அஹங்கம கடலில் நீராடச்சென்ற 18 வயதுடைய இந்திய இளைஞன் ஒருவன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வந்திருந்த நிலையில், அஹங்கம கடலில் நீராட சென்றுள்ளனர்.
இதன்போது, இளைஞனும் மற்றுமொரு யுவதியும் கடலில் இழுத்து செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளனர். இதன்போது பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அவர்கள் இருவரையும் மீட்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் அஹங்கம கொன்னகாஹேன பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் படப்பிடிப்பிற்காக தயாராகிக்கொண்டிருந்த ஒருவர், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மாத்தளை, கலுதேவள, ரத்தோட்ட வீதியில் வசித்து வந்த திருமணமாகாதவரான (52) வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று (21ஆம் திகதி) பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில், இந்திய நாடாளுமன்றத்தை சித்தரிக்கும் படப்பிடிப்பை நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா மற்றும் பல இந்திய முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் வருகை தந்துள்ளனர்.
இதன்போது இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வேடமிடத் தயாராகிக் கொண்டிருந்த நபர் கழிவறைக்குச் செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்ததாகவும், அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த அவரை உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பெற்றோரை இழந்த மாணவன் ஒருவன், கடந்த 7 ஆண்டுகளாகத் தனது விருப்பத்திற்குரிய ஆங்கில மொழிமூலக் கல்வியைப் பெற முடியாமல் தவித்து வரும் அவலநிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தாக்குதல் தந்த ஆறாத வடுக்கள்: 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத் தாக்குதலில் குறித்த சிறுவன் தனது தாய் மற்றும் தந்தை இருவரையும் ஒரே நாளில் இழந்தான்.
இத்தாக்குதலில் சிறுவனின் தங்கை தனது இரு கண்களின் பார்வையையும் முழுமையாக இழந்துள்ளார். பெற்றோரை இழந்த இவ்விரு பிள்ளைகளையும் அவர்களது சிறியதாயார் (தாயின் சகோதரி) மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வளர்த்து வருகின்றார்.
இச்சிறுவன் தரம் 6 வரை சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்று வந்தான். தரம் 7 முதல் அந்தப் பாடசாலையில் மேல் வகுப்பு வசதிகள் இல்லாததால், மட்டக்களப்பு நகரில் ஆங்கில மொழிமூலக் கல்வி வசதியுள்ள அரச பாடசாலைகளில் இணையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் கடந்த 7 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிகள் அனைத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தாலோ அல்லது நடைமுறைச் சிக்கல்களாலோ தோல்வியிலேயே முடிந்துள்ளன.
தற்போது தரம் 10-இல் கல்வி கற்கும் அச்சிறுவன், வேறு வழியின்றி தனக்குப் பழக்கமில்லாத தமிழ் மொழிமூலப் பாடசாலையில் இணைந்து கல்வி கற்று வருகின்றான்.
இதனால் பாடங்களைப் புரிந்துகொள்வதில் பெரும் சிரமத்தையும், மேலதிக வகுப்புக்களுக்காக அதிக செலவுகளையும் எதிர்கொண்டு வருகின்றான்.
இந்நிலையில் “ஏழு ஆண்டுகள் கடந்தும் நீதிக்காகப் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்ற தலைப்பில் மட்டக்களப்பு கல்லடியில் கடந்த நேற்றையதினம் (21.04.2026) நிகழ்வில் சிறுவனின் சிறியதாயார் கலந்துகொண்டு இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தார்:
கடந்த சில நாட்களாக இலங்கையில் தொடர்ந்து உச்சத்திலிருந்து வந்த தங்கத்தின் விலை இன்று (22) வீழ்ச்சியடைந்துள்ளது.
நேற்றுடன் (21) ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைய இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நகையக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக விலை அதிகரித்து வந்த நிலையில், இந்தச் சிறு சரிவு நுகர்வோர் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு கடை ஒன்றில் பணிபுரியும் பெண், தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, வித்தியாசமாக ப்ரோபோஸ் செய்கிறேன் என்று கூறி,
அவரது கண்களை கட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டு, பின்னர் தீ வைத்து எரித்து கொன்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னை ‘புறக்கணித்ததால்’ அந்த நபர் மீது கோபமடைந்த பெண், குறித்த இளைஞன் இறப்பதை கேமராவில் பதிவுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதான காதலர்கள் இருவரும் கடையில் சக ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இருப்பினும், சமீபகாலமாக காதலன் தனக்கு போதுமான கவனம் செலுத்தவில்லை என்றும், தன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார் எனவும் தவறாக புரிந்துக்கொண்ட அவரை கொலை செய்ய நினைத்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்தபோது காதலனை அழைத்து இருவரும் சிறிது நேரத்தின் பின்னர் அந்தப் பெண், கண்களையும் கை கால்களையும் கட்டி, ”வெளிநாடுகளில் பிரபலமாகி வரும்” ஒரு முறையில் அவருக்கு தன் காதலை தெரிவிக்க விரும்புவதாக காதலி கூறியுள்ளார்.
கைகள் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் கிரண் அந்த திருமண ப்ரோபோசலுக்காகக் காத்திருந்தபோது, காதலி தான் முன்னரே ஏற்பாடு செய்திருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய திரவத்தை ஊற்றி, பின்னர் தீ வைத்துள்ளாதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளத்தில் கலாசாரப் நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொண்ட இளைஞன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
புத்தாண்டு விளையாட்டுகளில் மகிழ்ச்சியாக ஈடுபட்டிருந்த இருபது வயது இளைஞர் ஒருவர், கயிறு இழுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கொஸ்வத்த, மிகஹாவெலவைச் சேர்ந்த சந்தூன் தாரக (25) என்ற திருமணமான ஆண் ஆவார். மிகஹாவெல இளைஞர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 4வது வருடாந்திர புத்தாண்டு விழா, 17ஆம் திகதி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உயிரிழந்த சந்தூன் தாரக தனது மனைவியுடன் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார்.
சந்தூன் பங்கேற்ற அணி, கயிறு இழுத்தல் போட்டியின் முதல் சுற்றிலும் வெற்றி பெற்றிருந்தது. இறுதிச் சுற்றில் அவருக்கு இந்த விபத்து ஏற்பட்டது. மராவில ஆதார மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி எம்.பி.எஸ். பீரிஸ், இந்த மரணம் திடீர் மாரடைப்பால் நிகழ்ந்ததாக உறுதி செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கொஸ்வத்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சியம்பலாண்டுவ – எத்திமலை பிரதான வீதியின் முதலாம் மைல் கல் பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று சொகுசு ஜீப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சியம்பலாண்டுவ, ஐந்தாம் மைல் கல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள் (Plastic Pellets), தற்போது இலங்கையின் வடமேற்கு கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கி வருகின்றன.
புத்தளம், வனாத்தவில்லு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொங்கனத்த மற்றும் பளுக்காத்துறை கடற்கரைகளில் பெருமளவிலான நெகிழி மணிகள் கரை ஒதுங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இப்பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளை முறையாகத் திட்டமிடுவதற்காகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) விசேட கள ஆய்வுப் பயணம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆய்வின்போது, தூய்மைப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதில் வனாத்தவில்லு பிரதேச செயலாளர் ஆர். பிரபாகரன், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சமந்த குணசேகர, பொது மேலாளர் ஜகத் குணசேகர, பூக்குளம் கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
விபத்துக்குள்ளான கப்பலிலிருந்து வெளியேறிய இந்தச் சிறிய நெகிழி மணிகள், கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
இவை மீன்கள் மற்றும் ஆமைகளால் உணவெனத் தவறாகக் கருதப்பட்டு உட்கொள்ளப்படுவதால், கடல்சார் உணவுச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கள ஆய்வின் முடிவில், பிரதேச செயலகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் தன்னார்வலர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரை ஒருங்கிணைத்து, கடற்கரைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை உடனடியாகத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மணலில் கலந்துள்ள இந்த நுண் நெகிழிகளை அகற்றுவது சவாலான காரியம் என்பதால், இதற்கென விசேட தொழில்நுட்ப முறைகளைக் கையாளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதோடு கடல் வளத்தையும், கடற்கரை அழகையும் பாதுகாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்தத் தூய்மைப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைபையும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில்இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில், உந்துருளியில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில் பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 23 மற்றும் 64 வயதுடைய ஏழாலைப் பகுதியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
உடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார், தாராபுரம் பகுதியில் விபத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயதுடைய குழந்தையின் சடலம், நீதிமன்ற உத்தரவிற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை (21) தோண்டி எடுக்கப்பட்டது.
மன்னார் தாராபுரம் கிழக்கு, துருக்கி சிற்றி பகுதியில் கடந்த 18ஆம் திகதி மாலை, பாண் விற்பனைக்காக வந்த மின்சார முச்சக்கர வண்டி ஒன்றில் மோதி ஒரு வயது மற்றும் 7 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
விபத்தின் பின்னர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 19ஆம் திகதி குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, தாராபுரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விபத்து மற்றும் மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும், அவசரமான முறையில் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டது.
இது தொடர்பான முறைப்பாட்டைத் தொடர்ந்து, விடயம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
நிலைமையை ஆராய்ந்த நீதவான், மரணம் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதற்கமைய, நேற்று (21) காலை மன்னார் நீதவான் முன்னிலையில் தாராபுரம் மையவாடியில் குழந்தையின் சடலம் மீள அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இந்த அகழ்வுப் பணியின் போது மன்னார் பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பல பிரதேசங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும்
இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் உடனடியாக வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில், மூன்று வயது சிறுவன் ஒருவன் தனது முன்ஜென்ம நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்கிம்பூர் மாவட்டம், மைலானி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் – ராம்பெட்டி தம்பதியினருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தப் பையனுக்கு ‘ஜீதன்’ எனப் பெயரிட்டனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, ஜீதனுக்கு மூன்று வயதான போது, அவன் தனது மழலைப் பேச்சில் விசித்திரமான விஷயங்களைக் கூறத் தொடங்கினான். தன்னுடைய வீடு ‘போலாப்பூர்’ கிராமத்தில் இருப்பதாகவும், தனது தந்தையின் பெயர் ‘விதேசி’ என்றும் அவன் அடம்பிடிக்கத் தொடங்கினான்.
ஆரம்பத்தில் விளையாட்டுத் தனமாகப் பார்த்த பெற்றோர், சிறுவன் விடாப்பிடியாக அழுததால் அவனை அந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். போலாப்பூர் கிராமத்தில் உள்ள விதேசி என்பவரது வீட்டுக்குச் சென்றதும், ஜீதன் உற்சாகமடைந்தான்.
அங்கிருந்த விதேசியைப் பார்த்ததும், “இவர்தான் என் அப்பா” என்று ஓடிச் சென்று கட்டிக்கொண்டான். அதுமட்டுமின்றி, விதேசியின் மனைவி வசந்தியைப் பார்த்து, “இவள் தான் என் அம்மா” என்று கூறி அனைவரையும் அதிர வைத்தான்.
சிறுவன் ஜீதன் அங்கிருந்த பொருட்களைப் பார்த்து, அவை ஒவ்வொன்றும் எங்கு வைக்கப்பட்டிருக்கும் என்ற ரகசியங்களையும், தனது பழைய உடமைகளையும் சரியாக அடையாளம் காட்டினான்.
விசாரணையில், விதேசியின் மகன் திலீப் (வயது 30), கடந்த 2012-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு கடற்கரையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
தூரம் அதிகமாக இருந்ததால், திலீப்பின் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டது. திலீப் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜீதன் பிறந்துள்ளான்.
தனது முந்தைய பிறவியின் பெற்றோர், வீடு மற்றும் அங்குள்ள பொருட்களைச் சிறுவன் துல்லியமாக அடையாளம் காட்டியதைக் கண்டு இரு குடும்பத்தினரும், கிராம மக்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அந்த ‘அதிசய’ சிறுவனைக் காண அண்டை கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டு வருகின்றனறதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குருணாகல் – கொகரெல்ல பகுதியில் பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவிய காணொளியைத் தொடர்ந்து ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (16) மெடலந்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொது வீதியொன்றில் வைத்து ஒரு குழுவினர் , பெண்ணைத் தாக்குவது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.
தாக்குதலின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்காக கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் , “நாங்கள் ஒரு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அது முடிந்த பிறகு, நாங்கள் வீட்டிற்குத் திரும்பினோம். அங்கே சாப்பிட்டுவிட்டுப் புறப்படலாம் என்று எண்ணி, சுமார் ஒன்றரை மணி நேரம் நாங்கள் அங்கேயே தங்கியிருந்தோம்.
நாங்கள் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த வழியில், அவளுடைய (மகளின்) மூத்த சகோதரியின் மகன் ஒருவன், திடீரென எங்கள் காரின் முன்பாக வந்து குதித்தான். அவன் சாலையின் நடுவே வந்து நின்றான்.
வாகனம் வருவதை அவன் பார்த்திருந்தபோதிலும், அவன் ஓரமாக விலகிச் செல்லவில்லை. அவன் காரின் முன்பாக, ‘பானட்’ (bonnet) பகுதிக்கு அருகில் நின்றுகொண்டான்.
என் கணவர் உடனடியாக ‘பிரேக்’ பிடித்துக் காரை நிறுத்திய மறுகணமே, திடீரென்று ஒரு கும்பல் இரும்புத் தடிகள் மற்றும் வாள்களுடன் வெளியே பாய்ந்து வந்து, எங்களை ஈவு இரக்கமின்றித் தாக்கியதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
உறவினர்களுக்கு இடையிலான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீதியில் வைத்து பெண் மீது பலர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஈவிரக்கம்ற தாக்குதலுக்கு சமூக வலைத்தளவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அனுராதபுரம் கலாவெவ பகுதியில் நேற்று (20.04.2026) 10 நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாய்கள் உயிரிழந்தமை தொடர்பில் விலங்கு நலக் கூட்டமைப்பின் (AWC) செயற்குழு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு” எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விலங்கு வன்கொடுமை சட்டங்களை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களை தாமதமின்றி நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் விலங்கு உரிமைக் குழுக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை இந்த விசாரணை குறித்து தொடர்ந்து கண்காணிப்போம் என விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அதன் பிரதிநிதி ஒருவர்,
“இது ஒரு தனிப்பட்ட கொடூரச் செயல் மட்டுமல்ல, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மூலம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு தீவிரமான கவலையாகும்” எனக் குறிப்பிட்டார்.
அதேவெளை நாய்கள் கொலப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், பொதுமக்கள் ஊகங்களை பரப்ப வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தனியார் வங்கி ஒன்றின் அதிகாரபூர்வ இணையதளத்தை போலவே போலியான இணையதளம் ஒன்றை உருவாக்கிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இணையத்தளம் மூலம் 1,000,024(பத்து இலட்சம்) ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து,
சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டு வாரியபொல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மினுவாங்கொட பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.