காரில் தனியாக பயணித்தால் வரி : இந்திய நகரத்தில் வர உள்ள புதிய திட்டம்!!

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐடி துறையின் தலைநகராக கருதப்படும் பெங்களூரு, பல ஆண்டுகளாக டிராபிக் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.

அவுட்டர் ரிங் ரோடு(ORR) போன்ற முக்கிய சாலைகளில் சில கிலோமீட்டர் தூரங்களை கடக்கவே பல மணி நேரம் ஆகும் நிலையில், இந்தியாவின் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நகரமாக பெங்களூரு கருதப்படுகிறது.

இந்த போக்குவரத்து பிரச்சினையை சரி செய்வது குறித்து கர்நாடக மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், கர்நாடக பெரு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நகர வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலைமை செயலாளர் ஷாலினி ரஜ்னீஷ், “போக்குவரத்து நெரிசலை குறைக்க நெரிசல் வரியை(Congestion Tax) அமுல்படுத்துவது குறித்து விவாதித்தோம். இதன்படி, பெங்களூரு ORR சாலைகளில் காரில் ஒருவர் மட்டும் பயணித்தால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இது மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிப்பதோடு, கார்களின் பயன்பாட்டை குறைப்பதால், போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. OOR மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சாலைகளில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுளோம்”என தெரிவித்துள்ளார்.

வடக்கே ஹெப்பலில் இருந்து தெற்கே சில்க் ரோடு வரை நீண்டுள்ள இந்த OOR சாலையில், பல்வேறு முக்கிய நிறுவனங்கள் உள்ளதால், இந்த சாலை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் ஒன்றாக உள்ளது.

மேலும், சாலை பள்ளங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை 90 நாட்களுக்குள் தீர்ப்பதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நான் உயிருடன் இருக்கிறேன் : தனது இறுதிச்சடங்கிற்கு வந்த இளைஞரால் உறைந்துபோன உறவினர்கள்!!

அர்ஜென்டினாவில் இளைஞர் ஒருவர் நான் உயிருடன் இருக்கிறேன் என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் மதுபோதையில் இருந்த தனது 22 வயது மகன் காணாமல் போனதாக பெண்ணொருவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

அதே சமயம் இளைஞர் ஒருவர் கரும்பு லொறி மோதியதில் உடல் சிதைந்து உயிரிழந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரது உடைகள் மற்றும் சில உடல் அம்சங்களைக் கொண்டு, அது தனது மகன்தான் என குறித்த பெண் அடையாளம் கூறியிருக்கிறார்.

அதன் பின்னர் அவரது வீட்டில் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இறந்துவிட்டதாக கூறிய இளைஞர் அங்கு வந்திருக்கிறார்.

இதனைக் கண்டவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஆல்டெரெட்ஸில் பல நாட்கள் மதுபோதையில் இருந்ததாகவும், தான் இறந்துவிட்டதாக கூறப்பட்டது தெரியாது என்று குறித்த இளைஞர் தெரிவித்திருக்கிறார்.

பின்னர் சவப்பெட்டியில் இருப்பது யார் என்று விசாரித்தபோது, டெல்ஃபின் கல்லோ நகரைச் சேர்ந்த 28 வயதான மாக்சிமிலியானோ என்ரிக் என்பது அடையாளம் காணப்பட்டது.

இறுதியில் அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில் எப்படி குழப்பம் ஏற்பட்டது? எங்கு தவறு நடந்தது? என்பதை தீர்மானிக்க, அர்ஜென்டினா அரசு வழக்கறிஞர் அலுவலகம் உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

 

பச்சிளம் குழந்தையின் உதடுகளில் பசை ஒட்டி காட்டுக்குள் வீசிய தாய் : ஆடு மேய்ப்பவர் கண்ட அதிர்ச்சி சம்பவம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை பிறந்ததால், குழந்தையை தாய் காட்டில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.

சமூக அவமானத்துக்கு பயந்து குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து பிரசவத்தை முடித்துள்ளனர்.

இதையடுத்து பிறந்து 19 நாளே ஆன குழந்தையை பில்வாரா பகுதியில் கைவிட்டதோடு குழந்தை அழுது கத்தி பிறரின் கவனத்தை பெறாமல் இருக்க குழந்தையின் வாயில் கை திணக்கப்பட்டு உதடுகள் பசையால் ஒட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவர் ஒருவர் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் தாயும், குழந்தையின் தாய்வழி தாத்தாவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணையில், பிறந்த குழந்தையை முதலில் விற்கவும் முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார கம்பி : வீடு திரும்பிய சகோதரிகள் துடிதுடித்து பலி!!

உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார வயரை, பள்ளி முடிந்து வீடு திரும்பிய சகோதரிகள் மிதித்த நிலையில்,

சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள ஜிராபஸ்தி கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி ஆஞ்சல் யாதவ்(15).

இவரது தங்கை ஆல்கா யாதவ்(12), 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை சகோதரிகள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையில் தேங்கி இருந்த மழைநீரில் மின்சார வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் அதில் இருவரும் கால் வைத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகினர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சார வாரிய ஊழியர்களின் அலட்சியமே சிறுமிகளின் உயிரிழப்புக்கு காரணம் என அவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரி செலுத்துவோருக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியை செப்டம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு வருவாய் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.

இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

IRD யின் படி, இறுதி கட்டணத்தை இணையவழி (online )வரி செலுத்தும் தளமான (OTPP) அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்தலாம்.

தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் என்பதை குறிப்பிட்டு, வரி செலுத்துவோர் நேரடியாக செலுத்தும் சீட்டுகளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் வருமான வரி தினைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

கனடா அனுப்புவதாக பாரிய மோசடி : பம்பலப்பிட்டியில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது!!

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களை பண ரீதியில் ஏமாற்றியதற்காக பம்பலப்பிட்டியில் சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளால் போலி விசா ஸ்டிக்கருடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், 69 வயதுடைய ஆண், ஒருவரும் 26 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்களும் அடங்குவர்.

கனடாவுக்கு மக்களை அனுப்புவதாகக் கூறி, பெண் சந்தேக நபர், இருவரிடம் 3,831,000 ரூபா மற்றும் 3,436,000 ரூபா என்ற வகையில் பணத்தை மோசடி செய்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபர்கள் இது போன்ற பிற மோசடிகளில் ஈடுபட்டார்களா என்பதைக் கண்டறிய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு!!

தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (26.09.2025) அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்கள் மத்தியில் கணனி அறிவு குறித்த அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் மக்கள் மத்தியில் கணனி அறிவு தொடர்பில் புதிய ஆய்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் 2024ஆம் ஆண்டில் 64.1% மக்கள் கணினி பயன்படுத்தத் தெரியாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட அண்மைய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாட்டில் 5 பேரில் 2 பேருக்கு மட்டுமே கணினி அறிவு உள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கணினி அறிவு விகிதம் இன்னும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2024 ஆண்டில் மக்கள் மத்தியில் கணனி அறிவு 3.1 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.

குடிசன மதிப்பீட்டு, புள்ளி விபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் : அரசு வெளியிட்டுள்ள தகவல்!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்காக 2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 2025.09.21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரிவுப்படுத்துவதற்கான காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கேள்விகளை கேட்பது பொறுத்தமானதாக அமையும் என அமைச்சர் பிமல் ரட்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வீட்டுகுள் புகுந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்!!

கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று மாலை இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட பகுதியை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டு நபர் எனவும் உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வந்தனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து சந்தேக நபர் ஆயுதத்தால் தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடல் முல்லேரியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கணவனுடன் வந்த இந்திய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின்1,616,500 ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளது.

இந்தியப் பெண் தனது கணவருடன் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்து உப்புவெளியிலுள்ள சுற்றுலா விடுதியில் 24 ஆம் திகதி தங்கியிருந்தார். மறுநாள், கடற்கரைக்கு சென்று சில மணி நேரம் கழித்து தனது அறைக்குத் திரும்பினார்.

அறையில் வைத்திருந்த கைப்பையில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைப்பையில் இருந்து இரண்டு மோதிரங்கள், பென்டனுடன் கூடிய இரண்டு சங்கிலிகள் மற்றும் இரண்டு வெள்ளி மோதிரங்கள், 180 அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உப்புவேலி பொலிஸார் மற்றும் நிலாவேலி சுற்றுலா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் தொடரும் சீரற்ற காலநிலை!!

யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததால் வீடானது பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (25.09.2025) இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தமானது ஜே/211 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சேதமடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!

பெங்களூருவில் நடுரோட்டில் மகள் கண் எதிரிலேயே மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தை சேர்ந்தவர் லோஹித்சவா.

இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், ரேகா கால் சென்ட்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ரேகாவின் சிபாரிசின் பேரில் அதே அலுவலகத்தில் லோஹித்சவாவிற்கு கார் டிரைவர் வேலை கிடைத்தது.

ஒரே அலுவலகத்தில் இருவரும் வேலை செய்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரேகா தனது மூத்த மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,

அங்கு சென்ற லோஹித்சவா, ரேகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாகுவாதம் முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேகா மீது சரமாரியாக மகள் கண் எதிரிலேயே 11 முறை ஆவேசமாக குத்தியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து தப்பியோடினார்.

ரத்தவெள்ளத்தில் படுகாயமடைந்து விழுந்த ரேகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ரேகா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான லோஹித்சவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த ரேகாவின் மகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெருங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் காதை கடித்துக் குதறிய மனைவி : இரத்தகளறியில் முடிந்த வாக்குவாதம்!!

உத்தரப் பிரதேசம் கான்பூரில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில் மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறியுள்ளார். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு வீட்டில், கணவன்-மனைவிக்கு இடையே நடந்த சண்டையில், மனைவி தனது கணவனின் காதைக் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் சோன்கர் தனது மனைவி சாரிகாவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது வலது காதை கடித்து குதறியதால், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

“அவள் என் காதை தன் பற்களால் கடித்து துண்டித்தாள். அவள் என்னுடன் வாழ விரும்பவில்லை. அவள் பணம் மற்றும் வீடு கிடைத்தவுடன் என்னைப் பிரிந்து செல்லும்படி வற்புறுத்துகிறாள்.

ஆனால் நாங்கள் காய்கறி வியாபாரம் செய்து வாழும் ஏழைகள். அவ்வளவு பணம் எங்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்?” என்று அமித் சோன்கர் வருத்தத்துடன் கூறினார்.

அவர் சோபாவில் படுத்திருந்தபோது, மனைவி சண்டையிட்டு தன்னைத் தாக்கியதாக சோன்கர் தெரிவித்தார். “திங்கள்கிழமை, வீட்டில் சுத்தம் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது.

அவள் ஆத்திரமடைந்து, நான் சோபாவில் தூங்கிக்கொண்டிருந்தபோது சண்டையிட ஆரம்பித்தாள். என்னைப் பாதுகாக்க நான் அவளைத் தள்ளினேன், அதன் பிறகு அவள் என்னை அடித்தாள்.

பின்னர் அவள் கட்டிலில் நின்று கொண்டிருந்தபோது, நான் கீழே நின்றேன், அப்போது என் காதை அவள் கடித்து விட்டாள்,” என்று அவர் கூறினார். மேலும், மனைவி தன்னை ஒரு கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த தம்பதியினர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து, விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

காதில் கட்டுடன் இருந்த கணவர், தனது மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதேபோல, மனைவி சாரிகாவும், கணவர் மீது வன்முறை புகார் அளித்துள்ளார்.

“கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த மோதல் ஒரு சண்டையாக மாறியது.

சாரிகாவின் புகாரின் பேரில், அமித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரு வழக்குகளும் விசாரணையில் உள்ளன,” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

4 தமிழ் இளைஞர்களின் உயிரை பறித்த கோர விபத்துக்கான காரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

அனுராதபுரம், மொரகொட பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான வானின் சாரதி தவறான திசையில் வேகமாக வாகனத்தை செலுத்தி வந்தமையே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நால்வரும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோகன் தேனுஜன், பால கிருஷ்ணன் நிஷாந்தன், பரமேஸ்வரம் சசிகுமார் மற்றும் விமலஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் வானின் சாரதியும் அடங்குவார். உயிரிழந்த மற்ற மூவரும் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

வானில் பயணித்த முல்லைத்தீவு மற்றும் அனுராதபுரம், கலத்தேவ பிரதேசங்களை சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த லொறி சாரதி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜா-எலவிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வானும், அனுராதபுரத்திலிருந்து குளியாப்பிட்டி நோக்கிச் சென்ற கொள்கலன் லொறியும் நேற்று அதிகாலை 4.40 மணியளவில் தலாவ பொலிஸ் பிரிவு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

விபத்து நடந்த நேரத்தில், வானில் சிக்கிய காயமடைந்தவர்களை வெளியே கொண்டு வர, அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் உட்பட, வீதியில் பயணித்தவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் வானில் ஆறு பேர் பயணம் செய்ததாகவும், ஓட்டுநரை தவிர மற்ற அனைவரும் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வான் தெற்கு நோக்கிச் சென்று எதிர் திசையில் இருந்து வந்த கொள்கலன் லொறியுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

வானின் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததாகவும், வான் தவறான திசையில் அதிக வேகத்தால் வந்தமையால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் வானின் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வானில் பயணித்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

விபத்துடன் லொறி ஓட்டுநர், கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் கைது செய்யப்படவுள்ளார்.

விபத்தில் உயிர் பிழைத்த இருவரில் ஒருவர், அவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்து, அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் அனுராதபுரம் கலத்தேவ பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம்-சாவகச்சேரி, நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று(25.09.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கனரக வாகனத்தை, அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர் திசையாக யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த இளைஞர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதனால் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மீசாலை வடக்கு, புத்தூர் சந்தி பகுதியைச் சேர்ந்த தி.யதுஸ் (வயது 20) என்ற இளைஞனே இந்த விபத்தில் உயிரிழந்தார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.