உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலர்களாக பதிவாகிய நிலையில், இன்று 4594.83 ஆக பதிவாகியுள்ளது.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் பதிவாகி வருகின்றது.

அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தனக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு ட்ரம்பின் கடுமையான எச்சரிக்கை!!

கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை.

கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான ட்ரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று ட்ரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை. கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்று டிரம்ப் நேற்று(16) தெரிவித்தார்.

கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும்.

வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது.

இந்தநிலையில் எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள்விதிக்கப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளமையானது மேலும் விமர்சனங்களுக்ககுட்பட்டுள்ளது.

நாளை தை அமாவாசை : முன்னோரது ஆசி பெற மறக்காமல் இதெல்லாம் செய்யுங்கள்!!

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி.

அமாவாசை மிகவும் புனிதமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.

தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைப்பிடிப்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். அந்த வகையில் நாளை தை அமாவாசை. குறிப்பாக தை அமாவாசை ஞாயிற்றுக்கிழமை அன்று வருவது இன்னும் விசேஷமானது.

அதிகாலை 01.20 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 02.31 வரை தை அமாவாசை திதி இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புண்ணிய நதிகளில் நீராடி நண்பகல் 12 மணிக்குள் தர்ப்பணம் செய்து முடிக்கலாம்.

பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும் அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர்.

முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.

முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுப நிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும்.

தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும். காகத்திற்கு உணவு பிதுர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு.

காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

லொறி – வேன் மோதி விபத்து : இருவரின் நிலை கவலைக்கிடம்!!

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், ஹட்டன் குடாகம சந்திக்கு அருகில் இன்று (17) பிற்பகல் லொறியும் வேனும் மோதி விபத்துக்குள்ளானதில், வேனின் சாரதியும் மற்றுமொரு நபரும் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டனில் இருந்து குடாகம நோக்கிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து இடது பக்கமாகத் திரும்பி குறுக்கு வீதியொன்றுக்குள் நுழைய முற்பட்டபோதே, டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற வேன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் லொறியும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளன. லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரி பெற்றுக்கொள்வதில் சிரமம்!!

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் வாகன வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை தாம் எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை வீதியில் இயக்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டாய வரி ஆகும். இது வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கும் போது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

எனினும் வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமைகளில் மதியத்திற்கு பின்னர் இச்சேவையினை பெற முடியாமால் இருப்பதுடன், வேறு நாட்களில் மதிய உணவுக்குக்காக என ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக மூடப்பட்டிருப்பதுடன்,

சில நாட்களில் தொழிநுட்பக் கோளாறு என வவுனியா பிரதேச செயலகத்திற்கு செல்லுமாறு பொதுமக்களை சிரமத்திற்குள்ளாகி வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாம் வாகன வருமான வரி பத்திரத்தினை பெற முடியாமையினால் போக்குவரத்து பொலிஸாரினால் தண்டப்பத்திரம் பெற வேண்டிய நிலமையினையும் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

வவுனியாவில் 7 வருடங்களுக்குப் பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேரூந்து!!

வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா நகரை நோக்கி சுமார் 7 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் பேருந்து சேவையானது மணித்தியாளத்திற்கு ஒரு தடவை என்ற வகையில் தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை போக்குவரத்து சபையின் முகாமையாளர், தொழிற்சங்க உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை வந்த ஜெர்மனிய சுற்றுலா பயணி மீது கொடூரமாக கத்திக்குத்து தாக்குதல்!!

களுத்துறை, அளுத்கம பகுதியில் ஹோட்டலில் தங்கியிருந்த 77 வயதான ஜெர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர், சக நாட்டுப் பயணி ஒருவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஹான்ஸ் வில்லெம்பெல்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று காலை 9:30 மணியளவில் ஹோட்டல் உணவகத்தில் அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவரது வயிற்றில் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன் அளுத்கம பொலிஸார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி கே.எஸ். பிரதீப் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதன்போது 47 வயதான ஜெர்மன் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரத்தக் கறை படிந்த பயணப் பை மற்றும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட 22 அங்குல நீளமுள்ள கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காயமடைந்த முதியவர் உடனடியாக களுத்துறை நாகோடா போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதலுக்கான காரணம் குறித்து அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் நேர்ந்த துயரம் : பெண்ணின் உயிரைப் பறித்த தேங்காய்!!

ஹொரணை, பண்டாரவத்தை பகுதியைச் சேர்ந்த பெண்ணின் தலையில் தேங்காய் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பண்டாரவத்தை பகுதியை சேர்ந்த 49 வயதான திருமணமான நில்மினி சுனேத்ரா குணதிலகா என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுடன் ஹொரணை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

லண்டனில் யாழ்.பெண்ணை குத்திக் கொன்ற கணவன் : நீதிமன்றம் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!!

பிரித்தானியாவில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட இலங்கைபெண் தொடர்பில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியில் வசிப்பிடமாகவும் கொண்ட 44 வயது நிலானி நிமலராஜா, 47 வயது கணவன் நிமலராஜா மூலம் 2025 ஜூன் 20ஆம் திகதி கொலை செய்யப்பட்டதாக செய்யப்பட்டுள்ளார்.

நிலானி நிமலராஜா, மூன்று பெண் குழந்தைகளின் தாயாவாக இருந்தார். சம்பந்தப்பட்ட தகவல்களின் படி, நிமலராஜா போதைக்கு அடிமையானவர். தொடர்ச்சியான அடிமை மற்றும் குடும்பத்தில் காணப்பட்ட வன்முறையின் காரணமாக, நிலானி கணவனை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

அத்துடன் மூத்தமகள் மற்றும் நிலானிக்கு இடையில் தலை காட்டக்கூடாது என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதையடுத்து, 2வது மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் மற்றும் பிற குடும்பக் கொண்டாட்டங்களில் நிலானி கணவனை அழைக்கவில்லை. இதனால் நிமலராஜாவின் மனத்தில் கடும் வெறி உருவானதாக கூறப்படுகிறது.

குற்றவாளி அஜ்ரா நிமலராஜா, மனைவியை கொலை செய்யும் நோக்கில் பல்வகை கத்திகளையும் பவுங்லிங் கடையில் வாடாகும் நாடாவையும் வாங்கியதாகவும், முகக்கவசம் அணிந்து அடையாளத்தை மறைத்ததாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பின்னர், நிமலராஜா நிலானி வேலை செய்த கடைக்கு சென்று, வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் நிலானியின் தலை மற்றும் நெஞ்சுப் பகுதியை 18 முறை குத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் கத்தியின் நுணி பாகங்கள் வளைந்து நெளிந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். நிமலராஜா கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது.

குற்றவாளி தனது குற்றத்தை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. கடந்த வாரமும் நீதிமன்றில் நிமலராஜா தொடர்பான வழக்கு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடுரோட்டில் வைத்து குத்தி கொல்லப்பட்ட பெண் : காதலன் வெறிச்செயல் !!

ஒடிசா மாநிலம், சுந்தர்கட் பகுதியை சேர்ந்தவர் ஷிகா சப்னா. இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் இவருக்கு பெற்றோர் கடந்த (ஜன 12) ஆம் தேதி திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தனக்கு தேவையான சில அழகு சாதன பொருட்களை வாங்க ஷிகா சப்னா இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றிருக்கிறார். மீண்டும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் பயந்த பெற்றோர் மற்றும் உறவினர் ஷிகா சப்னாவை தேடி வந்த நிலையில் சப்னாவின் பெற்றோருக்கு போன் செய்த காவல்துறையினர் உங்கள் மகள் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசார் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு ஷிகா சப்னா கொடூரமாக குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதனை தொடர்ந்து சப்னாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சப்னாவின் பெற்றோர்கள் அள்ளித்தா புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கார்கட் பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற வாலிபர் “நான் தான் ஷிகா சப்னாவை கொலை செய்தேன்” என கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த சப்னா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் ஒரு கல்லூரியில் படித்த நிலையில் முகேஷ் சப்னாவை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால் சப்னா முகேஷின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இருப்பினும் முகேஷ் தொடர்ந்து அவரை தொல்லை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் முடிவு செய்த பிறகு சப்னாவை சந்தித்த முகேஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது சப்னா மறுப்பு தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த முகேஷ் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து முகேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். காதலிக்க பெண்ணை நடுரோட்டில் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் மீதான சர்ச்சை : 100 கோடி கேட்டு நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு!!

கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் குறித்து நடிகையும் மாடல் அழகியுமான குஷி முகர்ஜி தெரிவித்த கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குஷி முகர்ஜியிடம் கிரிக்கெட் வீரர்களை காதலிக்கும் விருப்பம் உள்ளதா என கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு பதிலளித்த போது “எனக்கு கிரிக்கெட் வீரர்களை டேட்டிங் செய்வதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை, ஆனால் பலர் என்னிடம் தொடர்ந்து பேச முயற்சி செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

அப்போது கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் பெயரை குறிப்பிட்டு பேசிய குஷி, அவர் தனக்கு அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து மற்றொரு நாள், தங்களுக்குள் தற்போது எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும், இதில் காதல் எதுவும் கிடையாது என்றும் விளக்கம் அளித்துள்ளார், மேலும் சூர்யகுமார் யாதவ் மரியாதையான வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குமார் யாதவ் மீது அவதூறு கருத்து தெரிவித்த நடிகை குஷி முகர்ஜி மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்கு போடப்பட்டுள்ளது.

நடிகை குஷி முகர்ஜிக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூர் காவல் நிலையத்தில் மும்பையை சேர்ந்த பைசான் அன்சாரி என்ற நபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

புகாரில் தன்னுடைய சுய விளம்பரத்திற்காக விளையாட்டு வீரரின் புகழுக்கு நடிகை குஷி முகர்ஜி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாய் கடித்துக் குதறியதில் 10 வயது மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!!

பெங்களூருவில் தெருநாய்களின் அட்டூழியம் ஒரு பிஞ்சுயிரைப் பறித்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் பகுதியைச் சேர்ந்த 5ம் வகுப்பு மாணவி அலைனா லோகா (10), தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட பாதிப்புகளால் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் 27ம் தேதி, அலைனா தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த தெருநாய் ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கடித்துக் குதறியது.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் நாயை விரட்டினர். ஆனால், அதற்குள் சிறுமியின் கண், மூக்கு மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.

பாகல்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் உயர்தர சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சுமார் 20 நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சிறுமி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துறுதுறுவென விளையாடிக்கொண்டிருந்த மகள், ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து போயினர்.

சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்த நிலையில், சிறுமியின் மரணம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவநகர் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இறந்ததாக நினைத்த 103 வயது மூதாட்டி பிறந்தநாளிலேயே மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!

103 வயதான மூதாட்டி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உயிர் பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கங்காபாய், திடீரென சுவாசிக்கத் தவறியதால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் முடிவு செய்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே உள்ள சர்காவ் கிராமத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கங்காபாய் சாவ்ஜி சக்ரே என்ற மூதாட்டியே இறந்து உயிர் பெற்றார்.

இந்நிலையில் துக்கச் செய்தியை அறிந்து உறவினர்கள் திரண்டனர், சமூக வலைதளங்களில் இரங்கல் செய்திகள் பகிரப்பட்டன, இறுதிச் சடங்கிற்காக அவரது காதுகளில் பஞ்சு வைக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தன.

ஆனால், இறுதிச் சடங்கு தொடங்குவதற்கு சற்று முன், கங்காபாய் திடீரென தனது கால் விரல்களை அசைக்கத் தொடங்கினார். இதைக் கண்டு திகைத்துப் போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர் நலமுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்செயலாக அன்று கங்காபாயின் 103-வது பிறந்தநாளாகும். எனவே, கண்ணீருடன் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்த உறவினர்கள், பெரும் மகிழ்ச்சியுடன் அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டுச் சென்றனர்.

சாவு வீட்டில் தொடங்கிய இந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டமாக மாறியது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண கடற்கரையில் மாபெரும் பட்டத்திருவிழா!!

யாழ்ப்பாணத்தில் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையமும், வல்வை உதயசூரியன் விளையாட்டுக்கழகவும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழா வல்வெட்டித்துறை கடற்கரையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர் எம்.கே சிவாஜிலிங்கம், யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதிபராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

யாழ். வீதியில் நடை பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணம் வீதியில் நடை பயிற்சியில் ஈடுபடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.

தைப்பொங்கலை முன்னிட்டு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி இன்று (16.01.2026) காலை இவ்வாறு நடை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வீதியில் பயணிக்கின்ற மக்களுக்கு அவர் சைகையில் வணக்கம் கூறியவாறு நடைபயிற்சியில் ஈடுபட்டு வருவது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம்!!

உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதமான கோரிக்கையை அடுத்து ஆர்க்டிக் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதற்குப் பதிலடியாக, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் கிரீன்லாந்திற்குத் தங்களது இராணுவ வீரர்களை அனுப்பத் தொடங்கியுள்ளன.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு சிறிய இராணுவக் குழு கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு வந்து சேர்ந்துள்ளது.

இவர்களுடன் ஜெர்மனி, ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இணைந்து ‘Operation Arctic Endurance’ என்ற கூட்டுப் பயிற்சியின் கீழ் தங்களது வீரர்களை நிலைநிறுத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லவே இந்த வீரர்களை அனுப்பியுள்ளோம். நேட்டோ இங்கே இருக்கிறது என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” என்று பிரான்ஸ் தூதரக அதிகாரி ஒலிவியர் போயிவ்ரே டி ஆர்வோர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து அவசியம்.நாங்கள் அதைக் கைப்பற்றாவிட்டால் ரஷ்யாவோ அல்லது சீனாவோ அதைக் கைப்பற்றும்” என்று மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், “டென்மார்க்குடன் பேசி ஒரு தீர்வை எட்டுவோம் என்று நினைக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தை பலிக்காவிட்டால் ‘கடினமான வழிமுறை’ (Hard way) கையாளப்படும்” என்று இராணுவ நடவடிக்கைக்கான குறிப்பையும் அவர் வழங்கியுள்ளார்.

இதேவேளை “இது 2026-ஆம் ஆண்டு. நீங்கள் மக்களுடன் வர்த்தகம் செய்யலாம், ஆனால் மக்களையே வர்த்தகம் செய்ய முடியாது” என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் மிகக் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அமெரிக்காவின் சொத்தாகவோ அல்லது அவர்களால் ஆளப்படுவதையோ விரும்பவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நாங்கள் டென்மார்க்கையே தேர்ந்தெடுப்போம்” என்று கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-பெடெரிக் நீல்சன் கூறியுள்ளார்.