கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியைக்கு நேர்ந்த கதி!!

 

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டட்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியைக்கு பிணை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!!

உலகளாவிய பயண சஞ்சிகையான ‘டைம் அவுட்’ இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக இருப்பதால், அதன் இதமான வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் மலைநாட்டுப் பயணங்கள் முதல் புராதன இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாரிகள் வரை, இலங்கை பார்வையாளர்களுக்கு அனைத்தையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக, இலையுதிர் கால நிறங்கள் மற்றும் பருவகால திருவிழாக்களுக்காக துருக்கி மற்றும் மெக்சிகோ இடம்பெற்றுள்ளன.

ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயார்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றிருந்த மற்ற இடங்களாகும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்த இடங்கள் அவற்றின் பருவகால கவர்ச்சி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டொன்றும், இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தங்காலையில் மீ்ட்கப்பட்ட இரு சடலங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தங்காலை, சீனிமோதரவில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்தவர்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயினை உட்கொண்டதால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனையை தங்காலை மருத்துவமனையின் தடயவியல் அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். அந்த நபர்கள் அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயின் உட்கொண்டதால் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தடயவியல் மருத்துவ அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றுமுன்தினம் (22.09.2025) மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் ஆபத்தான நிலையில் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று லொறிகளில் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளில், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொகை ‘உனகுருவே சாந்த’ என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவர் பல குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கோர விபத்தில் பாடசாலை மாணவி பரிதாபமாக பலி!!

கம்பஹா, மீரிகம தேசிய பாடசாலைக்கு அருகில், எரிவாயு ஏற்றிச் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

மீரிகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி நவகமுவ, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷானி ஷனயா எனவும் மீரிகம டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பு படிக்கும் மாணவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்ததும் பிரதான வீதிக்கு வந்த பாடசாலை மாணவி, மீரிகம நோக்கி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

ஓட்டுநர் மோட்டார் சைக்கிளை இயக்கி பஸ்யால நோக்கி திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எரிவாயு கொண்டு செல்லும் வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அதன் சக்கரங்களில் ஒன்றில் சிக்கியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் காயமின்றி தப்பியதாகவும், காயமடைந்த மாணவி மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு : ஐரோப்பா வாழ் இலங்கைப் பெண்!!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார்.

தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் வாதுவையில் உள்ள கிராண்ட் பீச் ஹோட்டலில் தங்கி, தனது இலங்கைத் தாயைத் தேடி வருகிறார்.

நெதர்லாந்தில் இருந்து 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி களுத்துறை பொது மருத்துவமனையில் எண் 3570 கொண்ட இலங்கை பிறப்புச் சான்றிதழில் அவரது பெயர் அசோகா என பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரது தாயார் பெயர் சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி என குறிப்பிடப்பட்டுள்ளது. 1985ஆம் மே மாதம் 13ஆம் திகதியன்று களுத்துறை நகரப் பிரிவின் மருத்துவச் செயலாளர் எம். எச். செனரத்தினால் பதிவு செய்யப்பட்டது.

பிறப்பு பதிவுக்கான தாயாக 24 வயதான சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி அறிவிக்கப்பட்டார். மேலும் அவரது முகவரி கந்தகஹவில, பயாகல என வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது நிரந்தர முகவரி மாத்தறை என வழங்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று இந்தக் குழந்தை,

வெர்னா எலிசபெத் ஜோஸ்பினா பாடன் என்பவரால் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேக்கபஸ் ஹெர்மன் மேரி பாடன் மற்றும் எலிசபெத் வில்ஹெல்மினா பாடன் ஆகியோரால் சட்ட பூர்வமாக தத்தெடுக்கப்பட்டது.

நெதர்லாந்து தம்பதியினர், கொழும்பில் வசித்து வந்த நிலையில், குழந்தையை தத்தெடுத்தனர். கொழும்பு மாவட்ட நீதிபதி எச்.எஸ். அகலவத்தே கையொப்பமிட்ட 1985ஆம் மே மாதம் 15ஆம் திகதியிட்ட உத்தரவிற்கமைய, குழந்தையை பெற்றுள்ளனர்.

இலங்கை தாயைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து நெதர்லாந்து எண் +32474754341 அல்லது +94741120821 என்ற இலங்கை எண்ணில் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் தகவல்களை வழங்குபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மகள் அறிவித்துள்ளார்.

கொழும்பில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி : வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்!!

கொழும்பில் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணிடமிருந்து 315,000 ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

பெண்ணின் கணவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். அவரது மனைவி 14 ஆம் திகதி ஹேவ்லாக் சிட்டி அருகே பேருந்தில் இருந்து விழுந்ததை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளி மயக்கமடைந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் தங்க வளையல், ஒரு ஜோடி காதணிகள், பல பிளாஸ்டிக் வளையல்கள் மற்றும் அவர் அணிந்திருந்த ஒரு மெட்டியை அகற்றி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு நாட்களின் பின்னர் மனைவி சுயநினைவு பெற்ற பிறகு, அவரது நகைகள் பற்றி கேட்டபோது இந்த பொருட்கள் அவரிடம் காட்டப்பட்டன. அங்கு, அவர் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் இரண்டு வெள்ளி கொலுசுகளை அணிந்திருந்ததாக கூறினார்.

அதற்கமைய, மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 300,000 ரூபாய் மதிப்புள்ள தங்க வளையலையும், 15,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மெட்டியையும் திருடிச் சென்றிருக்கலாம் என கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்து கொஹுவாலா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடற்கரையில் பாறை மறைவுக்கு சென்ற இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காலி கோட்டையில் ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறையிலிருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு இளம் ஜோடியை சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் குழு மீட்டுள்ளனர்.

நேற்று மாலை ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறைக்கு காதல் ஜோடி சென்றிருந்த நிலையில், கடல் அலை திடீரென உயர்ந்ததால் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில், ஒல்லாந்தர் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரி காமினி சம்பவத்தைக் கண்டு உடனடியாக கடலில் குதித்தித்துள்ளார்.

பின்னர், அருகிலுள்ள சுற்றுலா உணவகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று வந்து, போராடி காதல் ஜோடியை மீட்டு காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்தில் சிக்கிய இளம் பெண்ணும் இளைஞனும் அஹங்கம மற்றும் லனுமோதரவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட இளம் பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதே நேரத்தில், இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கத்தின் விலை : வரலாறு காணாதளவு உயர்வு!!

நாட்டில் இன்று (23.09.2025) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 277,500 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 300,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 279,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 302,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 257,200 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 278, ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருடனை தேடும் பொலிஸ் :;பொதுமக்களிடம் உதவி கோரல்!!

ஹட்டன் பிரதான நகரில் பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைபாடுகளுக்கு அமைவாக சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த (21) ஆம் திகதி ஹட்டன் நகரில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ள ஒரு கடைக்குச் சென்று பெறுமதி மிக்க சேலை ஒன்றினை திருடுவதற்கு குறித்த நபர் முயற்சி செய்தபோது அங்கு தொழில் புரிந்த பெண்ணால் அது முறியடிக்கப்பட்டது.

அங்கிருந்து குறித்த நபர் தப்பித்துச் சென்ற நிலையில் சம்பவம் தொடர்பிலும் கடையின் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

சந்தேக நபர் கடையில் நுழைந்து திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குறித்த காணொளிக்காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பாறை மீனவர்களுக்கு கடலில் கிடைத்த அதிஸ்டம்!!

அம்பாறை சாய்ந்தமருது ஆழ்கடல் மீனவர்களின் படகு ஒன்றில் சென்றவர்களால் இன்று (20) ஆழ் கடலில் பாரிய திருக்கை மீன் பிடித்து கரைக்கு கொண்டுவரப்பட்டது

கரைக்கு கொண்டுவரப்பட்ட பாரிய திருக்கை மீன் நிறை சுமார் 1000 kg க்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரிய மீன் கிடைத்ததையிட்டு மீனவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டப்பகலில் பயங்கரம் : காதல் விவகாரத்தில் 24 வயது இளைஞன் வெட்டிக்கொலை!!

இந்தியா தூத்துக்குடி மாவட்டத்தில் 24 வயது இளைஞனை காதல் விவகாரத்தில் சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (24 வயது), எலக்ட்ரீசியன்.

இவரும், திருச்செந்தூரில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்வற்காக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என திருச்செந்தூர் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக விசாரணை நடத்திய போலீசார், மணிகண்டனுடன் சென்ற சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் நேற்று காலை வேலைக்காக பைக்கில் புறப்பட்டு திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மணிகண்டன் காதலித்த சிறுமியின் 16 வயது தம்பி மற்றும் அவனது நண்பர்களான 16 வயதுடைய 2 பேர் வழிமறித்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உயிருக்கு பயந்து பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த மரக்கடைக்குள் தஞ்சமடைந்தார்.

ஆனாலும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று மரக்கடைக்குள் பதுங்கியிருந்த மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதனால் தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயமடைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து 3 சிறுவர்களும் அங்கிருந்து தப்பிவிட்டனர். தகவலறிந்ததும் திருச்செந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மணிகண்டன் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதனடிப்படையில் மணிகண்டனை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய சிறுமியின் தம்பி உள்பட 3 சிறுவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் வாலிபரை சிறுவர்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

காதலியைக் கொன்று உடலை ஆற்றில் வீசிய காதலன் ; காட்டிக்கொடுத்த Whatsapp Status!!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியைக் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.

யுவதி கஒலை சம்பவத்தி வாட்ஸ்அப்பில் வைத்த ஒரு செல்ஃபி ஸ்டேட்டஸ் மூலம் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கான்பூரில் 22 வயதான சூரஜ் குமார் உத்தம், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் 20 வயதுடைய உணவக ஊழியரான அகன்க்ஷாவை சந்தித்தார். சுமார் 10 மாதங்களுக்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஜூலை 21 ஆம் திகதி சூரஜிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அகன்க்ஷா கண்டுபிடித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவரின் உதவியை நாடினார்.

இருவரும் சேர்ந்து அகன்க்ஷாவின் உடலை ஒரு கருப்பு சூட்கேஸில் வைத்து, மோட்டார் சைக்கிளில் சுமார் 95 கி.மீ. தொலைவில் உள்ள சிலாக்காட்டில் உள்ள யமுனை நதியில் வீசியுள்ளனர்.

இந்த கொடூரமான செயலை செய்த பிறகு,சூட்கேஸுடன் சூரஜ் ஒரு செல்ஃபி எடுத்து, அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

இந்நிலையில் அகன்க்ஷாவை ஜூலை 22 முதல் காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்தனர். இதற்கிடையில், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சூரஜ் மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் ஆகியோர் குற்றவாளிகள் என தெரியவந்தது.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அகன்க்ஷாவின் உடலைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எலி ஒன்றினால் தாமதமான இண்டிகோ விமானப் பயணம்!!

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமானப் பயணம் 3 மணி நேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானத்தில் எலி ஒன்று இருப்பதை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக சக பயணிகளுக்கும், விமானத்தின் கடமையாற்றுபவர்களிடம் அறிவித்துள்ளார். இதையடுத்து, உடனடியாக விமானத்திலிருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கி விடப்பட்டனர்.

பின்னர், விமானத்தின் உள்ளே சென்ற பணியாளர்கள் நீண்ட முயற்சிக்குப் பின்னர் குறித்த எலியைப் பிடித்துள்ளனர்.

இதன் காரணமாக 3 மணி நேரம் தாமதமாக விமானம் கான்பூரிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. குறித்த சம்பவத்தினால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டு பேருந்தை ஓட்டிய சாரதிக்கு விதிக்கப்பட்ட தடை!!

கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்திக் கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக, பயணிகள் பேருந்து ஓட்டுநரின் சேவையை மேற்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை ஏழு நாட்களுக்கு இடைநிறுத்தியுள்ளது.

குறித்த சாரதி கிரிபத்கொட மற்றும் அங்குலானா இடையேயான வழித்தடம் 154 இல் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநீக்கத்திற்கு கூடுதலாக, அவர் சாரதி பயிற்சி பட்டறைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் நடத்துனர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி ஒரு பயணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு பயணச்சீட்டை வழங்காத குற்றச்சாட்டில் அவர் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டு, திருத்தப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 9 ஆம் திகதி, பௌத்தலோக மாவத்தை வழியாகச் சென்று கொண்டிருந்த இந்தப் பேருந்தின் ஓட்டுநர், கையடக்க தொலைபேசியில் பேசிக் கொண்டே கவனக்குறைவாக ஓட்டுவதை ஒரு பயணி படம் பிடித்துள்ளார்.

அந்தப் பயணி, மேற்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையத்திடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடு வழங்கியுள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பயண கட்டணத்திற்கான சரியான பயணச்சீட்டும் வழங்கப்படவில்லை என்றும், கட்டணத்திற்காக செலுத்தப்பட்ட ரூ.80 இல் மீதமுள்ள ரூ.6 திரும்பப் பெறப்படவில்லை என்றும் நடத்துனர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இதன்படி அதிகாரசபையின் முறைப்பாட்டு பிரிவு மேலாளர் தேஜா ஜெயசுந்தரவின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் குற்றங்கள் கண்டுப்பிடடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நடிகை ஜாக்குலினின் மனுவை அதிரடியாக நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம்!!

இலங்கையைச் சேர்ந்த பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கிலிருந்து தன்னை நீக்க வேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை பரிசீலித்த இந்திய உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

இது போன்ற நிவாரணம் பெற இது சரியான நேரம் அல்ல என்றும் கூறி அவரது வழக்கில் தலையிட இந்திய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது மிரட்டி பணம் பறித்ததற்கான முக்கிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், அவர் பணமோசடி செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.

இருப்பினும், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, முன்னதாக குறித்த வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.