19 மாவட்டங்களில் கடும் வெப்பம் : ‘அம்பர்’ நிற எச்சரிக்கை விடுப்பு!!

இலங்கையின் 19 மாவட்டங்களில் இன்று புதன்கிழமை வெப்பச் சுட்டெண் சாதாரணமாக உணரப்படும் வெப்பநிலையை விட அதிகரித்து காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த வெப்ப எச்சரிக்கைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவானது, காற்றின் ஈரப்பதம் மற்றும் நிலவும் வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகையில், இன்று பல இடங்களில் இது ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சுடன் இணைந்து வளிமண்டலவியல் திணைக்களம் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நீர் அருந்துதல்: உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க அடிக்கடி போதிய அளவு நீர் அருந்த வேண்டும்.

நிழலான இடங்கள்: வெளிப்புற வேலைகளில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும். வெளிப்புறச் செயல்பாடுகள்: கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற வேலைகளைக் குறைத்துக் கொள்ளவும்.

முதியோர் மற்றும் நோயாளிகள்: முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

குழந்தைகள்: குழந்தைகளை மூடிய வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உடை: வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க மெல்லிய மற்றும் வெளிர் நிறத்திலான ஆடைகளை அணியப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

புத்தாண்டில் கோர விபத்து – குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி!!

தமிழ், சிங்கள புத்தாண்டு தினமான நேற்ற ஏற்பட்ட கோர விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை, வெலிகம பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெலிபிட்டிய நோக்கித் தனது சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்ததாக நபரை பின்னால் அதிவேகமாக வந்த வேன் ஒன்று மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த வேன், வீதியோரம் இருந்த வீடொன்றின் பாதுகாப்பு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் காரணமாக சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார். இவ்விபத்து காரணமாக குறித்த வேன் மற்றும் வீட்டின் பாதுகாப்பு மதில் ஆகியவற்றுக்குக் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வேனின் முன்பகுதி பெருமளவில் நசுங்கியுள்ள நிலையில், பாதுகாப்பு மதிலும் இடிந்து விழுந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும், விபத்தின் போது வேனை செலுத்திய பெண் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சியில் பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவருக்கு நேர்ந்த கதி!!

கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று(14.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாகச் சென்ற வான் ஒன்றே, பாதசாரி கடவையூடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், சிக்கிய 44 வயதுடைய நபர் பலத்த காயமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக கிளிநொச்சி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதன்போது, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், சாரதியின் கவனக்குறைவு அல்லது அதிவேகமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

பாதசாரி கடவைகளில் வாகனங்கள் மிகுந்த அவதானத்துடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையிலும், இவ்வாறான விபத்துக்கள் நேர்வது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தங்கத்தின் விலையில் மாற்றம்!!

இலங்கையில் தங்கம் விலை இன்று (15) 4,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி, இன்று (15) கொழும்பு செட்டியார்த் தெரு தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 369,900 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த 11ஆம் திகதி இதன் விலை 366,200 ரூபாவாகக் காணப்பட்டது.

அதேநேரம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை கடந்த சனிக்கிழமை 398,000 ரூபாவாகக் காணப்பட்ட நிலையில், இன்று 402,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்த் தெரு தங்கச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காதலிக்க மறுத்த மாணவிக்கு இளைஞனால் நடந்த விபரீதம்!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஒருதலைக் காதலால் பிளஸ்-2 மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையாளியைப் பிடிக்க முயன்றபோது அவன் போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்ப முயல, போலீசார் அவனது காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் – நாகமணி தம்பதியின் 17 வயது மகள், சமீபத்தில் பிளஸ்-2 தேர்வுகளை எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த மாணவியை ஒருதலைப்பட்சமாகக் காதலிப்பதாகக் கூறித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்த நிலையில், மாணவி அதனைத் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரம் பார்த்து, வெங்கடேஷ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.

மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தியபோது மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே துடித்தபடி உயிரிழந்தார்.

மாணவியின் உயிரிழப்பால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். “குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என முழக்கமிட்டதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

தனிப்படை அமைத்துத் தேடி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த வெங்கடேசை இன்று காலை கைது செய்தனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவனை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றபோது, வெங்கடேஷ் திடீரென இரண்டு போலீசாரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

எச்சரித்தும் நிற்காததால், போலீசார் தற்காப்பிற்காகத் தனது துப்பாக்கியால் வெங்கடேசின் கால்களில் சுட்டனர். தற்போது காலில் குண்டடிபட்ட வெங்கடேசை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவனால் காயமடைந்த போலீசாருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தந்தை கேட்ட ஒரு கேள்வி : 15 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு!!

ஒரு சிறிய கண்டிப்பு அல்லது எதிர்பாராத கோபம் எப்படி ஒரு பிஞ்சு உயிரைப் பறிக்கும் என்பதற்குச் சாட்சியாக, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரில் ஒரு சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தந்தையின் கண்டிப்பால் மனமுடைந்த 15 வயது மாணவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குருவரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி – பத்மா தம்பதியினருக்கு மவுனிகா (15) என்ற இளைய மகள் இருந்தார்.

சம்பவத்தன்று தந்தை வீராசாமிக்கு முதுகில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகில் இருந்த தனது மகள் மவுனிகாவிடம் முதுகைச் சொரிந்து விடுமாறு அவர் கேட்டுள்ளார்.

அப்போது, மவுனிகா தனது தந்தையின் முதுகில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த வீராசாமி, “எதுக்காக இவ்வளவு ஓங்கி அடிக்கிறாய்?” எனக் கேட்டு மகளைச் சற்றுக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

தந்தை அனைவர் முன்னிலையிலும் தன்னைத் திட்டியதை மவுனிகாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர், யாரிடமும் பேசாமல் தனது படுக்கையறைக்குள் சென்று கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்துப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.

மவுனிகா தனது சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றிருந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார், மவுனிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தந்தையின் கண்டிப்பு மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் மன அழுத்தத்தில் மாணவி இருந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு சிறிய குடும்பத் தகராறு, ஒரு இளம் உயிரைப் பறித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

17 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்று தாய் எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது மகளைக் கொன்றுவிட்டுத் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

40 வயதான சுவர்ணா என்ற பெண் தனது மகள் காருண்யாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாயும் மகளும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாக இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் தற்கொலைக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மகளின் கல்வி மற்றும் குடும்பச் சூழல் குறித்து உறவினர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

 

நாய்க்குட்டியின் நகம் கீறியதால் பரிதாபமாக பலியான பெண்!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் கிராமத்தில் வளர்ப்பு நாய்க்குட்டியின் நகம் கீறியதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளியான முருகனின் மனைவி சுமதி (47) என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது நாய்க்குட்டியைச் சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றபோது அவரது தோளில் நகம் பட்டுக் கீறல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய்க்குட்டிதானே என்ற நம்பிக்கையில் அவர் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் கடந்த சில தினங்களாக அவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ‘ரேபிஸ்’ நோய் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

நிலைமை கவலைக்கிடமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே சுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமதியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

செல்லப் பிராணிகள் கடித்தாலோ அல்லது சிறிய அளவில் கீறல் ஏற்பட்டாலோ அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்றுத் தடுப்பூசி போடுவதன் அவசியத்தை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. முறையான விழிப்புணர்வு இல்லாததால் ஒரு உயிர் பறிபோனது அப்பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

 

புத்தாண்டில் துயரம் : நீரில் அடித்து செல்லப்பட்ட மூவரில் ஒருவரின் சடலம் மீட்பு!!

திருகோணமலை சோமாவதி ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன நிலையில், ஒருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மூன்று சகோதரர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 35 வயதுடையவரே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தந்தை மற்றும் நான்கு மகன்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) மாலை சோமாவதி பாலத்துக்கு கீழ் உள்ள ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது அதில் மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

அவர்கள் மூவரையும் தேடும் பணிகள் நேற்று மாலை தீவிரமாகியிருந்தபோதிலும் காணாமல்போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப் பணிகள் தொடரப்பட்டபோது காணாமல்போன சகோதரர்களில் ஒருவரின் சடலம் மாத்திரம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல்போன மற்றைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்வதோடு, மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் இந்தியருக்கு நேர்ந்த சோகம் : சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!!

அமெரிக்காவில் 26 வயது இந்திய இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த 26 வயது மென்பொருள் பொறியாளர் சிங்கிரெட்டி சாய் ஶ்ரீஹரிகிருஷ்ணா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த ஶ்ரீஹரிகிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்பு செயிண்ட் லூயிஸ் நகரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை தனது 26 வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் நீர் வீழ்ச்சிக்கு சென்று இருந்த போது வலுவான நீரோட்டத்தால் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இறுதியில் ஶ்ரீஹரிகிருஷ்ணா உடலை மீட்டெடுத்துள்ளனர். ஶ்ரீஹரிகிருஷ்ணா உயிரிழந்த சம்பவம் அறிந்து ஆந்திராவின் சொந்த ஊரில் உள்ள அவரது உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து ஶ்ரீஹரிகிருஷ்ணா உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் அங்குள்ள இந்திய சமூகத்தினரும் அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

வவுனியாவில் இளைஞர் மீது பொலிஸார் மனிதாபிமானமற்ற தாக்குதல் : செட்டிகுளம் தமிழரசு கட்சி கிளைத் தலைவர் கடும் கண்டனம்!!

வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கியமைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் செட்டிகுளம் பிரதேச கிளைத் தலைவரும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளருமாகிய சிவானந்தராசா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.. வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் (Protective Vests) பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

இச்செயற்பாடு இலங்கையின் அரசியலமைப்பு உறுப்புரை 11னை அப்பட்டமாக மீறும் செயலாகும். எவரும் சித்திரவதைக்கு அல்லது கீழ்த்தரமான நடாத்துகைக்கு உட்படுத்தப்படலாகாது என்ற அடிப்படை உரிமையை பொலிஸார் இங்கே மீறியுள்ளனர்.

“ஒருவர் குற்றம் செய்திருப்பின் அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதே சட்ட நடைமுறை. அதைவிடுத்து, வீதியில் வைத்து தண்டனை வழங்குவதற்கு பொலிஸாருக்கு எவ்வித சட்ட உரிமையும் இல்லை.

ஒருவரைக் கைது செய்யும் போது கூட குறைந்தபட்ச பலத்தையே பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால், இங்கு இடம்பெற்றது திட்டமிட்ட வன்முறையாகவே தெரிகிறது,” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய பொலிஸார், மக்களை அச்சுறுத்தும் வன்முறையாளர்களாக மாறுவது சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குறியாக்குகிறது. எனவே இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.

மக்களை அச்சுறுத்தும் பொலிஸார் தேவையில்லை. மக்களைப் பாதுகாக்கும் பொலிஸாரே இந்த நாட்டிற்குத் தேவை என அச்செய்தி அறிக்கையில் இலங்கை தமிழரசு கட்சியின் செட்டிகுளம் பிரதேச கிளைத் தலைவரும் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச சபை உப தவிசாளருமாகிய சிவானந்தராசா மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Screenshot

வவுனியாவில் பெண்ணின் வாழ்வாதாரத்தை அழித்த மர்ம நபர் : சிசிரிவி காட்சிகளுடன் பொலிஸில் முறைப்பாடு!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில், நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பயன்தரு மரங்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன் திருட்டிலும் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் கோவில் முன்பாக அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் சகோதரர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சகோதரி மற்றும் அவரின் கணவர் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரர்களின் நிதியுதவியுடன், குறித்த பெண்மணி தனது வீட்டுத் தோட்டத்தில் அண்மையில் 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வந்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில், தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அவர் தோட்டத்தில் நடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களையும் வெட்டிச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த சில கட்டிடப் பொருட்களையும் களவாடிச் சென்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குறித்த பெண்மணியால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், மர்ம நபர் பயிர்ச் செய்கையைச் சேதப்படுத்தும் மற்றும் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் அங்குள்ள சிசிரிவி (CCTV) கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிசிரிவி காட்சிகளில் உள்ள நபர் அல்லது இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கோ (+94 75 143 0702) அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வவுனியா வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு : 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று!!

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1990ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளியாகியுள்ள அந்தப் புகைப்படமானது 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி (சித்திரை-03) எடுக்கப்பட்டதாகும். அதில் ஒரு குடும்பத்தினர் மலையின் உச்சிப்பகுதியில் வழிபாட்டிற்காகச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒருவரான தற்போதைய 80 வயது முதியவர், தனது அனுபவப் பகிர்வில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்

1990-களிலேயே நெடுங்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஒலுமடு, முல்லைத்தீவு எல்லைக் கிராம மக்கள் வண்டில் கட்டிக்கொண்டு வெடுக்குநாறி மலைக்குச் சென்று சிவபெருமானை (ஆதி லிங்கேஸ்வரரை) வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக, தொல்பொருள் திணைக்களம் மற்றும் சில தரப்பினர் வெடுக்குநாறி மலையில் 2012-ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்து வழிபாடு அல்லது ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றதாகக் கூறி வருகின்றனர்.

ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், அங்கு தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்கள் பூர்வீகமாக வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மலையைச் சுற்றி அடர்ந்த காடுகளும், ‘வெடுக்குநாறி’ மரங்களும் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது.
கல்வெட்டுச் சான்றுகள் இங்குள்ள பிராமி கல்வெட்டுகள் மற்றும் குகைகள் இப்பகுதி பல நூற்றாண்டுகளாக வழிபாட்டுத் தலமாக இருந்ததைக் காட்டுகின்றன.

2018-ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டு, அங்குள்ள சிலைகள் அகற்றப்படுவதும், வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது. 2024 சிவராத்திரி வழிபாட்டின் போதும் பக்தர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த 1990-ஆம் ஆண்டு புகைப்படம் வெறும் நிழற்படம் மட்டுமல்ல, ஒரு இனத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கான பலமான ஆவணம். இதுபோன்ற ஆவணங்கள், அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் தொடுக்கப்படும் வரலாற்றுத் திரிபுகளை எதிர்கொள்ளப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைகின்றன.

வவுனியா ஆதிவிநாயகர் ஆலயத் தேர்த்திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று (14.04.2026) வவுனியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வைரவபுளியங்குளம் அருள்மிகு ஆதிவிநாயகர் திருக்கோவிலின் தேர்த் திருவிழா பக்திப் பெருக்குடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வவுனியாவின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா, மகோற்சவ பிரதம குருக்களின் தலைமையில் ஒன்பதாம் நாளான இன்று எழுச்சியுடன் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு ஆதிவிநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேளதாள வாத்தியங்கள் முழங்க, உள்வீதி வலம் வந்த விநாயகப் பெருமான், பின்னர் வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

சித்திரைப் புத்தாண்டுடன் தேர்த்திருவிழா இணைந்து வந்ததால், வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஒரே இடத்தில் கூடி விநாயகப் பெருமானை வழிபட்டனர்.

ஆலய முன்றலில் கூடியிருந்த மக்கள், சுவாமி தரிசனம் செய்த கையோடு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டனர். மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கருத்திற்கொண்டு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

வவுனியாவில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

கடந்த மாதம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

வவுனியா வடக்கு, பெரியமடு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய துசிந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

கடந்த மாதம் பெரியமடு – சின்னடம்பன் பிரதேசத்தில் அவர் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தவறான ஊசி செலுத்தியதில் இளம்பெண் உயிரிழப்பு : மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!!

சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியே பரபரப்புக் களமானது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இவர் கடும் தலைவலி காரணமாக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் ஊசி செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே பவானியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

மருத்துவர்கள் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளித்தும் பலனின்றி, பவானி பரிதாபமாக உயிரிழந்தார். சாதாரண தலைவலிக்குச் சிகிச்சை பெறச் சென்ற பெண், திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினரைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பவானியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் கவனக்குறைவும், தவறான ஊசி செலுத்தப்பட்டதுமே காரணம் என்று கூறி, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மருத்துவமனை முன் திரண்டனர்.

“தவறான சிகிச்சையால் ஒரு உயிரைப் பறித்து விட்டார்கள்” என முழக்கமிட்ட அவர்கள், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூளைமேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பவானியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“சிகிச்சையில் எவ்வித குறைபாடும் இல்லை, உயிரிழப்பிற்கான காரணம் பிரேதப் பரிசோதனை முடிவில்தான் தெரியும்” என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.