அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை : அலுமாரியில் ஒளிந்தபடி தப்பித்த சிறுவர்கள்!!

அட்லாண்டா நகரில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், மூன்று சிறுவர்கள் அலமாரியில் ஒளிந்தபடி மயிரிழையில் உயிர் தப்பிய விபரம் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், அட்லாண்டா நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜயகுமார் (51) என்பவரது இல்லம். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின் உச்சகட்டமாக,

விஜயகுமார் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் விஜயகுமாரின் மனைவி மீனா டோக்ரா (43), மற்றும் உறவினர்களான கவுரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் அந்த வீட்டுக்குள் 3 சிறுவர்கள் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுவர்கள்,

சமயோசிதமாக ஒரு அலமாரிக்குள் ஒளிந்து தங்களைக் காத்துக் கொண்டனர். அவர்களில் ஒரு சிறுவன் 911 என்ற அவசர எண்ணிற்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீசார் விரைந்து சென்று குழந்தைகளை மீட்டனர்.

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த கனடிய பெண் : அரசின் அதிரடி நடவடிக்கை!!

கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயம் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுக்க உள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் அவுஸ்திரேலியாவின் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.

உடற்கூறு ஆய்வில், அவரது உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன்பும், அவர் உயிரிழந்த பின்பும் காயங்கள் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

என்றாலும், காட்டு நாய்கள் அவரைத் தாக்கியதால் அவர் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், பைப்பர் கடற்கரையில் விழுந்து கிடந்தபோது அவரை காட்டுநாய்கள் சூழ்ந்து நின்ற விடயமும், அவை அவரை கடித்துக் காயப்படுத்திய விடயமும், அவுஸ்திரேலிய மக்களையும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

ஆகவே, அந்தக் காட்டு நாய்களைக் கொல்ல அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.

அந்தக் காட்டு நாய்கள் கருணைக்கொலை செய்யப்படும் என அவுஸ்திரேலிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், இதற்கு முன்பும் இந்த காட்டு நாய்களால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு ஒன்பது வயது பிள்ளை ஒன்றை இந்த காட்டு நாய்கள் குதறிக் கொன்றன.

அத்துடன், 1980ஆம் ஆண்டு, நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கர விடயம் நடைபெற்றது. Azaria Chamberlain என்னும் இரண்டு வயதுக் குழந்தையை இந்த காட்டு நாய்கள் தாக்கிக் கொன்றுவிட்டன.

அந்த சம்பவத்தை மையமாக வைத்து, ‘A Cry in the Dark’ என்னும் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட பெண்ணின் உடல் : அதிர்ச்சி சம்பவம்!!

திருமணம் செய்து கொடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடல், அவரது பெற்றோர் வீட்டின் முன் வீசப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் பீஹாரிலுள்ள வைஷாலி மாவட்டத்தில் வாழ்ந்துவந்த சரிதாவுக்கும் சத்யேந்திர குமார் என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில், யாரோ சிலர் ஒரு ஜீப்பில் வந்து சரிதாவின் உயிரற்ற உடலை அவரது பெற்றோர் வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

காலையில் தங்கள் மகள் தங்கள் வீட்டு வாசலில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்ட பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

பொலிசார் CCTV கமெராக்களை ஆராயும்போது, ஜீப் ஒன்றில் வந்த சிலர் சரிதாவின் உடலை அவரது வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த ஜீப் சப் இன்ஸ்பெக்டரான சந்தோஷ் ரஜக் என்பவருக்கு சொந்தமானது.

இந்த சம்பவம் பொலிசாருக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே சரிதாவின் கணவர் வீட்டார் மீது வரதட்சணைப் புகார் உள்ளதால், அவரது கணவர் உட்பட ஐந்து பேரை விசாரணைக்குட்படுத்திவருகின்றனர் பொலிசார்.

அமெரிக்காவில் பனிப்புயல் : 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!!

அமெரிக்கா முழுவதும் வீசிய பெரும் பனிப்புயல் காரணமாக லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், 10,000க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல வீதிகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை பனி, பனிக்கட்டி மற்றும் உறைபனி மழை ஆகியவை “உயிருக்கு ஆபத்தான” நிலைமைகளை உருவாக்கி வருவதாகவும், இது பல நாட்கள் நீடிக்கக்கூடும் எனவும் அந்நாட்டின் தேசிய வானிலை சேவை (NWS) அறிவித்துள்ளது.

மேலும், லூசியானாவில் குறைந்தது இரண்டு பேர் தாழ்வெப்பநிலை (Hypothermia) காரணமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் மரணங்கள் புயலுடன் தொடர்புடையவை என மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் டெக்சாஸில் மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது. நேற்று (25.01.2026) பிற்பகல் நிலவரப்படி, 1 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதற்கிடையில், 10,000 க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரவலான கடும் பனிப்பொழிவு மற்றும் உறைபனி மழை ஆகியவற்றால் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான சுமார் 180 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிக்கப்படலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பலியான பாடசாலை மாணவன் : பலரை கைது செய்ய அதிரடி உத்தரவு!!

ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி குறித்த உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து, இடம்பெற்ற மாணவனின் இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, உயிருக்கு ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹொரணை பிரதான நீதவான் சந்தன கலன்சூரிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஹொரணை – பல்லப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த கவிந்து தில்ஷான் (21) மற்றும் வல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த மனுஷ ஆதித்யா (22) ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது, பொதுச் சாலையில் ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிளை கவனக்குறைவாக ஓட்டியதன் காரணமாக போக்குவரத்து பொலிஸ் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இறுதிச் சடங்கு ஊர்வலத்தின் போது ஒரே சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மற்ற இளைஞர்களையும், உயிரிழந்த மாணவன் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 12 பேரையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சட்டவிரோதமாக இத்தகைய போட்டிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கும், நிகழ்வை புகைப்படம் மற்றும் காணொளியாக பதிவு செய்தவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

இ CID அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இறுதிச் சடங்கு ஊர்வலங்களில் ஒழுங்கீனமாக நடந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எந்த விதமான சலுகையும் வழங்க வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி பொலிஸில் சரண்!!

பாதுக்கை – தேவாலய வீதியில் உள்ள வீடொன்றில் மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த கணவனும் அவரது காதலியும் பாதுக்கை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான மனைவி, தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய பின்னர் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : 6 பேர் காயம்!!

ஹப்புத்தளை – கிரவனாகம வீதியில் ஹல்தும்முல்ல, சொரகுனே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று தனியார் பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்களில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக ஹல்தும்முல்ல வைத்தியசாலை மற்றம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு இளைஞர்கள் இருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கெப்ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள், கெப்ரக வாகனமொன்றுடன் மோதியதில், மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் இரண்டு பயணிகள் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு ஏறாவூர் 01 மற்றும் குடியரசு பகுதிகளைச் சேர்ந்த 17 மற்றும் 21 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

கெப்ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வியாபார ஒத்துழைப்பு மையம் திறந்து வைப்பு!!

நாட்டின் தொழில் நுட்ப சேவைகள் மற்றும் உதவி மையம், தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேரத்ன தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா, பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மையம் நேற்று(23.01.2026)திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவு, புதுமை, ஆராய்ச்சி, வணிகமயமாக்கல், வணிக மேம்பாடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் உதவிகள் ஆகியவை இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனங்களை பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பிக்கும் நோக்கத்துடன் வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த ஆய்வு நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முன்னணி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த அறிவியல், தொழில்நுட்ப கண்காட்சியும் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு இளைஞர்களின் கண்டுபிடிப்புக்கள், கழகங்கள் மற்றும் அறிவியல் சங்கங்கள் நிறுவப்படும் நிகழ்வும் இந்த கண்காட்சியில், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதன்மூலம் வடமாகாணத்தில் முதன் முதலாக தரச்சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் கெந்துன்நெத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேயசேன, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ்.திலகநாதன், பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் அ.அற்புதராஜா உட்பட அமைச்சின அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்!!

கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டுகெமுனு மாவத்தை பகுதியில் பெண்ணைக் கொலை செய்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கி யாசகம் பெற்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபருக்கு 30 வயது வரையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாகத் தெரியவந்துள்ளது, மேலும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறல்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மட்டக்களப்பை உலுக்கும் சம்பவங்கள் : 23 நாட்களில் 16 பேர் உயிர் மாய்ப்பு : அச்சத்தில் மக்கள்!!

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் , கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றயைதினம் தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் யுவதி பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்ததை மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட மீனவர்கள், அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொலிஸாருடன் இணைந்து, படகு மூலம் சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்ததுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர் எனவும், காதல் விவகாரம் காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை இந்த வருடத்தின் ஜனவரி 1ஆம் திகதி முதல் நேற்று (23) வரையிலான குறுகிய காலப்பகுதிக்குள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 3 இளம் யுவதிகளும், 75 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இத்தகைய தற்கொலைச் சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்!!

உலகளாவிய அரசியல் பதற்றங்கள், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களினால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நேற்று(24) காலை நிலவரப்படி தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில் நேற்று பிற்பகல் வேளையில் தங்கத்தின் விலை 5,000 ரூபாயால் குறைந்திருந்தது.

அதன்படி இன்றும்(24) தங்கத்தின் விலை நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.385,000 விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.356,000 விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

T20 உலகக்கிண்ணம் : பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி : ஐசிசி எடுத்த முக்கிய தீர்மானம்!!

.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா செல்லப்போவதில்லை என பங்களாதேஷ் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஸ்காட்லாந்து அணி தற்போது ‘சி’ (Group C) குழுவில் இத்தாலி, நேபாளம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உத்தரவின் பேரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவித்ததைத் தொடர்ந்து,

வீரர்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, தனது உலகக்கிண்ணப் போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 2026 ஜனவரி ஆரம்பத்தில் ஐசிசி-யைக் கோரியிருந்தது.

ஐசிசி இந்தக் கோரிக்கையை நிராகரித்ததையடுத்து, பங்களாதேஷ் இரண்டாவது கடிதத்தை அனுப்பியதுடன், தமது அணி இந்தியாவில் விளையாடாது என்பதை மீண்டும் வலியுறுத்தியது.

இந்த முடிவை உறுதிப்படுத்திய பங்களாதேஷ் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், அரசாங்கம் வீரர்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை அளிப்பதாக விளக்கமளித்தார். “இந்தியாவில் பாதுகாப்பு நிலவரம் மாறவில்லை. ஒரு உண்மையான சம்பவத்தின் அடிப்படையிலேயே எமது அச்சம் எழுந்தது.

இந்திய கிரிக்கெட் சபையால் அழுத்தங்களுக்கு மத்தியில் எமது ஒரு கிரிக்கெட் வீரருக்குப் போதுமான பாதுகாப்பை வழங்க முடியவில்லை, என்று அவர் கூறினார்.

இந்தக் கருத்தை ஆமோதித்த BCB தலைவர் அமினுல் இஸ்லாம், “இலங்கையில் விளையாடுவதற்கான எமது திட்டத்துடன் மீண்டும் ஐசிசி-யை அணுகுவோம்.

அவர்கள் எமக்கு 24 மணிநேர காலக்கெடு விதித்தனர், ஆனால் இந்தியாவுக்குச் செல்வதில்லை என்ற முடிவு அரசாங்க மட்டத்தில் எடுக்கப்பட்டது, என்று கூறினார். வீரர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட போதிலும், இறுதி முடிவு சபை மற்றும் அரசாங்கத்திடமே தங்கியிருந்தது.

பங்களாதேஷ் தனது ‘சி’ பிரிவின் முதல் மூன்று போட்டிகளை கொல்கத்தாவில் மேற்கிந்திய தீவுகள் (பெப்ரவரி 7), இத்தாலி (பெப்ரவரி 9) மற்றும் இங்கிலாந்து (பெப்ரவரி 14) ஆகிய அணிகளுக்கு எதிராகவும், இறுதிப் போட்டியை மும்பையில் நேபாளத்திற்கு எதிராகவும் (பெப்ரவரி 17) விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படாததால், தொடரில் பங்களாதேஷிற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என்பதை ஐசிசி தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. 2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் திட்டமிட்டபடி பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும்.

வவுனியாவில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி தப்பிச் சென்ற லொறியின் சாரதி கைது!!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா பகுதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி தப்பிச் சென்ற லொறியின் சாரதி இன்று சனிக்கிழமை (24) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை லொறி ஒன்று மோதிவிட்டு தப்பிச் செல்லும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி வந்தது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த லொறி ஒன்று பொலிஸ் மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் வீதியோரம் தூக்கி வீசிவிட்டு காயமடைந்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள் லொறியின் அடியில் சிக்கிக் கொண்டதால், லொறியை வீதியிலேயே கைவிட்டுவிட்டு சாரதி அருகில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த காட்சி வீதியில் இருந்த மற்றுமொரு வாகனத்தில் சாரதியால் காணொளியாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான லொறியின் சாரதி வவுனியா பூ ஓயா பாலத்திற்கு அருகில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட லொறியின் சாரதியை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (24.01.2026) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த டிப்பர் வாகனம் எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த கூலர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.