யாழ் நோக்கி பயணித்த கார் விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்தினுள் தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

பேருந்து விபத்தில் சாரதி பலி : விசாரணை தீவிரம்!!

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை – ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள கதவு திடீரெனத் திறந்துள்ளது.

அந்த நேரத்தில் சாரதி அக் கதவை மூட முயற்சி செய்துள்ளார். இதன்போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த மண் திட்டில் மோதி வீதியிலேயே கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்தின் நடத்துனர், ஒரு சிறுவன் மற்றும் ஒரு பெண் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து காரணமாக வீதியின் ஒரு வழித்தடம் தடைப்பட்டுள்ளதுடன், அந்தத் தடையை விரைவாகச் சீர்செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து நடந்த நேரத்தில் சாரதி ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காதலியை நம்பிச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம் ; சினிமா பாணியில் சித்திரவதை!!

காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போப்பாலைச் சேர்ந்த சோனு எனும் 18 வயது இளைஞர், ராஜஸ்தான் மாநிலம் ஜாலவர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண் சோனுவுடன் தங்கியிருந்த நிலையில், குடும்பத்தினர் தலையிட்டு அவரை மீண்டும் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், தனது காதலி அழைக்கிறார் என்று நம்பி அவரைச் சந்திக்க ராஜஸ்தான் சென்றுள்ளார் சோனு. ஆனால், அது அவரைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட நாடகம் என்பது அவருக்குத் தெரியவில்லை.

அங்கு சென்ற சோனுவை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் திட்டமிட்டு கடத்தி, மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட சோனுவை அந்த குழு சரமாரியாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், மிகக் கொடூரமாக சிறுநீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர்.

இந்த ஒட்டுமொத்தக் கொடூரத்தையும் அவர்கள் காணொளியாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்து மிரட்டியுள்ளனர்.

அந்த அதிர்ச்சிகரமான காணொளியைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர்.

இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், கடத்தப்பட்ட இளைஞரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டதுடன், தலைமறைவாக உள்ள சந்தேக நபர்களைக் கைது செய்ய தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனிதாபிமானமற்ற இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

ஏமாறாதீர்கள் : 2,000 ரூபாய் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் நினைவு பணத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பணத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிக்கும்போது, வாள் ஏந்திய சிங்கத்தின் உருவம் மற்றும் “2000” என்ற இலக்கம் தெளிவாகத் தெரியும்.

பணத்தாளின் முன்பக்கமும் பின்பக்கமும் அச்சடிக்கப்பட்டுள்ள சிங்கத்தின் உருவம் வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றிணைந்து முழுமையான படமாகக் காட்சியளிக்கும்.

பணத்தாளைச் சற்றே சரிக்கும்போது, அதன் பாதுகாப்பு நூல் நீல நிறத்திலிருந்து பச்சை நிறமாக மாறும். இதில் கொழும்பு கலங்கரை விளக்க மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் “2000” என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன.

பணத்தாளில் உள்ள “2000” என்ற இலக்கம் மற்றும் “இலங்கை மத்திய வங்கி” என்ற வாசகம் சற்றுத் தடிமனாக, தொடும்போது உணரக்கூடிய வகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பணத்தாளின் இரு பக்க ஓரங்களிலும் 6 புடைப்பு அடையாளக் கோடுகள் உள்ளன. இது கட்புலனற்றோர் பணத்தாளை எளிதாக அடையாளம் காண உதவும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பணத்தாளை புற ஊதா ஒளியின் கீழ் வைக்கும்போது, அதில் உள்ள கொழும்பு நகரக் கோபுரங்களின் உருவங்கள் (Skyline) மற்றும் 75வது ஆண்டு நிறைவு இலச்சினை ஆகியவை இரண்டு வண்ணங்களில் ஒளிரும். இது இயந்திரங்கள் மூலம் கள்ள நோட்டுகளைக் கண்டறிய உதவுகிறது.

இந்த நிலையில், கள்ள நோட்டுகளைத் தவிர்க்க பொதுமக்கள் இந்த அம்சங்களைச் சரிபார்க்குமாறு மத்திய வங்கி, பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று முதல் வடக்கு புகையிரத வழிகள் நிறுத்தம்!!

புனரமைப்புப் பணிகளுக்காக வடக்கு புகையிரத மார்க்கத்தின் பல இடங்களை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை (19) முதல் மூடப்படவுள்ளது.

மஹவ – அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மஹவ – ஓமந்தை வரையிலான புகையிரத பாதை முற்றாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும்.

மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரத பாதையில் ஐந்து புகையிரத பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையை புனரமைக்கும் பணிகளை இவற்றுக்கு இணையாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் புகையிரத பாதை புனரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, வடக்கு – தெற்கு போக்குவரத்தை வழமை போன்று முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாளை முதல் ‘புலதிசி கடுகதி புகையிரதம்’ மற்றும் ‘உதயதேவி’ புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளதுடன், திருகோணமலை வரையான ‘இரவு தபால் புகையிரத’ சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று முதல் அநுராதபுரம் – காங்கேசன்துறை வரையும், எதிர்வரும், 27 ஆம் திகதி முதல் ஓமந்தை – காங்கேசன்துறை வரையும் ‘யாழ் ராணி’ புகையிரத சேவையில் ஈடுபடவுள்ளது.

விண்வெளியில் உங்கள் பெயரை பதிக்க நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு!!

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

“Send Your Name with Artemis II” எனப்படும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் பெயர்கள், நிலாவைச் சுற்றி பயணம் செய்ய உள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் இடம்பெறவுள்ளன.

ஆர்டெமிஸ் II திட்டம், மனிதர்களை மீண்டும் நிலாவுக்கு அழைத்துச் செல்லும் நாசாவின் முயற்சியில், முதல் மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி பயணமாக கருதப்படுகிறது. இதனால் இந்தப் பயணம் உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இதற்கான அனைத்து தயாரிப்புகளும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்கள் மற்றும் பொதுமக்களின் பெயர்கள் அடங்கிய தரவுக் கோப்புடன் கூடிய ஓரியன் விண்கலம், 2026 ஏப்ரல் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

மொத்தம் 10 நாட்கள் நீடிக்கும் இந்தப் பயணத்தின் போது, ஆழ்விண்வெளி ஆய்வுகளுக்குத் தேவையான நவீன தொழில்நுட்ப அமைப்புகள் சோதனை செய்யப்பட உள்ளன.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களின் பெயரை பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவர்களுக்கு, ஒரு மெய்நிகர் பயண அனுமதி சீட்டு (Virtual Boarding Pass) வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மாணவி ஒருவரால் திடீர் குழப்பம்!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன.

அதன்போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு, விடுதியில் தங்கியிருந்து, மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். இதன்போது, 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில், 203 மாணவர்கள் காணப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அதனை அடுத்து, அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவ பீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!!

கடந்த வாரம் முதல் தங்க விலையில் மாற்றம் ஏதும் நிகழாத நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,550 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.

வேன் – லொறி மோதி விபத்து : 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

அநுராதபுரம் – ரம்பேவ வீதியில் பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (19) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்று முன்னால் பயணித்த லொறி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் வேனில் பயணித்த ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராடச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மாமடுப் பொலிசார் இன்று (19.01) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நேற்று (18.01) மாலை குளிக்கச் சென்றுள்ளனர். இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிவலிங்கம் டனுசியன் என்ற உயர்தர வகுப்பு மாணவராவார்.

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் மனைவியைக் கொன்ற இலங்கைத் தமிழருக்கு ஆயுள் தண்டனை!!

பிரித்தானியாவில் லிவர்பூல் நகரின் மெர்சிசைடில் உள்ள ஒரு கடையில் தனது பிரிந்து வாழ்ந்த மனைவியை “இரக்கமற்ற தாக்குதலில்” குத்தி படுகொலை கொலை செய்த இலங்கை தமிழர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பிரித்தானிய ஊடகங்கள் கூறியுள்ளதாவது,

47 வயதான நிமலராஜா மதியபரணம், செஃப்டனில் உள்ள கடை ஒன்றில் பணி புரிந்த நிலானி நிமலராஜாவை (44) கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். நிலானி தனது மகள்களுடன் கடைக்கு மேலே உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தார்.

மதியபரணம், ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கப்படாததால் படு கோபமடைந்தார் என கூறப்படுகின்றது. இது அவரை கொலை செய்யும் அளவுக்கு தூண்டி உள்ளது.

கொலை நடந்த ஜூன் 20 அன்று – தாயை இழந்த மகள் தனது “உலகம் நின்றுவிட்டதாக” கூறினார், மேலும் தனது தந்தையால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது எனவும் கூறினார்.

கொலையாளிக்கு குறைந்தபட்சம் 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நீதிபதி பிரையன் கம்மிங்ஸ் கே.சி, கொலை செய்யப்படவரின் உடலில் 14 கத்திக்குத்து காயங்களையும் நான்கு வெட்டுக் காயங்களையும் வைத்திய நிபுணர் அடையாளம் கண்டுள்ளதாகவும், மதியபரணம் “கொலை செய்யும் நோக்கத்துடன் மட்டுமே” செயல்பட்டதாகவும்” கூறினார்.

நீதிபதி இந்தக் கொலையை “மிகவும் கொடூரமானது” என்று விவரித்தார், இது பாதிக்கப்பட்டவரை “உயர்ந்த அளவிலான மன மற்றும் உடல் ரீதியான துன்பத்திற்கு” ஆளாக்கியது எனவும் கூறினார்.

தாக்குதலுக்கு முன்பு, மதியபரணம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அவரது நடத்தை ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியதாகக் கூறப்படுகிறது. “உங்களை ஒரு குடும்ப நிகழ்வுக்கு அழைக்கவில்லை,

ஆனால் இதை அறிந்ததும், நீங்கள் கோபமடைந்தீர்கள்,” என்று நீதிபதி கூறினார். “பாதிக்கப்பட்டவர், எல்லா வகையிலும் ஒரு கனிவான மற்றும் முற்றிலும் ஒழுக்கமான பெண், தனது உயிருக்கு பயந்து, உங்களுடன் கடையில் சிக்கிக்கொண்டார்.

“பாதிக்கப்பட்டவர் எவ்வகையிலும் உயிர் பிழைக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய நீங்கள் உறுதியாக இருந்தீர்கள் என்பதை உங்கள் செயல்கள் காட்டுகின்றன.”

நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பாதிக்கப்பட்டோர் அறிக்கையில், மதியபரணத்தின் மகள்களில் ஒருவர், தற்போது 18 வயது, கூறியதாவது , “அம்மாதான் எனக்கு எல்லாமே, நாங்கள் சிறந்த தோழிகள்.

இந்த கொலை நடந்த நாளில், என் அப்பா என் முதுகில் குத்தியதைப் போல உணர்ந்தேன். “நான் அதிர்ச்சியடைந்தேன், வார்த்தைகளை அறிய முடியாமல் தவித்தேன், என்ன செய்வது என்று தெரியவில்லை. என் உலகம் என்னைச் சுற்றியே நின்றுவிட்டது.

முன்பு சம்பவங்கள் நடந்திருந்தாலும், இது நடக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. அந்த நாள் வரை என் அப்பாவை நேசிப்பதை நான் நிறுத்தவில்லை. “நான் என் அம்மா, அப்பா, என் வீடு மற்றும் என்னையே இழந்தேன்.” அவர் மேலும் தொடர்ந்தார்.

என்னைப் பாதுகாப்பாகவும் அன்பாகவும் உணர வைத்தவர் இப்போது இல்லை. அவரை என்னிடம் இருந்து எடு சென்றவர் என் அப்பா – குறைந்தபட்சம் நான் துரோகம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்.

அப்பாக்கள் குடும்பத்தைப் பாதுகாக்கும் நபர்களாக இருக்க வேண்டும், அதை அழிக்க மாட்டார்கள்.” அம்மாவை இழந்தது “எல்லாவற்றையும் மாற்றிவிட்டது” என்று அவர் கூறினார்,

மேலும் “நான் ஆலோசனை, ஆறுதல் மற்றும் ஆதரவுக்காகச் சென்ற நபர் அவர்தான். “அவள் எனக்குப் பள்ளிப் படிப்பை முடிக்கவும், என் எதிர்காலத்தைத் திட்டமிடவும், பாதுகாப்பாக உணரவும் உதவினாள். அவள் இல்லாதது எனக்கு ஒவ்வொரு நாளும் உணர வைக்கும் ஒன்று.

” புதன்கிழமை விசாரணையின் இரண்டாவது நாளில் பொதுவில் கொலை மற்றும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்த குற்றத்தை மதியபரணம் ஒப்புக்கொண்டார். தனது மனைவி மற்றும் மகளைத் தொடர்பு கொள்ளத் தடை விதித்த தடை உத்தரவை மீறியதாகவும் அவர் முன்பு ஒப்புக்கொண்டார்.

குறைந்தபட்ச தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் வரை அவரை விடுதலை செய்ய பரிசீலிக்கப்பட மாட்டார் என்று நீதிபதி கம்மிங்ஸ் மதியபரணத்திடம் கூறியதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முல்லைத்தீவில் பெரும் சோகம் : 19 வயது இளைஞன் யானை தாக்கி உயிரிழப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேறாங்கண்டல் பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், வயல் காவலில் ஈடுபட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பொன்முடி சுயந்தன் என்பவராவார்.

வழமை போல விவசாய நிலத்தை பாதுகாக்கும் நோக்கில் வயல் காவலில் ஈடுபட்டிருந்த வேளையில், திடீரென காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பல விதமான கஷ்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் சூழ்ந்த நிலையில் விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்களிடையே, இச்சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை காட்டு யானை அச்சுறுத்தலால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால், நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டுமென பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

7 வயது சிறுமி துஷ்பிரயோகம் : தைப்பொங்கல் தினத்தில் நடந்தேறிய சம்பவம்!!

தைப்பொங்கல் தினத்தன்று 7 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்ட 35 வயதுடைய நபர் ஒருவர், நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தைப்பொங்கல் தினத்தன்று மதுபோதையில் சிறுமியை அவரது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் அழைத்துச் சென்று, அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு குறித்த நபர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட நேரமாக சிறுமி வீட்டில் இல்லாத காரணத்தால் பெற்றோர், உறவினர்கள் தேடியுள்ளனர். பின்னர் குறித்த இடத்திலிருந்து சிறுமி அழும் சத்தம் கேட்டதாகவும்,சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

தொடர்ந்தும் சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் பெயரை வெளிப்படுத்தி நடந்த விபரங்களை சிறுமி பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் நாவலப்பிட்டி காவல் நிலையத்தில்,சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கான நாவலப்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட குறித்த சந்தேகநபரை நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கடந்த 2025 ஆம் ஆண்டு நிலவிய பாரிய தாமதங்களுக்குப் பிறகு, தற்போது சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் சீரடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் சுமார் 490,000 சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கிக் கிடந்ததால், அட்டைகளை அச்சிடுவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டதாக ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வெளிநாடு செல்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ தேவைகளுக்காக அவசரமாக சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒருநாள் சேவையின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டது.

தற்போது சுமார் 255,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் அச்சிடப்பட்டு, அவற்றை விநியோகிப்பதற்காக இலங்கை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இந்த நடைமுறைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பதாரர்கள் இனி எவ்வித தாமதமுமின்றித் தமது அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் உறுதியளித்துள்ளது.

வானியல் அதிசயம் : வானில் நெருப்பு வளையம் காட்சி!!

இந்த ஆண்டு வானியல் அதிசயம் ஒன்று இன்று (17.01.2026) நிகழவுள்ளது.

அரிதான வலைய சூரிய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, அதன் விளிம்புகளைச் சுற்றி பிரகாசமான சூரிய ஒளி வட்டம் மட்டுமே தெரியும்.

விண்வெளி ஆர்வலர்களுக்கு 2026-ம் ஆண்டுடிற்கான குறித்த அரிய சந்தர்பத்திற்காக காத்திருக்கிறது. இது வெறும் கிரகணம் அல்ல; இது வானில் ஒரு “நெருப்பு வளையத்தை” உருவாக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும்.

நுவரெலியாவில் உறைபனிப் பொழிவு : கவலை வெளியிட்ட மக்கள்!!

இலங்கையில் “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்படும் நுவரெலியாவில் சில இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகளை இன்று (17.01.2026) அதிகாலை வேளையில் மக்கள் கண்டு கழித்துள்ளனர்.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருட ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பனி பொழிந்திருப்பதை அவதானிக்க முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாவரவியல் பூங்கா புல்வெளிகள், கிரகரி வாவிக் கரையோரம், பூந்தோட்டங்கள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் மற்றும் நீண்ட மரக்கறி தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மீது படர்ந்த ஐஸ் துகள்களின் தாக்கத்தை அவதானிக்க முடிந்துள்ளது.

அங்கு நிலவும் மாறுபட்ட காலநிலை சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதால் அவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பனிபொழிவால் தேயிலை, மரக்கறி மற்றும் மலர் உற்பத்திகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பிரதேசத்தில் கடும் குளிர் 9.8 டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் துகள் உறைபனி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.