சொந்த மகள்களையே சீரழித்த தந்தை : அதிரடி காட்டிய நீதிமன்றம்!!

தனது 7 மற்றும் 8 வயது மகள்களை 2016 ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு இரு குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை 4 குற்றத்துக்கு 40 ஆயிரம் தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தை உள நலம் பாதிக்கப்பட்ட தனது ஒரு மகள் உட்பட 7 மற்றும் 8 வயதுடைய இரு மகள்களையும் கடந்த 2016 அக்டோபர் மாதம் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்து சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணைகள் இடம் பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக 16 வயதுக்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக இனம் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோது 8 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்

செய்த முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாவும் இரண்டாவது குற்றத்துக்காக 10 ஆயிரம், தண்டப்பணம் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டார்.

அடுத்து பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு முதலாவது குற்றத்துக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாவும், நான்காவது குற்றத்துக்காக 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக செலுத்துமாறும்

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குமாறும் இரு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை சமகாலத்தில் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, அவர் வீதியில் தூக்கி வீசப்பட்ட்டுள்ளார். அப்போது, வீதியில் மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியில் மோதி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வென்னப்புவ தும்மலதெனிய பகுதியில் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கை வந்த அவுஸ்திரேலிய பயணிக்கு இன்ப அதிர்ச்சி : 18 இலட்சம் ரூபா பணத்திற்கு நடந்தது என்ன!!

கொழும்பில் இருந்து சீகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பொதியை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளையின் பெல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சுற்றுலா பயணி ஒருவர் 18 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்ட தனது பொதியை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை அறிந்த கடையின் உரிமையாளர், அதனை உரிய நபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த டென்னி மார்ட்டின் ஸ்டைம் என்ற சுற்றுலா பயணியே இவ்வாறு பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் உள்ள ஆரியா ரெஸ்ட் உணவகத்தில் மதிய உணவுக்காக குறித்த வெளிநாட்டவர் சென்றுள்ளார்.

இதன்போது பொதியை மறந்த சுற்றுலா பயணி, சிகிரியா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளனர்.

தனது அறைக்கு வந்த பின்னரே பொதியை மறந்து விட்டு வந்தமை தெரிய வந்த நிலையில், இது குறித்து தனது சுற்றுலா வழிகாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக குறித்த உணவகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயணப் பொதி அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உணவகத்திற்கு சென்று அவுஸ்திரேலிய பிரஜையான சுற்றுலா பயணி தனது பயண பொதியை பெற்றுக்கொண்டார். பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் பாதுகாப்பாக அப்படியே இருந்தமை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவால் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கான உலகின் சிறந்த சுற்றுலாத்தலமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய சுற்றுலாத்துறை இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலா தலமாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெப்பமண்டல காலநிலை, பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவை இந்தத் தேர்வில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் அழகான கடற்கரைகள், மலைப் பிரதேசங்களுக்கான பயணங்கள், புராதன மற்றும் தொல்பொருள் இடிபாடுகள், வனவிலங்கு சஃபாரிகள் ஆகியவை இலங்கையை உலகின் முதன்மையான சுற்றுலா தலமாக உயர்த்தியுள்ளன.

ஒக்டோபர் மாதத்தில் அனுபவிக்கக்கூடிய பருவகால வசீகரம், கலாசார நிகழ்வுகள் மற்றும் தனித்துவமான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசை உருவாக்கப்பட்டதாக ‘டைம் அவுட்’ இதழ் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் துருக்கி இரண்டாம் இடத்தையும், அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

கேபிள் கார் விபத்தில் 7 பௌத்த பிக்குகள் பலி!!

குருணாகலில் மெல்சிறிபுர பகுதியில் நேற்றைய தினம்(24) இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் ஏழு பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் இரண்டு வெளிநாட்டு பிக்குகளும் அடங்குவர். விபத்துக்குள்ளான கேபிள் காரில் அந்த நேரத்தில் 13 பிக்குகள் பயணித்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கோகரெல்லை மாவட்ட வைத்தியசாலையிலும் குருநாகல் போதனா வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு பிக்குகளின் உடல்கள் கோகரெல்லையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர்களின் உடல்கள் குருநாகலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பலர் கடுமையாக காயமடைந்து தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் கோர விபத்து : 4 பேர் பலி!!

அனுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் தலாவ-மிரிகம சந்திக்கு அருகில் இன்று அதிகாலை சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் இன்று அதிகாலை தலாவ-மிரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த வேனின் ஓட்டுநர் மற்றும் லொறியின் ஓட்டுநர் உட்பட 6 பேர் சிகிச்சைக்காக தலாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேனில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். வேனில் பயணித்த ஏனைய மூன்று பேர் ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்தார்.

ஏனைய இருவரின் நிலைமை மோசமாக உள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். தனியார் ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்த இந்த வேன் ஜாஎலவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வேனின் ஓட்டுநர் உறங்கியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்து குறித்து தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்க – சத்தியலிங்கம் எம்.பி அரசாங்கத்திடம் கோரிக்கை!!

வவுனியா மாநகரசபையின் முக்கிய தேவைப்பாடுகளை உடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24.09.2025) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

வவுனியா நகரசபையானது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ளமை
வரவேற்கப்பட வேண்டிய விடயம், ஆனால் வெறும் பெயர்ப்பலகையில் மட்டுமே மாநகரசபையாகவுள்ளது. ஒரு மாநகர சபைக்கான வளங்கள் அங்கு இல்லை. மாநகர சபைக்கான ஆளணிகள் நிரப்பப்படவில்லை, வேலைப்பகுதியில் ஆளணி பற்றாக்குறை நிலவுகின்றது. அன்றாட கழிவகற்றல் செயற்பாடுகளுக்கு போதுமான வாகன வசதிகள் இல்லை.

வவுனியா நகரம் வளர்ந்துவரும் நகரமாகும். அங்கு தீயணைப்பு பிரிவின் முக்கியத்துவம் தேவைப்படுகின்றது. எனினும் மாநாகரசபையில் தனியான தீயணைப்பு பிரிவு ஸ்தாபிக்கப்படவில்லை. தீயணைப்பு வாகனமொன்றும், அம்புலன்ஸ் வாகனமொன்றும் இருந்தாலும் கூட போதுமான ஆளணி இல்லை.

இதே நிலைமை ஏனைய பிரதேச சபைகளிலும் காணப்படுகின்து. எனவே மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையை மேம்படுத்த விசேட திட்டமொன்றினை வகுக்கவேண்டுமென இந்த உயரிய சபையில் கோரிக்கை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்.

கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியைக்கு நேர்ந்த கதி!!

 

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் தர்ஷிமா பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த ஆசிரியை பாடசாலையின் நூலகத்தில் வைத்து 13 வயது பாடசாலை மாணவன் ஒருவனிடம் பாட புத்தகம் தொடர்பில் கேள்வி கேட்டட்போது இந்த மாணவன் ஆசிரியையின் கேள்விக்கு பிழையான பதிலை அளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ஆசிரியை மாணவனை தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேக நபரான ஆசிரியை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியையின் தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆசிரியைக்கு பிணை வழக்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!!

உலகளாவிய பயண சஞ்சிகையான ‘டைம் அவுட்’ இவ்வாண்டு ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதற்கமைய குறித்த பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக இருப்பதால், அதன் இதமான வெப்பமண்டல காலநிலை, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றை குறிப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரைகள் மற்றும் மலைநாட்டுப் பயணங்கள் முதல் புராதன இடிபாடுகள் மற்றும் வனவிலங்கு சவாரிகள் வரை, இலங்கை பார்வையாளர்களுக்கு அனைத்தையும் வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் இலங்கைக்கு அடுத்தபடியாக, இலையுதிர் கால நிறங்கள் மற்றும் பருவகால திருவிழாக்களுக்காக துருக்கி மற்றும் மெக்சிகோ இடம்பெற்றுள்ளன.

ஸ்பெயினில் உள்ள வலென்சியா, நியூயார்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான், பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, ருமேனியாவில் உள்ள டிமிசோரா, சான் பிரான்சிஸ்கோ மற்றும் நமீபியா ஆகியவை இடம்பெற்றிருந்த மற்ற இடங்களாகும்.

வெளியிடப்பட்டுள்ள பட்டியலுக்கமைய இந்த இடங்கள் அவற்றின் பருவகால கவர்ச்சி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் ஒக்டோபரில் சிறப்பாக அனுபவிக்கக்கூடிய தனித்துவமான பயண அனுபவங்கள் ஆகியவற்றிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற நிலையில் கைது!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் குறித்து பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவருகிறது.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற வேளையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியிலிருந்து கைக்குண்டொன்றும், இரு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தங்காலையில் மீ்ட்கப்பட்ட இரு சடலங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

தங்காலை, சீனிமோதரவில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்தவர்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயினை உட்கொண்டதால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனையை தங்காலை மருத்துவமனையின் தடயவியல் அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். அந்த நபர்கள் அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயின் உட்கொண்டதால் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தடயவியல் மருத்துவ அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றுமுன்தினம் (22.09.2025) மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் ஆபத்தான நிலையில் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று லொறிகளில் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளில், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொகை ‘உனகுருவே சாந்த’ என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவர் பல குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

கோர விபத்தில் பாடசாலை மாணவி பரிதாபமாக பலி!!

கம்பஹா, மீரிகம தேசிய பாடசாலைக்கு அருகில், எரிவாயு ஏற்றிச் சென்ற வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.

மீரிகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவி நவகமுவ, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷானி ஷனயா எனவும் மீரிகம டி.எஸ். சேனநாயக்க தேசிய பாடசாலையில் உயர்தர வகுப்பு படிக்கும் மாணவி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலை முடிந்ததும் பிரதான வீதிக்கு வந்த பாடசாலை மாணவி, மீரிகம நோக்கி பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார்.

ஓட்டுநர் மோட்டார் சைக்கிளை இயக்கி பஸ்யால நோக்கி திரும்பிய போது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எரிவாயு கொண்டு செல்லும் வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவி அதன் சக்கரங்களில் ஒன்றில் சிக்கியுள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன் காயமின்றி தப்பியதாகவும், காயமடைந்த மாணவி மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு : ஐரோப்பா வாழ் இலங்கைப் பெண்!!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த பெண் ஒருவர், இலங்கையில் தனது சொந்த தாயை தேடி வருகிறார்.

தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான பெண் ஒருவர் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் வாதுவையில் உள்ள கிராண்ட் பீச் ஹோட்டலில் தங்கி, தனது இலங்கைத் தாயைத் தேடி வருகிறார்.

நெதர்லாந்தில் இருந்து 1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி களுத்துறை பொது மருத்துவமனையில் எண் 3570 கொண்ட இலங்கை பிறப்புச் சான்றிதழில் அவரது பெயர் அசோகா என பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவரது தாயார் பெயர் சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி என குறிப்பிடப்பட்டுள்ளது. 1985ஆம் மே மாதம் 13ஆம் திகதியன்று களுத்துறை நகரப் பிரிவின் மருத்துவச் செயலாளர் எம். எச். செனரத்தினால் பதிவு செய்யப்பட்டது.

பிறப்பு பதிவுக்கான தாயாக 24 வயதான சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி அறிவிக்கப்பட்டார். மேலும் அவரது முகவரி கந்தகஹவில, பயாகல என வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது நிரந்தர முகவரி மாத்தறை என வழங்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று இந்தக் குழந்தை,

வெர்னா எலிசபெத் ஜோஸ்பினா பாடன் என்பவரால் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேக்கபஸ் ஹெர்மன் மேரி பாடன் மற்றும் எலிசபெத் வில்ஹெல்மினா பாடன் ஆகியோரால் சட்ட பூர்வமாக தத்தெடுக்கப்பட்டது.

நெதர்லாந்து தம்பதியினர், கொழும்பில் வசித்து வந்த நிலையில், குழந்தையை தத்தெடுத்தனர். கொழும்பு மாவட்ட நீதிபதி எச்.எஸ். அகலவத்தே கையொப்பமிட்ட 1985ஆம் மே மாதம் 15ஆம் திகதியிட்ட உத்தரவிற்கமைய, குழந்தையை பெற்றுள்ளனர்.

இலங்கை தாயைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து நெதர்லாந்து எண் +32474754341 அல்லது +94741120821 என்ற இலங்கை எண்ணில் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் தகவல்களை வழங்குபவர்களுக்கு மதிப்புமிக்க ரொக்கப் பரிசு வழங்கப்படும் என மகள் அறிவித்துள்ளார்.

கொழும்பில் மயங்கி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி : வெள்ளவத்தையில் நடந்த சம்பவம்!!

கொழும்பில் பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணிடமிருந்து 315,000 ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றியுள்ளார்.

பெண்ணின் கணவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். அவரது மனைவி 14 ஆம் திகதி ஹேவ்லாக் சிட்டி அருகே பேருந்தில் இருந்து விழுந்ததை அடுத்து, பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளி மயக்கமடைந்ததால், மருத்துவமனை ஊழியர்கள் தங்க வளையல், ஒரு ஜோடி காதணிகள், பல பிளாஸ்டிக் வளையல்கள் மற்றும் அவர் அணிந்திருந்த ஒரு மெட்டியை அகற்றி அவரது கணவரிடம் ஒப்படைத்தனர்.

இரண்டு நாட்களின் பின்னர் மனைவி சுயநினைவு பெற்ற பிறகு, அவரது நகைகள் பற்றி கேட்டபோது இந்த பொருட்கள் அவரிடம் காட்டப்பட்டன. அங்கு, அவர் இரண்டு தங்க வளையல்கள் மற்றும் இரண்டு வெள்ளி கொலுசுகளை அணிந்திருந்ததாக கூறினார்.

அதற்கமைய, மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 300,000 ரூபாய் மதிப்புள்ள தங்க வளையலையும், 15,000 ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மெட்டியையும் திருடிச் சென்றிருக்கலாம் என கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் குறித்து கொஹுவாலா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கடற்கரையில் பாறை மறைவுக்கு சென்ற இளம் ஜோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காலி கோட்டையில் ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறையிலிருந்து கடலில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு இளம் ஜோடியை சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் குழு மீட்டுள்ளனர்.

நேற்று மாலை ஒல்லாந்தர் கட்டிடத்தின் பின்னால் உள்ள பாறைக்கு காதல் ஜோடி சென்றிருந்த நிலையில், கடல் அலை திடீரென உயர்ந்ததால் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த நேரத்தில், ஒல்லாந்தர் கட்டிடத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக அதிகாரி காமினி சம்பவத்தைக் கண்டு உடனடியாக கடலில் குதித்தித்துள்ளார்.

பின்னர், அருகிலுள்ள சுற்றுலா உணவகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று வந்து, போராடி காதல் ஜோடியை மீட்டு காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

விபத்தில் சிக்கிய இளம் பெண்ணும் இளைஞனும் அஹங்கம மற்றும் லனுமோதரவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மீட்கப்பட்ட இளம் பெண் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அதே நேரத்தில், இளைஞன் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கத்தின் விலை : வரலாறு காணாதளவு உயர்வு!!

நாட்டில் இன்று (23.09.2025) ஒரு பவுண் தங்கத்தின் விலை 1800 ரூபாவால் உயர்ந்துள்ளமை நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, வரலாறு காணாத உச்சத்தை தங்கம் விலை தொட்டுள்ளது.

இலங்கையில் நேற்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 277,500 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 300,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 279,300 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 302,000 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இதற்கமைய இன்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதேவேளை இந்த மாத ஆரம்பத்தில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 257,200 ரூபாயாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 278, ரூபாயாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.