யாழ் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.
நேற்றையதினம் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.
வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (01.04.2024) மாலை கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிலுள்ள கிணற்றிக்கு பக்கத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக்குலையினை வெட்ட முற்பட்ட சமயத்தில் தவறி கிணற்றிலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (28). இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சீனுவாசன் மற்றும் அவரது பெற்றோர் நடராஜன் மற்றும் எல்லம்மாள் ஆகியோர் குழந்தை இல்லாத காரணத்தை கூறி சந்தியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இது தொடர்பாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சந்தியாவின் தாய் வெங்கடேஸ்வரி, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், கடந்த 24ம் தேதி, உடல் ஓகூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள், இது தற்கொலை இல்லை .
சந்தியாவை அவரது கணவர் சீனுவாசன் வரதட்சனால் கொடூரமாக தாக்கி அதன் உச்சக்கட்டத்தில் மனைவியை தீ வைத்து எரித்து கொன்றார். அவரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முருகபாடி கூட்ரோடு சாலையில் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போளூர் டிஎஸ்பி சி.நல்லு, இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சியரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அவரது அறிக்கை கிடைத்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கோட்டாட்சியரின் விசாரணையின் அடிப்படையில் போளூர் போலீசார் நேற்று சீனுவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்து கொலை செய்யப்பட்டரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், இந்தியாவில் உள்ள நொய்டா நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது இந்திய கணவர் சச்சின் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நடந்து வரும் விசாரணையும், விவாதங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானின் சீமா ஹைதர்-இந்தியாவின் சச்சின் மீனா காதல் திருமணத்தில் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இணையத்தில் இருவரும் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
பின்னர் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டனர். சச்சின் உடன் வாழ பாகிஸ்தானின் சீமா ஹைதர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.
இப்போது சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், நொய்டா நீதிமன்றத்தில் அவரது மனைவி சீமா மற்றும் அவரது இந்தியக் கணவருக்கு எதிராக ‘திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.
குலாம் ஹைதரின் இந்திய வழக்கறிஞர் மோமின் மாலிக், குற்றவியல் சட்டத்தின் 156(3) பிரிவின் கீழ் சீமா-சச்சின் தம்பதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார்.
அவரிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமல் மனைவி சீமா இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் அவரது புதிய திருமணம் செல்லாது என்றும் நொய்டா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது, சச்சினை திருமணம் செய்து கொண்டதாக சீமா பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் சீமா சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டபோது,
அதற்கான ஜாமீன் மனுவில், குலாம் ஹைதரை தனது கணவர் என சீமா அடையாளம் காட்டி, குலாம் ஹைதரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நொய்டா காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சீமா-சச்சின் ஜோடியை நொய்டா போலீசார் கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி கைது செய்தனர். அவர்கள் வெளிநாட்டினர் தொடர்பான ஐபிசியின் 14வது பிரிவின் கீழும், குற்றவியல் சதி தொடர்பான ஐபிசியின் 120பி பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஜூலை 7ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சினின் தந்தையும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தற்போது இந்து மதத்தை தழுவி வரும் சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்ப மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சீமா தனது முந்தைய திருமணத்தில் பிறந்த 4 குழந்தைகளும் இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், சீமா ஹைதர் இந்திய குடியுரிமை கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை ஆதித்யா சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
அதிகாலையில் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென ஏசி யூனிட் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 8 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
39 வயதான பவன் உபாத்யாய், அவரது 29 வயது மனைவி திதி, அவர்களது 8 மாத மகள் தயானா மற்றும் பவனின் 69 வயது தாய் பவானி ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி அதிகாலை 3 மணியளவில் ஏசி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் புகையில் சிக்கி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த வழியாக சென்ற சிலர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயை அணைத்தபோது, வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் 4 சடலங்கள் கிடந்தன.
இந்த விபத்தில் அதே வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த பவனின் 90 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மேலே ஏற முடியாமல் தரைத்தளத்தில் தூங்குவது வழக்கம்.
இதனால், மாடியில் ஏசி வெடித்ததில் இருந்தும், புகை மூட்டத்தால் உயிரிழப்பிலும் உயிர் தப்பினார். ஆனால், குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும் சைத்ராவும் தங்கள் மகனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் சைத்ரா நேற்று காலை குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.
அவர்களை எங்கும் காண முடியவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சைத்ரா மற்றும் குழந்தை பற்றிய தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
அவர்களைப் பற்றிய விவரம் தெரிந்தால், தங்களுக்குத் தெரிவிக்கவும் என கேட்டுக்கொண்டனர். நேற்று இரவு, மங்களூரு கிராமிய பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தாயும், மகனும் இறந்து கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குழந்தையுடன் நேத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கணவர் நாகராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாணவர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.
அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு இந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் இந்திய பிரஜை ஒருவர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
டெரிக் சார்லஸ் என்ற 66 வயதான பிரித்தானிய பிரஜை மற்றும் 31 வயதான அபின் ஜோசப் என்ற இந்திய பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானிய பிரஜை கொழும்பு 3இல் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையில் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்திய பிரஜை கொழும்பு 3இல் அமைந்துள்ள C20 அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டியதன் பின்னர் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை ( 01) பதிவாகியுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பண்டாரவளை கினிகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி அவரை கொழும்பில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று சில நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடமிருந்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து , அந்த எண்ணுக்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடாக அழப்பை ஏற்படுத்து காதல் ஆசை தூண்டுவது போல் நடித்து சந்தேக நபருடன் உறவை வளர்த்துள்ளனர் .
சுமார் இரண்டு வாரங்களாக , பெண் பொலிஸ் அதிகாரி தனக்கு வேலை ஒன்று தேடித்தருவதாக கோரியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர், வெலிமடை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருவதாகவும் , அப்போது பண்டாரவளையில் சந்தித்து , கொழும்புக்கு செல்வோம் எனவும் கூறியுள்ளார். பின்னர் இடத்தை மாற்றி பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு வருமாறு பெண் பொலிஸ் அதிகாரியிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.
அதற்கமைய இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு , சந்தேக நபரை பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர் .
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online) மூலமாகவே ஓர்டர் செய்து வாங்குகிறோம்.
வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் நடைபெறும் சம்பவங்கள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்திய மாநிலமான பஞ்சாப், பாட்டியாலாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி மான்வி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் ஓன்லைன் மூலமாக கேக்கை வாங்கி இரவு 7 மணிக்கு கொண்டாடினர்.
அப்போது, அன்று இரவு 10 மணிக்கு கேக் சாப்பிட்ட மான்வி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாத்தா கூறும்போது, “இரவு 10 மணிக்கு மான்வி மற்றும் அவரது சகோதரிக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. மேலும், அவரது தாய் உலர்வதாக கூறினார்.
காலையில் மான்வியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர். மான்விக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்” என்றார். ஓன்லைன் மூலமாக ஓர்டர் செய்த கேக் கெட்டு போனதால் சிறுமிக்கு இப்படி நடந்துள்ளது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
மேலும், இது சம்பந்தமாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி மான்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166500 ரூபாவாக பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (01.04.2024) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை 19 வயதுக்கு உட்கட்ட மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அமுருதா சுரேன்குமார் களமிறங்கியிருந்தார்.
பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை கொடுத்திருந்ததுடன் துடுப்பாட்டத்தில் ஓட்டமெதுவும் பெறாது அமுருதா சுரேன்குமார் ஆட்டமிழந்தார். அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
இந்நிலையில் இலங்கையில் இருந்திருந்தால் அமுருதா சுரேன்குமார் கிரிகெட்டில் நுழைய விட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து சென்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் ஈழதமிழர்களுக்கு பெருமையாகும்.
குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
குவைத் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவரை மனைவி அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த குவைத் நாட்டவர் மற்றும் சந்தேகநபரின் மனைவி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிபில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்துள்ளதுடன், வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் (Australia) சமூக ஊடகங்கள் ஊடாக சந்தித்த நபர் ஒருவரால் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
குறித்த பெண் தனது காதலன் என்று கூறிக்கொண்ட வெளிநாட்டவருக்கு பணம் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தேசிய வங்கியின் (NAB) மெல்பேர்ன் கிளைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஆலோசகர் அதிகாரியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த டிலான் பத்திரனவிடம் இந்த பெண் வழங்கிய தகவல் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மேலதிக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
60 வயதான பெண்மணி வங்கிக்கு சென்று பணம் அனுப்ப உதவி தேவை என்று கூறினார். ஆனால் பெறுநரின் குடும்பப்பெயர் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அதுவொரு மோசடி நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் வீடொன்றில் வைத்து பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த பெண்ணின் உறவினர் உள்ளிட்ட இருவர் கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடுவெல, கொரத்தோட்டை, பட்டியவத்த வீதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உறவினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருபவராகும்.
கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு 38 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் சந்தேகநபரின் வீட்டிற்கு பழுதுபார்க்க வந்தவராகும்.
இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தாயான அஜந்தா கடுகம்பலா என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயிருந்ததாகவும், சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கம்பளை தெல்பிடிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் பொலெரோ வகை ஜீப் வண்டி ,பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜீப் வண்டியில் 15 பேர் பயணித்த நிலையில் ,10 பேர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீட்டில் கலந்து கொண்டு திரும்பிய குழுவினரின் பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.