யாழில் கடுமையாகவுள்ள நடைமுறை : பொலிஸாருக்கு அமைச்சர் பிமல் விடுத்துள்ள உத்தரவு!!

யாழ்.மாவட்டத்தில் செயற்படுவரும் சாரதி பயிற்சிப் பாடசாலைகளின் தகுதி குறித்து பொலிசார் கடுமையாக கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது. எனவே சாரதிப் பயிற்சி நிலையங்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து கூறிய யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் – யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூடியளவான விபத்துக்கள் இரு சக்கர (மோட்டார் சைக்கிள்) வாகனங்களாலேயே ஏற்படுகின்றன.

குறிப்பாக FZ மோட்டார் சைக்கிள்களின் அதிவேக சாரதித்துவமே விபத்துக்களை அதிகளவு ஏற்படுத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.

மேலும் பிரதான வீதிகளில் அதி வேகத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் கிளை வீதிகளுக்கு திரும்பும் சந்தர்ப்பங்களிலும் கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிகளுக்கு பிரவேசிக்கும் சந்தர்ப்பங்களில் தான் இந்த விபத்துக்களும் மரணங்களும் சம்பவிக்கின்றன.

விபத்துக்களில் அதிகளவில் தமிழ் மக்களே பலியாகி வருவதும் புள்ளி விபரங்களில் அறிய முடிகின்றது. எனவே சாரதிப் பயிற்சி தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவேண்டியதாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை யாழ் மவட்ட மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி, யாழ்.மாவட்டத்தில் 13 சாரதிப் பயிற்சி நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டு செயற்பட்டு வருகின்றன.

இவற்றுள் இரு பயிற்சி நிலையங்கள் அனுமதியை மீள் புதிப்பு செய்யாதிருக்கின்றன. அவை குறித்து பொலிசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பயிற்சி நிலையங்கள் முறையாக பயிற்சி வழங்குகின்றனவா அல்லது முறைகேடுகள் இருக்கின்றனவா என்பது குறித்து பொலிஸார் உன்னிப்பாக அவதானம் செலுத்த வேண்டும்.

அதேநேரம் வாகனங்களின் தரம், பாதுகாப்பு அமைப்புகளின் அவசியம், தூர சேவை வாகனங்களுக்கு 48 மணி நேர செல்லுபடியாகும் சோதனை சான்றிதழ்,

இருக்கை பட்டிகள் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்தும் சேதனைகள் முன்னெடுக்கப்பட்டு விபத்துக்களை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கனகராயன்குளம் விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை பலி!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று(19.09.2025) இடம்பெற்ற விபத்தில் ஜேர்மன்நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்….

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துகொண்டிருந்த நபருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். அவர் ஜேர்மன் நாட்டில் இருந்து வருகைதந்து கனகராயன்குளம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கனகராயன்குளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சை செயற்பாடுகள் ஆரம்பம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இருதய சத்திர சிகிச்சை நிலையம் நேற்றையதினம் (18.09) தனது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளது.

நெதர்லாந்து அரசின் நிதி உதவியோடு இருதய சத்திர சிகிச்சை கூடம் அதற்கான உபகரணங்களோடு அமைக்கப்பட்டபோதிலும் பயன்பாடின்றி காணப்பட்டது.

இந் நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த இரு வருடங்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்ட நிலையிலும் வைத்திய நிபுணர்கள் இன்மையால் குறித்த சத்திர சிகிச்சை கூடம் செயற்படாமல் இருந்தது.

இதன் காரணமாக வவுனியா மற்றும் அதனை அண்டிய பகுதி மக்கள் யாழ் ஆதார வைத்தியசாலை மற்றும் வேறு மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சினால் இருதய சத்திர சிகிச்சை நிபுணர் தி.வைகுந்தன் நியமிக்கப்பட்டதன் பின்னர் குறித்த சத்திர சிகிச்சை கூடத்தினை ஆரம்பிப்பதற்கான முழுமையான பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பிரகாரம் ஆளணி பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் கூட யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட முன்னணி இருதய சத்திர சிகிச்சை நிபுணர் பி.லக்ஸ்மன், வவுனியா இருதய சத்திர சிகிச்சை நிபுணர் எஸ். ஆர்.குமார மற்றும் ஏனைய வைத்தியர்கள், வைத்தியசாலை நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் குறித்த இருதய சத்திர சிகிச்சை கூடத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் சுமார் எட்டு வைத்தியசாலைகளிலேயே இருதய சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ள நிலையில் வவுனியாவிலும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்!!

வவுனியா கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் நேற்று (18.09.2025) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்விப் பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப்பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் வவுனியா மாநகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் நேற்று(18.09.2025) காலை அனுஸ்டிக்கபட்டது. இதன்போது தியாகி திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கபட்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில் அதன் முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர், வவுனியா மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், உறுப்பினர் தர்மரத்தினம், பிரதேச சபை உறுப்பினர் சுரேஸ், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை குறித்த பகுதியில் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை திலீபனுக்கான அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் 25ஆம் திகதி காலை முதல் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்ப்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

நன்றாக படிக்காததால் மகனை வீட்டிற்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம் : விரக்தியில் தாய் விபரீத முடிவு!!

சரியாக படிக்கவில்லை என்று கூறி மகனை பள்ளியில் இருந்து பாதியில் நிறுத்தியதால். தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என கருதிய தாய், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர், ராதாகிருஷ்ணன் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (42). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தீபா (40). இவர்களது மகன் வீட்டிற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் உங்கள் மகன் சரியாக படிக்கவில்லை என்று கூறி, பொதுத்தேர்வு எழுத வேண்டாம் என பள்ளி நிர்வாகம் பாதியிலேயே மகனை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தனது மகனின் படிப்பு பாழாகிவிட்டதே என தீபா விரக்தியடைந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார்.

மகனும் வெளியே சென்றிருந்தார். இதனால் வீட்டில் தனியாக இருந்த தீபா, ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே வீட்டுக்கு வந்த செல்வம், வீட்டின் அறை பூட்டப்பட்டு இருப்பதை பார்த்தார். கதவை தட்டி பார்த்தார். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து திறந்து பார்த்தார்.

அப்போது தீபா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து,

தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசைக்காக பாடசாலை மாணவன் செய்த தவறான செயல் : தீவிரமாகும் விசாரணை!!

இரத்தினபுரி, அயகம, பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவன் அயகம பொலிஸாரால் நேற்று (17.09.2025) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அயகம பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அயகம பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் வைத்து, திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பாடசாலை மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவனே கைதுசெய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஆசையில் வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக பாடசாலை மாணவன் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட பாடசாலை மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வாழ்க்கையே இல்லாமல் போகும் என பொலிஸார் எச்சரிக்கை!!

இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் தகாத படங்கள் இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக தினமும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இளம் பெண்களுக்கு அவற்றைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமை ஆய்வாளர் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சிறு குழந்தையை சுமந்த நிலையில் தனது கணவருடன் வந்த ஒரு இளம் தாய், தனது முன்னாள் காதலன் தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக முறைப்பாடு செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்ணின் கணவர் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதுகாக்கப்பட்டதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இப்போதெல்லாம், உலகில் சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன கமராக்கள் உள்ளன. எனவே, குறிப்பாக இளம் பெண்கள், தங்கள் காதலர்களுடன் ஒரு இடத்திற்குச் செல்லும்போது, ​​சுற்றிப் பாருங்கள்.

நீங்கள் பார்க்க முடியாத வகையில் ஒரு சிறிய கமரா பொருத்தப்பட்டிருக்கலாம். மேலும், நீங்கள் ஒரு அறைக்குச் சென்றால் குறிப்பாக கவனமாக இருங்கள். இந்த கமராவை குளியலறையில் சுவரில் ஒரு ஆணியில் தொங்கவிடலாம்.

சுவரில் உள்ள மின் பிளக்கில், படுக்கை கட்டத்தில் நிறுவலாம். அதுமட்டுமின்றி, அறையில் உள்ள ஒரு மின் விளக்கில் கூட நிறுவலாம். மேலும், வெளியிட தங்குமிட மையங்களில் ஆடை மாற்றும் போது கவனமாக இருங்கள்.

இந்த கமராக்கள் துணிக்கடைகளின் உடை மாற்றும் அறைகளிலும் நிறுவப்படலாம். நீங்கள் உங்கள் காதலனை நம்பலாம். ஆனால் அவர் உங்கள் அந்தரங்க புகைப்படங்களை கேட்கும்போது கொடுக்க வேண்டாம்.

ஒரு சிறிய கருத்து வேறுபாடு அல்லது கோபம் இருந்தால், அதையெல்லாம் இணையத்தில் வெளியிட கூடும். குறிப்பாக இளம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நண்பனை கொடூரமாக கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர்!!

ஹம்பாந்தோட்ட, திஸ்ஸமஹாராம பகுதியில் தனது நண்பரை போத்தலால் அடித்துக் கொலை செய்து நீரில் மூழ்கடித்த நபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவராகும்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தின் சந்துங்கம பிரதேசத்தில் கால்வாயில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவராகும். சந்தேக நபர் உயிரிழந்தவரின் நண்பர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட மோதல் கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்தவர் அதிரடியாக கைது!!

பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் பொலிஸ் அதிகாரிகளுக்கு விரிவுரை வழங்குவதற்காக இலங்கை வந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்தபோது, ​​சட்டவிரோதமாக 17 தோட்டக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த மூத்த பொலிஸ் அதிகாரியை, 500,000 ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார நேற்று உத்தரவிட்டார்.

அமெரிக்க பொலிஸ் அதிகாரியின் கைரேகைகளை எடுத்து அறிக்கை கோருமாறு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

சந்தேக நபர் பொலிஸ் மா அதிபரின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்ததாகவும், தற்செயலாக தோட்டக்களை வைத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடந்த தவறு தொடர்பாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அந்த உண்மைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்து கவனம் செலுத்திய நீதவான், பிணை உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர் விசாரணைகள் முடியும் வரை வெளிநாடு செல்வதைத் தடுக்கும் உத்தரவையும் நீதவான் பிறப்பித்தார்.

சரி செய்யுங்கள் இல்லையேல் பதவி விலகுங்கள் : பிமல் விடுத்த இறுதி எச்சரிக்கை!!

தொடருந்து துறையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்,

தொடருந்து சேவைகளின் சரியான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறுபவர்கள் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய அமைச்சர் ரத்நாயக்க, தொடருந்து பெட்டிகளின் மோசமான நிலையை விமர்சித்துள்ளார்.

குறிப்பாக காலி மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படும் முக்கிய அலுவலக தொடருந்துகளில் உடைந்த ஜன்னல்கள், செயல்படாத மின்விசிறிகள் மற்றும் சுகாதாரமற்ற கழிப்பறைகள் போன்ற பிரச்சினைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஒரு சிறுவன் தனது முதல் தொடருந்து பயணத்தின் போது ஒரு பழுதடைந்த ஜன்னலில் இருந்து விழுந்து இரண்டு விரல்களை இழந்த ஒரு துயர சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொடருந்துகள் உழைக்கும் மக்களுக்கானவை. இவ்வளவு மோசமான சேவையை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? குறிப்பாக ஒரு மாதத்திற்குள் கழிப்பறைகள், ஜன்னல்கள், மின்விசிறிகள் போன்றவற்றில் தெளிவான பழுதுபார்ப்புகளைக் காண விரும்புகிறேன்.

அடிப்படை சேவையை வழங்க முடியாவிட்டால், வெளியேறுங்கள். இது இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் உறவினர்களுக்கு முக்கிய தகவல்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்பாடு மண்டபத்திற்கு பார்வையாளர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்குமாறும் மற்றும் அதற்கேற்ப வருகையைத் திட்டமிடுமாறும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

புறப்படும் மண்டபத்திற்கு உச்ச நேரங்களில் பார்வையாளர்கள் நுழைதற்கான கட்டுப்பாடு, சீரானமுறையில் முன்னெடுக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை புறப்படும் பகுதிக்கு பயணிகள் அல்லாதோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது அனைத்து பயணிகள் மற்றும் விமான நிலைய வருகையாளர் அனைவருக்கும் எளிதான மற்றும் தடையற்ற சேவையை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலைமை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கும் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கட்டுநாயக்க விமான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது எளிமையால் இலங்கை மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க!!

இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் மக்கள் மனதில் இடம்பிடித்த ஜனாதிபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உள்ளார்.

அவரது எளிமையும், நேர்மையும் இலங்கை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார வடக்கிற்கு விஜயம் செய்ததுடன் , பலவேரு நலத்திட்டங்களையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

வழமையாக நாட்டின் முன்னைய ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்தால் பெரும் அமர்களப்படுத்தி வருவார்கள்.

அவர்கள் அமர குசன் கதிரைகள் , பாதுகாப்பு என அல்லோலகல்லோலப்படும் . மரம் நடுகை என்றால் கூட அவர்கள் நடக்கும் பாதைகளுக்கு கம்பளம் விரித்து அலங்கரிக்கப்படும்.

ஆனால் மக்களின் ஜனாதிபதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனுர குமார திசாநாயக்க நல்லதொரு எடுத்துக்காட்டாக உள்ளார். அவரது எளிமை இலங்கை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் யாழில் தங்கியிருக்கையில் , மிகவும் எளிமையாக அமர்ந்து ஜனாதிபதி அனுர உணவு உண்னும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தனி ஒருவனாக ஊரையே அலற விட்ட இளைஞன் : போதைக்காக அரங்கேறிய சம்பவம்!!

கிரிவத்துடுவ, மில்லகவத்த பகுதியில் உள்ளூர்வாசிகளை துப்பாக்கியால் சுட்டு, மிரட்டி பணப் பறிப்பில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 49 வயதான பெண் ஒருவர் காயமடைந்து கஹதுடுவ வெதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கையில் துப்பாக்கியொன்றையும் லைட்டரையும் வைத்திருந்ததாகவும் அவரைக் கைது செய்ய வந்த பொலிஸாரை சுடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

போதைப்பொருளை வாங்குவதற்காகவே குறித்த நபரால் இப் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் ஏற்கனவே நான்கு பேரை ஆயுதங்களால் வெட்டி காயப்படுத்திய குற்றத்துக்காக சிறைக்குச் சென்று வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதான சந்தேக நபர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்பதோடு கஹதுடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேபாளத்தில் ஹீரோவான இலங்கை தமிழ் அரசியல்வாதி : குவியும் வாழ்த்துக்கள்!!

அண்மையில் நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது, காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது செந்தில் தொண்டமான் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த தீ விபத்தின் போது ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநராக செயற்பட்ட செந்தில் தொண்டமான் அவர்களின் குறித்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தீ விபத்தின் போது பல உயிர்களைக் காப்பாற்றிய அவருக்கு பா.ஜ.க.வின் துணைத் தலைவரான அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு , செந்தில் தொண்டமான் நரகத்தில் சிக்கிய பல குடும்பங்களைக் காப்பாற்ற அவர் விரைவாகத் தலையிட்டு, உண்மையான தலைமைத்துவத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவர்களுடன் உயிர் தப்பிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சமூக ஊடகங்களில் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் கடும் மழை : சரிந்தது வரலாற்று பொக்கிசம்!!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக வரலாற்று சிறப்புவாய்ந்த தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

மந்திரிமனை கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்ததுடன் , மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையிலையே இன்றைய தினம் (17) கடும் மழையால் மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்றிலும் மந்திரி மனைக்கு தனிச்சிறப்புண்டு

யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது மந்திரி மனை.

இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது.

மந்திரி மனை கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவை.

யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியன் அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும்,

அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வரலாற்று பிரசித்தி பெற்றவை என்பதுடன் யாழ்ப்பாணத்தின் வரலாற்றிலும் மந்திரி மனைக்கு தனிச்சிறப்புண்டு .

இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் வரலாற்று ப்க்கிசங்களில் ஒன்றாக திகழ்ந்த மந்திரிமனை இடிந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.