லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் பலி!!

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (28.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.

அவிசாவளை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியில் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஜெர்மனியில் பெருந்தொகை யூரோக்களுக்கு விற்கப்பட்ட மாம்பழம்!!

தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.

இதேபோன்று சமீபத்தில் வவுனியாவில் உள்ள உக்குளாங்குளம் பிள்ளையார் கோவிலில் ஏலத்தில் மாம்பழமொன்று 162,000 ரூபாய்க்கு (500 யூரோ) விற்பனையாகியது.

அதேவேளை இதே பகுதியிலுள்ள மற்றொரு கோவிலில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ஒரு மாம்பழம் 95,000 ரூபாய் (300 யூரோ) விலைக்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் ஜெர்மனி, கும்மெர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிகுமாரன் கோவிலில் நடந்த ஏலத்தில் தொடக்க விலை 25 யூரோவாக இருந்தது, இறுதியில் மாம்பழம் 1050 யூரோ விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முழு வருமானமும் கோவிலின் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவில் மற்றும் சமூக நற்பணிகளுக்கும் நிதி திரட்டும் முகமாக இவ்வகையான ஏலங்கள் இலங்கையின் வட மாகாணத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.

இப்படியான ஏலங்களுக்கு கிராமவாசிகளும், புலம்பெயர் மக்களும் பெரும் அளவில் தொடர்ச்சியாக பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பச்சை மிளகாயில் ஐஸ்கிரீம் உற்பத்தி!!

இலங்கையில் வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவி

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார்.

கொழும்பு 7 ஹெக்டர் கோபப்படுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ருவான் லங்காதிலக்க, தனது இந்த ஐஸ் கிறீம் உற்பத்தியை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் அறிமுகம் செய்துள்ளார்.

கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வகை பச்சை மிளகாயைப் பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாட்டுப் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவிக்கின்றார்.

விமான நிலைய மேற்கூரை இடிந்து நால்வர் காயம்!!

இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27.06.2024) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

முடங்கிய தந்தை…காலை இழந்த தாய்.. இலங்கையில் பலரையும் வியக்க வைத்த 11 வயதுச் சிறுவன்!!

காலி, இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 11 வயது மாணவன் தன் குடும்ப சுமையை தன் தோளில் சுமக்கும் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நிம்சர ரவிந்து பிரபாத் என்ற 11 வயது சிறுவன் தொரபே மேல் நிலைப் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கற்று வரும் நிலையில் பாடசாலை படிப்பை விட அவருக்கு நிறைய வேலை இருப்பதாக கூறப்படுகின்றது.

நிம்சரவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்தமையினால் ஒரே இடத்தில் முடங்க நேரிட்ட நிலையில் குடும்ப சுமைகளை அம்மா ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவரது காலை இழக்க வேண்டியிருந்தது. இப்போது நிம்சரவின் அப்பா மட்டுமின்றி அம்மாவும் ஒரே இடத்தில் முடங்கியுள்ளனர்.

தற்போது 11 வயது நிம்சர அப்பா, அம்மாவின் அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை பராமரித்து வருகின்றார். நிம்சரவின் பெற்றோர் இருவருக்கும் ஊனமுற்றோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.

அந்த பணத்தில் நிம்சர குடும்பச் சுமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை தாங்கி வருகின்றார். எத்தனை தடைகள் வந்தாலும் பாடசாலை செல்வதை நிறுத்துவதில்லை.

அதிகாலையில் எழுந்து அப்பா, அம்மா செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து, உணவு சமைத்து விட்டு பாடசாலைக்கு சென்று வருகின்றார். இந்த நிலையி்ல நிம்சரவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஹிருணிகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2015 ல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய குற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் கீழ் ஹிருணிக்கா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமைய, அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகை வளாகத்தை நோட்டமிட்ட ட்ரோன் கமரா : விசாரணையில் வெளிவந்த உண்மை!!

கொழும்பில் (Colombo) அலறி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் கண்காணிப்பு கமராவை செலுத்திய குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் செலுத்தியது ஒரு பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் என தற்போது தெரியவந்துள்ளது.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அலறி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் போன்ற பொருளொன்றை செலுத்திய குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் கடந்த திங்கட்கிழமை (24.06.2024) கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் ஒன்றே அலறி மாளிகை வளாகத்துக்குள் பறக்க விடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தவறான ஊடக அறிக்கைகள்

எவ்வாறாயினும், விசாரணைகள் இன்னும் நிறைவு பெறாததால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக தவறாக கருதப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதி வெளிவரும் ஊடக அறிக்கைகள் தவறானவை எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.

நுவரெலியாவில் பொது மலசலகூடத்தில் இருவரின் சடலங்கள்!!

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும், இன்று (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸார் விசாரணை

மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கைப் பெண் பின்லாந்தில் படுகொலை : கணவன் கைது!!

இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 3 பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்யப்பட்ட பெண் பின்லாந்தில் பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தனது குடும்பத்தினருடன் நீண்ட காலமாகப் பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் வீட்டிற்குச் சென்ற அயலவர் ஒருவர் குறித்த பெண் சடலமாக இருந்ததை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்நாட்டு பொலிஸாரால், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

பாசமாக அழைத்த தம்பி.. நம்பி சென்ற காதல் தம்பதி ஆணவக் கொலை!!

ஹரியானா மாநிலம் வாரணாசியில் உள்ள படலா கிராமத்தை சேர்ந்தவர் தேஜ்வீர் (வயது 27). சுல்தான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மீனா (வயது 24). மீனாவின் தந்தைவழி அத்தையை தேஜ்வீரின் தாய்வழி மாமா மணந்தார்.

இந்நிலையில் மீனா, தேஜ்வீர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஜியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் மீனாவின் தம்பி சச்சின் (வயது 21) மீனா, தேஜ்வீர் இருவரையும் வாரணாசியில் உள்ள லாலா வரீகம் சந்த் ஜெயின் பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் சென்றனர்.

அப்போது சச்சினுடன் மீனாவின் தாய் மாமன் மகன் ராகுலும் வந்துள்ளார். இருவரும் தம்பதியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தன்வீரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நடந்து வருவதாக ஜிந்த் மாவட்ட எஸ்பி மக்சூத் அகமது தெரிவித்தார். தேஜ்வீரின் தாய் மாமன் மகேந்தரின் மகன் வீரேந்தர் மற்றும் அவரது தாய்வழி அத்தை குந்திதேவி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிந்த் மாவட்டம் தாரியாவலி கிராமத்தைச் சேர்ந்த சச்சின், ராகுல் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 11 வயது மகள் கனிஷ்கா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.

இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கனிஷ்கா சென்று இருந்தார். இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள வடிவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்து வந்ததும், அதற்காக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு!!

யாழ்ப்பாணம்(Jaffna) – உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியொன்றிலிருந்து மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று(26.06.2024) இரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாததையடுத்து, காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

மாங்குளம் கோரவிபத்தில் உயிரிழந்தோர் விபரம்!!

 

முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று முன்தினம் (25) விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் பேருந்து சாரதியான 38 வயதான குணசீலன் லோகேஸ்வரன், மற்றும் சின்னத்தம்பி விசயரத்தினம், பாலசுப்பிரமணியம் பார்த்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து, முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன்போது சொகுசு பேருந்துடன் பாரஊர்தி ஒன்று மோதி விபத்து இடம்பெற்ற நிலையில் இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்து வரும் தங்கத்தின் விலை!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனடிப்படையில், இன்றைய (2024.06.27) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,298 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,710 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியாவில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமிகள் : குற்றச்சாட்டு இன்றி தப்பித்த சந்தேகநபர்!!

பிரித்தானியாவின் விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து மோசமான முறையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக விபத்து ஏற்படுத்திய லேண்ட் ரோவர் காரை ஓட்டிய 46 வயது பெண் கிளாரி ஃப்ரீமண்டில்(Claire Freemantle) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விபத்து தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், 46 வயதான பெண் ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் ஏற்படுத்தியது” தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரால் கடும் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 2 சிறுமிகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மேலும் ஆழமான விசாரணை வேண்டும் என்றும் விமர்சித்துள்ளனர்.

ஒரு அறிக்கையில், தங்கள் மகள்களின் மரணத்திற்கு ஓட்டுநரின் அலட்சியமான செயலே காரணம் என்று பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற பெருமையை பெற்ற இளம் யுவதி!!

நயோமி அமரசிங்க என்ற இளம் பெண் இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளார்.

ஊடகவிலாளராக வர ஆசைப்பட்ட நயோமி அமரசிங்க, வேலை தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி மஹாபொல துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அகாடமியில் தனது பயிற்சியை நிறைவு செய்தார்.

இதனையடுத்து கார்னிவல் குரூஸ் லைனில் பணி புரிந்த அவர், உலகம் முழுவதும் பயணம் செய்ததுடன், பல நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் captain தரநிலைக்கு உயர்வதே தனது இலக்கு என நயோமி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் பாலினத் தடைகளைத் தகர்த்து, இன்று ஒரு அதிகாரியாக மாறியுள்ளார்.