தந்தையின் கையிலிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் களுத்துறை – அலுபோமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவத்தன்று, தந்தை கடந்த 7 ஆம் திகதி தனது வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ள நிலையில் தனது குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருந்த போது தந்தை சற்று உறங்கியதால் குழந்தை கையிலிருந்து கீழே தரையில் விழுந்துள்ளது.
தரையில் விழுந்ததில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், குழந்தை உடனடியாக கொழும்பு ரிட்ஜ்வே சீமாட்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அலுபோமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கினிகத்தேன பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் 11ஆம் வகுப்பில் கல்வி பயிலும் பாடசாலை மாணவி ஒருவரை பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தேன – கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.
காதலனை சந்திக்கச் சென்ற சந்தர்ப்பங்களில் அவர் தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு காதலனும் அவரது நண்பனும் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி கினிகத்தேன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் 16–17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் 19ஆம் திகதி அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, 2026 பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
முல்லைத்தீவு விசுவமடு புன்னை நீராவி பகுதியில் இளம் யுவதி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த யுவதி நேற்றையதினம் (19.01.2026) உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் 23 வயதான இளம் குடும்பப் பெண் ஒருவரே உயிர்டிழந்துள்ளார். மேலும் பெண்ணின் மரணத்திற்காக காரணம் வெளியாத நிலையில் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
உயிரிழந்த யுவதி கல்வியில் சிறந்து விளங்கியவர் என கூறப்படுகின்றது. யுவதியின் மரணம் நண்பர்கள் உறவினர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை அண்மைக்காலங்களாக இளையோர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றதாக சமூக ஆர்வலர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த நோய்கள் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்நாட்களில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம். எமது சுவாசத் தொகுதியின் மேற்பகுதியையே இந்த வைரஸ்கள் பெரும்பாலும் பாதிக்கின்றன.
பொதுவாக இந்த வைரஸ் நோய்கள் முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் அதிகமாகப் பரவக்கூடும். காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் இதில் ஏற்படக்கூடும்.
உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் இந்த நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அதேபோல் உங்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் மிக விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அதேசமயம் , இந்நாட்களில் காற்றின் தரம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும் எதிர்வரும் இரண்டு நாட்களில் இந்நிலைமை நீங்கிவிடும் என்றும் சுற்றாடல் அதிகார சபை ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்தார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியும், உந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை தவணையின் முதல் கட்டம் நாளை (21) முதல் பெப்ரவரி 13 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாணவர்களுக்கு பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை விடுமுறை வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் மார்ச் 3 முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி, பெப்ரவரி 26 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
கண்டி, கலஹா, தெல்தோட்டவத்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் அருகே, ஒரு பெரிய நீல நிற பாறை தோன்றியதை அடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாறை ஒரு இரத்தினக் கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண் சரிவுடன் இந்த பாறை உயர்ந்த பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு தள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. மண்சரிவு பல வீடுகளையும் அப்பகுதியில் உள்ள கோவிலையும் சேதப்படுத்தியது.
புதிதாக கட்டப்பட்ட இந்த கோவிலை எதிர்வரும் மார்ச் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. பேரழிவுக்குப் பிறகு, கோவிலுக்கு அருகில் பல்வேறு வண்ணங்களில் ஒரு கல் முதலில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட ஒளி வெளிப்படுவதாக தகவல் பரவியதால், பாறையைப் பார்க்க ஏராளமான மக்கள் வந்துள்ளனர், மேலும் அதைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பை நிறுத்தியுள்ளனர்.
சுமார் ஒரு டன் எடையுள்ள இந்தப் பாறையை நேற்று மாலை இரத்தினக் கல் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
இது ஒரு கொத்து வடிவில் உள்ள ஒரு சிறப்பு வகை பாறை எனவும் இரத்தினக் கல்லா என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் சில நாட்களில் மீண்டும் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர், மேலும் பாறை தொடர்பாக நிரந்தர முடிவு எட்டப்படும் வரை சிறப்பு பாதுகாப்பைப் பயன்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஜனவரி 1, 2016இற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரச அதிகாரிகளின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரிமை தொடர்பான விதிகளைத் திருத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான 2016 பட்ஜெட் முன்மொழிவின்படி, ஜனவரி 01, 2016 முதல் பொதுப் பணியில் சேர்க்கப்பட்ட அனைத்து அதிகாரிகளின் நியமனக் கடிதங்களிலும்,
“இந்த நியமனம் ஓய்வூதியத்திற்குரியது. உங்களுக்கு உரிமையுள்ள ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை முடிவுக்கு நீங்கள் உட்பட்டிருப்பீர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜனவரி 1, 2016இற்குப் பிறகு பொது சேவையில் நியமிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
மேலும் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் தொடர்புடைய நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதிய நிபந்தனைகளைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது,
இது தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்திற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்துகிறது.
சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 283,300,000( 28 கோடியே, 33 இலட்சம்) ரூபாய் பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் இப்பாகமுவ பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக நம்பப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொலைபேசி ஊடாக தொடர்புகளைப் பேணி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் வசிக்கும் நபரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கையில் இயங்கும் ஏனைய போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து இவர் பணத்தை சேகரித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட 2 வாகனங்களும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்டவை என வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேக நபர் இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா – கினிகத்தனை பகுதியில் அமைந்துள்ள பிரதான பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்று(19.01.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி, கினிகத்தனை, கோணவல பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார்.
காதலனை சந்திக்க, காதலனின் நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், அங்கு காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இணைந்து தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் குறித்த மாணவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் வசித்து வருவதாகவும், கடந்த 17ஆம் திகதி காலை வீட்டைவிட்டு வெளியேறி, இரவு தாமதமாக வீடு திரும்பியதைத் தொடர்ந்து சந்தேகமடைந்த பாட்டி, கினிகத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மாணவி பல தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மேலதிக வைத்திய பரிசோதனைக்காக மாணவி நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 16 முதல் 17 வயதுக்கிடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் நேற்று(19.01.2026)நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களை எதிர்வரும் 2026 பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் 11 ஆம் எண் தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தச்சட்டத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஜனவரி 1, 2026 முதல் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில் திணைக்களத்தின் தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே. வட்டலியத்த இதனை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 27,000 இலிருந்து ரூ. 30,000 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், குறைந்தபட்ச தினசரி ஊதியமும் ரூ. 1,080 இலிருந்து ரூ. 1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இடைத்தரகர்கள் அல்லது ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தப்படும் ஊழியர்கள் தொடர்பாகவும் இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்த சம்பள அதிகரிப்பின்படி, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் அறக்கட்டளை நிதி, கூடுதல் நேரம், பணிக்கொடை, மகப்பேறு ஊதியம் மற்றும் விடுமுறை ஊதியம் போன்ற அனைத்து சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் முதலாளிகளே பொறுப்பாவார்கள் என்று அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, செயற்படாத முதலாளிகள் தொடர்பான முறைப்பாடுகளை தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பில் cms.labourdept.gov.lk வழியாகவோ அல்லது அருகிலுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகவோ சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து மருந்து சாப்பிட மாணவி உயிரிழந்துள்ளர். இளம் தலைமுறையினர், மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறாமல் யூடியூப் பார்த்து சுய மருத்துவம் மேற்கொள்ளும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருகிறது.
மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகன் – விஜயலெட்சுமி தம்பதியின் மகள் 19 வயதான கலையரசி.
தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பயின்று வரும் இவர், தனது பெற்றோரிடம் தான் அதிக இருப்பதாக அடிக்கடி கூறி வருத்தப்பட்டுள்ளார். அதெல்லாம் ஒன்றுமில்லை என அவரது பெற்றோர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.
இதனையடுத்து யூடியூபில் எடை குறைப்பு தொடர்பான வீடியோக்களை பார்த்த கலையரசி, அதில் கூறியபடி நாட்டு மருந்து கடைக்கு சென்று வெங்காரம் என்பதை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
வெண்காரம் என்பது வெண்மை நிறத்தில், துவர்க்கும் தன்மை கொண்ட ஒரு உப்பு பொருளாகும். இது சோப்பு, சலவை சோடா தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
அதை சாப்பிட பின்னர் அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும், அவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் வெளியேறுவதாக தந்தையிடம் கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் பாலியல் சீண்டல் என பெண் வெளியிட்ட காணொளியால் நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காணொளி வெளியிட்ட பெண் தலைமறைவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் என்கிற நபர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா என்கிற பெண் தீபக் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுட்டதாக சொல்லி அதை செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்ததோடு தீபக்கை கடுமையாக விமர்சித்தனர். இதில் மன உளைச்சல் அடைந்த தீபக் ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று தனது உறவினர்களிடம் சொல்லி புலம்பியதாக தெரிகிறது.
அதோடு அவமானம் தாங்க முடியாமல் வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
அந்த பெண் வேண்டுமென்றே பேருந்தில் நடந்தவற்றை பாலியல் சீண்டல் போல சித்தரித்து போலியாக வீடியோவை வெளியிட்டு அப்பாவி ஒருவரின் உயிரை பறித்துவிட்டர் என பலரும் இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதோடு அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தினரும் கேரளா டிஜிபியிடம் மனு அளித்திருக்கிறார்கள்.
இதையடுத்து வீடியோவை பகிர்ந்த பெண் எங்கே என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்த பெண் தனது சமூகவலைத்தள பக்கத்தை அழித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கேரள போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேரளாவில் பேருந்து பயணத்தின்போது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், 42 வயது மதிக்கத்தக்க நபர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்ற நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அறையில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ஜவுளி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தீபக், கடந்த ஜனவரி 16-ஆம் தேதி கண்ணூர் நோக்கிப் பேருந்தில் பயணித்தபோது, அங்கு இருந்த ஒரு பெண் தீபக் தன் மீது தவறான முறையில் கை வைத்ததாகக் கூறி காணொளி ஒன்றை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
ஆலோசகர் மற்றும் விரிவுரையாளராகப் பணியாற்றும் அந்தப் பெண், இது ஒரு விபத்து அல்ல என்றும் “பாலியல் எல்லை மீறல்” என்றும் அக்காணொளியில் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணின் காணொளி காட்டுத்தீயாகப் பரவியது. இருப்பினும், அக்காணொளியைப் பார்த்த பலரும், பேருந்தில் இருந்த கூட்ட நெரிசல் காரணமாகவே தீபக்கின் முழங்கை எதிர்பாராமல் அந்தப் பெண்ணின் மீது பட்டிருக்கலாம் என்றும், அவர் மீது தவறு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கருத்துத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் , சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கடும் விமர்சனங்களாலும், பொதுவெளியில் ஏற்பட்ட அவமானத்தாலும் தீபக் கடந்த சில நாட்களாகக் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தீபக்கின் மரணம் தற்போது கேரளாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ஆண்களின் உரிமைகளுக்காக” குரல் கொடுக்கும் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் அந்தப் பெண்ணுக்கு எதிராகக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
வெறும் விளம்பரத்திற்காகவும் சமூக வலைதள உள்ளடக்கத்திற்காகவும் (Content) ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி ஒரு உயிரைப் பறித்துவிட்டதாக அந்தப் பெண் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இச்சம்பவம் குறித்து “இயற்கைக்கு மாறான மரணம்” என வழக்குப் பதிவு செய்துள்ள கோழிக்கோடு பொலிஸார், வைரலான காணொளி மற்றும் தற்கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் தனது 6 வயது மகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவைச் சேர்ந்த பவிசங்கர் (33), வேலை இழப்பு மற்றும் கடன் நெருக்கடி காரணமாகத் தனது மகளுடன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பவிசங்கர், தனது மனைவி ஸ்னாஷா (28) மற்றும் 6 வயது மகள் வாசுகியுடன் எளமக்கரா அருகே போனேக்கரா பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். எர்ணாகுளத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்த பவிசங்கர், சமீபகாலமாக வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
ஸ்னாஷா ஒரு வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது, கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. கணவரைப் பலமுறை அழைத்தும், செல்போனில் தொடர்பு கொண்டும் பலன் கிடைக்கவில்லை.
உறவினர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, படுக்கையறையில் சிறுமி வாசுகி சடலமாகக் கிடந்தாள். பவிசங்கர் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
எளமக்கரா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன: 1-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி வாசுகிக்கு, தந்தை பவிசங்கரே விஷம் கொடுத்துக் கொன்றது தெரிய வந்தது.
வேலையில்லாத காரணத்தால் ஏற்பட்ட கடுமையான கடன் சுமையே இந்தத் தீவிர முடிவுக்குக் காரணம் எனப் போலீசார் கருதுகின்றனர். இருவரின் உடல்களும் களமச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தன்னை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு கூறி, மனைவிக்கு தீ வைக்க முற்பட்ட கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று முன்தினம்(17.01.2026) மட்டக்களப்பு முனைக்காடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 36 வயதுடைய தி. அனுஷ்வரன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகலாதேவி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவ தினமான நேற்று காலை 8.30 மணியளவில் கணவன்- மனைவிக்கு இடையே பணம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மனைவியை குற்றமற்றவள் என நிரூபித்து காட்டுமாறு வற்புறுத்திய கணவன், மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பெட்டியை கொடுத்து, அவரையே தீ வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, மனைவி தீப்பற்றி எரிந்து கொண்டதில் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மனைவியை தீ வைக்க வைத்த கணவன் தனக்கு தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திய நிலையில், அவரை மனைவி கொலை முயற்சி மற்றும் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, இன்று(18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.