு இருக்கும்” என கூறியிருந்தார்.
கடந்த மாதம் 28,29,30 ஆகிய திகதிகளில் இரத்தினபுரி நியூ டவுன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் 18 வயதுபிரிவில் 59-63 கிலோ எடைப்பிரிவில் குறித்த மாணவி வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவினால் இந்த மாற்றம் ஏற்படும் எனவும், அத்தகைய விலை நிவாரணம் கிடைக்க கணிசமான காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ரூபாயின் பெறுமதி வலுவடையும் போது இறக்குமதி பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பது கட்டாயமாகும். எனினும் அதனை உடனடியாக எதிர்பார்க்க முடியாது.
பொருட்களின் விலை
அது காலத்துடன் முறையாக இடம்பெற வேண்டும். பொருட்கள் ஒரே நாளில் இறக்குமதி செய்யப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்துவதற்கு ஒரு காலப்பகுதி எடுத்துக் கொள்ளும்.
இலங்கை வரலாற்றில் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடையும் போது அதன் சுமையை மக்கள் மீது வர்த்தகர்கள் திணிக்கும் போதிலும் அதன் பெறுமதி வலுவடையும் போது நன்மையை மக்களுக்கு வழங்கும் ஒரு நடைமுறையை காணமுடிவதில்லை.
பூகோள நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
அமெரிக்காவில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக புயல் மழைக்கு மத்தியில் 50 கி.மீ தூரம் நடந்து சென்ற தந்தை, இந்த ஆண்டின் சிறந்த தந்தையாக தேர்வாகியுள்ளார்.
குறித்த தந்தையின் பெயர் டேவிட் ஜோன்ஸ். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ஜான்சன் சிட்டியில் வசித்து வருகிறார்.
இவரது மகள் எலிசபெத்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்துக்கு முந்தைய நாள் அவர் அங்குள்ள வேறொரு பகுதியில் இருந்தார்.
அந்த 2 பகுதிகளுக்கும் இடையே இருந்த தூரம் 50 கி.மீ. ஆகும். ஆனால் அங்கு பெய்த புயல் மழை காரணமாக போக்குவரத்து தடைபட்டதால் திருமணம் நடைபெற்ற பகுதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதேவேளை, மாரத்தான் வீரரான ஜோன்ஸ், இயற்கை பேரிடரை கண்டு பயப்படவில்லை. மகளின் திருமணத்தில் பங்கேற்க அங்கிருந்து 50 கி.மீ. தூரம் நடந்தே செல்வது என்று முடிவு செய்தார்,
இதனையடுத்து கடும் புயல், மழைக்கு மத்தியில் பெரும் சோதனைகளை அனுபவித்து, சுமார் 12 மணித்தியாலத்தில் 50 கி.மீ. தூரம் நடந்து சென்று தனது மகளின் திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றார்.
அவரை பார்த்ததும் அவரது மகள் எலிசபெத் ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமர தோட்டம் ஒன்றிலிருந்து இன்றையதினம் (03-10-2024) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் – தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவரின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் உயிரிழந்த நபர் தேடப்பட்டு வந்த சந்தேக நபரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் களுதாவளையில் தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு இரத்த காயங்களுடன் கடந்த 24 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை உயிரிழந்த நபர் மனைவியின் கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்து நிலையில் களுதாவளையில் இருந்து தப்பித்து மூதூருக்கு வந்து தலைமறைவாக இருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சடலம் உள்ள பகுதிக்கு திருகோணமலை தடயியல் பிரிவு பொலிஸார் வருகை தந்து தடயியல் பரிசோதனை செய்தனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் வருகைதந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாணவன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நேற்றையதினம் (3) மாணவன் கல்வி பயின்ற கலைமகள் தமிழ்ப் பாடசாலைக்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை மடவளை உல்பத்த பிரதேசத்தில் எம்.யுகேஸ் என்ற 17 வயது பாடசாலை மாணவன் கடந்த முதலாம் திகதி தனது நண்பரின் காதலி என கூறப்படும் 16 வயது மாணவியை சந்திப்பதற்காக மேலும் இரு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
காதலியின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது, காதலியின் சகோதரி மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்துச் சென்றுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கர்ப்பிணியான சகோதரி தரையில் வீழ்ந்ததுடன் இதனால் கோபமடைந்த அவரது கணவன், மாணவர்கள் மூவரையும் தாக்கியதாக மஹாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, மாணவியின் தந்தை, மற்றொரு சகோதரி மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் மோதலில் ஈடுபட்டனர்.
தடிகளாலும் பாதுகாப்பு தலைக்கவசத்தாலும் அவர்களை தாக்கியதில் மாணவன் பலத்த காயமடைந்து தரையில் விழுந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலத்தின் இறுதிச் சடங்குகள் இன்று (04) நடைபெறவுள்ளன.
மற்றைய இரு நண்பர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வயதுடைய மாணவி, அவரது தந்தை, இரண்டு சகோதரிகள், ஒரு சகோதரியின் கணவர், மேலும் இருவர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.
அவர் உட்கொண்ட வாழைப்பழத்தில் ஒரு துண்டு, தொண்டையில் சிக்கியதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் “தனது கணவன், உணவு உட்கொண்ட பிறகு வாழைப்பழம் சாப்பிட்டார். அதன்பின்னர் மூச்சுவிடுவதில் சிரமப்பட்டார்.
அக்கம்பக்கத்தவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில், அவசர, அவசரமாக அழைத்துவந்தோம் எனினும், உயிரிழந்துவிட்டார் என பிரதான சட்ட வைத்தியர் முன்னிலையில் பியதாஸவின் மனைவி சாட்சியமளித்தார்.
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவருக்கு ஓய்வூதிய கொடுப்பனவுகள் 11.09.2024 இலிருந்து நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, 11.09.2024 க்கு பின்னர் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகள் இலங்கை மத்திய வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வந்துள்ள அந்நிய செலாவணியின் அதிகரிப்பானது, ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி குறைவுக்கான ககாரணமாக அமைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்த டொலரின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் இருந்து வெளியேறும் டொலரின் அளவில் குறைவு ஏற்பட்டிருந்தது.
மேலும் தேர்தலுக்கு முன்னர் நாட்டிற்கு வந்த டொலர் மற்றும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதியை நிலையான நிலையில் பேணுவது மிகவும் முக்கியமானது.
ரூபாயின் பெறுமதி உயர்வதும் குறைவதுமாக இருந்தால் அது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் பெறுமதியை நிலையான மட்டத்தில் வைத்திருக்க நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
15 மாதங்களின் பின்னர் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் மதிப்பு நேற்று முதல் முறையாக 300 ரூபாய் வரம்பிற்கு கீழ் வீழ்ச்சி கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.
கிராமிய வறுமையை ஒழிப்பதற்காக விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பங்களிப்பு மகத்தானது எனவும், அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமைவாகவே வறுமை ஒழிக்கப்படுமா இல்லையா என்பது தீர்மானமாகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசியல் சம்பிரதாயம் மற்றும் பழைய அரசியல் கலாசாரத்திற்கு எதிரான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், அரச சேவையின் செயற்பாடு தொடர்பான பிரஜைகளின் அதிருப்தி போன்றன தாக்கம் செலுத்தியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
எனவே, வினைத்திறன் மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் மோசடி மற்றும் ஊழல் இருப்பதாக மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரச கட்டமைப்பு முழுவதும் பரவியுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழலை தடுத்து நிறுத்துவதற்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதாகவும், அரச ஊழியர்கள் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அரச ஊழியர்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன் மற்றும் செயற்திறன் மிக்க அரச சேவையை உருவாக்க தற்போதைய அரச உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
அரச சேவையில் இதுகாலவரை இடம்பெற்று வந்த அரசியல் பழிவாங்கல், இடமாற்றம், அரச சேவையில் பதவி உயர்வு வழங்காமை போன்ற செயற்பாடுகள் தமது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறாது என வலியுறுத்திய ஜனாதிபதி, மக்களை திருப்திப்படுத்தும் வினைத்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு அரச உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நாற்பது நாட்கள் நிலைமாற்ற காலமாகும் எனவும், அந்த காலப்பகுதியில் அரச சேவையை வீழ்ச்சியடையாமல் பேணுவதற்கு அரச உத்தியோகத்தர் பாடுபட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் இந்த அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி சூசகமாக தெரிவித்தார்.
முன்பிருந்த அரச தலைவர்கள், அரச அதிகாரிகளை ஊடகங்களுக்கு முன்பாக கேள்வி எழுப்பியது போன்று தான் ஊடகங்களுக்கு முன்னால் அரச அதிகாரிகளை கேள்வி கேட்கப் போவதில்லை எனவும், இவ்வாறான ஊடகக் கண்காட்சிகளை தான் ஏற்கவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அரசு ஊழியரின் கண்ணியத்தைப் பாதுகாத்து குடிமக்கள் திருப்தியடையும் அரச சேவையை உருவாக்க தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
நண்பனின் காதலியை சந்திப்பதற்காக நண்பனுடன் சென்ற மாணவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தளை கவுடுபெல்ல மா/ கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவரே இவ்வாரு நண்பனின் காதலியின் தந்தையின் குழுவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் மாத்தளை உல்பத்தமடவள, நாளந்த தோட்டத்தை சேர்ந்த எம் யுகேஸ் எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.
கொலையுடன் சம்பந்த பட்ட நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை ர் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன் , மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் போன தந்தையையும் மகளையும் கண்டுபிடிக்க நீர்கொழும்பு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த தங்வேல் கமலதாசன் என்ற 41 வயதுடைய தந்தையும் பத்மநாதன் பவிஷ்கா என்ற 05 வயதுடைய மகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் இருவரும் கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன தந்தை மற்றும் மகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தின் 071 859 1630 அல்லது 031 222 2222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.