மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என மன்னார் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா என்ற 21 வயதுடைய பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமான இந்தப் பெண்ணை, அவரது கணவர் நேற்று(10) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பற்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
சிகிச்சைக்காக அவரை வைத்தியசாலையில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்த கணவன் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்று பார்த்த போது அவருடைய மனைவியை காணவில்லை.
அங்கிருந்தவர்களிடம் விசாரித்த பின்னர், உறவினர்களுடன் சேர்ந்து கணவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, காணாமல் போனதாக கூறப்படும் அப்பெண், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து முச்சக்கர வண்டி ஊடாக மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வவனியா பேருந்தில் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல மாகாணங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான ‘அம்பர்’ எச்சரிக்கையை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, இன்று (12) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.
மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
எனவே , மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
’பால்கன்ஸின் நாஸ்ட்ராடாமஸ்’ எனகுறிப்பிடப்படும் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா , 9/11 தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம் மற்றும் சீனாவின் எழுச்சி போன்ற முக்கிய உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணித்ததாக நம்பப்படுகிறது.
பாபா வங்கா 1996-ஆம் ஆண்டு 85 வயதில் இறந்தபோதிலும், அவரது தீர்க்கதரிசனங்கள் தொடர்ந்து ஒரு மர்மத்தின் ஆதாரமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் இப்போது, நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி , பாபா வங்கா 2026-ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கும் என்றும், மனிதகுலம் வேற்று கிரகவாசிகளை முதன்முதலில் சந்திக்கும் என்றும் கணித்ததாகக் கூறப்படுகிறது.
“மனிதகுலம் வேற்று கிரக உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளும், இது ஒருவேளை உலகளாவிய நெருக்கடி அல்லது பேரழிவுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் எச்சரித்திருந்தார்.
சிலர் இதை, கடந்த மாதம் பூமிக்கு மிக அருகில் வந்த 3I/ATLAS என்ற மர்மமான பொருளின் கண்டுபிடிப்புடன் தொடர்புபடுத்துகின்றனர்.
சீனா தைவான் மீது தொடர்ந்து இராணுவ அழுத்தத்தைக் கொடுப்பது மற்றும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் நிலவும் பதற்றம் உள்ளிட்ட தற்போதைய புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், மூன்றாம் உலகப் போர் குறித்த பாபா வங்காவின் கணிப்பு உண்மையாகலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
மூன்றாம் உலகப் போர் இந்த ஆண்டு தொடங்கும் என்று பாபா வங்காவின் தீர்க்கதரிசனம் கூறினாலும், அது மனிதகுலத்தை அழித்துவிடும் என்பது சாத்தியமில்லை.
அவரது முந்தைய கணிப்புகள், மனிதகுலத்தின் வீழ்ச்சி கடந்த ஆண்டு தொடங்கியது என்றும், உலகம் அதிகாரப்பூர்வமாக 5079-ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் கூறின.
2025-ஆம் ஆண்டில், பாபா வங்காவின் கணிப்புகளில், மனிதகுலத்தின் வீழ்ச்சியின் தொடக்கத்துடன், பேரழிவு தரும் நிலநடுக்கங்கள், ஐரோப்பாவில் ஒரு போர் மற்றும் ஒரு உலகளாவிய பொருளாதாரப் பேரழிவு ஆகியவை அடங்கும்.
பாபா வங்காவின் கணிப்புகளைத் தவிர, 1500-களில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் மருத்துவருமான நாஸ்ட்ராடாமஸின் (Michel de Nostredame) தீர்க்கதரிசனங்களும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன.
இவர் அடால்ஃப் ஹிட்லரின் ஆட்சிக்கு வருதல், செப்டம்பர் 11 தாக்குதல்கள் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று போன்ற நவீன காலத்தின் சில முக்கிய தருணங்களைக் கணித்தவர்.
நாஸ்ட்ராடாமஸின் தெளிவற்ற எழுத்துக்களின்படி, இந்த ஆண்டு ஒரு முக்கிய ஆளுமை படுகொலை செய்யப்படுவதையோ அல்லது ஒரு அரசியல் ஆட்சியை உலுக்கக்கூடிய அரசியல் சதியையோ காணக்கூடும்.
அதோடு அவரது எழுத்துக்களில் உள்ள மற்றொரு செய்யுள், இந்த ஆண்டு ஏழு மாத கால பெரும் போர் ஒன்று வரவிருப்பதாக எச்சரித்த்துள்ளது.
மொனராகல, வெல்லவாய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞனும், அவருக்கு ஆதரவளித்த தம்பதியும் நேற்று முன்தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் சிறுமியுடன் காதல் உறவில் இருந்ததாகவும், கடந்த வருடம் 7ஆம் மாதம் சிறுமியை அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்துள்ளார்.
இதன்போது கணவன்-மனைவி போல நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதியில் இருந்து சிறுமியை தனது பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளார்.
அவர்கள் வீட்டிலும் கணவன்-மனைவி போல நடந்து கொண்டனர். இதற்கு அந்தப் பகுதியிலுள்ள தம்பதியின் ஆதரவும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த 7ஆம் திகதியன்று இரவு சிறுமி தனது வீட்டிற்குத் திரும்பினார். அங்கு சிறுமியின் தாய் சிறுமியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சம்பவம் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, சந்தேக நபரையும் முறையற்ற உறவுக்கு ஆதரவளித்து தங்கவைத்த தம்பதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, பேராறு அணையின் கீழ் பகுதியில் வசிப்பவர்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன், குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் பேராற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளமையால் அதன் 3 வான்கதவுகளில் ஒரு வான் கதவு ஒரு அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர் செல்லும் பகுதியிலும், பேராறு அணையின் கீழ் பகுதியிலும் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொனராகலை பகுதியிலிருந்து அம்பேவெல பாற்பண்ணைக்கு சோளம் ஏற்றிச்சென்ற லொறியொன்று சனிக்கிழமை (10.01.2026) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா – பட்டிபொல பிரதான வீதியில் ரூவான் எலிய பகுதியில் குறித்த லொறி எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பிரதான வீதியில் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லொறி பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த பகுதிக்கான போக்குவரத்து தற்போது ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர.
லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், எனினும் சிறு காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த சோள செடிகளை பிரதேச மக்களின் உதவியுடன் மற்றுமொரு பாரவூர்திக்கு ஏற்றிச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பொலிஸ் உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் நோயாளர் காவு வண்டி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் சாரதி உட்பட இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளனதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை விட சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.
அதற்கான வலுவான திட்டம் தற்போது வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும், அந்த மக்களை 2048 ஆம் ஆண்டு வரை காத்திருக்கச் சொல்லப் போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
டித்வா சூறாவளியால் முழுமையாக வீடுகளை இழந்த குருநாகல் மாவட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பேரழிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று சிலர் எதிர்பார்த்தாலும், தற்போது கணிசமான அளவுக்கு நாட்டையும் மக்களின் வாழ்க்கையையும் மீட்டெடுக்க அரசுக்கு முடிந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அனர்த்தத்தையும் எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்த நாட்டுப் பொருளாதாரத்தை வலுவாகக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – கொழும்பு பிரதான வீதியில் 85வது மைல்கல் தூணுக்கு அருகில், நேற்று வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளுடனும் அதே திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடனும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலும் குறித்த பஸ் அதன் முன்னால் பயணித்த தனியார் பஸ் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, லொறியின் சாரதி மற்றும் இரண்டு பயணிகள், இரண்டு பஸ்களிலும் பயணித்த 05 பயணிகள் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையிலும், மேலும் இரண்டு பயணிகள் மாவனெல்லை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, லொறியில் பயணித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிஹிந்தலை பகுதியில் உள்ள A9 வீதியில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
தம்புள்ளை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காண வந்து, வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மிஹிந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆம் திகதி வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த 33 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர்.
2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு
பின்னர் சந்தேகநபரை பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து 2023 டிசம்பர் 22 ஆம் திகதி, பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைககளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து சந்தேக நபரான வவுனியா விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த 33 வயது நபர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்யப்பட்டது.
குறித்த வழக்கு தீர்ப்புக்காக நேற்றைய தினம் (09) திகதிடப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார்.
குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 10 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 2 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும்,
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், ஒரு வருட சிறை தண்டனையும் வழங்கி நீதிம்ன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நுவரெலியா, கிரகரி வாவியில் விபத்திற்குள்ளான நீர் விமானம் (sea plane) பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (09.01.2026) மாலை 6 மணியளவில் மீட்டெடுக்கப்பட்டது.
இலங்கை விமாப்படைக்குச் சொந்தமான அதி உயர் தொழில்நுட்பம் கூடிய பாரந்தூக்கி வாகனங்கள் மூலம் கரைக்கு இழுத்துச் தூக்கி எடுக்கப்பட்டது. எனினும் மீட்பு பணியின் போதும் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்திலும் குறித்த விமானம் கடுமையாக சேதம் ஏற்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அதிகாரிகள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் நுவரெலியா பொலிஸ் உயிர்காப்பாளர்கள், விமானப்படை அதிகாரிகள்,
இராணுவ அதிகாரிகள் மற்றும் கிரகரி வாவி படகு சவாரி வீரர்கள் ஆகியோர் இணைந்து வாவியில் விபத்திற்குள்ளான விமானத்தை பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர்.
நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் , கிரகரி வாவியில் சேறும் சகதியும் தேங்கி உள்ளதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சற்று தாமதம் ஏற்பட்டிருந்தது.
விமானம் விபத்திற்குள்ளானதற்கான உரிய காரணம் இதுவரை தெரிய வரவில்லை இதுபற்றி விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா,
கிரகரி வாவியில் நீர் விமானம் (sea plane) ஒன்று புதன்கிழமை (07) ஆம் பிற்பகல் 12.30 மணியளவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிலிருந்த 2 விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) காலை 10.00 மணியளவில் பொத்துவிலிலிருந்து கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை (10) மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை இடையே இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த மூன்று நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ, மேற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, இன்று (9) காலை 6 மணி நிலவரப்படி மட்டக்களப்பிலிருந்து கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, இது வடமேற்கு நோக்கி நகர்ந்து மாலையில் பொத்துவிலுக்கும் திருகோணமலைக்கும் இடையில் இலங்கை கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது.
இதன் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை மற்றும் காற்று நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4 மணி நிலவரப்படி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (09) அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடையில் இலங்கை கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்கரையில் நுழையும்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (09) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை இடையே இலங்கை கடற்கரையில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த தாக்கம் ஞாயிற்றுக்கிழமை (11) வரை நீடிக்கும்.இந்த வானிலை தாக்கம் நேற்று (08) காலை 5.30 மணிக்கு ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே 420 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.
நேற்று காலை சுமார் 10.00 மணியளவில், பொத்துவிலிலிருந்து தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது.
மேலும், இதன் தாக்கம் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்வழிப்பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் காற்று வீசக்கூடும்
கடல் பகுதிகளில் சில நேரங்களில் மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.கடலில் அலைகள் 02-03 மீட்டர் வரை உயரக்கூடும்.
எனவே, தற்போது கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல்வழிப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையின்படி, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையில் சில இடங்களில் 100 முதல் 150 மி.மீ வரை கனமழை பெய்யக்கூடும்.
யாழ்ப்பாணம், மன்னார், ஊவா மாகாணத்தின் மொனராகலை மற்றும் பதுளை மாவட்டங்கள் மற்றும் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
இதன் தாக்கத்தால், குடிசைகள் மற்றும் தற்காலிக கட்டமைப்புகளுக்கு சேதம், கூரை ஓடுகள் இடிந்து விழுதல், மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளுக்கு சேதம், மரக்கிளைகள் உடைந்து சாலைகளுக்கு அருகில் உள்ள பெரிய மரங்கள் வேரோடு சாய்தல், நெல் வயல்கள்,
வாழை மற்றும் பப்பாளி பயிர்களுக்கு சேதம், திடீர் வெள்ளம் மற்றும் கடலோர தாழ்வான பகுதிகளில் கடல் நீர் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகள் எச்சரிக்கை
எனவே இதன் தாக்கத்தை தவிர்க்க, கடற்கரைக்கு அருகில் உள்ள தற்காலிக குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் மலைப்பகுதிகளில் (குறிப்பாக நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில்) மற்றும் ஆறுகளின் ஓரங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும்.
மலைப்பகுதிகளில் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பி இணைப்பு தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திணைக்களம் மேலும் கூறுகிறது.
நீர்ப்பாசனத் துறைக்கு சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 29 நீர்த்தேக்கங்கள் நேற்று (08) திறக்கப்பட்டன.
வானிலை ஆய்வுத்துறை வழங்கிய முன்னறிவிப்புகளின்படி, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது,
மேலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
மேலும், அந்த மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளிலும் ஆறுகளுக்கு அருகிலும் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.