வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட 5000 கோடி : அவசரமாக இலங்கைக்கு விரையும் சர்வதேச பொலிஸ்!!

இலங்கையில் 5000 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய இணையக் குற்றவாளிகள் தொடர்பில் விசேட விசாரணைக்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சீன பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நாட்டிற்கு வரவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த இணையக் குற்றவாளிகள் நீர்கொழும்பு பெய்த்துகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கணனி ஆய்வு கூடம் ஒன்றை நடத்தி பல இலட்சம் ரூபாவை இணையம் மூலம் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

பல நாடுகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் சுற்றுலா விசாவில் நாட்டுக்கு வந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட சீனப்பிரஜைகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் டுபாயில் சைபர் முகாம் ஒன்றை நடத்தி வருவதாகவும், டுபாய் பொலிஸார் அந்த முகாமை சோதனையிட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றவாளிகள் டுபாயில் மக்களை ஏமாற்றி பெரும் தொகையை மோசடி செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள், இது தொடர்பான 100 வங்கிக் கணக்குகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட சீன பிரஜை ஒருவர் நீர்கொழும்பில் 30 அறைகள் கொண்ட மூன்று மாடிகள் கொண்ட ஹோட்டலை 80 இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் 3 மாத காலத்திற்கு பெற்று அதனை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5000 கோடி ரூபாய் மோசடி

இந்த கணக்குகளை பயன்படுத்தி 5000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்கள் சில நாட்களில் 800 இலட்சம் ரூபாவிற்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் அதனை கொண்டாடும் வகையில் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து ஒன்றையும் நடத்தியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 39 சந்தேக நபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர் வீட்டில் நடந்த சம்பவம் – பெண்ணொருவரின் அதிர்ச்சி செயல்!!

கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகரின் வீடொன்றிற்கு பணிப்பெண்ணாக வந்த ஒருவர், 20 நிமிடங்களுக்குள் சுமார் 20 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருடப்பட்ட தங்கப் பொருட்களில் சங்கிலி, மோதிரங்கள், காதணிகள், வளையல்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவர், பணிப்பெண் தேவை என, தமிழ் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்திருந்தார் தொழிலதிபரின் தொலைபேசி எண்ணுடன் வெளியான விளம்பரத்திற்கமைய, குறித்த பெண், வர்த்தகரின் வீட்டுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, கடந்த 15ஆம் திகதி கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்த பெண், தாம் களுத்துறையை சேர்ந்தவர் எனவும், மாதச் சம்பளம் எவ்வளவு எனவும் வயோதிபரிடம் வினவியுள்ளார்.

அதற்கமைய சில மணி நேரங்களில் புறக்கோட்டைக்கு தாம் வந்து விட்டதாகவும், பணியாற்றுவதற்காக வீட்டு வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதன்படி,சில நிமிடங்களில் அந்த பெண் முச்சக்கரவண்டியில், வர்த்தகரின் வீட்டிற்கு வந்துள்ளார். இதன்போது, முச்சக்கரவண்டிக்காக வர்த்தகரிடம் இருந்து, 150 ரூபாயை பெற்றுள்ளார். அத்துடன் சாப்பிடாததால் பசியாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதற்கமைய,வீட்டில் இருந்த வயோதிப பெண் தேனீர் தயாரித்துவிட்டு, பார்த்தபோது,வீட்டிற்கு வந்த பணிப்பெண்ணைக் காணவில்லை. இதனையடுத்து மூன்று மாடி வீட்டில், முழுமையாக தேடியபோதும், அவரை காணாததால், அறைக்குச் சென்று பார்த்த போது நகை பொதி காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த சீலாவதி என்ற பெண், இருபது நிமிடங்களில் தனது அறையின் மேசையில் இருந்த தங்கப் பொருட்கள் திருடி சென்றுள்ளதாக, வர்த்தகர் செய்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 

கொழும்பு புறநகர் பகுதியில் ஏழு பெண்கள் கைது!!

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை களனிப்பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விடுதியில் தங்கியிருந்த ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்தை (Kadawatha), எல்தெனிய (Eldeniya) பிரதேசத்தில் மசாஜ் நிலையம் ஒன்றும், கடவத்தை பகுதியில் இயங்கிய மற்றுமொரு மசாஜ் நிலையமும் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது, எல்தெனிய பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தில் நான்கு பெண்களும் கடவத பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் ஹகுரன்கெத்த, குருநாகல், ஹக்மன, திஸ்ஸமஹாராமய, எம்பிலிப்பிட்டிய, கொட்டாவ மற்றும் வேயங்கொட ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் 25 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களை மஹர நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த இலங்கைப் பெண் : குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்!!

வீட்டு வேலைக்காக டுபாய் சென்ற குடும்ப பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கண்டி – கட்டுகஸ்தோட்டை, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த மார்கரெட் ஐராங்கனி (வயது 57) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த ஐரங்கனியின் சடலம் நேற்று (17) டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் அங்கவீனமடைந்த தனது கணவர் மற்றும் மூன்று மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் குறித்த பெண் வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

இந்நிலையில், தாயின் மரணம் தொடர்பில் மகள் தெரிவிக்கையில், நீர்கொழும்பில் தந்தை விபத்திற்குள்ளான நிலையில் எங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அம்மா வெளிநாடு சென்று எனக்கும், அக்காவுக்கும் பணம் அனுப்பினார்.

கடந்த 5 ஆம் திகதி தாய்க்கு காய்ச்சல் ஏற்பட்டது. அம்மா உடன் இருந்த பெண் அழைப்பினை ஏற்படுத்தி அம்மாவிற்கு மூச்சு விடுவதற்கு கடினமாக உள்ளதாக கூறினார்.இதன் பின்னர் அன்று அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடந்த 6 ஆம் திகதி அம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து டுபாயில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரின் உதவியுடன் தாயின் உடலை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் எட்டு இலட்சம் ரூபா பணத்தை செலுத்தி அம்மாவின் உடலை நாட்டிற்கு கொண்டு வந்தோம் என்றும் மகள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாவின் பூதவுடல் இன்று (19) பிற்பகல் ஹல்லொலுவ தொரகொல்ல பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் மகள் அறிவித்துள்ளார்.

 

இராட்சத பலூன்கள் மூலம் தென் கொரியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் வட கொரியா!!

தென் கொரியாவின்(South Korea) சியோல் நகரத்திற்கு வடக்கே, வட கொரியா அனுப்பிய இராட்சத பலூன்கள் பறந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும், இது தென்கொரிய மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கலாம் என தென் கொரிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் இணைந்து அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது.

இதனிடையே சமீப காலமாக வட கொரியா ஏராளமான இராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வருகிறது. அந்த பலூன்களில் குப்பைகள் கட்டி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தென்கொரியா பகுதிகளுக்குள் இதுபோன்ற ஏராளமான குப்பைகளை கொண்ட பலூன்கள் பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏழு நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்ட நபர் : முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை!!

உலகில் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு உலக அதிசயங்களை எகிப்தியர் ஒருவர் ஏழு நாட்களில் சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் 45 வயதான மக்டி ஈசா (Magdy Eissa) என்பவரே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் இந்த சாதனை பயணத்தை 6 நாட்கள் 11 மணி நேரம் 52 நிமிடங்களில் வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த கின்னஸ் உலக சாதனைப் பயணத்தின் காணொளியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சீனப் பெருஞ்சுவருடன் தொடங்கிய இந்தப் பயணம், இந்தியாவின் தாஜ்மஹால், ஜோர்டானில் உள்ள பண்டைய நகரமான பெட்ரா, ரோமில் உள்ள கொலோசியம், பிரேசிலில் உள்ள கிறிஸ்ட் தி ரிடீமர், பெருவில் உள்ள மச்சு பிச்சு ஆகிய இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.

மேலும் இவர் அனைத்து இடங்களுக்கும் செல்ல பொதுப் போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.

புதிய ஏழு அதிசயங்களைப் பார்வையிட்டு உலக சாதனையை முறியடிப்பதன் மூலம் தனது சிறுவயது கனவை நிறைவேற்றிகொண்டதாக ஈசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு தயாராகி இருந்த இளம் தாதி எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணிபுரிந்த யுவதியொருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டதாக ரக்வான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்த – அந்தண கிராம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ரக்வான அலுத்கெல்ல பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதியின் தாய் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதுடன், மூன்று சகோதரர்கள் தந்தையுடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதி அடுத்த மாதம் திருமணம் செய்து கொண்டு இஸ்ரேலுக்கு வேலைக்குச் செல்லவிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதி உயிரிழப்பதற்கு முந்தைய நாள் தான் திருமணம் செய்யவிருந்த நபருடன் கைத்தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பாட்டி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பஹ்வவத்தை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், பிரேத பரிசோதனை நேற்று வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

 

சட்டவிரோத பயணத்தால் முல்லைத்தீவு பெண் கைது!!

சட்டவிரோதமாக இந்தியாவின் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு தப்பி வர முயன்ற முல்லைத்தீவு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த விஜிதா (45) என்ற பெண் கடந்த 2023 டிசம்பர் மாதம் விமான மூலமாக 6 மாத கால விசாவில் சென்னைக்குச் சென்று பாண்டிச்சேரியில் தங்கி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது விசா காலம் முடிவடைந்ததால் தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக படகில் செல்ல தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜேசு என்பவரை அணுகி 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து இலங்கைக்கு வர முயன்றுள்ளார்.

நேற்று புதன்கிழமை (17) இரவு ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட தயாராக நின்ற விஜிதாவையும், இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப உதவிய தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளாந்தம் மற்றும் அவருடைய 17 வயது மகன் ஆகிய மூவரையும் ராமேஸ்வரம் துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தியடைந்த இளம் பட்டதாரி பெண் திடீரென உயிரிழப்பு!!

கண்டியில் கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் சித்தி பெற்று நியமனம் பெறுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பட்டதாரி பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஹுன்னஸ்கிரி ரம்புக்பொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பிலிப் நக்மா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தெல்தெனிய வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி பி.கே. அபேரத்னவினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மூளையில் கட்டி வெடித்து இரத்த கசிவு ஏற்பட்டமையே யுவதியின் மரணத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் தந்தை மகள் தொடர்பில் தெரிவித்தாவது, “எனது மகள் ஹுன்னஸ்கிரிய சிவனேஸ்வரா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்தார்.

அதன் பின்னர் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பட்டப்படிப்பை முடித்து கிராம உத்தியோகத்தர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து மெடதும்பர பிரதேச செயலகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அங்கு அவள் பயிற்சியின் போது மிகவும் கஷ்டப்பட்டு படித்தாள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன் உள்ளிட்ட இருவர்!!

இத்தாலியில் பிரிந்தா ஆற்றில் தனது நண்பர்களுடன் நீராட சென்ற இலங்கையர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவத்தில் 23 வயதான ரமேஷ் கணேகெடெர என்ற இலங்கையரே உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆற்றில் மூழ்கிக்கொண்டிருந்த இலங்கை இளைஞனை காப்பாற்றுவதற்காக சென்ற ருமேனிய பிரஜையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன் உதைபந்தாட்ட வீரர் எனவும், அவரை காப்பாற்ற முற்பட்ட வேளையில் உயிரிழந்த ருமேனிய பிரஜை மல்யுத்த வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இலங்கையர் இத்தாலியின் பதுவாவில் வசித்து வந்தவர் என அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு இளைஞர்களின் சடலங்களை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு : மக்களுக்கான சலுகைகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!!

சமையல் எரிவாயு, எரிபொருள், மின்சாரம் போன்றவற்றின் விலை குறைப்பிற்கான சலுகைகளை நுகர்வோருக்கு வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளள்ளதாக அதன் தலைவர் துசித இந்திரஜித் உடுவர தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட விலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஏனைய வர்த்தக நிலையங்களில் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் தாயின் கொடூர செயல் : கிணற்றில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்!!

ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி நேற்று தனது குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தேவ்மி அமயா என்ற 4 வயது 10 மாத சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி இரவு 11 மணிக்கும், நேற்று அதிகாலை 5.30 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் ஊமை பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளுக்கு தாயாக மாறிய குரங்கு : நெகிழ்ச்சியான சம்பவம்!!

குருணாகலில் கைவிடப்பட்ட பூனைக்குட்டிகளை பாதுகாக்கும் குரங்கு தொடர்பான நெகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.

படகமுவ ரிசர்வ் பகுதியில் பால் குடிக்கும் வயதுடைய மூன்று பூனைக்குட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றிற்கு குரங்கு ஒன்று தாயாக மாறியுள்ளது.

குரங்கு ஒன்று பூனைக்குட்டிக்கு பாலூட்டி பாதுகாக்கும் காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

படகமுவ வனப் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் குட்டியை மீட்பதற்காக 5 நாட்களாக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

எனினும் குரங்கு, பூனை குட்டியை தனது அணைப்பிலிருந்து நழுவ விடாமல் பாதுகாத்துள்ளது. இதனால் அதனை மீட்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டுள்ளனர்.

காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாகியுள்ளதால், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் பலத்த காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிப்பாகவும் காணப்படக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் இயங்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்த 24 மணிநேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தென்மேற்கு பருவ நிலையால், நாடு முழுவதும் தற்போதைய காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சப்ரகமுவ மாகாணம், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி. காலி,மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்த டுபாய் இளவரசி!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும் டுபாய் ஆட்சியாளருமான முகமது பின் ரஷித் அல் மக்தூமின் மகளான ஹைகா மஹ்ரா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “அன்புள்ள கணவருக்கு, நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால், உங்களை நான் விவாகரத்து செய்வதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவானது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும், அவர்களின் சுயவிவரங்களிலிருந்து ஒருவருக்கொருவர் அனைத்து புகைப்படங்களையும் நீக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்ற மனைவி : அரங்கேறிய சம்பவத்தால் அதிர்ச்சி!!

கணவர் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கணவரால் கழுத்து வெட்டப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (17.07) மாலை குருணாகலில் பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடிகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கடிகமுவ பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபரான கணவர் மது போதையில் வீட்டிற்குச் சென்று தனது மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து காயமடைந்த மனைவி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், மனைவி குளிப்பதற்காக தனது பெற்றோரின் வீட்டிலிருந்து கிணற்றை நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது கணவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலம் பிங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள தெரிவித்த பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.