மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுங்காங்கேணி கிராமத்தில் இரு மதக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சுங்காங்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை சுங்காங்கேணி மெதடிஸ் திருச்சபையின் ஒலிபெருக்கியில் ஜெப வழிபாடும் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து திருச்சபையில் வழிபாடு இடம்பெற்றுக் கொண்டிருந்த ஒலிபெருக்கி நிறுத்துமாறு விநாயகர் ஆலயத்திலிருந்து சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது. இம் மோதலில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மெதடிஸ்த திருச்சபை வழிபாட்டு ஆலயம் இன்று அப்பகுதி பொது மக்கள் சிலரால் உடைக்கப்பட்டு பொருடக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொண்டலடி வைரவர் கோயிலடி பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் வலதுகை துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தேவானந்தன் பிரசன்னா என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். நேற்று அதிகாலை 1 :00 மணியளவில் இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள தலைமறைவாகியிருப்பதாகவும் அவர்களை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கோயிலடியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இசைக்கச்சேரியின் போது நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கைகலப்பாகி வாள் வெட்டில் முடிந்துள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான குறித்த இளைஞரை சுற்றிவளைத்த சுமார் 15 பேர் கொண்ட குழு அவரை சரமாரியாக தாக்கியதுடன் வாளினாலும் வெட்டியுள்ளனர். இதன்போது வலது கை துண்டிக்கப்பட்டதுடன் தலையிலும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனயைடுத்து காயமடைந்த இளைஞர் உடனடியாக யாழ் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைன் நாட்டில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்த ஒரு தம்பதியின் எட்டு வயது மகள் மூன்று அடிக்கு தனது கூந்தலை வளர்த்து சாதனை புரிந்திருக்கின்றார்.
எட்டே வயதான Bohdana Stotska என்ற சிறுமி, நாலரை அடி உயரமே உள்ளார். ஆனால் அவரது தலைமுடி மூன்றடி உயரத்தில் இருக்கின்றது. தனது நான்காவது வயதில் இருந்து அவர் தலைமுடி வெட்டுவதை நிறுத்திவிட்டார்.
தலைமுடியை தினமும் ஷம்பு போட்டு கழுவி உலர வைப்பதற்கு நான்கு மணி நேரம் செலவிடுவதாக அவரது தாயார் தெரிவித்தார்.
வங்கி அதிகாரியாக பணியாற்றும் Olga, தனது மகளின் ஆசைக்கு குறுக்கே நிற்பதில்லை என்றும் அவளது விருப்பப்படி மகளின் கூந்தலை பராமரித்து வருவதற்கு உதவி செய்வதாகவும் கூறினார்.
இராக்கில் எட்டு ஊர்களில் வரிசையாக கார் குண்டுகள் வெடித்தத்தில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒப்பீட்டளவில் பாதுகாப்பான இடமாக இருந்துவந்த நாட்டின் தென்பகுதி இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது.
சாதாரணப் பொதுமக்களை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. நசிரியாவிலும் பஸ்ராவிலும் ஜனசந்தடி மிக்க சந்தைப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன.
நாட்டின் வடக்கே – அதிலும் குறிப்பாக மோசுல், சலாஹுத்தீன் போன்ற ஊர்களில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் பாதுகாப்புப் படைகள் இலக்க்வைக்கப்பட்டிருந்தனர்.
தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள குட் என்ற ஊரில்தான் மிக அதிகமானோரை பலிகொண்ட தாக்குதல் நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்.
குட் நகரில் கட்டிடத் தொழிலாளிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஷியா மக்கள் செறிந்து வாழும் இடங்கள்தான் இந்த குண்டுத் தாக்குதல்களில் அதிக சேதங்களைச் சந்தித்திருக்கின்றன என்றாலும் சுனி மக்கள் வாழும் இடங்களிலும் பாதிப்பு இருப்பதாக பாக்தாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மணிவண்ணன் நேற்று தனது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆயிரக்கணக்கானோர் மணிவண்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை உடல் தகனம் நடைபெற்றது. இதற்காக மணிவண்ணனின் உடல் அவரது வீட்டிலிருந்து ஊர்வலமாக போரூர் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
மணிவண்ணனின் குருவான இயக்குநர் பாரதிராஜா இன்று நேரில் வந்து மணிவண்ணனுக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவுண்டமணியும் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
பொதுவாக அதிக பயம் அல்லது அமைதி இன்மையால் பதற்றம் ஏற்படும். பதற்றம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும் ஆனால் இத்தகைய நிமிடங்கள் நரக வேதனையாகும். இதனை விளக்க வார்த்தைகளை இல்லை. கீழ்கண்ட அறிகுறிகளால் இதனை கண்டறியலாம்..
1. அதிகமான இதயத் துடிப்பு
2. வியர்த்து கொட்டுதல்
3. நடுக்கம்
4. மூச்சு விட சிரமம்
5. மாரடைப்பு
6. நெஞ்சு வலி
7. மயக்கம் அல்லது தலை சுற்றுதல்
இவையாவும் அதீத பயம் மற்றும் அமைதியின்மையால் ஏற்படுவது. இவை சொல்லாமல் கொள்ளாமால் வருவதாகும். ஆனால் பாதி நேரங்களில் ஏதாவது சில நிகழ்வுகளால் ஏற்படும் முன் பதற்றம் ஏற்படும். அதனால் இதனை சமாளிக்க எந்நேரமும் நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த பதற்றத்தை குறைக்க சில யோசனைகள் இதோ உங்களுக்காக..
சிறிது நேரம்..
வேலை நேரங்களில் இருந்து சில மணி நேரம் சுற்றியுள்ள எதிர்மறைகளை பற்றி யோசிக்க பயன்படுத்தவும். ஏனென்றால் எதிர்மறைகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தால் நாம் அதனுடன் ஒத்துப் போவது போல் ஆகிவிடும். அதனால் அவைகளை தவிர்க்க வேண்டும்.
எதுவும் நடக்கலாம்..
தன்னம்பிக்கையுள்ளவராக நேர்மறை சிந்தனையுடன் இருப்பது நல்லது தான். தவறாக ஏதுனும் நடந்தால் அதை எதிர்கொள்ள ஒருவர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்காக அதை பற்றி 24 மணி நேரமும் கவலை பட்டு கொண்டிருக்க வேண்டும் என்றில்லை. எடுத்த முடிவின் விளைவு நல்ல படியாக அமையாததால் இந்த கவனம் தேவைப்படுகிறது.
பொறுமை..
பதற்றத்தை குறைக்கும் மற்றொரு வழி அனைத்தையும் குறித்து வைப்பது. ஒரு டயரி , பென்சில் அல்லது பேனாவை எப்போதும் உடன் வைத்திருங்கள். அதில் பதற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை திகதி மற்றும் நேரத்துடன் குறிப்பிடுங்கள். எழுதுவதற்கு மன ஒருமித்தல் அவசியம். இது மன அழுத்தத்தின் அளவை குறைக்கும்.
உணவு பழக்கம்..
காலை உணவு வளமாகவும் அதிகமாகவும் இருக்க வேண்டும் என்பது ஒத்துக்கொள்ளப்பட்ட விதி. மதிய உணவிற்கு முன் சிறிதளவு உணவுகளை கொறிக்கவும் செய்யலாம். இது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் மனதும் அமைதி பெரும்.
நித்திரை ..
தினசரி 8-9 மணி நேரம் நித்திரை அவசியமான ஒன்றாகும். அதில் குறைபாடு ஏற்பட்டால் பதற்றம் வரும் வாய்ப்புகள் அதிகம்.
யோகா..
பதற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். எந்த ஒரு சாதனமும் இன்றி பயிற்சி பெரும் எளிய வகை உடற்பயிற்சியாகும். மிதமான அளவு தசையை ஓய்வு பெறச் செய்யும் வழிமுறைகள் அல்லது ஆழமான மூச்சுப் பயிற்சி உங்கள் மனதுக்கு அமைதியை தரும். இவைகளை பின்பற்றினால் மன அழுத்தத்தில் இருந்து பாதிக்கப்படாமல் தப்பிக்கலாம். இவை அன்றைய சூழலில் ஏற்படும் பதற்றத்தை தணிக்க உதவி புரிந்தாலும், பயிற்சிகளை தினசரி செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
பொழுதுபோக்கு..
பொழுதுபோக்கில் ஈடுபட்டால் பதற்றத்தால் ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். அந்த பொழுபோக்கு இசையை கேட்டு ரசிப்பதாகட்டும், அல்லது புத்தகம் படிப்பதாகட்டும் அல்லது பயணத்தில் ஈடுபடுவதாகட்டும், எதுவாக இருந்தாலும் அதில் முழுமையாக ஈடுபடவும்.
மணிவண்ணன் எண்பதுகளில் தொடங்கி இருபது ஆண்டுகளுக்கும் மேல் 49 படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர். ஆனால் இன்றைய தலைமுறை அவரை வெறும் நடிகராக மட்டுமே அறிந்திருக்கிறது. அந்த நினைப்பை உடைக்க 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வருகிறது அமைதிப் படை 2. படம் பார்த்த அத்தனை பேருமே மணிவண்ணனைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் நையாண்டிக்கு புதிய இலக்கணமாக இந்தப் படம் வரவிருக்கிறது.
50வது படம் ..
மணிவண்ணனின் பொன்விழாப் படம் என்ற முத்திரையோடு வருகிறது அமைதிப் படை 2. இந்தப் படத்தில் சத்யராஜ், சீமான், ரகுவண்ணனுடன், மணிவண்ணன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அமைதிப்படை முதல் பாகத்தில் வில்லன் சத்யராஜ் இறந்துவிடுவதாக படம் முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தப் பாத்திரம் உயிரோடு இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதுதான் இந்த இரண்டாம் பாகம்.
கோபுரங்கள் சாய்வதில்லை..
50 படங்களை இயக்கிய மணிவண்ணனின் முதல் படம் கோபுரங்கள் சாய்வதில்லை. அதற்கு முன் பாரதிராஜாவின் உதவி இயக்குநராக நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம் போன்ற படங்களில் பணியாற்றியவர். பாக்யராஜுக்குப் பிறகு, பாரதிராஜாவுக்கு பிடித்த வசனகர்த்தாவாக மணிவண்ணன் திகழ்ந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவை கார்த்திக் வர்ணிக்கும் ஒரு காட்சியில் மணிவண்ணன் வசனங்கள் அத்தனை அழகாக அமைந்திருக்கும்.
வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன்..
மணிவண்ணனின் வில்லன்கள் அலாதியானவர்கள். வில்லன்களில் இத்தனை வித்தியாசம் காட்ட முடியுமா என்பதை இவர் படங்களில்தான் பார்க்க முடியும். அதில் ஒன்று வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன். அன்றைக்கு இந்தப் படம் பெரிதாக போகாவிட்டாலும், பார்த்து ரசிக்கும் படமாக அமைந்தது.
12 நாட்களில் நூறாவது நாள்..
மணிவண்ணனை சிகரத்தில் வைத்த படம் என்றால் அது நூறாவது நாள். மிகச் சொற்ப செலவில், மிகக் குறைந்த நாட்களில்… 12 நாட்களில் இந்தப் படத்தை மணிவண்ணன் எடுத்திருந்தார். இதை அன்றைக்கு இளையராஜாவிடம் சொன்னபோது அவரால் நம்பவே முடியவில்லையாம். என்னய்யா சொல்ற12 நாளில் ஒரு படமா சரி படத்தைக் காட்டு என்றாராம்.
நானும் ஏதாவது செய்யணுமே..
இளையராஜா படத்தைப் பார்த்ததும் பிரமாதம், அசத்தியிருக்கேய்யா இதுக்கு நானும் ஏதாவது செய்யணுமே என்றவர், இதுவரை எந்தப் படத்துக்கும் போடாத அளவு மிகச் சிறப்பாக பின்னணி இசை அமைத்துக் கொடுத்தாராம். படத்தில் மூன்று பாடல்கள்தான். இந்தப் படத்துல அதிகமா பாட்டு வச்சா அந்த க்ரிப் குறைஞ்சிடும். இதுவே போதும். பின்னணி இசைதான் இந்தப் படத்துக்கு ஹைலைட்டா இருக்கணும் என்றாராம் இளையராஜா.
விடிஞ்சா கல்யாணம்..
பாலைவன ரோஜாக்கள் இவர் இயக்கத்தில் ஒரே நேரத்தில் வெளியான படங்கள் பாலைவன ரோஜாக்கள் மற்றும் விடிஞ்சா கல்யாணம். இரண்டுமே நூறு நாட்களுக்கு மேல் ஓடியவை. இரண்டிலுமே சத்யராஜ்தான் ஹீரோ. இதையெல்லாம் இன்றைக்கு நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இனி ஒரு சுதந்திரம்..
மணிவண்ணன் கிட்டத்தட்ட தனது லட்சியப் படம் என்று அறிவித்து எடுத்தது இனி ஒரு சுதந்திரம். சிவகுமார்தான் ஹீரோ. மிகச் சிறப்பாக வந்திருந்தது. ஆனால் பாராட்டுகள் குவிந்த அளவுக்கு வசூல் குவியவில்லை. அந்த வருத்தம் இன்னும் அவருக்கு உள்ளது.
வாழ்க்கைச் சக்கரம்..
இனி ஒரு சுதந்திரத்துக்குப் பிறகு மணிவண்ணன் இயக்கிய தீர்த்தக் கரையினிலே, ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் நன்றாக ஓடின. ஆனால் அதற்கடுத்த சில படங்கள் அவருக்கு தோல்வியைத் தந்தன. அப்போதுதான் திருப்பூர் மணிக்காக வாழ்க்கைச் சக்கரம் என்ற படத்தை எடுத்தார். மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி மூவருக்குமே அந்தப் படம் நல்ல பிரேக் ஆக அமைந்தது.
அமைதிப்படை..
மணிவண்ணன் மிகப் பெரிய வெற்றிப் படம் என்றால் அது அமைதிப்படைதான். தரம், வசூல் என அனைத்திலுமே அந்தப் படம் சிறப்பாக அமைந்துவிட்டது. இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்தனர். அங்கும் வெற்றியைக் குவித்தது அமைதிப்படை.
ஆண்டான் அடிமை..
மணிவண்ணனின் 49வது படம் இது. அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், இயக்குவதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் நடிகராக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 2002ல் மணிவண்ணன் இல்லாத தமிழ்ப் படமே இல்லை எனும் அளவுக்கு எல்லாப் படங்களிலும் காமெடியன், வில்லன், குணச்சித்திர வேடங்கள் என கலக்கினார்.
அதிக வெற்றிப் படங்கள்..
ஒரு இயக்குநராக அதிக வெற்றிப் படங்கள் தந்த பெருமை மணிவண்ணனுக்கு உண்டு. அதேபோல ராம நாராயணனுக்குப் பிறகு ஒரு ஆண்டில் அதிக படங்களை இயக்கியவரும் மணிவண்ணன்தான்.
இளையராஜாவுடன்..
மணிவண்ணன் இயக்கியுள்ள 50 படங்களில் முக்கால்வாசி இளையராஜா இசையமைத்தவைதான். இவர் படங்களில் பாடல்கள் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும். இங்கேயும் ஒரு கங்கை, முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, தீர்த்தக் கரையினிலே, அம்பிகை நேரில் வந்தால் போன்ற படங்களில் பாடல்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.
அடுத்து..
அமைதிப் படை 2-க்குப் பிறகு, தாலாட்டு மச்சி தாலாட்டு என்ற படத்தை இயக்கும் மணிவண்ணன், அதைத் தொடர்ந்து இரண்டு புதிய படங்களை இயக்கும் திட்டத்தில் இருந்தார் . அனைத்துக்கும் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தனர் . இதில் ஒன்று அவர் ஏற்கெனவே இயக்கி வெற்றி கண்ட படத்தின் இரண்டாம் பாகம். ஆனால் அறிவிப்பை பின்னர் வெளியிடலாம் என ரகசியமாக வைத்திருந்தார்.
ரஜனியுடன்..
சூப்பர் ஸ்டார் ரஜனியின் கொடிபறக்குது படத்தில்தான் முதன் முதலாக நடித்தார் மணிவண்ணன். அதன் பிறகு, ரஜனியின் நெருங்கிய நண்பராகிவிட்டார். ரஜனி நடித்த பிரமாண்ட வெற்றிப் படங்களில் நிச்சயம் மணிவண்ணன் இருப்பார். படையப்பா, சிவாஜி போன்ற படங்களில் ரஜனியே விரும்பி அழைத்து அந்த வேடங்களைச் செய்யச் சொன்னாராம். அதுமட்டுமல்ல, மணிவண்ணனின் நய்யாண்டி நடிப்புக்கு தான் மிகப் பெரிய ரசிகர் என்று மேடையிலேயே அறிவித்தார் ரஜனி.
அமெரிக்காவில் தெற்கு கரோலினா அருகேயுள்ள சுமேடர் நகரை சேர்ந்த லெஸி என்ற 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு தனியார் பாடசாலையில் படித்து வருகிறாள்.
பிறப்பிலேயே இருதய கோளாறினால் பாதிக்கப்பட்ட இவளால் ஒழுங்காகப் பாடசாலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் இவளது பாடங்கள் பாதிக்காமல் இருக்க அவரது பெற்றோர் புதுவிதமான ரோபோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
தற்போது அந்த ரோபோ தான் லெஸிக்கு பதிலாக பபாடசாலைக்கு சென்று பாடங்களை படித்து வருகிறது. “வி.ஜி.ஓ.” என அழைக்கப்படும் இந்த ரோபோ 4 அடி உயரமும் 18 பவுண்ட் எடையும் கொண்டது.
இதனது முகத்தில் வீடியோ ஸ்கிரீன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில் கேமரா மற்றும் இண்டர்நெட் வசதியும் உள்ளது. பாடசாலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் லெஸி ரோபோவை வீட்டில் இருந்த படியே கம்ப்யூட்டரில் மவுஸ் மூலம் இயக்குகிறாள்.
வகுப்பறைக்கு செல்லும் ரோபோவின் வீடியோ திரை வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் தெரிகிறது. அதே வேளையில், வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை படம் பிடிக்கும் ரோபோ அதை வீடியோவில் பதிவு செய்து வீட்டில் இருக்கும் கம்ப்யூட்டரில் ஒளிபரப்பும்.
அதன் மூலம் லெஸி தனது வகுப்பில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்களையும் பார்த்து தெரிந்து கொள்கிறாள்.இதை வைத்து வீட்டில் இருந்த படியே பாடம் படித்து பரீட்சை எழுதி வருகிறாள்.
இந்த ரோபோவுக்கு ஆடை உடுத்தி லெஸி அழகு பார்க்கிறாள். அதை தன்னுடனேயே தூங்க வைக்கிறாள். அதற்கு “இளவரசி வி.ஜி.ஓ.” என அன்புடன் பெயரிட்டும் இருக்கிறாள்.
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோணியை விட விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட் வீரராக விராத் கோலி உருவெடுத்துள்ளார். இவரை வைத்து விளம்பரங்களை ஒளிபரப்பத்தான் இப்போது விளம்பர நிறுவனங்கள் அதிகம் விரும்புகின்றனவாம். சூதாட்ட சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும் கிரிக்கெட் வீரர்களை வைத்து விளம்பரம் தேடும் விளம்பர நிறுவனங்களும் அதிகரித்தபடிதான் உள்ளது.
சமீப காலம் வரை டோணிதான் விளம்பரதாரர்களால் அதிகம் விரும்பப்பட்ட பிரபலமாக இருந்தார். ஆனால் தற்போது மெதுவாக அவரை விஞ்ச ஆரம்பித்துள்ளார் விராத் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக வர்ணிக்கப்படுபவர் விராத் கோலி இப்படிச் சொல்லிச் சொல்லியே அவரைப் பிரபலமாக்கி விட்டனர். இதனால் விளம்பரதாரர்களும் கோலி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விராத் கோலி இடம் பெற்ற டிவி விளம்பரங்களின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
தற்போது விராத் கோலி 13 விளம்பரங்கள் மூலம் பிரபலப்படுத்தி வருகிறாராம்.விளம்பரங்கள் மூலம் கோலிக்குக் கிடைக்கும் வருவாயும் உயர்ந்தவண்ணம் உள்ளதாம். அதாவது தற்போது அவர் ரூ. 40 கோடி வரை விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறாராம்.
கடந்தஆண்டு வரை ஒரு நிருவனத்திற்கு அவர் விளம்பரதாரராக இருக்க வருடாந்திர கட்டணமாக 3 கோடி வாங்கினார். தற்போது இது 6 கோடியாக உயர்ந்துள்ளது.டோணியை விட இளையவர் என்பதும், டோணிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் என்பதும் கோலிக்கு கூடுதல் தகுதிகளாக அமைந்துள்ளதாம்.
மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார்.
ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார்.
ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர்.
தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், “நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன். தமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன்.
என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும். என் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை,” என்று கூறினார்.
இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணைய தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களுக்காக ஒழுக்க விதிகள் அறிமுகம் செய்ய உள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது. தற்போது இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணைய ஊடகங்களுக்காக புதிய சட்டம் உருவாக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 67 இணைய தளங்கள் மட்டுமே பதிவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைய தளங்களுக்கு எதிராகவோ அல்லது பதிவு செய்யப்படாத இணைய தளங்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
எனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது. சட்டத்தை உருவாக்கும் நோக்கில் பிரதிநிதிகள் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழுவொன்று இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் தலைமையில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளது.
இத்தூதுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன். எஸ். சுமந்திரன், பொன். செல்வராஜா, செல்வம் அடைக்கல நாதன் ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்கிறது.
இக் குழுவினர் இந்தியாவில் தங்கியுள்ள நாட்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி- இந்திய வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.
லண்டனிலும் புறநகர்ப் பகுதியிலும் 500000 லட்சம் (பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்ட்) பெறுமதி வாய்ந்த தங்க ஆபரணங்களை திருடிய திருடர்கள் தொடர்பில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டு காலப்பகுதியில் ஆசிய நாட்டுக்காரர்களின் தங்க மோதிரங்கள் கைச்சங்கிலி மாலைகள், வளையல்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் லண்டன் மாநகரிலிருந்து திருடப்பட்டுள்ளன.
கொலைக் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் தலைமையில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுது கெண்ட் மற்றும் எசெக்ஸ் பகுதிகளிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பல நகைகள் அதாவது 510 000 பவுண்ட் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன.
லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட கைப்பை திருட்டு சம்பவங்களின் தொடர்சியாகவே இவ்வாறு நகைதிருட்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட புலனாய்வு அதிகாரி ஸ்டிவொர்ட் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்
இவ்வாறு நகைகளை திருடிய இத்திருடர்கள தங்களுடைய ஓய்வுக்கால வருமானத்திற்காக இந்நகைகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள் என தான் நினைப்பதாக தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும், கைப்பற்றப்பட் இந்நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். நீங்கள் உங்களுடைய நகைகளை சரிவர அடையாளம் கண்டிருப்பீர்களாயின் கெண்ட் பொலிஸ்நிலை தொலைபேசி 101 இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளவும் என்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய உதவி வீடுகளுக்கான பயனாளிகள் தெரிவு குறித்து இந்தியா மீது தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கவலையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.
நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இந்திய அரசின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்லவிருக்கும் இவ்வேளையிலேயே இந்தியா மீது தமது அதிருப்தியையும் கவலையையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பொன்.செல்வராசா மற்றும் பா. அரியநேந்திரன் ஆகியோர் இந்திய உதவி வீட்டுத் திட்டம், அண்மையில் இந்து ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைகள் உட்பட மாவட்டத்தில் தற்போதைய நிலைகள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்திய வீட்டுத்திட்டம் எல்லைகளில் சிங்களக் குடியேற்றத்துக்கு வழி செய்கிறது
போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியாவினால் அறிவிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் இடம்பெயராமல் தமது கிராமத்திலே வாழ்ந்த சிங்கள குடும்பங்களும் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல எல்லைகளில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றத்திற்கும் இந்த வீட்டுத் திட்டம் உதவுவதாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் இங்கு கூறினார்.
ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடக்கிய குழுவினாலேயே பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என்ற உறுதி மொழியை இந்திய வழங்கியிருந்ததாக கூறும் அவர் தன்னைப் பொறுத்தவரை இந்தியாவின் செயற்பாடுகள் இரட்டை வேடமாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் இந்தியா மீது கடும் விமர்சனங்களை முன் வைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.
சீனாவுக்கு எதிராக இலங்கையைத் திருப்திப்படுத்த இந்தியா முயற்சிக்கிறது
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்தியா மாத்திரம் வீடுகளை வழங்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளும் வீடுகளை வழங்கி வருகின்றன. எந்த வித அரசியல் தலையீடுகளுமின்றி பயனாளிகளுக்கு அவை வழங்கப்படுகின்றன. ஆனால் இந்திய வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் அதற்கு மாறாகவே உள்ளன. சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவு காரணமாக இலங்கையை திருப்திபடுத்தும் வகையிலேயே இந்தியா நடந்து கொள்கின்றது. இந்தியாவின் உறுதிப்பாடற்ற நிலை காரணமாகவே ராஜீவ் – ஜே. ஆர் ஒப்பந்தம் என கூறப்படும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை தற்போது பாதுகாக்க முடியாமல் திண்டாடி கொண்டிருக்கின்றது என யோகேஸ்வரன் கூறினார்.
இது தான் சார்ந்த கட்சியின் கருத்து அல்ல என்றும் மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் வெளியிடப்பட்ட தனது கருத்து என்றும் அவர் கூறினார்.
அதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் இலங்கை அரசு கொண்டுவரவுள்ள மாற்றங்கள் மற்றும் அதன் மூலம் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை நீக்குதல் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இந்தியவுடன் ஆராய்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லி பயணமாகவுள்ள இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஆ.ம. சுமந்திரன், பொன். செல்வராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.
புது டெல்லியிலிருந்து கிடைத்த அழைப்பின் பேரில் செல்லும் இக்குழுவினர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அங்கு தங்கியிருந்து பல்வேறு தரப்பு பேச்சுக்களில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.
இயக்குனர் மணிவண்ணனுக்கு வந்த மாரடைப்பிற்கு காரணமே இரு தினங்களுக்கு முன்பு விகடனில் வெளியான பாரதிராஜாவின் அவதூறுப் பேட்டிதான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
பாரதிராஜாவிடமிருந்து வந்து மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குனர்கள் இருவர்தான். ஒருவர் கே.பாக்யராஜ். மற்றவர் மணிவண்ணன். இதை பலமுறை பாரதிராஜாவே கூறியுள்ளார். மணிவண்ணன் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் வேகத்துக்கு படப்பிடிப்பில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது.
அதே நேரம் மிக இளகிய மனம் படைத்தவர். தன்னிடம் பழகிய அனைவரிடமுமே வெளிப்படையாக நடந்து கொள்பவர்.
எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் கொண்டவராக இருந்தாலும் தான் பெரிதும் மதிப்பவர்கள் தன்னை அவதூறாகப் பேசினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தார். ஆயிரம் கருத்து பேதங்கள் இருந்தாலும், தான் மதிக்கும் ஒருவரை எப்போதும் மரியைதைக் குறைவாக அழைத்ததில்லை மணிவண்ணன்.
ஈழப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதியை தீவிரமாக விமர்சித்தாலும் அவரை எப்போதும் தலைவர் கலைஞர் என்றே குறிப்பிட்டு வந்தார்.
இயக்குனர் பாரதிராஜா மீதும் மணிவண்ணனுக்கு வருத்தங்கள் உண்டு. அவர் தன்னை நடத்திய விதம் அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மணிவண்ணன் எள்ளலுடன் பேசினாலும், “பாரதிராஜா என் தகப்பனைப் போன்றவர். அவரில்லா விட்டால் இன்று திரையுலகில் நான் இல்லை. என்னை இரண்டாம் முறை ஈன்றவர். அவருக்கு என் மீது அன்பிருக்கிறதோ இல்லையோ, எனக்கு எப்போதும் உண்டு. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால்கூட மன்னிச்சிடுங்கப்பா” என்று வெளிப்படையாகப் பேசியவர் மணிவண்ணன்.
ஆனால் பாரதிராஜாவுக்கோ அந்த பெருந்தன்மை துளியும் இல்லை. தன்னைவிட 12 வயது இளையவரான மணிவண்ணன் பற்றி பாரதிராஜா சமீபத்தில் ஆனந்த விகடனில் எழுதியிருந்ததைப் படித்த அத்தனைப் பேருமே முகம் சுளித்ததோடு பாரதிராஜாவை சரமாரியாகத் திட்டித் தீர்த்தனர்.
அத்தனை கேவலமான எழுத்து. இதைப் படித்த மணிவண்ணன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அவரிடம் பலரும் கருத்துக் கேட்க முயன்றனர். கடந்த இரு தினங்களாக இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது அவரது அலைபேசி. ஆனால் அவர் யாருக்கும் பதிலோ விளக்கமோ சொல்லவில்லை. ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை இந்த மனஅழுத்தமே கொன்றுவிட்டது என்பதுதான் பேச்சாக உள்ளது.
பாரதிராஜா விகடனில் மணிவண்ணன் குறித்து தெரிவித்தவை
“மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு.
அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம். ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம்.
அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனேனு சட்டுனு கேட்டுட்டான்.
அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். ´ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டி வெச்சுடலாம்னு அவங்க சொன்னாங்க.
ஒரு வருஷம் போனது மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்கனு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான்.
சரினு முடிவெடுத்து அந்தப் பொண்ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுண் நகை போட்டு அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன்.
அப்புறம் காதல் ஓவியம் படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன்.
நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்னு சொன்னான். உடனே மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன். மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி.
என்ன ஒண்ணு வாயைத் திறந்தா எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும். ஒரு ராஜா கதை இருக்குமே வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா.
ஆனா அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்கனு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு.
அப்பிடி மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்.- இப்படிக் கூறியுள்ளார்.