பேயை விரட்டுவதாக பதின்ம வயது சிறுமியை எரித்த பெண் பூசாரி : இலங்கையில் நடந்த சம்பவம்!!

வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் தேவாலயத்துக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பூசாரி கைது

சம்பவத்தில் , பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை, வெளிமுவபொத்தானை, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.

16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி, பெண் பூசாரி, சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண் பூசாரி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் : எதிர்வரும் நாட்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!!

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு அபாயம்

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் தாக்கம்

அதிக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (25) முதல் 30ஆம் திகதி வரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை : இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது (25) இன்று ரூ.6,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று, அதே விலை ரூ.303,600 ஆக இருந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ரூ.330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது.

 

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள ஆபத்துமிக்க வளிமண்டல குழப்பம் : அவசர கலந்துரையாடல்!!

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக்குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (24.11.2025) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா.பிரதீபராஜா,தற்போதைய வானிலைச் சூழல் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

‘இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கை ஊடாக நகர்ந்து செல்லும் நிகழ்வானது கடந்த 130 ஆண்டுகளில் இப்போது தான் நிகழ்கின்றது.

இது ஓர் அபூர்வமான மற்றும் ஆபத்தான வானிலை நிகழ்வாகும். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும்’ என அவர் எச்சரித்தார்.

மேலும், ஏற்கனவே பெய்த மழையால் மண் ஈரமாகியுள்ளதால், பலத்த காற்று வீசும் போது மரங்கள் வேரோடு சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கடல் நீர்மட்டம் இந்தக் காலப்பகுதியில் உயர்வாக இருக்குமென்பதால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத சூழல் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களினதும் தற்போதைய நிலவரம் ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணம்: கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு: சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களை அகற்றுவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதாத நிலையில் உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி: இரணைமடுக் குளம் அதன் கொள்ளளவில் நான்கில் ஒரு பகுதியையே கொண்டுள்ளதால் வெள்ள அபாயம் இல்லை எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார்: தற்போதைய நிலையில் மிகப் பெரிய இடர்கள் இல்லை எனவும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர்தரப்பரீட்சை இடையூறு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன.

இடர் நிலைமை ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது, பரீட்சை நிலையங்கள் இல்லாத பாடசாலைகளையும், பொது மண்டபங்களையும் இடம்பெயரும் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும்; குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேநேரம் கடல் நீர்மட்டம் இன்னமும் உயர்வடையாமையர், யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கடற்படை மற்றும் விமானப்படையின் உதவி

கடந்த காலங்களில் தீவகப் பகுதிகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அவசர மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னதாகவே, உள்ளூராட்சி மன்றங்கள் வாய்க்கால்களைத் துப்புரவு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.

அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களுக்கு ஆளுநர் பணித்தார்.

மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர். இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல், நிதி), முப்படைப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

காதல் தோல்வியால் யாழ் மாணவி விபரீத முடிவு : சோகத்தில் உறவினர்கள்!!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந் நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மணமகன் கண்ணாடியால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் : உறவினர்கள் ஏமாற்றம்!!

பல்வேறு விடயங்களுக்காக திருமண நின்று போன ஏராளமான சம்பவங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மணமகன் கண்ணாடி அணிந்திருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவின் நடந்தேறியுள்ளது.

பீகாரில் கண் குறைபாடு உள்ள ஒருவர் தனது குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணப்பெண் அவரது குறையை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் கண்ணில் குறைபாடு இருப்பதை மறைத்த மணமகன், குறைபாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.

அப்போது திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து மணமகள் மற்றும் அவரது வீட்டார் மணமகனிடம் விசாரித்த போது, தனக்கு கண் குறைபாடு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.  இந்நிலையில் மணமகனுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருப்பதை அறிந்த மணமகள், திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு வைத்தியரால் நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் 26 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயதுடைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவைச் சேர்ந்த வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வைத்தியர், மற்ற நோயாளிகளின் சிகிச்சையை புறக்கணித்து, முறைப்பாட்டாளரான பெண்ணின் மருத்துவ பதிவுகளை பரிசோதித்துள்ளார்.

மேலும் உடல் ரீதியாக அவரை பரிசோதிக்க அறை ஒன்றிக்குக்கு அழைத்துச் சென்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டிற்கு குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 பேர் மரணம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 67 பேர் 03 பாதுகாப்பான மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், பதுளை, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

 

வவுனியாவில் தங்கச் சங்கிலியை தொலைத்த பல்கலைக்கழக மாணவி : பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!!

வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரை பவுண் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் நேற்று (24.11) இடம்பெற்றுள்ளது.

வவுனியா மருத்துவமனையின் பொலிஸ் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் (46674) திலகரதன என்ற அதிகாரி வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.

இதன் பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன், அந்த தங்கச்சங்கிலியை பொலிஸ் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.

இந்நிலையில்,, ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னுடைய தங்கச் சங்கிலி விழுந்து விட்டதாக தேடி வந்த போது,

மருத்துவமனை பொலிஸ் காவல் மைய அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்கு கையளித்துள்ளனர்.

இதன்போது குறித்த மாணவியின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீர் வழிந்ததுடன் அந்த பொலிஸ் அதிகாரிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வசிக்கும் இலங்கையரின் மோசமான செயல் : உண்மையை அம்பலப்படுத்திய பெண்!!

கனடாவில் இருந்து இலங்கையில் ஒன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா வாழ் இலங்கையரின் வர்த்தக நடவடிக்கை அம்பலமாகி உள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வத்தளை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பெண் 25 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, ​​அவருக்கு போதைப்பொருளை வழங்கிய மற்றொரு நபர் வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அவர் முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார். சந்தேக நபரிடம் 115 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தன்னை வழிநடத்துவதாக போதைப்பொருள் கடத்தல்காரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் வாங்குபவர்கள் கனடாவில் உள்ள நபருக்கு ஒன்லைன் மூலம் பணம் செலுத்துவர்.

அதன் பின்னர் கனடாவில் இருந்து வரும் தகவலுக்கு அமைய உரிய நபர்களுக்கு போதைப்பொருளை வழங்குவதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிசறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 7 நாள் பொலிஸில் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கான 2 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டி வருமானம் ஈட்ட முடிந்தது.

இந்த நேரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்றார்.

வவுனியாவை சேர்ந்த மருத்துவருக்கு கிடைத்த பெருமை!!

ஆசிய பசிபிக் பிராந்திய நோய்த்தணிப்பு மருத்துவ இணையத்தினால் (Asia Pacific Hospice and Palliative Care Network) வழங்கப்படும் மதிப்புமிக்க தொழில்வாண்மைப் புலமைப்பரிசில் வவுனியாவைச் சேர்ந்தவரும் தற்போது சுகாதார அமைச்சில் மருத்துவ நிர்வாகப் பயிற்சியில் உள்ளவருமான மருத்துவர் செல்வராசா மதுரகனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

2026ம் ஆண்டு ஜனவரி முதல் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள குறித்த திறமை அடிப்படையிலான போட்டித்தன்மைக்குள்ளாக தெரிவுசெய்யப்படுவதுமான குறித்த புலமைப்பரிசில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளில் திறமை அடிப்படையிலும் நேர்முகத்தேர்விலும் தெரிவுசெய்யப்பட்டுள்ள எட்டுப்பேரில் ஒரே இலங்கையராக மருத்துவர் செ.மதுரகன் இடம்பெற்றுள்ளார்.

குறித்த புலமைப்பரிசில் மூலம் கல்வி மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாட்டுப்பயிற்சிகள், ஆய்வு போன்றவற்றுக்குரிய பல இலட்சம் பெறுமதியான புலமைப்பரிசிலுக்கு அவர் உரித்துடையவராகின்றார்.

வடமாகாணத்தில் நோய்த்தணிப்பு மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதிலும், ஆரம்பிப்பதிலும் பல அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவரது பல ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

நோய்த்தணிப்புச் சேவைகளின் முக்கியத்துவம் பற்றியும், வலி மற்றும் ஏனைய குணங்குறிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், நோய்களால் ஏற்படுத்தப்படும் நிதிச்சுமைமையக்குறைத்து சமத்துவமான சேவைகள் தனிநபர் வேறுபாடின்றி அனைவருக்கும், வளங்கள் குறைவான பிரதேசங்களுக்கும் பகிரப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் இவரது ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த புலமைப்பரிசில் மூலம் இவரது தனிப்பட்ட முன்னேற்றம் மட்டுமன்றி வடமாகாணத்திற்கும், நாட்டுக்கும், நோய்த்தணிப்பு மருத்துவம் தொடர்பான அறிவு மற்றும் ஆய்வு விருத்திக்கான பல கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மருத்துவர் செல்வராசா மதுரகன் இந்த ஆண்டு ஜுலை மாதம் பொதுநலவாய மருத்துவ சங்கத்தின் சிறப்பு விருதையும் (Fellowship of Commonwealth Medical Association) பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் செல்வராசா மதுரகனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியாவில் அமைந்துள்ள Singer காட்சியறையில் தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று (25.11.2025) காலை 9.45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்து நாசமாகியது.

காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டிருந்தது. எனினும் காட்சியறை முழுமையாக தீயில் எரிந்தமையால் பல கோடி ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் நாசமாகியுள்ளன.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவதானமாக இருங்கள் : வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்கள் இலங்கையினுடைய வானிலையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது.

தற்பொழுது இலங்கைக்கு தெற்காக குறிப்பாக இலங்கையிலிருந்து தென் மேற்காக 62 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகின்ற வளிமண்டல மேலெடுக்க சுழற்சியானது தொடர்ந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து,

காலியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையில் அரபிக்கடலில் 161 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு பின்னர் எதிர்வரும் 26.12.2025 அன்று மீள ஒரு காற்று சுழற்சியாக வலுப்பெற்று கிழக்கு திசை நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.

அத்தோடு இந்த காற்று சுழற்சி தொடர்ச்சியாக வலுப்பெற்று இலங்கையின் கிழக்கு மாகாண கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மாகாண கரைகளை அண்மைக்கும் பொழுது ஒரு சிறு புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.

பொதுவாக அயனப்பிரதேசத்தில் நிகழும் தாழமுக்க நிகழ்வுகள் மேற்குத் திசை நோக்கி நகர்வதே வழமை.

மிக அரிதாகவே அவை கிழக்கு நோக்கி நகரும். அந்த வகையில் இந்த காற்றுச் சுழற்சி மிக முக்கியமான ஒரு வானிலை தோற்றப்பாடாகும்.

இது கிழக்கு நோக்கி நகர்ந்து மீண்டும் இலங்கையின் தென் பகுதியை அண்மிக்கும் போது இலங்கையின் தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம் என்பனவும்,

பின்னர் இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி நகரும்போது ஊவா, கிழக்கு, மத்திய, வடமேற்கு, வடக்கு மாகாணங்கள் என்பனவும், கனமழை முதல் மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாளை அதாவது 25 ஆம் திகதியிலிருந்து தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம்,

ஊவா மாகாணம் என்பனவும் எதிர்வரும் 27.11.2025 இலிருந்து கிழக்கு, வடக்கு, வட மத்திய மாகாணங்களும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழை வரை பெறும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஏற்கனவே நேற்றைய தினம் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கு அருகில் தோற்றம் பெற்ற தாழமுக்கம் எதிர்வரும் 26.11.2025 அன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல நிலைமைகள் மற்றும் ஏனைய புற காரணிகளின் விளைவாக இதன் நகர்வில் பல பின்னடைவுகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் 25.11.2025 முதல் 29.11.2025 வரை இலங்கைக்கு வானிலை ரீதியாக மிக சவாலான காலப்பகுதியாகும். ஏனெனில் எதிர்வரும் 26.11.2025 அன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கைக்கு நெருக்கடியைத் தரக் கூடிய இரண்டு தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் நிலவும்.

குறிப்பாக எதிர்வரும் 29.11.2025 அன்று இந்த இரண்டு தாழமுக்க நிகழ்வுகளினதும் மைய அமுக்க அளவும் வெளி வலய அமுக்க அளவும் ஒரே நிலைமையில் காணப்படும் என மாதிரிகள் கட்டுகின்றன.

இந்த மாதிரிகளின் அடிப்படையிலேயே நிகழ்நேர வானிலையும் அமைந்தால் இலங்கை முழுவதற்கும் இது பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

எதிர்வரும் 25.11.2025 முதல் தெற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாண மக்களும் 27.11.2025 முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண மக்களும் பெருமழை மற்றும் வெள்ளம், வேகமான காற்று வீசுகை தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதேவேளை தெற்கு (23,24,25,26,2728 ம் திகதிகள்), மேற்கு ( 23,24,25,26,27,28,29 ம் திகதிகள்), கிழக்கு ( 25,26,27,28,29,30 ம் திகதிகள்) வடக்கு( 26.27.28.29.30 ம் திகதிகள்)

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை : 10 மாவட்டங்களில் 1790 பேர் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களில், 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், சீரற்ற வானிலையால் 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கைக்கு வரும் இரண்டு முக்கிய அணிகள்!!

ஐசிசி உலகக் கிண்ண தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஜனவரியில் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பாகிஸ்தான் ஜனவரி 8 முதல் 12 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் பெப்ரவரி 3 வரை இங்கிலாந்து அணி,மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கிலாந்து தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கும்.

பாகிஸ்தான் தொடர் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறவில்லை என்றாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளது, இறுதி ஏற்பாடுகள் முடிந்ததும் பாகிஸ்தானின் வருகை குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை டி20 உலகக் கிண்ணத் தயாரிப்பில் உள்ளதால், பெரும்பாலான டி20 போட்டிகள் தம்புள்ளையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கிண்ண குழு பி-யில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகியவற்றுடன் இலங்கை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் போட்டிகள் பெப்ரவரியில் ஆரம்பமாகவுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை ஆகியன இணைந்து இந்த உலகக்கிண்ணத்தை நடத்துகின்றன.