தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் : இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (20.04.2026) ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4796 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி : இருவர் கைது!!

நுவரெலியா – கிரகரி வாவியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (19.04.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதும், கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து தத்தளித்த நிலையில், நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் எந்தவித காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரு படகுகளை இயக்கிய சாரதிகள் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையின் பின்னர் அவர்கள் இன்று (20) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தயவு செய்து அவதானமாக இருக்கவும் : முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை!!

முழு இலங்கைக்கும் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

அதன்படி நாட்டின் அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களையும் இந்த எச்சரிக்கை தொடர்பில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் கடும் மின்னல் தாக்கத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

கனடாவில் இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : மர்ம நபர்கள் நடத்திய பயங்கரம்!!

கனடாவின் ஏஜாக்ஸ் நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:40 மணியளவில், Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்குள் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், காயமடைந்த நபரை மீட்டு தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, சந்தேகத்திற்குரிய இருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

அனுராதபுரம் தலவ – எப்பாவள பிரதான சாலையில், எலியதிவுல்வெவ ஏரிக்கு அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எப்பாவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். 33 வயதுடைய ஹெரத் முதியன்செலகே இந்திகா நமல் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எப்பாவலையின் எலியதிவுல்வெவ பகுதியில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்த அவர், அந்த வீட்டிற்கு முன்னால் உள்ள சுமார் 30 அடி உயரமுள்ள மரக்கிளையில் தூக்கிட்டு உயிர் மாய்த்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை (19) கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தற்கொலையா அல்லது வேறு சம்பவமா என்பது குறித்து எப்பாவல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

யாழில் கணவன் குடித்த வெறும் தேநீரால் பறிபோன மனைவியின் உயிர் : தனக்கு தானே நிகழ்த்திய பயங்கரம்!!

யாழில், தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.

இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.

இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வந்த கனடா குடும்பத்திற்கு விடுதியில் காத்திருந்த அதிர்ச்சி!!

கனடாவிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா சென்ற குடும்பம் ஒன்றின் உடமைகள் மற்றும் பெருந்தொகை பணம் திருடப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்றில் கனடா குடும்பத்தின் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தம்பதியினர், அவர்களது மகன் மற்றும் கனடிய மருமகள் ஆகியோரின் உடமைகள் பணமே திருபோயுள்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டேப்லெட்கள் (Tablets) , 1000 கனடிய டாலர்கள் மற்றும் பல லட்சம் இலங்கை ரூபாய் என்பன திருபோயுள்ளதாக கூறப்படுகின்றது.

பாதுகாப்புக் கருதி மகன் மற்றும் மருமகள் தமது கணினிகள் மற்றும் பணப்பைகளை பெற்றோரின் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளனர்.

அவர்கள் திரும்பியபோது, அறையின் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருப்பதையும், உடமைகள் திருடப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விடுதியின் பின்புறம் 4-வது மாடி வரை கட்டப்பட்டிருந்த இரும்புக்கம்பிகளின் உதவியுடன் திருடர்கள் உள்ளே நுழைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக காலி (Galle) காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே வெளிநாடுகளிலிருந்து தாயகம் செல்பவர்கள் விடுதிகளில் தங்கும்போதும், பயணங்களின் போதும் அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்

 

இலங்கையில் பயங்கரம் : 2000 ரூபாவிற்காக இடம்பெற்ற படுகொலை!!

பலாங்கொடை – சீதகல சந்தி பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இடம்பெற்ற சூதாட்டத்தின் போது, 2000 ரூபா பந்தயம் தொடர்பாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சீதகல, பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று திங்கட்கிழமை (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் இளம் குடும்பஸ்தர் பலி!!

வவுனியா வடக்கு மதியாமடு பகுதியில் குறித்த துயரச்சம்பவம் நேற்று(18.04.2026) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

நேற்றயதினம் குறித்தநபர் தேவை நிமித்தம் உழவியந்திரத்தை செலுத்திச்சென்றுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவியந்திரம் திடீர் என தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் அதனை செலுத்திச்சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சம்பவத்தில் 29 வயதான இளம் குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனடாவில் விபத்தில் இறந்த தமிழ் குடும்பத்திற்கு நீதி கோரி பெரும் ஆர்ப்பாட்டம்!!

கனடாவில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் குடும்பத்திற்கான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தற்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

2022 ஒக்டோபர் 12ஆம் திகதி மார்க்கம் வீதி – எல்சன் வீதி சந்திப்பில் டிரக் மற்றும் கார் மோதியதில், ஒரு தாயும் அவரது இரு பிள்ளைகளும் உயிரிழந்தனர்.

பிள்ளைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தில் பதீரனா புவனேந்திரன், நெலுக்சனா புவனேந்திரன் மற்றும் ஸ்ரீரதி சண்முகநாதன் ஆகியோர் உயிரிழந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் மில்டன் நீதிமன்றம் நேற்று (17.04.2026) தீர்ப்பு வழங்கியது. விபத்துக்குக் காரணமான வாகன சாரதி அனுபவமிக்கவர் என்றும், அன்றைய காலநிலை காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையே விபத்திற்குக் காரணம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

அதேவேளை, இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் பொதுமக்களுக்கும் திருப்தி அளிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டதுடன் எந்தவித தண்டனையும் விதிக்கப்படவில்லை.

இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற வளாகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கு தொடர்பாக முன்னதாக குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இழந்த புவனேந்திரன், சமூக ஊடகங்கள் வழியாக நீதி கோரி மக்களை ஒன்றிணைய அழைப்பு விடுத்திருந்தார்.

அவரின் அழைப்பைத் தொடர்ந்து பெருந்திரளானோர் இன்று நீதிமன்றம் முன்பு திரண்டிருந்தனர்.

மேலும், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், கனேடிய நாடாளுமன்றத்தில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் பலி!!

புத்தாண்டு விடுமுறையில் தெதுரு ஓயாவில் நீராட சென்று 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால், அப்பகுதி ஆள் நடமாற்றமில்லாத நகரமாக மாறியுள்ளது.

உயிரிழந்தவர்கள் கடவத்தை மற்றும் கோபைகனேயின் தாதவெல பகுதியைச் சேர்ந்தவர்களாகும் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவதாக பொலஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், நீரில் மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு ஆணும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 9, 13, 18, 39, 70 மற்றும் 72 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவினர் 16ஆம் திகதி உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மாலையில், 15 பேர் கொண்ட குழுவினர், தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்றனர்.

அந்த 15 பேர் கொண்ட குழுவினர் சதுப்பு நிலத்திற்குச் சென்று குளித்துக் கொண்டிருந்த போது, ​​உடனடியாக நீரில் மூழ்கத் தொடங்கினர்.

அந்த நேரத்தில், அப்பகுதி மக்களும் பொலிஸாருக்கும் கடற்படைக்கும் தகவல் தெரிவித்தனர். கடற்படை வரும் வரை, அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய குழுவினரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அக்குழுவில் 7 பேர் மீட்கப்பட்டனர், ஆனால் மேலும் 8 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயினர். பின்னர், கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​அவர்கள் படகில் சென்று நீருக்கடியில் காணாமல் போனவர்களின் உடல்களை மேற்பரப்பிற்குக் கொண்டு வந்தனர்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடி மகிழச் சென்ற எங்களுக்கு இப்படி ஒன்று நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை, என நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் கூறினார்.

புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்த எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? என்று மற்றொரு உறவினர் கதறி அழுதார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த எட்டு பேரின் மரண விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை நேற்று நிக்கவெரட்டிய மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்!!

தகராறு முற்றியதில், கணவன் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17.04.2026) அதிகாலை குறித்த பெண் தனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த போதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் வெலிஓயா, UDK பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளிநாடு சென்றிருந்த இப்பெண், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

பின்னர், இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் தனது குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்ற நிலையில் மனைவி நீண்ட நாட்களாகத் தனது வீட்டிற்குத் திரும்பாததால், அவரை மீண்டும் அழைத்துச் செல்வதற்காகக் கணவன் நேற்று (16) மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதன்போது, மனைவி அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் கணவனிடம் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கண்டித்ததோடு இது தொடர்பாக நேற்று மதியம் முதல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலை படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 30 வயதுடைய கணவன் மற்றும் கள்ள உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஆகிய இருவரையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பில் பெண்ணுக்கு நடந்த கொடூரம் : இளம் பெண் உட்பட ஐவர் கைது!!

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பொருட்களைத் திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், பெண் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது தலைமுடி வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலின் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, முக்கிய சந்தேக நபர் உட்பட ஐந்து பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணைக் கண்டறிந்த பொலிஸ் புலனாய்வாளர்கள், சம்பவம் தொடர்பாக அவரிடமிருந்து வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவப் பரிசோதனைக்காக அவரை ராகம போதனா மருத்துவமனைக்கு அனுப்பவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணைகள் ராகம பகுதியை சேர்ந்த 27 வயதுப் பெண் ஒருவரும், மேலும் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 21, 22 மற்றும் 23 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இராஜங்கனை, கடவத்தை, ராகம மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று வெலிசரா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ராகம பொலிஸாரின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற தாய்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பெற்றெடுத்துள்ள நிகழ்வு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த இந்த தாய், திருமணமாகி சுமார் 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் (17.04.2026) இரண்டு ஆண் குழந்தைகளையும் இரண்டு பெண் குழந்தைகளையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளார்.

வைத்தியசாலை தகவலின்படி, தாயும் குழந்தைகளும் தற்போது வைத்தியர்களின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரிய நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்களிடையேவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காத்திருப்புக்குப் பின் ஒரே நேரத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த இந்த சம்பவம், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் பயங்கரம் – மாமாவால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞன்!!

மாத்தறை, வெலிகம, பரணக்கடை பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வெலிகம, பரணக்கடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞர், தனது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் மற்றும் தாயின் மூத்த சகோதரருடன் வீட்டில் வசித்து வந்தார்.

கொலை செய்யப்பட்ட இளைஞருக்கும் அவரது தாயின் மூத்த சகோதரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதால், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய, இந்த கொலை செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 58 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பில் வெளியிட்டுள்ள எதிர்வுகூறலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

மேலும் ஏப்ரல் 20 ஆம் திகதியிலிருந்து நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.