வங்கி கணக்குகளில் சிக்கிய பெருந்தொகை பணம் : திடீரென தலைமறைவான பெண்!!

போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவருக்கு சொந்தமான ரூ.5.73 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், நிலம், நான்கு கடைவீடுகள் மற்றும் மூன்று மாடி வீடு ஆகியவை அடங்கும் என்று அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த கட்டடங்கள் போதைப்பொருள் கடத்தலின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் ஈட்டியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபரான பெண் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

பெண் ஒருவரை கைது செய்ய பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்!!

தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய ரக்வானை பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி, ரக்வானை பொலிஸ் பிரிவின் கலஹிட்டிய, பெலவத்த வீதி, கொடகவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவர்,

தன்னிடமிருந்து 364,000 மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ரக்வானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டாளரின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்த பெண் இந்தத் திருட்டை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 071-8591394 அல்லது 071-8593808 என்ற தொலைபேசி ஊடாக அழைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டெல்லியில் பரவும் புதியவகை வைரஸ் தொற்று உன்னிப்பாகக் கண்காணிக்கும் இலங்கை!!

இந்தியாவில், டெல்லி பெருநகரப் பகுதி உட்பட வடக்குப் பகுதிகளில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 திரிபு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தியாவின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட இந்தியாவில், 46 மில்லியன் மக்கள் வசிக்கும் டெல்லி நகரத்தில் இந்த இலையுதிர்காலத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

உள்ளூர் வட்டாரங்களின் தற்போதைய கணக்கெடுப்பின்படி, இப்பகுதியில் உள்ள 69 சதவீத வீடுகளில் தற்போது ஒருவருக்கு வைரஸ் அறிகுறிகள் உள்ளது.

இந்திய வைத்தியர்கள் H3N2 தற்போது இப்பகுதியில் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வகைகளில் முதன்மையானது என்பதை உறுதிப்படுத்துகின்றனர்.

இலங்கை எந்தவொரு வைரஸ் தொற்று பரவலுக்கும் தயாராக இருப்பதோடு, தற்போதைய நிலைமை ஆபத்தானது அல்ல என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இந்த வைரஸ் தொடர்பில் அச்சம் அடைய தேவை இல்லை. பருவகால இன்ஃப்ளூயன்ஸா, பொதுவாக காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றுடன் வெளிப்படுகிறது. எமது சுகாதார அமைப்பு விழிப்புடன் உள்ளது. கவலைப்பட தேவையில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையான இன்ஃப்ளூயன்ஸா பரவல்கள் பிராந்தியத்தில் பருவகாலமாக மீண்டும் நிகழும் எனவும், இலங்கையில் நோயாளர்கள் கண்டறிப்பட்டால் வலுவான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை வைரஸின் விரிவான சுழற்சியை எடுத்துக்காட்டுகிறது என சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

டெல்லியைத் கடந்து பிற மாநிலங்களிலும் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஆசிய கோப்பையை திரும்பப் பெறுமா இந்தியா : UAEயிடம் கோப்பையை ஒப்படைத்த மோஷின் நக்வி!!

ஆசியக் கோப்பையை ஐக்கிய அரசு அமீரக நிர்வாகத்திடம் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் பேரவை தலைவருமான மோஷின் நக்வி ஒப்படைத்துள்ளார்.

தற்போது துபாயில் உள்ள ஆசியக் கிரிக்கெட் பேரவை மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கோப்பை, விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி, இந்தியாவுக்கு கோப்பை வழங்கத் தயாரான நிலையில் இந்திய அணியினர் அதனை வாங்த மறுத்துள்ளனர்.

ஆனால், பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரின் கைகளில் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என்று இந்திய வீரர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, மற்ற நிர்வாகிகள் மூலம் கோப்பையை இந்தியாவுக்கு வழங்க நக்வி ஒப்புக் கொள்ளாமல், கோப்பையைக் கையுடன் எடுத்துக் கொண்டு மைதானத்தைவிட்டு வெளியேறியமை அன்றைய தினத்தில் பேசுபொரளாக மாறியிருந்தது.

தொடர்ந்து, இந்திய வீரர்கள் கோப்பை இல்லாமலேயே வெற்றியைக் கொண்டாடினர்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெற்ற ஆசியக் கிரிக்கெட் பேரவை பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, ”ஆசியக் கோப்பை என்பது தனிநபர் சொத்துக் கிடையாது, வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை ஒப்படைக்க வேண்டும்” என்று அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஆனால், கோப்பையை வழங்க மறுப்பு தெரிவித்த நக்வி, மீண்டும் பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்தால், அதில் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஐசிசி நிர்வாகத்திடம் பிசிசிஐ முறைபாடு அளிக்க தயாரான சூழலில், ஆசியக் கோப்பை தொடரை நடத்திய ஐக்கிய அரபு அமீரகத்திடம் கோப்பையை நக்வி ஒப்படைத்துள்ளார்.

விரைவில் துபாயில் உள்ள பிசிசிஐ நிர்வாகத்தினரிடம் ஆசியக் கோப்பை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் மீண்டும் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை!!

தம்புள்ளை பொருளாதார மையத்தில் தற்போது ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ரூ.1800 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுவதாக தம்புள்ளை வர்த்தக சங்கத்தின் தலைவர் பி.ஏ. சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

எலுமிச்சம் பழத்தின் அறுவடை குறைந்து, தேவைக்கு ஏற்ப விநியோகத்தை வழங்க முடியாத காரணத்தினால் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

இதேவேளை, ஒரு கிலோ பூசணிக்காயின் மொத்த விலை ரூ.30 முதல் 60 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.230, ஒரு கிலோ பீட்ரூட் ரூ.50-60 வரை, ஒரு கிலோ தக்காளி ரூ.110, ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.160 என விற்பனை செய்யப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி!!

கொழும்பு Swimming Clubஇல் உள்ள நீச்சல் குளத்தில் விழுந்ததில் 8 வயது மகனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுவனின் தந்தை முறைப்பாடு செய்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றிற்காக சென்றிருந்த நிலையில் ​​நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

முறைப்பாட்டு அளிக்கும் போது, ​​சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சிக்கன் கேட்ட மகனை பூரிக்கட்டையால் அடித்தே கொலை செய்த தாய்!!

மகாராஷ்டிராவில் பால்கரில் வசித்து வருபவர் பல்லவி. 40 வயதாகும் இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர்.

ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சராமாரியாக தாக்கத் தொடங்கினார். இதில் அவரது மகனும், மகளும் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தனர்.

பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டு போலீசில் புகார் அளித்தனர். இதன்படி அங்கு வந்த போலீசார், மயங்கி விழுந்த இரு குழந்தைகளையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், சிறுவன் சின்மயி கணேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அவரது தாய் பல்லவியை, போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!!

ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரையுலகின் காதல் ஜோடிகளில் ஒன்றான இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பு அளித்துள்ளது.

வகுப்பு நண்பர்களான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, காதல் ஜோடியாக தங்களது இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கியவர்கள், திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தனா்.

அதன் பின்னர் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது.

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரும் இனி தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை என்றும் இருவரும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அப்போது குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு நேற்று தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமாயணம் தொடரில் குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் மூச்சுத்திணறி பலி : சகோதரரும் உயிரிழப்பு!!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீர் ஷர்மா, குடும்பத்தினருடன் இரவு வீட்டில் அனைவரும்

தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தார். வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரான இவரின் தந்தை இந்த தீ விபத்து சம்பவத்தின் போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றிருந்தார். வீர் ஷர்மாவின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார்.

வீட்டில் வீர் ஷர்மா தனது சகோதரருடன் தனியாக இருந்த போது நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஜன்னல் வழியாகப் புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர்,

தீ விபத்து குறித்து சர்மாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு உள்ளே மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்து விட்டனர். மும்பையில் உள்ள அவரின் தாயார் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தின் விருப்பப்படி சிறுவர்களின் இருவரின் கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மா.

இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்தவர். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறு வயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி நகையை அடகு வைத்து மோசடி : தலைமறைவான இளம்பெண்!!

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து விட்டு, தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பித்து சென்று தலைமறைவான இளம்பெண்ணை மூன்று ஆண்டுகள் கழித்து போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (32). இவர் கடந்த 2022ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார்.

பின்னர் நிதி நிறுவன ஊழியர்கள் தணிக்கை செய்த போது, வர்ஷா அடகு வைத்தது போலி நகை என்பதும், ரூ.9 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது குறித்து நிதி நிறுவனத்தினர் வர்ஷாவிடம் கேட்டுள்ளனர். அப்போது அவர், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு ஸ்கூட்டரில் அற்றப்புழா பாலம் அருகே சென்றார்.

அங்கு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிதி நிறுவன உரிமையாளர்கள் கோழிக்கோடு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவான வர்ஷாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வர்ஷா தனது குடும்பத்தினருடன் வாட்ஸ்-அப் செயலி மூலம் பேசி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று வர்ஷாவை கைது செய்தனர்.

பின்னர் அவர் கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பண மோசடி வழக்கில், தலைமறைவான பெண் 3 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தன்னைவிட 45 வயது இளைய பெண்ணை மணந்த நபர் : மறுநாள் காலை கிடைத்த அதிர்ச்சி செய்தி!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தன்னைவிட 45 வயது இளைய பெண்ணொருவரை திருமணம் செய்துகொண்டார் 75 வயது முதியவர் ஒருவர்.

திருமணம் முடிந்த மறுநாள் காலை இரு குடும்பங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி காத்திருந்தது.

உத்தரப்பிரதேசத்திலுள்ள Jaunpur என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sangruram (75). மனைவியை இழந்த அவர், தனது முதல் திருமணம் மூலம் பிள்ளைகளும் இல்லாததால் தனிமையில் வாடிவந்துள்ளார்.

ஆகவே, மீண்டும் ஒரு திருமணம் செய்துகொள்ள விரும்பியுள்ளார் Sangruram. ஆனால், இந்த வயதில் இனி ஒரு திருமணம் வேண்டாம் என அவரது உறவினர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால், திங்கட்கிழமை, அதாவது, செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி, Manbhavati (35) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் Sangruram. Manbhavatiயின் முதல் திருமணம் மூலம் அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். நீ வீட்டைப் பார்த்துக்கொண்டால் போதும்,

நான் விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து உன்னையும் உன் பிள்ளைகளையும் கவனித்துக்கொள்கிறேன் என்று Sangruram தனக்கு வாக்களித்ததாகத் தெரிவிக்கிறார் Manbhavati.

ஆனால், திருமணம் முடிந்து மறுநாள் காலை திடீரென Sangruramஇன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமண வீட்டில் அலங்காரங்கள் கூட அகற்றப்படாத நிலையில், அங்கு ஒரு மரணம் ஏற்பட்டுள்ள விடயம், மணப்பெண்ணான Manbhavatiக்கும், இரு குடும்பத்தினருக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு!!

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் குடியரசு கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள் காரணமாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்வதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

குடியரசுக் கட்சி தற்போதைய நிதி திட்டத்தை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சி சில சலுகைகள் வழங்கப்படாமல் இதை ஏற்க மறுக்கிறது.

இதன் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுமார் 35 நாட்களுக்கு இவ்வாறு அமெரிக்க அரசாங்க நடவடிக்கைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி தொடர்பான பிரேரணைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முடக்க நிலையானது அமெரிக்க அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியமான சேவைகளை இந்த முடக்க நிலை நேரடியாக பாதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் முரண்பாட்டு நிலைமை காரணமாக நிதி செலவிடுவது குறித்த பிரேரணைகளை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியாவிட்டால், அரசு சட்டப்படி நிதி செலவிட முடியாது. அவ்வாறான நிலைமையே முடக்கம் என அழைக்கப்படுகின்றது.

இந்த முடக்க நிலை காரணமாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் பணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக தூதரகத்தின் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்ற வகையிலான தகவல் ஒன்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ் கணக்கு அடிக்கடி இற்றைப்படுத்தப்பட மாட்டாது எனவும் அத்தியாவசியமான பாதுகாப்பு விடயங்களுக்கு மட்டுமே இந்த கணக்கு இற்றை படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எனினும் கடவுச்சீட்டு மற்றும் விசா தொடர்பான சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (01.10.2025) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

100 மில்லியன் ரூபா மோசடி : பெண்ணிடம் ஏமாந்த 164 தொழிலதிபர்கள்!!

2024 ” உறுமய ” திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) மோசடி செய்த சந்தேக நபரும்,

பெண்ணும் குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் பணம் மோசடி செய்யப்பட்ட நபரை சிறிகொத்த தலைமையகத்திற்கும் கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கும் அழைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 43 வயதான சந்தேக நபரான பெண், பக்கமுன பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தற்காலிகமாக வசித்து வருகிறார் என்றும்,

சந்தேக நபர் 55 வயதான மகரகமவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உறுமய திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாகக் கூறி கல்முனை பகுதியில் 164 தொழிலதிபர்களை ஏமாற்றி, தன்னை ஒரு வழக்கறிஞராக அறிமுகப்படுத்தி,

தொழிலதிபர்களை ஏமாற்றி, ஒருவரிடமிருந்து ஆறு லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில்!!

மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மாத்தறை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் சமீர மீகந்தவத்த, நீண்ட வாதங்களை முன்வைத்தார். இளம் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டால், அது குழந்தைக்கு அநீதியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிணை வழங்க மறுத்த மாத்தறை தலைமை நீதவான் சதுர திசாநாயக்க மறுத்துள்ளதுடன் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

டொரொண்டோ மாநகராட்சி இடைத் தேர்தலில் ஈழத் தமிழர் வெற்றி!!

கனடாவின் ரொண்டோ மாநகராட்சியின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஈழத் தமிழரான நீதன் ஷான் வெற்றியீட்டியுள்ளார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 37 வாக்குச் சாவடிகளில் 36 வாக்குச் சாவடிகளின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. நீதன் சண்முகராஜா 5174 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார் என்பதுடன் அவரை எதிர்த்து போட்டியிட்ட அனு சிறிஸ்கந்தராஜா 3374 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

முன்னாள் உறுப்பினர் ஜெனிபர் மெக்கெல்வி நாடாளுமன்ற உறுப்பினராக (Ajax) பதவி ஏற்றதால் காலியாகியிருந்த அந்த இடத்தை ஷான் வகிக்கவுள்ளார்.

“நன்றி ஸ்கார்பரோ-ரக் பார்க். இது நீண்ட, சோர்வான, ஆனால் புத்துணர்ச்சி ஊட்டும் தேர்தல் பிரசாரம்.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் எங்களுடன் உழைத்தனர்” என்று தனது வெற்றியைத் தொடர்ந்து நீதன் ஷான் எனப்படும் நீதன் சண்முகராஜா தெரிவித்துள்ளார்.

வாக்குச்சின்னங்கள் அகற்றப்பட்ட போதும், தொண்டர்கள் அதை மீண்டும் நிறுத்தியதைக் குறிப்பிட்ட அவர், “என் அணியின்மீது பெருமை கொள்கிறேன். இது பல தலைமுறைகள் இணைந்து உழைத்த பிரசாரம்” என பாராட்டினார்.

அவருடைய மனைவியும் இரண்டு மகன்களும் மேடையில் அவருடன் இணைந்தனர். “போட்டி என்பது வெற்றிக்காக மட்டும் அல்ல; அது கருத்துகளை பகிர்வதற்கும்” என மற்ற வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

“ஸ்கார்பரோ இனி புறக்கணிக்கப்பட முடியாது. எங்கள் குரல் நகரசபையில் கேட்கப்படும். தேவைப்பட்டால் உறுதியாக நிற்பேன். ஸ்கார்பரோவின் ஆறு பகுதிகளின் மக்களின் குரலாக நான் செயல்படுவேன்” என்று அவர் வாக்குறுதி அளித்தார்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் அவர் இந்த நகராட்சி மன்ற உறுப்பினர் பதவியை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதான நீதன் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவர் என்பதுடன் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.