30 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை : சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையும், சமூக வலைதள நட்சத்திரமுமான திவ்யங்கா சிரோஹி தனது 30 வயதிலேயே உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் பிறந்த இவர்,. காசியாபாத்தில் வசித்து வந்துள்ளார். தனது அபாரமான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் குறுகிய காலத்திலேயே ஹரியான்வி இசைத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திவ்யங்காவிற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தத் திடீர் மறைவு திரையுலகினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையில் அவரது துடிப்பான நடிப்பு மற்றும் அழகான முகபாவனைகள் ஹரியானா மட்டுமின்றி வட மாநிலங்கள் முழுவதும் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் அவர் ஒரு மிகப்பெரிய இன்ஃப்ளூயன்சராகத் திகழ்ந்தார். திவ்யங்காவிற்கு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமான (1.3 Million) ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவ்வளவு சிறிய வயதில், அதுவும் புகழின் உச்சியில் இருக்கும்போது அவர் மறைந்ததை யாராலும் நம்ப முடியவில்லை என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்

 

13 வயதான் சிறுவன் மாயம் : உறவினர்கள் அவசர கோரிக்கை!!

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 077 555 4959 அல்லது 077 555 4979 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர் கடைசியாக நீல நிறத்திலான ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ டி-ஷர்ட் மற்றும் கிரீம் நிறத்திலான அரைக்காற்சட்டை அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி : நையப்புடைத்த பொதுமக்கள்!!

களுத்துறை ஹொரானாவில் வீதியில் நடந்து சென்ற பெண் மீது மிளகாய்த்தூள் வீசித் தாக்கி, அவரிடமிருந்து மூன்றரை பவுண்டு எடையுள்ள தங்க சங்கிலியை கொள்ளையடித்த சந்தேக நபர், பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிரதேச மக்களின் தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, பிலியந்தலாவைச் சேர்ந்த நாற்பத்து நான்கு வயதுடைய அந்த நபர் ஹொரானா தலைமையகக் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொள்ளையை நடத்துவதற்காக இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது . சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்ட நிலையில், மற்றொருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணையை காவல்துறை ஏற்கனவே தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையில், இருவரும் சில காலமாக கொள்ளையிட்டு வந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்து காவல்துறை நடத்திய பின்னணிச் சோதனைகளில், அவர் ஒரு தீவிர போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வைத்திருந்ததற்காகவும், விற்பனை செய்ததற்காகவும் இதற்கு முன்பும் குற்றசாட்டுக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க சங்கிலியின் ஒரு பகுதி மட்டுமே சந்தேக நபரிடமிருந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும், தங்க சங்கிலியின் மீதமுள்ள காணாமல் போன பகுதியைக் கண்டுபிடிப்பதற்காக ஹொரானா தலைமையக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின் தடை தொடர்பில் அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

நாட்டில் மின் தடையை நடைமுறைப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்.

செலவு குறைந்த மற்றும் நம்பகமான மின் உற்பத்தி ஆதாரங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 2025 – 2026ஆம் ஆண்டிற்கான நிலக்கரி கொள்வனவு செயன்முறையில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனால், அதன் சுமையை மக்கள் மீது சுமத்தப் போவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

ஜனாதிபதியும் இந்த நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளார். நிலக்கரி விநியோகத்தில் தவறிழைத்த நிறுவனங்களிடமிருந்து அபராதங்களை அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

சட்ட நடவடிக்கை

அவ்வாறு அறவிடப்படும் தொகை போதுமானதாக இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நிதி சுமையை திறைசேரியோ அல்லது பொதுமக்களோ ஏற்கத் தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

கனடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ் இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு : உடலை காண காத்திருக்கும் தாய்!!

கனடாவின் பிரம்டன் நகரில் பொலிஸாரின் கவனக்குறைவால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யாழ். பலாலியைச் சேர்ந்த, புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவரான றெஜிபோல்ட் றொபேர்ட் கெனடி (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த றெஜிபோல்ட், மூளையில் ஏற்பட்ட திடீர் இரத்தக் கசிவு காரணமாக நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதன்போது, விரைந்து வந்த பீல் பிராந்திய பொலிஸார், அவரது நிலையை ஆராயாமல் அவர் மதுபோதையில் இருப்பதாகத் தவறாகக் கருதியுள்ளனர்.

அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்க முற்படாமல், குடிபோதையில் இருந்ததாகக் கூறி அவருக்கு அபராதத் துண்டினை (Ticket) வழங்கிவிட்டு, பின்னர் நோயாளர் காவு வண்டியை அழைத்துள்ளனர்.

வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், பொலிஸார் வழங்கிய தவறான தகவலால் (மதுபோதை எனக்கூறியதால்) அவருக்குரிய அவசர சிகிச்சை வழங்கப்படாமல் தாமதிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். வைத்தியப் பரிசோதனையில் அவரது உடலில் மது அறவே இல்லை என்பதும், மூளை இரத்தக் கசிவே மயக்கத்திற்குக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மரணத்தின் தறுவாயிலும் பிறருக்கு உதவும் நோக்கில் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவர் இணங்கியிருந்தார். இதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பே கனடியப் பிரஜாவுரிமை பெற்றதால், அவரிடம் கடவுச்சீட்டு (Passport) இருக்கவில்லை.

இதனால் அவரது உடலை இலங்கைக்கு அனுப்புவதிலோ அல்லது தாயகத்தில் உள்ள அவரது தாயாரை கனடாவுக்கு வரவழைப்பதிலோ பெரும் சட்டச் சிக்கல்கள் நீடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரம்டன் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுண் மற்றும் பீல் பிராந்திய பொலிஸ் மா அதிபர் நிஷான் துரையப்பா ஆகியோர் தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களாக இருந்தும், ஒரு தமிழ் இளைஞருக்கு நேர்ந்த இந்த அநீதி குறித்து இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை அவரது உடல் பிரம்டனிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு காரணமான பொலிஸ் அதிகாரி மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், உடலை தாயகம் அனுப்ப தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் எனவும் அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழையும், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னறிவிப்பில் மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

 

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்!!

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று (23.04.2026) அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,734.42 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 77.69 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற வலய மட்ட எல்லே போட்டிகளில் சாதனை படைத்த கிராமப்புற மாணவிகள்!!

வவுனியா தெற்கு வலய பாடசாலைகளுக்கு இடையிலான 2026ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் பெண்களுக்கான எல்லேப் போட்டியில், வவுனியாவின் பின்தங்கிய கிராமப்புறப் பாடசாலையான வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

வசதி வாய்ப்புகள் அதிகம் கொண்ட நகரப் பாடசாலைகளுடன் மோதி, இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்த மாணவிகளின் திறமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதன் மூலம், எதிர்வரும் வடமாகாண மட்டப் போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியையும் இவர்கள் உறுதி செய்துள்ளனர்.

வ/ ஸ்ரீ நாகராஜா வித்தியாலயமானது உயர்தர வகுப்புகள் இன்றி, சாதாரண தரம் (G.C.E O/L) வரை மட்டுமே கொண்ட ஒரு சிறிய பாடசாலையாகும். இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுக்கு மத்தியிலும், மாணவிகளின் விடாமுயற்சியும் பயிற்சியாளர் ஜெ.மோகன் அவர்களின் முறையான வழிகாட்டலும் இந்த மாபெரும் வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளது.

கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுத் துறையில் தேசிய மற்றும் மாகாண ரீதியில் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த மாணவிகளுக்கும், அவர்களைப் பக்குவப்படுத்திய பயிற்சியாளர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் வவுனியா கல்விச் சமூகம் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் 50 குடும்பங்களுக்கு குடிநீர் தொட்டிகள் வழங்கி வைப்பு!!

வவுனியா மாவட்டத்தில் குடிநீர் தேவையுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் நலன்கருதி, மழைநீரை சேகரிக்கும் 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டிகள் வழங்கும் விசேட நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, மழைநீரை முறையாகச் சேகரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த நீர் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மற்றும் நீண்டகாலமாக குடிநீர் தேவைகளுக்காக சிரமப்படும் 50 குடும்பங்கள் முதற்கட்டமாகத் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நீர் தொட்டிகள் இதன்போது கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்திர உட்பட அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நீர் தொட்டிகள் வழங்கப்பட்டதன் மூலம், அப்பகுதி மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கிடைத்துள்ளதோடு, வறட்சி காலங்களில் மழைநீரைப் பாதுகாப்பாகச் சேமித்து பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் : உரிமையாளர்களுக்கு அவசர அழைப்பு!!

வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு விநியோகத்திற்காக அனுப்பி வைக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள், உரியவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத காரணத்தினால் அஞ்சல் அலுவலகத்திலேயே தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கையிருப்பில் உள்ள இந்த சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குரிய வாடிக்கையாளர்களைத் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொள்ள அஞ்சல் அலுவலக அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

எனினும், பலருடைய தொலைபேசி இலக்கங்கள் இயங்காத நிலையிலும், தொடர்புகொள்ள முடியாதவாறும் காணப்படுவதால் இவற்றை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை தமது சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி அவற்றை உடனடியாகப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்

வவுனியா அஞ்சல் அலுவலகத்திற்கு அலுவலக நேரங்களில் நேரடியாகச் சென்று அனுமதிப்பத்திரங்களைக் கோர முடியும், அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது தற்காலிக அனுமதிப்பத்திரத்தின் பிரதியைச் சமர்ப்பித்துத் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, தகுதியானவர்கள் விரைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது சாரதி அனுமதிப்பத்திரத்திற்காகக் காத்திருந்தால், இந்தத் தகவலை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் உரிய நேரத்தில் அவை அவர்களைச் சென்றடைய உதவ முடியும் எனவும் அஞ்சல் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தில் புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து : பெண் பலி : சாரதி கவலைக்கிடம்!!

வவுனியா, தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையைப் பயன்படுத்திய போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததில், அதில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

தாண்டிக்குளம் பகுதியில் அடிக்கடி இவ்வாறான அபாயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இந்தப் பாதுகாப்பற்ற கடவை தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் திரையில் நடிப்பவன் தலைவனல்ல தரையில் மக்களுக்காக போராடுபவனே தலைவன் என பாதாதை!!

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா நகரின் முக்கிய பகுதியில் தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஒரு புதிய பாதாதை (Banner) காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சீமானின் ஆவேசமான உரையை பிரதிபலிக்கும் வகையில், பாதாதையின் கீழ் பகுதியில் மிக முக்கியமான அரசியல் வாசகம் “ திரையில் நடிப்பவன் தலைவனல்ல, தரையில் மக்களுக்காக போராடுபவனே தலைவன் “ என இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் திடீரென இத்தகைய ஒரு பாதாதை முளைத்திருப்பது, வட இலங்கையில் சீமானின் சித்தாந்தங்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கை எடுத்துக் காட்டுகிறது.

குறிப்பாக, ஈழத்தமிழர் உரிமைகள் குறித்து சீமான் தொடர்ந்து பேசி வருவதால், அங்குள்ள இளையோர் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் அவர் ஒரு முக்கிய ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார்.

இந்த பாதாதையில் சீமான் கையை உயர்த்தி ஆவேசமாகப் பேசுவது போன்ற படமும், பின்னணியில் நெருப்பு எரிவது போன்ற வடிவமைப்பும் அமைந்துள்ளது.

வெளிநாட்டுப்பாணியில் காதல் முன்மொழிவு : காதலனை உயிருடன் எரித்த பெண்!!

வெளிநாட்டு பாணியில் காதல்முன்மொழிய போவதாக கூறி, காதலனை பெண் உயிருடன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள அஞ்சனாபுரா பகுதியில் உள்ள செல்போன் கடை வேலை பார்த்து வந்தவர் 27 வயதான பிரேர்னா.

அதே கடையில் வேலை பார்க்கும் கிரண் என்பவருடன் ஒரு வருடமாக காதலில் இருந்து வந்துள்ளார். சமீபகாலமாக கிரண் தன்னை புறக்கணிப்பதாக கருதிய பிரேர்னா, நேற்று மதியம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிரணை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது கிரணை நாற்காலியில் அமர சொல்லி இறுக்கமாக கயிறால் கட்டியுள்ளார். கிரண் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, வெளிநாட்டு பாணியில் கண்ணை கட்டி காதலை முன்மொழிய போவதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு கிரண் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். கயிறால் கட்டப்பட்டிருந்ததால் கிரணால் தப்பிக்க முடியாமல் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

கிரண் உயிருடன் எரிவதை பிரேர்னா தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது, “நான் கழிவறையில் இருந்தபோது ஒரு சத்தம் கேட்டது. வெளியே வந்தபோது, ​​கிரண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டிருந்தார்” என பிரேர்னா தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கிரண் தன்னுடன் எந்த எரிபொருளையும் கொண்டு வரவில்லை என கண்டறிந்த காவல்துறையினர், பெட்ரோலை பிரேர்னா முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கலாம் என சந்தேகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து, பிரேர்னாவிடம் நடத்திய விசாரணையில் காதலன் தன்னை புறக்கணித்ததால் ஏற்பட்ட மனஅழுத்ததில் இவ்வாறு செய்ததாக பிரேர்னா குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விளையாட்டு வினையானது : கிரிக்கெட் தகராறில் நண்பனை கத்தியால் குத்திய இளைஞன்!!

கிருஷ்ணகிரியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு வாக்குவாதம் முற்றி, நண்பன் ஒருவனை மற்றொரு நண்பனே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை நேரத்தில் மைதானத்தில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வமுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு ரன் எடுப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.

முதலில் சாதாரணமாகத் தொடங்கிய இந்தத் தகராறு, சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறி ரத்தக் களரியில் முடிந்தது அனைவரையும் உறைய வைத்துள்ளது.

ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் தனது நண்பனின் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த இளைஞரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். விளையாடச் சென்ற மகன் பிணமாகத் திரும்பியதைக் கண்டு அந்த இளைஞனின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த 4 இளைஞர்களை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு ரன் விவகாரத்திற்காக இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில்,

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்குள் ஏற்பட்ட இந்த மோதல் மற்றும் உயிரிழப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தவறான SMS ஆல் விபரீதம் : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் காதலர்கள் விபரீத முடிவு!!

நிமிஷ நேர அவசரம் தான். 10 மாதம் சுமக்க வேண்டிய குழந்தையை நல்ல நேரம், நாள் நட்சத்திரம் பார்த்து, சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கிறோம்.

5 வயதில் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய பிள்ளைகளை ஒரு வயசுலேயே ஃப்ரீ ஸ்கூல் என்று சேர்த்து விடுகிறோம்.

அதன் பின்னர் க்ராஷ் கோர்ஸ், டபுள் புரோமோஷன், 8 வயசுல தனி சொல்போன், 10 வயசுல நீட் சிறப்பு வகுப்புகள், 18 வயசுக்குள்ள மோட்டார் பைக், கார்,

அவசர சாப்பாட்டுக்கு ஃபாஸ்ட் புட், ஸ்டைல் சாப்பாட்டுக்கு பிசைந்து சாப்பிடவும் நேரமில்லாமல் மினி லஞ்ச் என்று வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தங்களது அவசர புத்தியால், ஒரு தவறான எஸ்.எம்.எஸ். தகவலால் இரண்டு இளம் உயிர்கள் பறிபோன சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.

சமூக வலைதளங்கள் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில், ஒரு சிறிய வதந்தி எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில்,

திருமண பந்தத்தில் இணையவிருந்த சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவரின் மரணம், உறவினர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சூரஜ் மற்றும் கோமலுக்குத் திருமணம் நிச்சயமாகி இருந்த சூழலில், யாரோ ஒரு மர்ம நபர் அனுப்பிய தவறான மெசேஜ் சூரஜின் மனதை நிலைகுலையச் செய்துள்ளது.

இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில் சூரஜ் தற்கொலை செய்துக் கொண்டார். சூரஜின் மரணம் குறித்த செய்தியைக் கேட்டு அவரது வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற கோமலை,

அங்கிருந்தவர்கள் தரக்குறைவாகப் பேசியும், பழிச்சொற்களால் காயப்படுத்தியும் உள்ளனர்.

ஏற்கனவே திருமணம் நடக்க இருந்த நிலையில், தனது காதலனை இழந்த துயரத்தில் இருந்த கோமல், மற்றவர்களின் பேச்சுக்களைத் தாங்க முடியாமல் விஷம் குடித்துத் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

வாழ்க்கையில் எத்தகைய நெருக்கடி வந்தாலும், முதலில் பெற்றோரிடம் பகிருங்கள். ஒரு நிமிட அவசர முடிவால் இரண்டு குடும்பங்கள் தங்களது பிரிய மகனையும்,

மகளையும் இழந்து தவிக்கிறது. ஒருவரின் மனநிலை தெரியாமல் மற்றவர்கள் வீசும் பழிச்சொற்கள், ஒரு கொலையை விட மோசமானது என்பதற்கு கோமலின் மரணமே சாட்சி.

உதவிக்கு: மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் இலவச உதவி எண் 104 அல்லது சினேகா ஹெல்ப்லைன் 044-24640050 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.

அவதானமாக செயற்படவும் : பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு!!

வளிமண்டலவியல் திணைக்களம் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் அம்பாறை, குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.