தென்னிலங்கையில் வீடொன்றில் நடந்த பயங்கரம் : பெண்கள் மீது தாக்குல் : ஒருவர் மரணம்!!

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளார்.

அஹங்கம, தித்தகல்ல பகுதியில் வீட்டிற்குள் இரண்டு பெண்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு சென்ற அஹங்கம பொலிஸார் வீட்டினுள் பலத்த காயமடைந்த 2 பெண்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிசிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 80 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் அஹங்கம, திட்டகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவராகும்.

குற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் அஹங்கம பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று முதல் நடைமுறையாகும் வகையில் குறையவுள்ள பால் தேநீரின் விலை!!

ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (16) இரவு முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை இன்று முதல் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் காரணமாகவே, பால் தேநீர் விலையையும் இவ்வாறு குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்களும் தற்போது கிடைக்கப்பெறும் இந்த சலுகையினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் ஹர்ஷ ருக்ஷான் வலியுறுத்தியுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பொதியானது 125 ரூபாவினாலும், 400 கிராம் பொதியொன்றின் விலையை 50 ரூபாவினாலும் இன்று முதல் குறைப்பதற்கு இறக்குமதியாளர்கள் இணக்கம் வௌியிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட டுபாயில் கைதான பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மூவர்!!

புதிய இணைப்பு : பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முதலாம் இணைப்பு : பல்வேறு கொலை சம்பவங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவரும் பெண் ஒருவரும் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “கொன்ட ரன்ஜித்” என்பவரின் சகாவான “சூட்டி மல்லி“ என்பவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலக கும்பலின் தலைவரான “புன்சா” என்பவரின் சகாவும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது மோசடி குற்றச்சாட்டுகயுளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் இலங்கைக்கு அழைத்துவருவதாற்காக இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பெர் கொண்ட பொலிஸ் குழு ஒன்று டுபாய்க்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் சோகம் : 10 வீடுகள் தீயில் எரிந்து சேதம்!!

நுவரெலியா – ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேவாஹேட்ட, ரூக்வூட் (Rookwood) கொலம்பியா தோட்டத்தில் நேற்று (15) மதியம் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீவிபத்து காரணமாக அத்தோட்டத்தில் அமைந்துள்ள 10 வீடுகள் தீயில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.

இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும் எவ்வித காயங்களுக்கும் ஏற்படாத போதிலும்; வீடுகளில் இருந்த பெறுமதியான பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

அப்பகுதி மக்கள் தைப்பொங்கல் பண்டிகையைச் கொண்டாட சென்றிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயே 10 வீடுகளுக்கு பரவியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிவர்வாகமும், கிராம சேவகர்கரும் இணைந்து சமைத்த உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!!

உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது.

நாளை வியாழக்கிழமை உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர்.

வவுனியா நகரப்பகுதியில் அதிக சன நெரிசல் காணப்படுவதுடன் பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றின் விற்பனை சூடு பிடித்துள்ளது.

தைப்பொங்கல் திருநாள் வியாழக்கிழமை (15.01) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தைப்பொங்கல் பண்டிகை களைக்கட்ட ஆரம்பித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

அத்துடன் கடந்த வருடத்தினை விட இம்முறை மக்கள் அதிக ஆர்வத்துடன் பொங்கல் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக வவுனியா வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் கரையொதுங்கிய மர்ம தெப்பம்!!

திருகோணமலை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாழைத்தோட்ட கடற்கரைப் பகுதியில் இன்று (14) பௌத்த அடையாளங்களைக் கொண்டு தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இது மியன்மார் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இத்தெப்பம் பௌத்த அடையாளங்களை கொண்டு காணப்படுகின்றது.

பௌத்த பூஜை வழிபாடுகளின் பின் கடலில் விடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை கடந்த காலங்களிலும் இவ்வாறான தெப்பங்கள் , இலங்கை கரையோர பகுதிகளி கைரஒயொதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தங்க நகைகளை திருடிச் சென்ற இளம் பெண்!!

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம்( 12.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புறநகரில் வசிக்கும் இளம் பெண் ஒருவரே தான் பணியாற்றிய நகைக் கடையில் சிறிது சிறிதாக தங்க நகைகளை திருடியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை வரும் ஜனவரி 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று(13.1.2026) உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் இயங்கும் பிரபல நகைக் கடைகளில் ஒன்றில் சுமார் ஒன்றரை வருடம் பணியாற்றிய பெண் 3 மாதங்களுக்கு முன்னர் தனக்கு ஜனவரி 21ஆம் திகதி திருமணம் என்று கூறி பணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்த நிலையில் நகைக் கடையில் கணக்கெடுப்பில் சுமார் 2 கிலோ கிராம் தங்க நகைகள் காணாமல் போனமை அறியப்பட்டு ஆராயப்பட்ட போதே விடயம் கண்டறியப்பட்டு யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் நகைக் கடை முகாமைத்துவத்தினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளனர்.

அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தும், விற்பனை செய்தும் நிலத்துக்கு அடியில் புதைத்து வைத்துள்ளதாகவும் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

சான்றுப்பொருள்களை மீட்கும் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மின்சாரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த தம்பதி!!

வரகாபொல பகுதியில் உள்ள ஒரு வயலில் மின்சாரம் தாக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். ஹுனுவல, துலிஹிரிய பகுதியில் வசிக்கும் தம்பதியினரே நேற்று மதியம் இவ்வாறு உயிரிழந்தனர்.

உயிரிழந்த ஆண் 60 வயதுடையவர் எனவும் பெண் 58 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், வயலை விலங்குகளிடமிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் கம்பியினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மின்சாரம் தாக்கிய இருவரும் வரகாபொல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. மின் கம்பியை பொருத்திய ஹுனுவல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் தேங்கிக் கிடக்கும் 300 புதிய வாகனங்கள்!!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 300 புத்தம் புதிய வாகனங்கள் ஆறு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்துறை குறித்த வாகனங்களை விடுவிப்பதற்காக அவற்றின் அசல் மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வரிகளை கோருவதாக தனிப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் முறையிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் நடைமுறையில் உள்ள அனைத்து இறக்குமதி விதிமுறைகளையும் கடைப்பிடித்ததாக தனிப்பட்ட வாகன உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் பின்னர் சுங்கத்துறை கூடுதல் வரிகளை விதித்துள்ளது, இதில் பொருந்தக்கூடிய சுங்க வரியில் கிட்டத்தட்ட 50 சதவீத கூடுதல் வரியாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில், இறக்குமதியாளர்கள் ஒரு வாகனத்திற்கு மொத்த வரித் தொகை 10 மில்லியனைத் தாண்டியுள்ளதாகக் கூறுகின்றனர். நீடித்த தாமதம் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களிடையே விரக்தியையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே திருத்தப்பட்ட வரி கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், பல மாதங்களாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்ட போதிலும் தங்கள் வாகனங்களை துறைமுகத்திலேயே சிக்க வைத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வாகனங்கள் கிராஸ் போர்டர் லெட்டர் ஒஃப் கிரெடிட் (எல்சி) முறையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில்,நேற்று (13.01.2026) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாதிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலையிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

தங்கள் வாகனங்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் நிதி ரீதியாகவும் உள ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் பல உரிமையாளர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் தங்கள் குடும்பத்திற்காக ஒரு வாகனத்தை வாங்க பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.

அவர்களின் வாகனங்கள் ஏற்கனவே இலங்கைக்கு அனுப்பப்பட்ட பிறகு விதிகள் மாற்றப்பட்டதால் இப்போது பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு வர பங்களாதேஷ் அணி தொடர்ந்தும் மறுப்பு!!

இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான தற்போதைய கிரிக்கெட் மோதல் தொடர்கிறது. இதன்படி டி20 உலகக்கிண்ண போட்டிக்காக இந்தியாவிற்கு வர பங்களாதேஸ் தொடர்ந்தும் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிற்கு பயணம் செய்யப் போவதில்லை என்ற தனது முடிவில் பிடிவாதமாக இருப்பதாக பங்களாதேஸ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

எனவே தமது போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இலங்கை உட்பட்ட நாடுகளுக்கு மாற்ற வேண்டும் என அந்த நாட்டின் கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் உலகக் கிண்ண அட்டவணை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இப்போது மாற்ற முடியாது என்று ஐசிசி கூறினாலும், பங்களாதேஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

போட்டிகளின் அட்டவணையின்படி, பங்களாதேஸ் அணி, கொல்கத்தாவில் 3 போட்டிகளிலும், மும்பையில் 1 போட்டியிலும் விளையாட வேண்டும். முன்னதாக, பங்களாதேஸில் இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை காரணம் காட்டி,

ஐபிஎல்லியின் கொல்கத்தா அணியில் இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தே, பங்களாதேஸ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இந்த இந்திய மறுப்பை வெளியிட்டு வருகிறது.

பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14.01.2026) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, மேற்கு மாகாணத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை எச்சரிக்கை மேலும் கூறுகின்றது.

அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இலங்கைப் பெண்ணுக்கு விமானத்தில் காத்திருந்த அதிர்ச்சி!!

டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இலங்கை பயணி ஒருவரிடமிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பயணியிடமிருந்து 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இஸ்ரேலில் குழந்தை சுகாதார ஆலோசகராக பணி புரியும் போரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணின் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை சீன நாட்டவர் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பெண் நேற்று காலை 08.15 மணிக்கு ப்ளைடுபாய் FZ விமானத்தில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணின் வேண்டுகோளின் பேரில் அந்தப் பெண் கொண்டு வந்த கைப்பை விமானத்தில் அவரது இருக்கைக்கு மேலே உள்ள பொதி வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் அவர் விமானத்திலிருந்து வெளியே வந்து விமான நிலைய வாடகை வாகனத்திற்கு பணம் செலுத்தவிருந்தபோது, ​​3,660 அமெரிக்க டொலர்கள், 500 யூரோக்கள் மற்றும் அவரது கைப்பையில் இருந்த இலங்கை பணம் காணாமல் போனமை தெரிய வந்துள்ளது.

அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். உடனடியாக செயற்பட்ட பொலிஸார் அந்த பெண்ணுடன் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்தனர்.

அந்த கண்காணிப்புகளின் போது, ​​அந்தப் பெண்ணின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு சீன நாட்டவரை பொலிஸார் அடையாளம் காண முடிந்தது. பின்னர், அவரைப் பற்றிய விபரங்களைக் கண்டறிந்த பொலிஸார்.

அந்த நேரத்தில் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதனை அவதானித்துள்ளனர். சந்தேக நபர் கிம்புலப்பிட்டி பகுதியில் ஒரு சீனப் பெண் நடத்தும் விடுதியில் மறைந்திருந்தபோது, ​​அவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

25 வயதான சீன நாட்டவர் இந்த வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை அவர் தூங்கிக் கொண்டிருந்த தலையணை உறையில் மறைத்து வைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சீன நாட்டவர் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றிய யுவதி மர்ம நோயால் மரணம்!!

களுத்துறை, மத்துகம பகுதியை சேர்ந்த 20 வயதான சந்துனி நிசான்சா என்ற யுவதி மர்ம நோயினால் உயிரிழந்துள்ளார். எதிர்பாராத உடல்நலக் குறைவால் கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

தனது 6 வயதிலேயே பாம்பு விஷம் நீக்கும் பாரம்பரிய மருத்துவ முறையைத் தொடங்கி, குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை குணப்படுத்தியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட தனது தாத்தாவிடம் இருந்து இக்கலையைக் கற்றுக்கொண்ட சந்துனி, தந்தையை விடவும் மிகச் சிறந்த ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.

புகையை சுவாசிக்கச் செய்தல், மந்திரங்கள் மற்றும் விரல் நுனியால் தரையைத் தட்டி விஷத்தை வெளியேற்றும் அபூர்வ முறைகளைக் கையாண்டு இவர் சிகிச்சை அளித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் நள்ளிரவில் வரும் நோயாளிகளுக்குக் கூட, விடியற்காலை வரை விழித்திருந்து எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகவே மருத்துவம் செய்து வந்தார்.

கல்வித் துறையிலும் சிறந்து விளங்கிய அவர், கெவிட்டியகல மகா வித்தியாலயம் மற்றும் மத்துகம புனித மேரி கல்லூரியில் பயின்று, கலைப் பிரிவில் உயர்தரக் கல்வியை முடித்திருந்தார்.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த சந்துனி, உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, தான் மறைந்தாலும் தம்பி தாயை கவனித்துக் கொள்வார் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

கண்பார்வை பாதிப்பில் தொடங்கிய இவரது நோய், பின்னர் இதயம் 20 சதவீதம் மட்டுமே வேலை செய்யும் நிலைக்குச் சென்றது. இதன் போதும், அவர் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் அமைதியாக எதிர்கொண்டார்.

ஒரு மாத காலமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய சந்துனி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முச்சக்கரவண்டி விபத்து – சாரதி படுகாயம்!!

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு உள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13.01.2026) காலை இடம்பெற்றுள்ளது. வெதுப்பக உணவுகள் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் முன்சக்கரம் உடைந்து தடம் புரண்டதால், விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சாரதி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2026இன் முதல் சந்திர கிரகணம் மார்ச்சில்!!

2026ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகண நிகழ்வு மார்ச் மாதம் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் 82 நிமிடங்கள் இரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வானியல் தரவுகளின்படி, மார்ச் நிகழ்வில் இந்த முழுமை நிலை சுமார் 58 நிமிடங்கள் மற்றும் 19 வினாடிகள் நீடிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து, நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றும் அந்த நிலை சுமார் 82 நிமிடங்கள் வரை நீடிப்பது போன்ற உணர்வைத் தரக்கூடும் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கிழக்காசியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள் மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இந்த கிரகணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ காண முடியும் என்றும்,

ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்கள், அந்தந்த ஊர் உள்ளூர் நேரத்தைப் பொறுத்தும், வானில் நிலவு இருக்கும் நிலையைப் பொறுத்தும் இந்த கிரகணத்தை ஓரளவிற்குத் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கிரகணம் கிழக்கு ஆசியா மற்றும் அவுஸ்திரேலியாவில் மார்ச் 3 அன்று இரவு நேரத்தில் இந்த கிரகணம் தெரியும். வட அமெரிக்காவில் மார்ச் 3 அன்று அதிகாலையில் இது நிகழும்.

இந்திய நேரப்படி இந்த நிகழ்வு மார்ச் 3 அன்று மாலை சுமார் 02:14 மணிக்கு தொடங்கி இரவு 07:53 மணி வரை நீடிக்கும்.

மலையக தமிழ் கிரிக்கெட் வீரருக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்!!

மலையகத்தைச் சேர்ந்த இளம் வீரர் ஒருவர் அமெரிக்க தேசிய அணியின் வலைப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வட்டவளை பிரதேசத்தை சேர்ந்த ரவிக்குமார் அபிஷேக் என்ற இளைஞர், எதிர்வரும் நாட்களில் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் அமெரிக்க அணியின் வலை பயிற்சிகளுக்கான பந்துவீச்சாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அபிஷேக் தற்பொழுது இலங்கை மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணியின் வீரர்களுக்கு பந்து வீசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் பொஸ்கோனியன்ஸ் விளையாட்டு கழகத்தின் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் ஹட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் மாணவர் என்பதுடன் குறித்த மாணவர் வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற்பந்துவீச்சாளராகவும் சகல துறை வீரராகவும் திகழ்ந்து வருகின்றார்.

அண்மை காலமாக நுவரெலியா மாவட்டத்தில் நடைபெற்று வரும் போட்டி தொடர்களில் அபிஷேக் அபார திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணிகள் அல்லது முனன்ணி கழகங்களின் துடுப்பாட்ட வீரர்களின் வலைப் பயிற்சியின் போது திறமையான பந்து வீச்சாளர்களை கொண்டு பந்து வீசும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறு பந்து வீசக் கூடிய வீரர்களே வலைப்பந்து வீச்சாளர்கள் என அழைக்கப்படுகின்றார்கள்.