கொள்ளுப்பிட்டியில் பேரூந்து – கார் மோதி விபத்து!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேரூந்து : பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!!

மொனராகலை – கொழும்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் இணைந்து பஸ்ஸில் இருந்த பயணிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தம் இன்று வியாழக்கிழமை (27.11.2025) காலை இடம்பெற்றுள்ளது. சுமார் 23 பயணிகள் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த அனர்த்தத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

கொழும்பில் பெண்ணின் கொடூர செயல் : நாயை கொலை செய்தமையால் நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிபிட்டியவில் தெருநாய் ஒன்றை காரால் மோதி கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரான பெண் வேண்டுமென்று தனது காரில் தெருநாயை மோதிக் கொலை செய்தமையை சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் வசிப்பவர்களின் செல்லப்பிராணியாக இருந்த பிளாக்கி என அன்புடன் அழைக்கப்பட்ட நாயின் மரணம் குறித்து, உள்ளூர்வாசிகள் கொட்டாவ பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். அந்தப் முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இதுவொரு சாதாரண விபத்தாக இல்லாமல், திட்டமிட்ட வகையில் ஒரு உயிரைப் பறித்ததாக கருதியதால் சந்தேக நபரான பெண்ணை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து, முறைப்பாடு செய்த மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மோசமான வானிலை : இடிந்து விழுந்துள்ள 100 வருட பழைமையான பாலம்!!

தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு இடையிலான எல்லையாக கருதப்படும் பெந்தர பாலம் மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்துள்ளது.

நேற்று (26) இரவு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1902 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக நம்பப்படும் இந்த பாலம் பல நாட்டுப்புற கதைகளுக்கு ஆதாமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து பதிவாகும் மண்சரிவு அனர்த்தம் : கண்டியில் 4 பேர் மாயம்!!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

உடுதும்பர மற்றும் பஹத்த ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளிலிருந்தே இச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

முழு இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கை ஆபத்துகள் குறித்த வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று 08.30 மணியளவில் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை அறிக்கை நாளை இரவு 8.30 மணி வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களும் தற்போது கடுமையான மழை காரணமாக அதிக ஆபத்தில் உள்ளன.

திடீர் வெள்ளம், மண் சரிவுகள், ஆறுகள் நிரம்பி வழிகின்றன, பலத்த காற்று மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கில் வெள்ள நீரில் மூழ்கிய கார் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்று தடம்புரண்டு வெள்ள நீர் நிரம்பிய கால்வாய் ஒன்றில் மூழ்கியதால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன் போதுஅனர்த்த முகாமைத்துவத்தில் ஈடுபடும் குழுவினர் சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த செயலணி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட மீட்புப்பணியின் போது கால்வாயில் வீழ்ந்த கார் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் காரில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் மீட்கப்பட்டு கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், குறித்த மூவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான அறிவிப்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமை தொடர்பிலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகிறது.

மேலும், “நிலவும் வானிலை காரணமாக விமான அட்டவணைகள் அல்லது தரைவழி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று அதிகாரியொருவர் கூறியதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடையும் சாத்தியம் : முழு நாட்டிற்கும் சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் ஆழமான தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை

இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, நாட்டில் நிலவும் கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்படும் எதிர்கால எச்சரிக்கைகளுக்கு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் 200 மி.மீற்றருக்கும் அதிகமான மிக கனமழை பெய்யக்கூடும்,

வடக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 150 மி.மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டின் பிற பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது (60-70) கி.மீற்றர் வேகத்தில் மிக பலத்த காற்று வீசக்கூடும். கனமழை மற்றும் பலத்த காற்றினால் ஏற்படும் விபத்து அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இலங்கையில் மேலும் மோசமடையும் காலநிலை : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : பலரை தேடும் பணி தீவிரம்!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 10 நாட்களில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 17 முதல் இன்று (27) வரை, 17 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன,

மேலும் 79 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் இன்னும் காணவில்லை என்றும் மையம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 இறப்பு

இதே நேரத்தில், பேரிடர் காரணமாக 10 பேர் காயமடைந்துள்ளனர்.மேலும் 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் காரணமாக 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணத்தில் 18 இறப்புகளும், சபரகமுவ மாகாணத்தில் 7 இறப்புகளும், மத்திய மாகாணத்தில் 4 இறப்புகளும், தெற்கு மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணத்தில் தலா ஒரு மரணமும் பதிவாகியுள்ளன.

பூட்டிய வீட்டிற்குள் வெட்டுகாயங்களுடன் பெண்ணின் சடலம் : மர்ம மரணத்தால் பரபரப்பு!!

பதுளை – கந்தேகெதர – கெடவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீடொன்று சந்தேகத்திற்கிடமான முறையில் மூடப்பட்டுள்ளதாக, நேற்று (26) காலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வீட்டை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். உயிரிழந்தவர் ஹாலிஎல – கெடவல பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாகவும், அவரது கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.

சந்தேக நபர்களைக் கைது செய்ய கந்தேகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை : மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்களில் ஏற்படும் மின்சாரத்தடை தொடர்பில் தகவல் வழங்க 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் செயலியை பயன்படுத்தி முறைப்பாடளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. இவ்வாறான பகுதிகளின் சில இடங்களில் மின்தடை பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.

அறிவிப்பு

இந்த நிலையில் நாடு முழுவதும் மின் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான சூழலிலேயே இலங்கை மின்சார சபையின் தொலைபேசி பயன்படுத்தி சிக்கல்களைப் புகாரளிக்குமாறு பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் பொது கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

ரயிலுடன் மோதி லொறி விபத்து : பெண் உயிரிழப்பு : மற்றுமொருவர் காயம்!!

புத்தளம், சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கவனக்குறைவாக செலுத்தப்பட்ட லொறி ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் லொறியில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் லொறியின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

நாட்டின் பல பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை : 150 மி.மீ வரை கடும் மழை!!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது இன்று (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவான வளிமண்டலத் தளம்பல் நிலையானது, நேற்று (25) காலையளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்.

குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் சில இடங்களில் 150 மி.மீ அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கைக்கு தெற்காக உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கைக்கு தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மற்றும் காற்று அடுத்த சில நாட்களில் மேலும் தீவிரமடையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ வரையான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

மீனவர்கள் மற்றும் கடலில் பயணம் செய்வோர் நாளை (நவம்பர் 26) முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 25 முதல் 29 வரை நிலவவுள்ள இந்த மோசமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆடம்பர வீட்டினால் சிக்கிய பெண் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

மொரட்டுவ பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் சட்டவிரோத பணத்தில் வீடு மற்றும் சொத்துக்களை கொள்வனவு செய்தமை குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவ்வாறு சம்பாதித்த பணத்தில் அந்த நபர் தனது மனைவியின் பெயரில் பாணந்துறை பகுதியில் 10 பேர்ச்சஸ் நிலத்தை வாங்கி அதில் இரண்டு மாடி வீடு கட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோதமாகப் பெற்ற வீடு மற்றும் சொத்துக்களை வாங்கிப் பயன்படுத்தியதற்காக குறித்த நபரின் மனைவி கடந்த 21 ஆம் திகதி மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மறுநாள் மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் முதல் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.