காதலிக்கு எய்ட்ஸ் ரத்தம் செலுத்திய கொடூரக் காதலன் : தாங்க முடியாமல் இளம்பெண் விபரீத முடிவு!!

தெலங்கானா மாநிலத்தில் காதலி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு எய்ட்ஸ் கிருமி கலந்த ரத்தத்தைச் செலுத்தி கொலை செய்ய முயன்ற காதலனின் வெறிச்செயல் தற்போது ஒரு உயிரைப் பறித்துள்ளது.

கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று மனோகர் என்ற இளைஞர், தனது காதலியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, எய்ட்ஸ் கிருமி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் அவர் உடலில் செலுத்தியுள்ளார்.

இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்த இளம்பெண் கடும் மனவேதனைக்கும், உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளார்.

தான் நேசித்தவனே இப்படி ஒரு கொடூரத்தைச் செய்துவிட்டானே என்கிற ஆத்திரத்திலும், இனி தனது வாழ்க்கை அவ்வளவுதான் என்கிற விரக்தியிலும் இருந்த அந்த இளம்பெண், இன்று (ஏப்.10) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

உயிருக்குப் போராடிய நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடி, அவரைத் தற்கொலைக்குத் தூண்டிய அந்த இளைஞனின் மிருகத்தனமான செயல் ஒட்டுமொத்த தெலங்கானாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக இருந்த மனோகரைத் தேடி வருகின்றனர். ஒரு உயிரைக் கொல்ல வேண்டும் என்பதற்காக எய்ட்ஸ் ரத்தத்தைப் பயன்படுத்திய காதலனின் செயல், நவீன கால ‘சைக்கோ’ தனமாகப் பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு மறுத்ததற்காக இப்படி ஒரு கொடூரமான முடிவைத் தேடிக்கொடுத்த காதலனுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

வறுமையால் வெளிநாடு சென்ற தாய் : சடலத்தையாவது பார்க்க உதவுமாறு அரசாங்கத்திடம் கோரும் மகள்கள்!!

குவைத்திற்கு சென்ற தமது தாய் உயிரிழந்துள்ள நிலையில், அவரை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என திருகோணமலை வெருகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவன் பகுதியைச் சேர்ந்த திலக்சாணி (25) மற்றும் கிருசாணி (23) ஆகிய இரு சகோதரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கம் எப்படியாவது அம்மாவின் சடலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாக கோரியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தச் சகோதரிகளின் தந்தை சிவலிங்கம் வனராசா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை தந்தை வருவார் என்ற ஏக்கத்துடனேயே இவர்கள் வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவன் இன்றி தவித்த வேளையில், தற்துணிவுடன் எழுந்து நின்றவர் இவர்களின் தாய்.

தன் இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி மீனா குவைத் நாட்டுக்குத் தொழில் நிமித்தம் சென்றார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் மாரடைப்பு காரணமாக குவைத்தில் காலமானார் என்ற செய்தி வந்து சேர்ந்துள்ளது.

தந்தை காணாமலாக்கப்பட்ட துயரம் ஒருபுறம் இருக்க, தற்போது தாயையும் இழந்து நிற்கும் இந்தப் பிள்ளைகள், தங்களது தாயின் பூதவுடலை இறுதிச் சடங்கு செய்வதற்காக இலங்கைக்குக் கொண்டு வர உதவுமாறு அரசாங்கத்திடமும், உரிய அதிகாரிகளிடமும் மன்றாட்டமாகக் கோருகின்றனர்.

குறித்த சகோதரிகள் கூறுகையில், அப்பா காணாமல் ஆக்கப்பட்ட போது எங்களுக்குச் சிறிய வயது. அவருக்கு இறுதிச் சடங்கு கூட செய்யக் கொடுத்து வைக்கவில்லை. அந்த வலி இன்றும் எங்களை வாட்டுகிறது.

இப்போது எம்மை வளர்த்து ஆளாக்கிய அம்மாவும் பிரிந்துவிட்டார். அவரின் முகத்தையாவது கடைசியாக ஒருமுறை பார்த்து, முறைப்படி இறுதி மரியாதைகளைச் செய்ய எங்களுக்கு வழிவகுத்துத் தாருங்கள் என உருக்கமாக கோரியுள்ளனர்.

இந்த இரு இளம் பெண்களின் எதிர்காலத்தையும், அவர்களது நியாயமான கோரிக்கையையும் கருத்திற்கொண்டு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பிரான்ஸில் யாழ் வம்சாவளி மாணவர் சாதனை : 18 வயதில் நகரசபை உறுப்பினர்!!

பிரான்ஸின் கயன்கோர்ட் (Guyancourt) நகராட்சியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், 18 வயதுடைய யாழ்ப்பாண வம்சாவளி மாணவர் பிலால் லுக்மான் (Bilaal Lookman) நகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் பிரான்ஸின் மிக இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரான்ஸில் பிறந்த பிலால் லுக்மான், தற்போது பாரிஸ்-பந்தியோன்-அசாஸ் (Paris-Panthéon-Assas) பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு சட்ட மாணவராகப் பயின்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற பிரான்ஸ் நகராட்சித் தேர்தல்களில், அவர் தனது கன்னி வாக்கைப் பதிவு செய்த அதேவேளை, வேட்பாளராகவும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது பதவியில் உள்ள மேயரின் அணியில் இணைந்து பிலால் லுக்மான் (Bilaal Lookman) இந்தப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

கனடா ஆசை காட்டி பாரிய மோசடியில் ஈடுபட்ட பெண்!!

கனடா உட்பட பல நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். மஹரகம பகுதியில் Global Educare Consultancy என்ற பெயரில் மாணவர் விசா பெற்றுத்தரும் நிறுவனம் ஒன்றை குறித்த பெண் நடத்தி வந்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் மறைவில் பாரிய வேலைவாய்ப்பு மோசடியை சந்தேக நபரான பெண் செய்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் எந்தவித முறையான அனுமதி அல்லது உரிமம் இன்றி இயங்கி வந்த இந்த நிறுவனம், அதிகாரிகளால் முற்றுகையிடப்பட்டது.

அங்கிருந்து பல வேலை ஒப்பந்தங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை ஏப்ரல் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

காதல் தோல்வியால் மாணவனின் விபரீத முடிவு!!

புத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த, தனியார் வகுப்புக்களுக்குச் சென்று வந்த 17 வயதான வதிகே தசுன் மதுஷான் பெரேரா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காதலி பிரிந்து சென்றதால் ஏற்பட்ட மனவேதனையிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மாணவனின் சடலம் மீதான மரண பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்படவிருந்தன.

சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த மாரசிங்க தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தெரிவில் சாதித்த முல்லைத்தீவு போட்டியாளர்கள்!!

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டி ஏப்ரல் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் வித்தியானந்தக் கல்லூரியைச் சேர்ந்த 23 வயதுக்குட்பட்ட பிரிவில் நான்கு பழைய மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் இரு மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

அதில் கி. சனுயா வெள்ளிப் பதக்கம் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், ஜெ.வினோஜன் வெண்கலப் பதக்கம் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர்களின் இந்த சாதனை முல்லைத்தீவு மாவட்டத்திற்கும், வித்தியானந்தாக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள மக்களுக்கு அவசர அறிவுறுத்தல் : கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

தற்போதைய கடும் வெப்பமான வானிலையில் காரணமாக தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்யும்போது பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

அந்த வகையில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் உள்ள சிக்கல் என்னவென்றால், கிராம ஓட்டம் மற்றும் மிதிவண்டிப் போட்டிகள் உள்ளிட்ட வெகுஜன விளையாட்டுகள் நடைபெறுவதுதான்.

அந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு நாங்கள் கூற விரும்புவது என்னவென்றால், அதற்கென சரியான நேரத்தை தேர்ந்தெடுத்து, காலை 10 மணிக்குள் வெளிப்புற நடவடிக்கைகளை முடித்து கொள்ள வேண்டும்.

மாலை நேர நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்குகின்றன. அடுத்து நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அத்தகைய சூழ்நிலையில்,

விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் தகுந்த அளவு நீர் அருந்தி, உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்.

வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள், நாம் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அசாதாரணமான தசைத் துடிப்புகளைக் கண்டறியலாம். அதீத சோர்வு ஏற்படலாம். இதுபோன்ற உணர்வுகளை நீங்கள் உணரும்போது,

​​விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, ஒரு தங்குமிடத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் உடல் வெப்பநிலையைக் குறைக்க நீங்கள் சென்று குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள், தாங்கள் ஏற்பாடு செய்யும் இடங்களில் கடும் வெப்பத்தின் அபாயங்களைத் தவிர்க்கத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குளிர்ந்த நீர், பனிக்கட்டிகள் போன்றவை என்றுள்ளார்.

இதேவேளை சித்திரை புத்தாண்டு காலங்களில் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விபத்துக்களைத் தவிர்க்கவும் சுகாதார அமைச்சு விசேட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

விளையாட்டு மருத்துவ நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை விளையாட்டு மருத்துவ சங்கத்தின் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இந்த வழிகாட்டியில் உள்ள முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வருமாறு:

1. வழுக்கு மரம் ஏறுதல் மரத்தின் உச்சியில் ஏறும்போது ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க, மரத்தைச் சுற்றியுள்ள தரைப்பகுதி மென்மையான மணல் அல்லது வைக்கோல் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில் தேவையற்ற முறையில் மக்கள் குழுமுவதைத் தவிர்க்க பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.

2. கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வலுவான கயிறுகள் பயன்படுத்தப்பட வேண்டும். கயிறு பழுதடைந்துள்ளதா என்பது முன்கூட்டியே சரிபார்க்கப்பட வேண்டும்.

வீரர்கள் வழுக்கி விழுவதைத் தவிர்க்க பொருத்தமான காலணிகளை அணிவதுடன், புல் தரை போன்ற பாதுகாப்பான மேற்பரப்பில் போட்டியை நடத்த வேண்டும்.

3. சாக்கு ஓட்டம் ஓடும் பாதையில் கற்கள், குழிகள் அல்லது தடைகள் ஏதுமின்றி தட்டையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கிழிசல்கள் இல்லாத உயர்தரமான சாக்குகளைப் பயன்படுத்துவதுடன், வீரர்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேண வேண்டும்.

4. பொதுவான சுகாதார ஆலோசனைகள் தற்போதைய வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு, வீரர்கள் நீர்ச்சத்தை பேணுவதற்கு போதியளவு நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். திடீர் விபத்துக்கள் ஏற்பட்டால் முதலுதவி வழங்கவும், நோயாளிகளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லவும் அவசர மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பாரம்பரிய விளையாட்டுக்களின் மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதேவேளை, உயிராபத்துக்கள் மற்றும் பாரிய காயங்களைத் தவிர்க்க இந்த வழிகாட்டல்களைக் கடுமையாகப் பின்பற்றுமாறு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10.04.2026) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

இன்றும் எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சூரியன் வடதிசை நோக்கி நகர்ந்து (10) 12:11 மணியளவில் பல பகுதிகளில் சூரியன் மிக நெருக்கமாக உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கமுவ, சீகிரியா, பலுகஸ்தமன மற்றும் மாங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையானது இன்றைய தினமும் எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் இன்று வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (10) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அது தவிர, நாட்டின் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், அதிகாலை நேரங்களில் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை வானிலை ஆய்வுத் துறை வலியுறுத்துகிறது.

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை : இலங்கையில் நகை வாங்கவுள்ளவர்களுக்கான தகவல்!!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10.04.2026) நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

முதலாம் இணைப்பு : உலகச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (10.04.2026) பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தங்கம் ஒரு அவுண்ஸ் 4,776.9 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.​ இதேவேளை நேற்றைய தினம் (09.04.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக காணப்பட்டிருந்தது. இதேவேளை வெள்ளி ஒரு அவுண்ஸ் 75.36 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.​​

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை உயர்வினைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் இன்று தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

குறிப்பாக, ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் 24 கரட் தங்கத்தின் விலைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

கவலையை ஏற்படுத்தும் புறக்கோட்டை பேரூந்து நிலையத்தின் தற்போதய நிலை : மக்களுக்கு கடும் எச்சரிக்கை!!

புதிதாக திறக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பல பகுதிகளில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதுடன், பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் கழற்றி செல்லப்பட்டுள்ளன.

இந்நிலையில் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகத் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

இன்று (10) காலை பஸ் நிலையத்திற்கு நேரடி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பஸ் நிலையத்தின் சொத்துக்கள் சேதப்படுத்தப்படுவது ஒரு திட்டமிட்ட குழுவின் செயல் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனைத் தடுக்கக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், குறிப்பாகப் பெண்கள் கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த நீர்க்குழாய்கள் முதல் நாள் திருடப்பட்டிருந்தன.

அவை மீண்டும் பொருத்தப்பட்ட நிலையில், நேற்று (09) இரவும் இரண்டாவது முறையாக அவை கழற்றிச் செல்லப்பட்டுள்ளன. இது அறியாமையினால் செய்யப்படும் செயலல்ல, மாறாகத் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் ஒரு சதி முயற்சி.

அரசியல் ரீதியாகப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இன்று விசேட பாதுகாப்பு கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்கு பஸ் நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக இலங்கை விமானப்படையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர்.

தற்போது அங்குள்ள CCTVகெமராக்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதால், கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த மேலதிக கெமராக்களைப் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பிரச்சாரங்கள் ஒருபுறமிருக்க, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள பிரதி அமைச்சர், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வவுனியாவில் சுட்டெரிக்கும் வெயில் : நிழல் தந்த மரங்களை வெட்டிச் சாய்க்கும் அதிகாரிகள்!!

வவுனியா மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றான குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் நின்றிருந்த நிழல் தரும் மரங்கள், அரச அதிகாரிகளால் வெட்டப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தற்போது வழமைக்கு மாறாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மரங்களின் நிழலையே பெரிதும் நம்பியுள்ளனர்.

இந்நிலையில், குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் பல வருடங்களாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டப்படுவதால் அவ்வீதியால் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கண்காணிப்பு அல்லது அனுமதியுடனேயே இந்த மரங்கள் வெட்டப்படுவதாகத் தெரியவருகிறது.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய வன பாதுகாப்பு திணைக்களமே, இவ்வாறான கடும் வெயில் காலத்தில் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியுள்ளமை குறித்து சூழலியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஏற்கனவே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. இருக்கும் ஒரு சில மரங்களையும் வெட்டிவிட்டால் வீதியில் நடக்கவே முடியாது. அபிவிருத்தி என்ற பெயரிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மரங்களை அழிப்பது எமது எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம்” என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மரம் நடும் திட்டங்களை அரசாங்கம் ஒருபுறம் முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் செழிப்பாக வளர்ந்துள்ள மரங்களை வெட்டிச் சாய்ப்பது முரணான செயலாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே வவுனியா மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வவுனியா தனியார் பேருந்து நடத்துனருக்கு காலவரையற்ற பணித்தடை : கிளிநொச்சியில் இ.போ.ச. சாரதியுடன் மோதலால் விபரீதம்!!

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) சாரதியுடன் பாரதூரமான முறையில் முரண்பட்ட வவுனியா தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் காலவரையற்ற பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (07.04.2026) குறித்த தனியார் பேருந்து நடத்துநர், இ.போ.ச. சாரதியுடன் மிகவும் அநாகரிகமான முறையில் முரண்படும் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இக்காணொளியை ஆதாரமாகக் கொண்டு துரித விசாரணைகளை மேற்கொண்ட வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, நடத்துநரின் ஒழுங்கீனமான செயற்பாட்டை உறுதிப்படுத்தியது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன், குறித்த நடத்துநர் இனிவரும் காலங்களில் வடக்கு மாகாண வழியனுமதிப் பத்திரம் கொண்ட எந்தவொரு பேருந்திலும் பணியாற்றுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்த வவுனியா தனியார் பேருந்தின் வழியனுமதிப் பத்திரமும் (Route Permit) இரண்டு நாட்களுக்குச் செல்லுபடியற்றதாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் ஊழியர்களின் ஒழுக்க மீறல்கள், போக்குவரத்து விதிமீறல்கள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் குறித்து பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவின் முதல்நிலை மாணவன் : தந்தை ஒரு கூலித் தொழிலாளி : சவால்களை சரித்திரமாக்கிய கோகுலனின் கதை!!

இலட்சியம் உறுதியாக இருந்தால் வறுமையும், தூரமும் ஒரு தடையல்ல என்பதை வவுனியா மண்ணைச் சேர்ந்த மாணவன் இராமகிருஷ்ணன் கோகுலன் மெய்ப்பித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் (Engineering Technology) வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தோற்றிய கோகுலன், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை மட்டுமே பெற்றிருந்தார். எனினும், முதலிடத்தை அடைய வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், மனம் தளராமல் மீண்டும் இம்முறை பரீட்சைக்குத் தோற்றினார். அவரது அந்த அயராத உழைப்பிற்கு இன்று மாவட்ட மட்ட முதலிடம் பரிசாகக் கிடைத்துள்ளது.

கோகுலனின் இந்தச் சாதனைக்குப் பின்னால் ஒரு பெரும் போராட்டமே ஒளிந்துள்ளது. இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. தனது அன்றாடக் கூலி வேலை மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு, பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மகனின் கல்விக்காக அவர் பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்துள்ளார். தந்தையின் கஷ்டத்தை உணர்ந்த கோகுலன், அதனைத் தனது வெற்றிக்கான எரிபொருளாக மாற்றிக் கொண்டார்.

வசதிகள் குறைவான கிராமப் பகுதியில் இருந்து வரும் கோகுலன், தனது கல்விக்காக தினமும் 8 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியிலேயே பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். காலநிலையோ அல்லது உடல் சோர்வோ அவரது கல்விப் பயணத்தை ஒருபோதும் தடுத்ததில்லை.

“கடந்த முறை இரண்டாம் இடம் கிடைத்தபோது சிறு ஏமாற்றம் இருந்தது. ஆனால், அந்த ஏமாற்றத்தை வைராக்கியமாக மாற்றிப் படித்தேன். என் தந்தையின் உழைப்பு வீண்போகவில்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி” என கோகுலன் தனது வெற்றிக் குறித்துத் தெரிவித்தார்.

வவுனியாவின் பல மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் இராமகிருஷ்ணன் கோகுலனுக்கு சமூக வலைத்தளங்களிலும், நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

வறுமையைத் தனது விடாமுயற்சியால் வென்றெடுத்த இந்தச் சாதனையாளர், எதிர்காலத்தில் ஒரு சிறந்த பொறியியலாளராகி சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி : ஊழியர்களின் வேலைகள் பறிபோகுமா? தொழில் அமைச்சின் தகவல்!!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வரை வேலைவாய்ப்பு இழப்புகள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.

இருப்பினும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ள அமைச்சு ஆயத்தமாகி வருகின்றது. எரிபொருள் நெருக்கடியினால் தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து தேசிய தொழில் ஆலோசனைச் சபையில் ஏற்கனவே விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தற்போதுவரை வேலை இழப்புகள் பதிவாகவில்லை என்றாலும், முதலாளிகள் மற்றும் ஊழியர் தரப்புடன் இணைந்து எதிர்கால நிலைமைகளைச் சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்றுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இலங்கையிலும் எரிபொருள் தொடர்பான சவால்களைத் தோற்றுவித்துள்ளன.

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இலங்கை தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகள் குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு சில மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

சுமார் 374,000 தொழிலாளர்கள் இந்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாதத்திற்கு சுமார் 48 மில்லியன் அமெரிக்க டொலர் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

மஹியங்கனை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹொபரியாவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தெஹியத்தகண்டிய, சந்தனகம பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தேவிந்த பிரபாஷ்வர மற்றும் 21 வயதுடைய கௌஷிக மனோஜ் ஆகிய நண்பர்களே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும் நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரமொன்றில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.