புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!!

கொஸ்வத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரச பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டியின் போது, பங்கேற்ற இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

திடீர் மரணத்திற்கான காரணம் என மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகஹவெல பகுதியை சேர்ந்த 25 வயதான சந்துன் தாரக என்ற திருமணமான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உள்ளூர் இளைஞர்களால் நான்காவது முறையான ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு, கடந்த 17 ஆம் திகதி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது தனது மனைவியுடன் இணைந்து பல விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட சந்துன், கயிறு இழுக்கும் போட்டியின் முதல் சுற்றிலும் தனது குழுவினருடன் இணைந்து வெற்றி பெற்றிருந்தார். இறுதிப் போட்டியின் போதே அவர் எதிர்பாராத விதமாக இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள், மாரவில ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நிரோஷன் குணசேகர மற்றும் கொஸ்வத்த பொலிஸ் அதிகாரிகளின் முன்னிலையில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, மாரவில ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், குறித்த இளைஞரின் மரணம் திடீர் மாரடைப்பு காரணமாகவே ஏற்பட்டுள்ளதென உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொஸ்வத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.திருநெல்வேலியிலும் சீமானுக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை!!

யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாரியளவிலான பதாகை நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் ஆலய முன் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெல்வேலி சந்தியில் இன்றைய தினம் (21.04.2026) மற்றுமொரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் : வெளியாகியுள்ள எச்சரிக்கை!!

அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் நாட்டின் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் ஆகியன பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள அக்கட்சியின் பிரதான காரியாலயத்தில் நேற்று(20.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிகரித்துள்ள பொருட்கள் சேவைகளின் விலை உயர்வு
அவர் மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்ற மோசடி மற்றும் தாமதங்கள் காரணமாக, இந்த ஆண்டு மின் உற்பத்தி 50 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

ஒரு அலகு நீர் மின்சாரத்துக்கு 3 ரூபாவும், நிலக்கரிக்கு 23 ரூபாவும் செலவாகும் நிலையில், தட்டுப்பாட்டை நிவர்த்திக்க 80 ரூபா செலவில் டீசல் மின்சாரத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

390 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை வழங்காமல், அந்த நிதியை டீசல் கொள்வனவுக்குப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளமையானது அரசாங்கத்தின் திவால் நிலையை உறுதிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்களுடைய வங்கிக் கணக்குகள் அதிகரித்துள்ள போதிலும், நாட்டின் அபிவிருத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளது என்று சாடிய அவர், வரவு – செலவுத் திட்ட நிதியில் வெறும் 30 சதவீதத்தை மாத்திரமே அரசாங்கம் செலவிட்டுள்ளமை அதன் இயலாமையைக் காட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்தியாவுடன் இரகசியமான முறையில் 7 உடன்படிக்கைகளை மேற்கொண்டு தரவுகளைப் பகிர முற்படுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அவர் எச்சரித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளில் இருந்து விடுபட அரசாங்கம் வழிதேட வேண்டும் என்று வலியுறுத்திய சுஜீவ சேனசிங்க, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய அனுபவம் வாய்ந்த குழு சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் மாத்திரமே உள்ளது என்றும் தெரிவித்தார்.

அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்கள் நலனுக்காக ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி – இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (21.04.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை நேற்று 4,763 ஆக பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இன்று ஒரு அவுண்ஸ் தங்கம் 4,806 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு செட்டியார் தெருவின் தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை நான்கு இலட்சம் ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 368000 ரூபாவாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீட்டு முறைமை தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு!!

இலங்கையில் தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே எரிபொருள் விநியோகம் தொடரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

இது அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடி இன்னும் முடிவுக்கு வரவில்லை.

எனவே, தற்போதைய கியூ.ஆர் குறியீடு முறையின் கீழேயே சில்லறை எரிபொருள் விநியோகம் தொடரும். எவ்வாறாயினும், தேவைக்கேற்ப இந்த முறையில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை வாகனங்களின் வகைகளுக்கு ஏற்ப வழங்கப்படும் எரிபொருள் அளவை அவ்வப்போது திருத்தம் செய்தல், சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு எரிபொருள் மானியங்களை வழங்குவது குறித்து பரிசீலித்தல் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை அடுத்து, எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக அரசாங்கம் மீண்டும் கியூ.ஆர் குறியீடு முறையை நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி எல்லே அணி சாதனை : மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவு!!

வவுனியா வலயமட்ட பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டிகளில், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்றாம் இடத்தினைப் பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளது.

வவுனியா வலயக் கல்வி அலுவலகத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில், வலயத்தின் பல்வேறு பாடசாலை அணிகள் கலந்துகொண்டன. தொடர் ஆட்டங்களில் திறமையாக விளையாடிய இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி வீராங்கனைகள், களத்தடுப்பிலும் துடுப்பாட்டத்திலும் தமது ஆளுமையை நிரூபித்தனர்.

வெற்றி தீர்மானிக்கப்படும் முக்கிய ஆட்டத்தில் சிறப்பான ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட அவ்வணி, வலய மட்டத்தில் மூன்றாம் இடத்தினை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் வட மாகாண மட்டப் போட்டிகளில் வவுனியா வலயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பினை அவர்கள் பெற்றுள்ளனர்.

இந்தச் சாதனையினைப் படைத்த வீராங்கனைகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த அதிபர் ஆகியோருக்கும் பழைய மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மாகாண மட்டப் போட்டிகளிலும் இந்த அணி வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வவுனியாவில் இளைஞன் மீது கும்பல் தாக்குதல் : கண்பார்வை பாதிப்படைந்துள்ளதாகக் குடும்பத்தினர் கவலை!!

வவுனியா, பெரியார்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது இனந்தெரியாத கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதலில் அந்த இளைஞர் படுகாயமடைந்ததோடு அவரது கண்பார்வையும் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெரியார்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது, சுமார் எட்டுப் பேரைக் கொண்ட குழுவொன்றினால் வழிமறிக்கப்பட்டுள்ளார். குறித்த கும்பல் அந்த இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகிப் படுகாயமடைந்த இளைஞன், உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இருப்பினும், இந்தத் தாக்குதலின் காரணமாக அந்த இளைஞரின் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் தரப்பால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து, தாக்குதலை நடத்திய எட்டுப் பேர் கொண்ட கும்பலைக் கைது செய்வதற்கு வவுனியா பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் காற்றுடன் பலத்த மழை : வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்!!

வவுனியா மாவட்டத்தில் நேற்று (21.04.2026 திங்கட்கிழமை) மதிய வேளையில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை சில மணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

நேற்று மதியம் திடீரென வீசிய கடும் காற்றினால் வவுனியா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் பகுதியளவில் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள் பலவற்றின் தகரக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

திடீர் அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதால், நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

11 வயது இரட்டை மகள்களைக் கழுத்தறுத்துக் கொன்ற தந்தை!!

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், பெற்ற மகள்களையே தந்தை கோரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசி ரஞ்சன் மிஸ்ரா (48) என்பவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ரித்தி, சித்தி என்ற 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளும் இருந்தனர்.

ரேஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்த சசி ரஞ்சன், வீட்டைச் சிறைக்கூடமாக மாற்றியுள்ளார். மனைவியைக் கண்காணிக்க வீட்டிற்குள்ளேயே பல இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி ராணுவக் கட்டுப்பாடு விதித்துள்ளார்.

கடும் மன அழுத்தத்தில் இருந்த சசி ரஞ்சன், தனது மகள்களின் அறைக்குக் கூட மனைவியைச் செல்ல விடாமல் தடுத்துத் தனிமைப்படுத்தியுள்ளார்.

நேற்று முன் தினம் இரவு தனது மகள்களுடன் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்த சசி ரஞ்சன், அதிகாலை 2.30 மணியளவில் திடீரென ஆக்ரோஷமடைந்துள்ளார்.

வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பிஞ்சு குழந்தைகள் ரித்தி மற்றும் சித்தி ஆகியோரின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலையைச் செய்துவிட்டுச் சிறிதும் பதற்றமின்றி, சசி ரஞ்சனே காவல்துறையைத் தொடர்பு கொண்டு, “என் மகள்களைக் கொன்றுவிட்டேன், வந்து என்னைக் கைது செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தைகளின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சசி ரஞ்சனை கைது செய்துள்ள போலீசார், அவர் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்தாரா அல்லது மனநிலை பாதிப்பால் செய்தாரா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம் : தவறான SMSஆல் விபரீத முடிவெடுத்த காதல் ஜோடி!!

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஒரு தவறான எஸ்.எம்.எஸ். தகவலால் இரண்டு இளம் உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.

சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு சிறிய வதந்தி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி.

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், திருமண பந்தத்தில் இணையவிருந்த சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவரின் மரணம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சூரஜ் மற்றும் கோமலுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்த சூழலில், யாரோ ஒரு மர்ம நபர் அனுப்பிய தவறான மெசேஜ் சூரஜின் மனதை நிலைகுலையச் செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் சூரஜ் தற்கொலை செய்துக் கொண்டார்.

சூரஜின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு அவரது வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற கோமலை, அங்கிருந்தவர்கள் தரக்குறைவாகப் பேசியும், பழிச்சொற்களால் காயப்படுத்தியும் உள்ளனர்.

ஏற்கனவே திருமணம் நடக்க இருந்த நிலையில், தனது காதலனை இழந்த துயரத்தில் இருந்த கோமல், மற்றவர்களின் பேச்சுக்களைத் தாங்க முடியாமல் விஷம் குடித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடி வந்தாலும், முதலில் பெற்றோரிடம் பகிருங்கள். ஒரு நிமிட அவசர முடிவால் இரண்டு குடும்பங்கள் தங்களது பிரிய மகனையும், மகளையும் இழந்து தவிக்கிறது.

ஒருவரின் மனநிலை தெரியாமல் மற்றவர்கள் வீசும் பழிச்சொற்கள், ஒரு கொலையை விட மோசமானது என்பதற்கு கோமலின் மரணமே சாட்சி.

உதவிக்கு: மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் இலவச உதவி எண் 104 அல்லது சினேகா ஹெல்ப்லைன் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

பாம்பு கடித்து சிறுவன் பலி : உறங்கிக் கொண்டிருந்த போது சோகம்!!

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கோடாலி பகுதியில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் கட்டுவிரியன் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

சில்ஜோ – ஜோண்ஷி தம்பதியின் மகன்களான அனோத் (10) மற்றும் ஆல்ஜோ (8) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு தங்கள் அறையில் தூங்கச் சென்றுள்ளனர்.

நள்ளிரவில் தங்களை ஏதோ கடித்துவிட்டதாகவும், உடல் வலி மற்றும் வாந்தி வருவதாகவும் சிறுவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

ஆனால், ஏதோ பூச்சி கடித்திருக்கும் அல்லது அஜீரணக் கோளாறாக இருக்கும் என்று நினைத்த பெற்றோர்கள், காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அவர்களை மீண்டும் தூங்க வைத்துள்ளனர்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஆல்ஜோ எழாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், அவனை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனால் பதறிப்போன பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிறுவர்கள் படுத்திருந்த அறையைச் சோதனை செய்தபோது, ஆல்ஜோவின் தலையணைக்கு அடியிலேயே 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு சுருண்டு படுத்திருப்பதைக் கண்டு உறைந்து போயினர்.

அதே பாம்பின் கடியால் பாதிக்கப்பட்ட மூத்த மகன் அனோத் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

வெப்பத்தின் கொடுமை தாளாமல் குளிர்ச்சியைத் தேடி வீட்டிற்குள் புகுந்த பாம்பு, மெத்தையில் இருந்த தலையணைக்கு அடியில் மறைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவர்கள் வலியால் துடித்தபோதே கவனித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் ஆல்ஜோவை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தற்போது இச்சம்பவம் குறித்து திருச்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரின் சிறிய அலட்சியம் ஒரு பிஞ்சு உயிரைப் பறித்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கனடாவில் நீதி பொய்த்ததா? இலங்கைத் தமிழர்கள் மூவர் உயிரிழப்புக்கு காரணமானவர் விடுவிப்பு!!

கனடாவில் இலங்கை தமிழர்கள் 3 பேரைக் கொன்ற ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவத்தால் கனடா வாழ் தமிழ் சமூகம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

மார்க்கம் நகரில் விபத்தில் 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன், 21 வயதான படீரன் புவனேந்திரன், 23 வயதான நெலுக்சனா புவனேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர் .

அக்டோபர் 12, 2022 அன்று, மார்க்கம் நகரில் ஒரு தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கொன்ற விபத்தில், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் இந்த முடிவு கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்டாரியோவின் மார்க்கம் நகரில் நடந்த விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கொன்ற ஓட்டுநர் மீதான குற்றச்சாட்டுகளை, அந்தச் சம்பவத்தை ஒரு “கொடிய தவறு” என்று குறிப்பிட்டு,

ஒன்டாரியோ நீதிபதி ஒருவர் தள்ளுபடி செய்ததை அடுத்து, நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்திற்கு வெளியே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தினர்.

வான் நகரைச் சேர்ந்த அந்தோனி பாக்லியேரி மீது, மரணத்தை விளைவிக்கும் அபாயகரமான வாகனம் ஓட்டியதாக மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்பதில் தனக்குத் திருப்தி இல்லை என்று ஒன்டாரியோ உயர் நீதிமன்ற நீதிபதி மார்க் எட்வர்ட்ஸ் தனது தீர்ப்பில் கூறினார்.

அக்டோபர் 12, 2022 அன்று, பாக்லியேரி ஒரு டிரெய்லரை இணைத்துக்கொண்டு தெற்கு நோக்கி ஒரு டம்ப் டிரக்கை ஓட்டிச் சென்றபோது, ​​

ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்டுக்கு வடக்கே உள்ள மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு சந்திப்பில், சிகப்பு விளக்கை மீறிச் சென்று கிழக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு அக்யூரா காரின் மீது மோதினார்.

இந்த விபத்தில் , 21 வயதான படீரன் புவனேந்திரன் மற்றும் 23 வயதான நெலுக்சனா புவனேந்திரன் என்ற உடன்பிறப்புகள் இருவரும் உயிரிழந்தனர். அவர்களது தாயார், 52 வயதான ஸ்ரீரதி சண்முகநாதன், படுகாயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடுவர் குழுவுடன் தொடங்கியது, ஆனால் இறுதியில் நீதிபதி மட்டுமே விசாரிக்கும் விசாரணையாக முடிந்தமை கனடாவாழ் இலங்கையர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

48 மணி நேரத்தில் உச்சம் காணும் வெப்பநிலை : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

தற்போது நிலவும் கடும் வெப்பிலை குறித்து பல மாகாணங்களில் வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய, இன்று(20.04.2026) பிற்பகல் 03.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (21) வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தின் சில பகுதிகளில், மனித உடலில் உணரப்படும் வெப்பம் கவனம் தேவைப்படும் அளவில் நீடிக்கக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த காலப்பகுதியில், பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு, மனித ஆரோக்கியத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியாவில் தீயில் முற்றாக எரிந்து கருகிய வீடு!!

வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்னர். சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தமையினால் மேலதிக அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : தாய், மகள் உட்பட மூவர் பலி : விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!!

கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகமவில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வீட்டின் மேல் மாடிக்கு, வீட்டின் உரிமையாளர் கடந்த 18ஆம் திகதி இரவு தீ வைத்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும், தீ வைத்த வீட்டின் உரிமையாளரும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த 55 வயதான ரத்னகாந்தி விக்ரமாராச்சி மற்றும் அவரது 16 வயது மகள் தஸரணி ரத்நாயக்க ஆகியோரும், வீட்டின் உரிமையாளரான 76 வயதான ஒலிவர் பற்றிக் விஜேசிங்க என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் தந்தை பலத்த தீக்காயங்களுடன் களுபோவில போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்தன்று இரவு குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அயலவர்கள் உடனடியாக செயற்பட்டு தீயை அணைத்து, காயமடைந்திருந்த இரு ஆண்களையும் வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அறையொன்றிலிருந்து தாய் மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்தில் பெட்ரோல் வாடை வீசியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், வீட்டின் உரிமையாளர் மேல் மாடிக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும், இதன்போது அவரும் தீ விபத்தில் சிக்கியுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையில் அடிக்கடி தகராறுகள் இடம்பெற்று வந்துள்ளன.

வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்தவர்கள் ஒரு குடும்பத்தினர் என்றும், கீழ் மாடியில் மற்றுமொரு குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாடியின் வாடகையை வீட்டின் உரிமையாளரின் மகன் பெற்று வந்ததாகவும், கீழ் மாடியின் வாடகையை உரிமையாளர் பெற்று வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை நுகேகொட நீதவான்மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தில் பெண்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்!!

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில், மூன்று பெண்களிடம் கொள்ளையடித்த பிரதான சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி இரவு இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால், ஏப்ரல் 17 ஆம் திகதி பண்டுலகம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அனுராதபுரம் பேருந்து நிலையத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட பெண்களுடன் நட்பாக பழகி, அதே பேருந்தில் ஏறியுள்ளார். பயணத்தின் போது, அவர்களுக்கு உணவையும் பானத்தையும் கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தியுள்ளார்.

அவர்கள் அரை மயக்க நிலையில் இருந்தபோது, அவர்களிடம் இருந்த நகைகளைக் கொள்ளையடித்துள்ளார்.

பொலிஸாரின் தீவிர விசாரணையின் பயனாக, கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களை மீட்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சலியாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.