ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தப்பிச் செல்வதற்காக விசா பெற முயன்றபோது, கரந்தெனிய சுத்தாவின் சகோதரரான ராஜுவை இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது தொடர்பில் இந்தியப் பொலிஸார், இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்துள்ளனர். சந்தேக நபரான ராஜு, இலங்கையில் 15 குற்றங்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தவராகும்.
கரந்தெனிய சுத்தாவின் உதவியுடன் அவர் டுபாய்க்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடு ஒன்றுக்குத் தப்பிச் செல்லும் நோக்கத்தில், ராஜு சில நாட்களுக்கு முன்பு டுபாயிலிருந்து இந்தியாவிற்கு வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராஜு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். அதற்கமைய, அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக, அவரின் பெற்றோர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சித்திரை புத்தாண்டு புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என்கின்ற 13 வயதுடைய சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.
சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால் 0771824506 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.
பிரித்தானியாவின் லண்டனில், இலங்கையைப் பின்னணியாகக் கொண்ட ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் அனோஜன் ஞானேஸ்வரன் (21). யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இவர், கணக்கியல் மற்றும் நிதித்துறையில் மூன்றாம் ஆண்டு கல்வி பயிலும் திறமையான மாணவராக இருந்தார்.
மேலும், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவராகவும், ஐரோப்பிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராகவும் குறிப்பிடப்படுகிறார். 2024 ஜனவரி 8ஆம் திகதி தெற்கு லண்டனில் உள்ள ஸ்ட்ராபெரி ஹில் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, டினோ டொனால்ட்சன் என்ற நபர் அனோஜனை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்திற்குப் பின்னர் ஒரு மணி நேரத்திற்குள், குற்றவாளி எதுவும் நடக்காதது போல் பேருந்தில் சிரித்தும் பேசிக்கொண்டும் சென்ற காட்சிகள் சிசிடிவி பதிவுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும், ஒரு வீட்டின் கதவு மணியில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில், “நான் அவனை முதுகில் முழுமையாகக் குத்தினேன்” என அவர் பெருமையாக ஒப்புக்கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த ஓல்ட் பெய்லி நீதிமன்றம், டினோ டொனால்ட்சனை குற்றவாளி என அறிவித்துள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அனோஜனின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் எங்கள் அன்பிற்குரிய மகன் மற்றும் சகோதரன். எதிர்காலம் குறித்து பல கனவுகள் கொண்டிருந்தார்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் புலம்பெயர் தமிழர் சமூகத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான பெண் சந்தேகநபர் மற்றும் 20, 21, 22, 23 வயதுகளையுடைய ராஜாங்கனை,
கடவத்தை, ராகமை மற்றும் திருகோணமலை சீனக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (18) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் ‘அக்ஷய யோகம்’ மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சூரியனும் சந்திரனும் தங்களின் உச்ச வீடுகளில் பிரவேசிக்கும்போது இந்த யோகம் உருவாகிறது. ஏப்ரல் 19 அன்று, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.
அதே வேளையில் சந்திரன் ரிஷப ராசிக்கு மாறுகிறார். அட்சய திருதியை அன்று நடக்கும் இந்த கிரகச் சேர்க்கையானது,
சில ராசிக்காரர்களுக்கு மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும், மேலும் அவர்களின் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
இந்த பதிவில் அக்ஷய யோகத்தால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் : வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம் மேலும் அலுவலகத்தில் அவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும்.
இந்த யோகத்தின் நேர்மறையான தாக்கங்கள், அவர்களின் முடிவெடுக்கும் திறனையும் மேம்படுத்தி, அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும்.
வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சிறப்பான வாய்ப்புகளைப் பெறலாம். சொந்த தொழில் தொடங்க வேண்டமென்ற நீண்ட நாள் ஆசை நிறைவேறும், அதன் மூலம் பல்வேறு நிதி நன்மைகளை அடைய முடியும்.
புதிய வேலை தேடுபவவர்களுக்கு இப்பொது நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வளர்ச்சியைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு, அக்ஷய யோகம் அவர்களின் நிதி நிலையை மேம்படுத்தும். நிலம் அல்லது வாகனம் வாங்கும் அவர்களின் கனவு பலிக்கக்கூடும். அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
அவர்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் முழு ஆதரவைக் கொடுப்பார்கள். நிதிநிலையில் ஸ்திரத்தன்மை மேம்படும், புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மேலும், அன்புக்குரியவர்களுடன் இணக்கம் அதிகரிப்பதால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம் : நிலுவையிலுள்ள அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக முடிக்க முடியும்.கடந்த கால மோதல்களைத் தீர்ப்பதற்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு சாதகமான நேரம்.
இந்த யோகம் சமூகத்தில் அவர்களின் நற்பெயரையும் மரியாதையையும் அதிகரிக்கும் என்பதால், முன்னேற்றத்துக்கு இது ஒரு நல்ல காலம், ஏனெனில் இந்த நேரத்தில் ஏற்படுத்தப்படும் இணைப்புகள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு உதவும்.
விருச்சிகம்: திடீர் பண வரவுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பரம்பரைச் சொத்துக்கள் அல்லது பழைய முதலீடுகள் மூலம் அவர்கள் பெரிய லாபத்தை ஈட்ட முடியும்.
நீண்ட காலமாகப் பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்களுக்கு, இது ஒரு மிகச் சிறந்த காலகட்டமாக அமையும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உருவாகும்.
முக்கனிகளில் முதன்மையானது மாம்பழம். மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காரணம், மாம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி அதிக சத்துக்கள் நிறைந்ததும் கூட.
ஆனால், இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனும் கருத்தும் நிலவுகின்றது. அதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
இயற்கையாகவே உடல் ஆற்றலை அதிகரிக்கக்கூடியது மாம்பழம். எனவே மாம்பழத்தை இரவு நேரங்களில் சாப்பிடும்பொழுது உடல் ஓய்வு பெற முடியாமல் உறக்கத்தின் தரம் குறையும்.
இனிப்பான மாம்பழத்தை இரவில் சாப்பிடும்பொழுது சமிபாட்டு பிரச்சினை ஏற்படுவதோடு, வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடும்பொழுது கலோரிகள் எரிக்கப்படாமல் சேமிக்கப்படும்.
இரவு நேரங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை உயர்வு, எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் தரையில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஆகாசா ஏர் விமானத்தின் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது இறக்கையும், ஆகாசா ஏர் விமானத்தின் இறக்கையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்தை தொடர்ந்து ஆகாசா ஏர் விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, ஹைதராபாத் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான முதற்கட்ட நடவடிக்கையாக ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் ஓட்டுநர்கள் மற்றும் பணியிலிருந்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை விசாரணை முடியும் வரை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (17.04.2026) காலை 8 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். விபத்தின்போது ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு காரின் சாரதி மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கியவர்கள்ம் பலாங்கொட பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காயங்களுக்கு உள்ளான மூன்று பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்த ஆணின் சடலம் பொகவந்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பிலும் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஆசிரியைகள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 22 பேர், கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்கு ஒரு வேனில் வால்பாறைக்குச் சுற்றுலா வந்துள்ளனர்.
நேற்று காலை வால்பாறையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் பொள்ளாச்சி நோக்கி மலைப்பாதையில் இறங்கிக் கொண்டிருந்தனர்.
பொள்ளாச்சி – வால்பாறை இடையிலான 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப்பாதையில், 26-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
வேகம் குறையாமல் தறிகெட்டு ஓடிய வேன், அங்கிருந்த பாதுகாப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமார் 800 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
வேன் பள்ளத்தில் விழுந்த சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆனைமலை மற்றும் வால்பாறை தீயணைப்பு வீரர்கள், கடும் சிரமத்திற்கு இடையே பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயமடைந்த மற்ற 13 பேர் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், மலைப்பாதையில் இறங்கும் போது வேனின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி – வால்பாறை மலைப்பாதை தற்போது தற்காலிகமாக மூடப்பட்டு, மீட்புப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை டவுன் பகுதியில், காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 19 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பாகல்கோட்டை பகுதியைச் சேர்ந்த பூமிகா (19), அங்குள்ள ஒரு டயர் கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் டோங்ரிசாப் என்ற வாலிபருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்குப் பூமிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து பழகிய பூமிகாவை, அவரது பெற்றோர் கண்டித்ததோடு, இந்தக் காதலைக் கைவிடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
காதலனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் பூமிகா உறுதியாக இருந்துள்ளார். ஆனால், பெற்றோர் எதற்கும் சம்மதிக்காததால், தனது காதலனுடன் சேர முடியாது என்ற விரக்திக்கு அவர் தள்ளப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூமிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு வந்த பெற்றோர், மகள் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். தகவலறிந்து வந்த பாகல்கோட்டை போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால், சினேகா (044-24640050) அல்லது மாநில அரசின் உதவி எண் 104-ஐத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
தெலுங்கானா மாநிலம் அனுமாபுரம் கிராமத்தில் 2 வயது பெண் குழந்தை, தந்தை வாயைப் பொத்தியதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாற்றுத்திறனாளி தம்பதியான ஸ்ரீராமுலு மற்றும் நாகமணி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை, ஸ்ரீராமுலு சமாதானம் செய்து 4 நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று நாகமணியின் தந்தை வீட்டிற்கு வந்ததைக் கண்ட குழந்தை நித்யஸ்ரீ, ஓடிச் சென்று தாத்தாவைக் கட்டிக்கொண்டது. இதைப் பார்த்த ஸ்ரீராமுலு, தனது மனைவி மீண்டும் குழந்தையுடன் தந்தை வீட்டிற்குச் சென்றுவிடுவார் என்று அச்சமடைந்துள்ளார்.
இதனால் குழந்தையை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றபோது, குழந்தை வீறிட்டு அழுதுள்ளது. குழந்தையின் அழுகையை நிறுத்த ஸ்ரீராமுலு அதன் வாயையும் மூக்கையும் சேர்த்துப் பொத்தியுள்ளார்.
இதில் மூச்சுவிட முடியாமல் திணறிய குழந்தை நித்யஸ்ரீ அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. தனது செயலால் குழந்தை இறந்துவிட்டதை உணர்ந்த ஸ்ரீராமுலு, உடனடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
குடும்பப் பிரச்சினையில் பெற்ற தந்தையே குழந்தையைக் கொன்ற இந்த விபரீதச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (18.04.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,831 டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இன்று தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்க விலை 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 402,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது.
இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல், பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. மோசடி நடந்த காலத்தில் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை தோல்விகள்.
சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டன என்ற விரிவான ஆய்வு.
மேலும், இந்தத் தணிக்கை அறிக்கை நேரடியாக மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்படும், அத்துடன், வங்கியின் உள்வாரி கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு NDBக்கு மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் வினைத்திறனை மதிப்பீடு செய்ய ஒரு சுயாதீன மூன்றாம் தரப்பு ஆய்வையும் (Independent third-party review) மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், பெரிய சர்ச்சை நிலவினாலும், மத்திய வங்கி சில முக்கியமான தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளது.
குறிப்பாக, NDB வங்கி தற்போது அனைத்து ஒழுங்குமுறை மூலதன மற்றும் திரவத்தன்மை தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளது. வங்கியின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பில்லை.
இந்த மோசடியினால் இலங்கையின் மற்றைய நிதி நிறுவனங்கள் எவ்வித இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், வைப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.
வவுனியா கொறவப்பொத்தானை வீதியில் பெரிய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டது.
குறித்த பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக இன்று மதியம் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நீண்ட நேரத்தின் பின்னரே பொலிசார் அந்தப்பகுதிக்கு வருகைதந்ததாக கூறப்படுகின்றது.
அங்கு நீண்டகாலமாக யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாநகரசபை உறுப்பினர் பர்ஸ்சான் பொலிசாருடன் இணைந்து சடலத்தை அங்கிருந்து அகற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணகளை முன்னெடுத்துள்ளனர்.
நவீன உலகில் திருமண முறைகள் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையிலும், இமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்கிரி (Trans-Giri) பகுதியில் வாழும் ‘ஹட்டி’ (Hatti) பழங்குடியின மக்கள், தங்களது முன்னோர்களின் வினோதமான திருமண முறையை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில், மூத்த மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் முறைப்படி அந்த வீட்டில் உள்ள மற்ற அனைத்துச் சகோதரர்களுக்கும் மனைவியாகக் கருதப்படுவார். இதனை ‘திரௌபதி மணம்’ என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
இந்த வழக்கத்திற்குப் பின்னால் சில வலுவான சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக அந்த மக்கள் கூறுகின்றனர்.
ஒரு வீட்டில் உள்ள நான்கு சகோதரர்களும் தனித்தனியாகத் திருமணம் செய்து கொண்டால், குடும்பச் சொத்துக்கள் நான்காகப் பிரியும். ஆனால், அனைவரும் ஒரே பெண்ணை மணக்கும்போது, நிலமும் சொத்துக்களும் பிரியாமல் ஒன்றாகவே இருக்கும்.
மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்வாதாரம் கடினம் என்பதால், குடும்பப் பொருளாதாரத்தைச் சீராக வைக்க இது ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த முறையின் மூலம் ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஓரளவுக் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், தற்போதைய இளைய தலைமுறையினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்வதால், இந்த வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
பல ஹட்டி இளைஞர்கள் இப்போது தனித்தனித் திருமண முறைகளையே விரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனாலும், பழமை மாறாத சில குக்கிராமங்களில் இன்றும் இந்த ‘கூட்டுத் திருமண முறை’ ஒரு கலாச்சார அடையாளமாக நீடிக்கிறது.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியில் செல்போன் பயன்பாட்டால் ஏற்பட்ட தகராறில், மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மரக்காணத்தைச் சேர்ந்த மெக்கானிக் ஏழுமலைக்கும் (24), சுவேதா (21) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சுவேதா அடிக்கடி செல்போனில் பேசுவது குறித்து ஏழுமலைக்கு நீண்ட நாட்களாகச் சந்தேகம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஏழுமலை முதலில் செல்போன் சார்ஜர் வயரால் சுவேதாவின் கழுத்தை இறுக்கியுள்ளார்.
பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சுவேதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ஏழுமலையைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தால் விளைந்த இந்த விபரீத முடிவு, ஒரு பிஞ்சு குழந்தையைத் தாயில்லாமல் தவிக்கவிட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.