வவுனியா தோணிக்கல்லில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபரம் செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாரான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவர் மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்தவர் என்றும் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்றைய தினம் மாலைவேளை அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன்போது அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வருகை தந்திருந்தும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்று அயலவர்கள் தெரிவிக்கின்றனர்

மேலதிக விசாரனைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கணித்தில் தனது அற்புத திறமையால் உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்!!

நாம் இந்த காலத்தில் கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் மனிதனை பார்த்திருக்க முடியாது.

ஆனால் கால்குலேட்டர் இல்லாமல் ஒரு மனிதனால் கூட்டல், கழித்தல், பெருக்கல், வர்க்க மூலம் காணுதல் என்பது சாத்தியமாக என்றால் சாத்தியம் தான் என்று மலேசியா வாழ் இந்திய சிறுவன் யாஷ்வின் சரவணன் நிருபித்துள்ளார்.

யாஷ்வின் சரவணன் ஏசியன் சாம்பியன்ஷிப்பில் கால்குலேட்டரையும் மிஞ்சிய வேகத்தில் கணித்துள்ளார் என்றால் நம்மால் நம்ம முடியுமா?

15 வயதான குறித்த சிறுவன் பிரபலமான Asia’s Got Talent நிகழ்ச்சியில் கால்குலேட்டைரை விட வேகமாக கணித்து நடுவர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்துள்ளார்.

அவர் மலேசியாவில் பிறந்தாலும், இவரின் பூர்வீகம் இந்தியா தான். இவர் தமிழரா என்று அனைவருக்கும் ஒரு பரபரப்பு ஏற்பட்டிருக்கும். இவரே இவருக்கு ஹீயூமன் கால்குலேட்டர் என்று பெயரையும் வைத்துள்ளார். கணித்தில் தனது அற்புத திறமையால், உலக மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளார்.

யாஷ்வின் சரவணன் குடும்பம் கேரளாவை சேர்ந்தாகவும் இருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் மலேசியாவில் தமிழர்களை போலவே வாழ்ந்து வருகின்றனர்.

வவுனியாவில் 160வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் இன்று (21.03.2024) காலை 7.30 மணியளவில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கைப் பொலிஸாரால் வருடா வருடம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொலிஸ் வீரர்கள் தினம் இன்று 160வது தினமாகும். அத்துடன் யுத்தகாலத்தில் உயிர்நீத்த பொலிஸாரையும் இத்தினத்தில் நினைவுகூரப்பட்டு வருகின்றனர். வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

பேச மறுத்த காதலி காதலன் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா நஞ்சப்புரா பகுதியில் வசித்து வருபவர் 24 வயது ஹர்ஷித். இவர் துமகூருவை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை, அவரது மாமா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஹர்ஷித்திற்கு பல புதிய எண்களில் இருந்து செல்போன் அழைப்பு வந்தது. அப்போது பேசிய மர்மநபர், ஹர்ஷித்தின் காதலியை தான் திருமணம் செய்ய உள்ளதாகவும், அவளை தொந்தரவு செய்ய கூடாது எனவும் மிரட்டி உள்ளார். அவரது காதலியும் ஹர்ஷித்திடம் பேசுவதை குறைத்து கொண்டார்.

இதனால் ஹர்ஷித் மனமுடைந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது தனது கையை அறுத்து, அதனை புகைப்படம் எடுத்து தனது காதலி மற்றும் அவரது தாய்க்கு அனுப்பினார். மேலும் தூக்குப்போட்டு தற்கொலையும் செய்து கொண்டார். இதுகுறித்து ஹர்ஷித் குடும்பத்தினர் உடனடியாக ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹர்ஷித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணை நடத்தினர்.

அதன்பேரில் ஹர்ஷித்தின் காதலி, காதலியின் அத்தை கவிதா, மாமா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல பெண் மருத்துவர் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் 43 வயது கிஞ்சல் ஷா. மருத்துவரான இவர் தனது தந்தையுடன் வசித்து வந்தார். இவர் மார்ச் 18ம் தேதி வீட்டருகே டாக்சியில் ஏறி பயணம் செய்தார். சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட மும்பை – நவிமும்பை அடல் சேது கடல் பாலம் வழியாக செல்லுமாறு டிரைவரிடம் தெரிவித்தார்.

அதன்படி டாக்சி டிரைவர் கடல் பாலம் வழியாக டாக்சியை ஓட்டி சென்றார். பாலத்தில் நடுவழியில் டாக்சியை நிறுத்துமாறு டிரைவரிடம் பெண் டாக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால் கடல் பாலத்தில் டாக்சியை நிறுத்த அனுமதி கிடையாது என டிரைவர் தெரிவித்தார்.

ஆனால் பெண் டாக்டர் கிஞ்சல் ஷா வலுக்கட்டாயமாக டாக்சியை நிறுத்த செய்தார். பின்னர் டாக்சியில் இருந்து கீழே இறங்கிய அவர், திடீரென பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி கடலுக்குள் குதித்துவிட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டாக்சி டிரைவர் நவிமும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படை, மீட்பு படையினர் கடலில் குதித்த பெண்ணை தேடி வந்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் தான் 8 வருடங்களாக மன அழுத்தத்தில் இருந்ததால், அடல் சேது பாலத்தில் இருந்து கடலில் குதித்து உயிரை மாய்த்து கொள்வதாக கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தற்கொலைக்கான காரணக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு!!

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

கொழும்பில் 3000 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருட்டு!!

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரின் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசிங்கவிடம் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள்,அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். மேலும் அந்த தங்கக் கடைகளில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களே இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

காத்தான்குடியைச் சேர்ந்த அஹமது முஹ்யித்தீன் உமர் ஹாசிம் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகை… பணமில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!

மலையாள நடிகை அருந்ததி நாயர் சில தினங்களுக்கு முன் பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அருந்ததி நயாரின் சிகிச்சைக்கு பணம் இல்லாமால் அவரது குடும்பத்தினர் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர், கடந்த 2014ம் ஆண்டு வெளியான, ‘பொங்கி ஏழு மனோகரா’ என்கிற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான, விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக தமிழில் வெளியான ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில், நடிகை அருந்ததி நாயர் தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதில் இருவரும் படுகாயமடைந்து சுமார் ஒரு மணித்தியாலம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் கிடந்துள்ளார்.

பின்னர் அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவரது சகோதரர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அருந்ததியின் குடும்பத்தினர், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் விரைவில் அருந்ததி குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

50 ரூபா பணத்திற்காக இடம்பெற்ற பயங்கரம் : அதிர்ச்சியில் பொலிஸார்!!

களுத்துறையில் 50 ரூபா பணத்திற்காக இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி கத்திகுத்தில் முடிந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் இன்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாதசாரி கடவையில் பெண் உத்தியோகத்தருக்கு எமனான வாகனம்!!

லொறி ஒன்று மோதியதில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று (20) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் , தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வாகனத்தில் மோதுண்டுள்ளார்.

பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

வவுனியா கோவில்குளம் ஸ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானம் மகா கும்பாபிஷேகம்-2024

இராவண ஜென்ம பூமியாகவும் குபேரபூமி எனவும் பர்பர தேசமாகவும் இலங்காபுரியெனவும் அழைக்கப்பட்ட ஈழவளத்திருநாட்டின் வடபால் அணைதட்டிப் பாய்கின்ற பாரிய நீர்நிலைகளையும் வயல்நிலங்களையும் பெரும் கானகங்களையும் கொண்ட வவுனியா மண்ணில் பெயருக்கே ஏற்றவாறு பசுக்கூட்டங்களையும் மயிலக்கூட்டங்களையும் தன்னகத்தே கொண்ட கோவில்குளம் பதிதனிலே கோவில்கொண்டு நாடிவரும் அடியவர்கள் துன்பங்களை எல்லாம் நீக்கி அனைவருக்கும் பேரின்பப் பெருவாழ்வினை அளிக்கின்ற காத்தல் கடவுளாம் எம்பெருமான ஸ்ரீதேவி பூதேவிகளோடு உடனுறையும் நாராயணப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்குமான  குடமுழுக்கு  20.03.2024   புதன்கிழமையன்று இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்து பெருமளவானபக்தர்கள் கலந்து கொண்டனர்.

தென்னிலங்கைப் பெண்ணிடம் ஏமாந்த யாழ்ப்பாண இளைஞன் : பொலிஸார் அதிரடி!!

யாழ்ப்பாண இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, 60 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தென்னிலங்கைப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிங்குராங்கொட பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.

பணம் கொடுத்தும் இளைஞனின் பயண ஏற்பாடுகள் நடைபெறாததால் , இது தொடர்பில் இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார் .

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பெண்ணை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர். இதன் போது தான் பெற்றுக்கொண்ட பணத்தினை மீள கையளிக்க தயார் என கூறி முதல் கட்டமாக 4 இலட்சம் ரூபாய் பணத்தினை இளைஞனிடம் மீள அளித்துள்ளார் .

அதனையடுத்து பெண்ணை 06 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . அதேவேளை வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண மக்கள் பெரும் தொகை பணத்தை இழந்து வருவதாக அணமையில் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்த இளம் ஆசிரியை : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரசம்பவம் நேற்று 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கரையோரப் ரயிலில் ரத்கம மற்றும் புஸ்ஸவிற்கு இடையில் 106.05 கிலோமீட்டர் மைல்கல் அருகில் நேற்று முற்பகல் 11.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாதோட்டை, புஸ்ஸ பகுதியைச் சேர்ந்த திரிமதுர சஷிமா உதயன் கனி மெனடிஸ் என்ற 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

’நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை’.. இளைஞரை கொடூரமாக தாக்கும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை ராதா!!

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலுவுடன் ‘சுந்தரா டிராவல்ஸ்’ என்ற நகைச்சுவை படத்தில் நடிகை ராதா முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் மீது பிரான்சிஸ் ரிச்சர்ட் என்ற இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ராதாவும் அவரது மகனும் சேர்ந்து தன்னை தாக்கியதாக சிசிடிவி வீடியோ ஆதாரத்துடன் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரான்சிஸ் ரிச்சர்ட் கொடுத்த புகார் உண்மை என தெரியவந்துள்ளது. நடிகை ராதா மற்றும் அவரது மகன் தருண் பிரான்சிசை தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸாருக்கு ஏற்கனவே இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. நடிகை ராதாவை கேலி செய்ததாக ரிச்சர்ட் மீது ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ராதா, தனது இரண்டாவது கணவர் வசந்தராஜா தன்னை அடிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வவுனியா சிறைச்சாலை வதைமுகாமை விட மோசமானது : சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு!!

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கொள்ளளவை விட மூன்றுமடங்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், அது வதை முகாமைவிட மோசமானது என்று வெடுக்குநாறி மலையில் கைதுசெய்யப்பட்டு விடுதலைசெய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கடந்த சிவாராத்தி தினத்தில் வெடுக்குநாறிமலையில் கைதுசெய்யப்பட்ட 8 பேர் வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். பின்னர் வவுனியா நீதிமன்றால் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த நபர்களில் இருவர் சிறைச்சாலையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பாக இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்…

வவுனியா சிறைச்சாலையினை வதைமுகாம் என்றே கூறமுடியும். எந்த ஒரு அடிப்படை வளமும் அற்ற ஒரு சிறைச்சாலையாக அது காணப்படுகின்றது. 200பேர் அளவிலான கைதிகளே அங்கு இருப்பதற்கான இடவசதி காணப்படுகின்றது.

ஆனால் நாம் விடுதலையாகும் வரை 586 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர். அத்துடன் அடிப்படை விடயங்களே அங்கு இல்லாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக நீர்வசதி மிகவும் பற்றாக்குறையாக உள்ளது.

அத்தனைபேருக்குமாக சேர்த்து சிறிய நீர்த்தொட்டி ஒன்றே அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் இயங்குவதில்லை. ஆறுவாளி தண்ணீரே ஒருநாளில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அதற்காக இரண்டரை மணித்தியாலங்கள் காத்திருக்கவேண்டும்.

இதேவேளை தற்போதை வெப்பமான காலநிலையால் கணிசமானவர்கள் சொறி சிரங்கு போன்ற நோய்களிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். உயிர் ஆபத்துக்கள் நிகழக்கூடிய வாய்ப்புக்கள் கூட அங்கே காணப்படுகின்றது.

நித்திரைகொள்வதற்கான வசதிகள் இல்லை. பல கைதிகள் மலசலகூடங்களிலும் குளியலறைகளிலும் உறங்கும் நிலை காணப்படுகின்றது. உணவின் தரம் மிகவும் மோசமானது. கிரந்தி தன்மை கூடிய சூரைமீனே தினமும் தரப்படுகின்றது. இதனால் பலர் சிரங்கு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடகவே எண்ணத்தோன்றுகின்றது. அத்துடன் பெரிய குற்றங்கள் செய்தவர்கள் சந்தேகநபர்கள், சிறிய குற்றம் செய்தவர்கள் என்று வகைப்படுத்தப்படாமல் அனைவரும் ஒரே இடத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு செல்லும் பலர் பெரிய குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலை அங்கு காணப்படுகின்றது. இதனால் குற்றவாளிகளும், குற்றங்களும் மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்ப்படும்,

இது அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரதும் வேண்டுகோளாக காணப்படுகின்றது. எனவே இந்த நிலமைமாற்றப்படவேண்டும் என்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரதநிலைய வீதியில் இன்று (21.03) மதியம் இவ் விபத்து இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரப் பகுதியில் புகையிரத நிலைய வீதிஊடாக சென்ற முச்சக்கரண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.