பிரித்தானியாவில் இந்திய மாணவர்கள் இருவருக்கு நடந்த சோகம்!!

பிரித்தானியாவில் (United Kingdom) கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த புதன்கிழமையன்று (17) ஸ்கொட்லாந்திலுள்ள(Scotland) பிரபல சுற்றுலாத்தலமான கேரி (Garry) மற்றும் டம்மல் (Tummel) என்னும் இரு நதிகள் சந்திக்கும் இடத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது, Dundee பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த 22 வயதுடைய சான்ஹக்யா பொலிசெட்டி மற்றும் 27 வயதுடைய ஜிதேந்திரநாத் கருடூரி ஆகிய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்தநிலையில், அவர்களுடைய நண்பர்கள் உடனடியாக அவசர உதவியை அழைத்தும், நீரில் மூழ்கியவர்களை உயிருடன் மீட்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த இருவருக்கும் இன்று(19) உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.

பிரித்தானிய விசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பிரித்தானியா வர வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கை மக்கள் பலரும் பிரித்தானியாவிற்கு வர வீசா விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த நிலையில் தெரியாமல் மக்கள் நிறைய பேர் போலி ILTS சான்றிதழை பெறுகிறார்கள். சிலர் தெரிந்தும் வாங்குகிறார்கள்.

இந்த சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக வழிநடத்துகிறார்கள். முதலில் இதனை அதிமுக்கிய எச்சரிக்கையாக கொண்டு எந்த ILTS குறிப்பாக இலங்கையிலிருந்து ILTS சமர்ப்பிப்பதாக இருந்தால் அதனை உள்ளக ரீதியாக அவதானிக்கிறார்கள்.

எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் அமர்ந்து பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை எடுக்கவில்லை என்றால், யாராவது உங்களுக்கு ILTS சென்டரில் தானே முகாமையாளர், தான் அங்கு பெரிய பதவியில் இருக்கிறேன் என கூறினால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

ஏனெனில் அதனை சரிபார்க்கும் போது அது போலியென உறுதியாகினால் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பிறகு பிரித்தானியா வர முயற்சித்தால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். தயவு செய்து இது தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை அச்சுறுத்தும் வெப்பம் : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டில் இன்றையதினம் 7 மாகாணங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, கிழக்கு, தெற்கு, வடமேல் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ‘எச்சரிக்கை’ அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வெயிலில் தொடர்ச்சியான செயல்பாடு வெப்ப பக்கவாதம்,வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு என்பவற்றை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேலும், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பலரது பாராட்டுக்களை பெற்ற இலங்கை சிறுவனின் உலக சாதனை!!

நுவரெலியா – லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கலைநேசன் ஹர்சித் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா ஆகியோர் அந்த சிறுவனின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமாரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் அவர் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சிறுவனின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சிறுமிக்கு மர்மமான முறையில் ஏற்பட்ட கர்ப்பம் : அதிர்ச்சியில் வைத்தியர்கள்!!

ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.  மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சிறுமி நிரபராதி என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் பலமுறை கூறியுள்ளனர்.

சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு உடல் ரீதியான எந்தவொரு தொடுகையிலும் ஈடுபட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் மரணம் தொடர்பில் பகிரங்க குற்றச்சாட்டு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில்  சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக் குழந்தைகள் பலி.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!

ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல… சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான்.

ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த காலகட்டத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த தாய் கதறும் காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாநிலம் பெடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் திரிசூல்-த்ரிஷா என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர்.

தற்போது கோடை காலம் என்பதால் வாகனத்தில் வைத்து ஐஸ்கிரீம் விற்பனை செய்வது வழக்கமாகிவிட்டது. அதேபோல் பூஜா தனது இரட்டைக் குழந்தைகளுக்கு வாகனத்தில் தங்கள் ஊருக்கு கொண்டு வந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்துள்ளார்.

அதை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மேலும், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பூஜாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைகள் உயிரிழந்தனர்.

பூஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

எனவே, இரட்டைக் குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. மாமியார் சித்ரவதை தாங்காமல் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள மட்டோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா(26). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

பேக்கரியில் வேலை செய்து வந்த ஆஷாவை பெற்றோர் வீட்டிற்கே அனுப்பி விடுமாறு அவரது மாமியார் டார்ச்சர் செய்துள்ளார். ஆஷாவின் கணவரும், அவரது குடும்பத்தினரும் அன்றாடம் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு ஆஷா தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீராம்புரா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று ஆஷாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதன் பின் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லை என்று கொடுமைப்படுத்தியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி குத்திக் கொலை.. ஆத்திரத்தில் சக மாணவன் செய்த கொடூரம்!!

கர்நாடகாவில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த மாணவன் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், BVB கல்லூரியில் MCA படித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழர் ஆவார். இவர் சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர்.

கடந்த சில நாட்களாக அவர் நெஹாவை காதலிப்பதாக கூறி அவரை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரின் காதலை நேஹா ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இந்த சூழலில் நேற்று கத்தியுடன் கல்லூரிக்கள் நுழைந்த நேஹாவை சந்திந்த ஃபயாஸ் தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். ஆனால் அப்போதும் நேஹா அவர் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், நேஹா கழுத்தில் 7 முறை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி அதிகாரிகளும் மற்ற மாணவர்களும் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனையில் நேஹா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே ஹூப்பள்ளியில் உள்ள வித்யாநகர் போலீசாரின் உதவியுடன் ஃபயாஸை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து ஹுப்பள்ளி-தர்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் கூறுகையில்,

” மாலை 4.45-5 மணியளவில் பிவிபி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மாணவி நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழன் கத்தியால் தாக்கிய சம்பவம் நடந்தது. அவரும் அந்த கல்லூரியிலே படித்து வந்துள்ளார். அவர் நேஹாவை 6-7 முறை குத்தினார்.

இவர்கள் ஒன்றாக படித்ததால் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்” என்றார்.

நேஹாவின் தாயார் கீதா ஊடகங்களிடம் கூறுகையில், “நான் அவளை அழைத்துச் செல்ல வந்தேன், அவளுடன் தொலைபேசியில் ஒருமுறை பேசினேன். நாங்கள் பேசிய ஐந்து நிமிடங்களுக்குள் குழப்பம் வெடித்தது, யாரோ அவர் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டது.. நான் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. இன்னும் என் மகள் இறந்துவிட்டாள் என்று என்னால் நம்ப முடியவில்லை.” என்று கூறினார்.

இதற்கிடையில், நேஹாவின் கொலைக்கு எதிராக ABVP மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.வித்யாநகர் காவல் நிலையத்திற்கு வெளியே இந்து ஆதரவு அமைப்புகள் மற்றும் பாஜக ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கர்நாடக பாஜக தனது அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் ” காங்கிரஸ் ஆட்சியின் நோக்கம் அராஜகம், சட்டம் – ஒழுங்கு என்பது வெறும் கனவு.

ஹூப்ளி பிவிபி கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத்தை கத்தியால் குத்தி கொன்றான் ஃபயாஸ். இன்னும் எத்தனை அப்பாவி இந்துக்களை உங்களின் திருப்திப்படுத்தும் ஆட்சிக்கு பலி கொடுப்பீர்கள் என்று பதில் சொல்லுங்கள்.” என்று தெரிவித்துள்ளது.

யாழில் பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய சிறுவன்!!

யாழில் 6 வயதுடைய தமிழ் சிறுவன் சரளமாக சிங்களத்தில் உரையாற்றி பொலிஸ் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளான்.

யாழ்.இந்துகல்லூரி ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே இந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

சித்திரவருட பிறப்பை முன்னிட்டு யாழ்.பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு இவ்வாறு உரையாற்றியுள்ளார்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் இளம் குடும்பப் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே நேற்றையதினம் (17-04-2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

2 பிள்ளைகளின் தாயான இவர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கனடாவை அதிரவைத்த பாரிய கொள்ளை சம்பவம்… இலங்கையர் உட்பட 9 பேர் சிக்கினர்!!

 

கனடாவில் கடந்த ஆண்டு 24 மில்லியன் டொலர் பெறுமதியான நகை, நாணயம் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது.

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17-4-2023 ஆம் திகதி 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது.

சுவிஸில் உள்ள சூரிச்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து காணாமல் போனது. இச் சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரம்டனை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரசாத் பரமலிங்கம் மீது ஆயுத கொள்ளை, கொள்ளைச் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவியமை, பங்களிப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

65 ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரசாத் பரமரலிங்கம் நிதி உதவி வழங்கியதாக அமெரிக்க பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த ஆயுதங்கள் புளொரிடா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியான 25 வயதான கிங் மெக்லேனே, ஆயுதங்களை கடத்திய வாகனத்தையும் செலுத்தியுள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!!

அம்பலாங்கொட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாடசாலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை நேற்றையதினம் (18-04-2024) வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், தாய்க்குக் கீழ்ப்படியாத மாணவன் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2 வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் மாணவனை தமது பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

திருடப்பட்ட 2 கையடக்கத் தொலைபேசிகளும் மாணவனின் வசம் காணப்பட்ட போதிலும் 800 ரூபா மாத்திரமே காணப்பட்டது. குறித்த மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரிக்கு ஸ்ரீபாதா தரிசனம் செய்ய கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2 வீடுகளில் இருந்தும் 121,000 ரூபா பணத்தையும், 1 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கையடக்கத் தொலைபேசிகளையும் மாணவன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த 2 ஸ்மார்ட்போன்களையும் தான் ஆசையாக திருடிச் சென்றதாக அந்த மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட பணத்தை அந்த மாணவன் உண்மையில் செலவு செய்தாரா? அல்லது வேறு இடத்தில் மறைத்து வைத்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இப்படியும் சில பெளத்த துறவிகள் : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் சாலையோரமாக மக்காச்சோளம் விற்று அன்றாட வாழ்க்கையை நடாத்திவந்த எழை தமிழ் குடும்பம் ஒன்று பெளத்த பிக்கு ஒருவர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கிய சம்பவம் ஒன்று மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று Gangasiripura Dhammaloka Thero என்ற இளம் பெளத்த துறவியே இந்த நெகிழ்ச்சியான செயலை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த நற்செயலை மேற்கொண்ட பெளத்த பிக்குக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும், அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழில் 15 வயதான மாணவர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.