வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக கோரியும், பொலிசாரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று (15.03) முன்னெடுக்கப்பட்டது.
நெடுங்கேணி நகர சந்தியில் ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி, நெடுங்கேணி – புளியங்குளம் வீதி ஊடாக சென்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் வாயிலில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், உதவிப் பிரதேச செயலாளரிடம் கண்டன மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அங்கிருந்து பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரார்கள் வனவளத் திணைககள அலுவலக வாயிலில் நின்று வனவளத் திணைக்களத்திறகு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பின்னர் அங்கிருந்து சென்று நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரருடன் பேச முற்பட்ட போதும், அதற்கு மறுப்பு தெரிவித்து பொலிசாருக்கு எதிரான கோசங்களை ஆர்ப்பாட்டக்கரரர்கள் எழுப்பினர்.
இதன்போது அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸ் நிலையம் முன்பாக சுமார் அரை மணிநேரம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட மக்கள் பின்னர் அங்கிருந்து சென்று பேரூந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டத்தை நிறைவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பொலிஸ் அராஜகம் ஒழிக, வெடுக்குநாறி எங்கள் சொத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய், வழிபாட்டு உரிமையை தடுக்காதே, சிவ வழிபாட்டை தடை செய்யாதே,
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், பொய் வழக்கு போடாதே, பௌத்தமயமாக்கலை உடனே நிறுத்து” என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான செந்தில்நாதன் மயூரன், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, து.ரவிகரன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தை இன்று மதியம் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அல்வாய் வடக்கு வியாபாரிமூலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த சுரேஷ் விஜயகாந் வயது 28 என்ற ஒரு பிள்ளையின் தந்தையை உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில், தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தற்கொலையில் ஈடுபட்ட தந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(14) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலங்களும் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.
குழந்தைகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அதேவேளை , உயிரிழந்த குறித்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்திருந்ததாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர் ஒருவர், 26 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்ததற்காக ‘India Book of Records’ சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
துவரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ( Dwarikesh Sugar Industries Ltd) நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றும் தேஜ்பால் சிங் என்பவர் தான் இந்த சாதனையை புரிந்துள்ளார்.
அலுவலக விடுமுறையின் போதும் பணி இவர் விடுமுறை எடுக்காதது மட்டுமல்லாது ஞாயிற்றுக் கிழமைகள், பண்டிகை தினங்கள் மற்றும் அலுவலகம் விடுமுறையின் போதும் பணியாற்றியுள்ளார்.
நிறுவனத்தில் 1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி முதல் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டில் ஒரே ஒரு நாள் மட்டும் தனது சகோதரனின் திருமணத்திற்காக விடுமுறை எடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் 45 நாட்கள் விடுமுறையை நிறுவனம் அளித்தாலும் இவர் ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார்.
அதேவேளை மனைவி, இரண்டு தம்பிகள் மற்றும் நான்கு குழந்தைகள் என பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வரும் தேஜ்பால் சிங், ஒரு நாள் கூட அலுவலகத்திற்கு தாமதமாக சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.
14.03.2024 அன்று நடைபெறும் அமர்வின் போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜா செல்விக்கு, நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி இலங்கை இராணுவ ஊரடங்கு வேளையில் அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ். இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கும்வகையில், தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவனான புத்தளம் மாவட்டத்தில் கொட்டகை என்னும் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்பட்டது.
முன்னைய ஆண்டு மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழகப்பட்டது.
அதற்கு முன்னய ஆண்டுகளில் மாத்தளை மாவட்டத்தில் சுதுகங்கை என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாணவியான செல்வி முனியப்பன் துலாபரணி, யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமார், யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தினேஸ் விஜயதர்சினி ஆகியோர் பெற்றுக் கொண்டிருந்தனர்.
யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை இவ் ஆண்டு பெற்றுக்கொள்ளும் கிருஷ்ணராஜா செல்வியினது கருத்துப் பகிர்வு வருமாறு, எனது பெயர் கிருஷ்ணராஜா செல்வி.
நான் இரத்தினபுரி மாவட்டத்தில் கொழும்புகாமம் என்னும் கிராமத்தை பிறப்படமாகக் கொண்டுள்ளேன். எனது தந்தை தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கூலித்தொழிலாளி. நான் எனது ஆரம்பக் கல்வியை இ/ நிவி/தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஆறு வரை பயின்றேன்.
பின் தரம் ஆறு தொடக்கம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை இ/ஸ்ரீ கிருஷ்ணா தமிழ் மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை இ/இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன்.
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த பின் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது. எனக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் ஊடகக் கற்கைகள் மற்றும் சமூகவியல் பாடங்களைத் தெரிவு செய்து பயின்று வந்தேன்.
இரண்டாம் வருடத்தில் இருந்து ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கற்கைகள்துறையாக தெரிவு செய்தேன். ஊடகக் கற்கைகள் துறையை சிறப்பு கலையாக தெரிவு செய்யும் போது இதுவரை அறிமுகமே இல்லாத ஒரு துறையினை தெரிவு செய்கிறோமே என சிறு அச்சம் என்னில் ஏற்பட்டது .
பின் விரிவுரையாளர்களின் கற்பித்தல் நுட்பங்களும், எமக்கான வழிகாட்டல்கள் மற்றும் அறிவுரைகளும் எனது அச்சத்தினை போக்கி ஆர்வத்தினை என்னுள் அதிகரித்தன. ஊடகக் கற்கள் துறையில் பாடவிதானத்தோடு செயல்முறை ரீதியான கற்கைகளும் இரண்டாம் வருடம் தொடக்கமே ஆரம்பமாகின.
கெமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தல் ,சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதுதல் ,பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கான பக்கவடிவமைப்பு செய்தல், ஆவணப்படம் தயாரித்தல் ,பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுதல் போன்றவற்றை அனுபவரீதியாக செயல்படுத்துவதற்கான தளத்தை ஊடகக் கற்கைகள் துறையால் பெற்றுக் கொண்டேன்.
அத்தோடு இறுதியாண்டில் தொழில்துறைசார்ந்த பயிற்சியினை அரச நிறுவனமொன்றில் பெற்றுக் கொண்டதும் அதன் மூலம் ஒரு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையும் மிகப்பெரிய வாய்ப்பு என்றே கூறலாம்.
விரிவுரைகளுக்கு அப்பால் ஊடகத்துறை சார்ந்தவர்களின், துறைசார் நிபுணர்களின் அனுபவப்பகிர்வுகள் மற்றும் ஊடகப் பயிற்சி கருத்தரங்குகளில் பங்கு பற்றியமை போன்றனவும் எமக்கான மேலதிக அறிவையும் அனுபவத்தையும் பெற்று தந்தது.
மும்மொழி புலமை,பால்நிலை அடிப்படையில் நடுநிலையான அறிவு கற்கும் போதே தொழில் அடிப்படையிலான பிரயோக அறிவு என்பன ஊடக கற்கைகள் துறையின் மூலம் எமக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களாகும் .
தற்போது ஊடகக் கற்கைகள் துறையை சிறப்புக் கலையாகக் கொண்ட எமது சகோதரர்கள் பலர் இன்றும் பல்வேறான ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் .
இதே போல் நானும் ஊடகத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருக்கின்றது . அந்த ஆர்வத்தின் ஒரு ஆரம்பமாக ஊடக கற்கைகள் துறையினால் ஏற்படுத்தி தரப்பட்ட ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் தற்காலிக பணியாளராக சட்டமூல அலுவலகத்தில் தற்சமயம் பணியாற்றி வருகின்றேன்.
எதிர்காலத்தில் ஊடக ஒழுக்கநெறிகளுடன் கூடிய ஒரு சிறந்த ஊடகவியலாளராக எம் சமூகத்திற்காக எவ்வித பாகுபாடுகளுமின்றி பணியாற்றுவதே என் இலட்சியமாகும்.
அந்தவகையில் எமக்கான வழிகாட்டிகளாக நின்ற ஊடகக் கற்கைகள் துறையின் துறையின் முன்நாள் தலைவரும் கலைப்பீட த்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் சி. ரகுராமிற்கும் ஊடக கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறீ சங்கீரத்தனனுகும்,
விரிவுரையாளர்களான யூட் தினேஸ் கொடுதோர் மற்றும் அனுதர்ஷி கபிலன் ஆகியோருக்கும் எனக்கு கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவியாய் இருந்த எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்கப்படுகின்ற தங்கப் பதக்கத்தினை எனக்களித்து கௌரவிக்கும் நிலா நிதியம் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, நாளை 14ம் திகதி முதல் எதிர்வரும் 16ம் திகதி வரை மூன்று நாள்கள் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஒன்பது அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழாவின் போது 2 ஆயிரத்து 873 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் 46 தங்கப் பதக்கங்கள், 09 புலமைப் பரிசில்கள் மற்றும் 48 பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
ஓமானில் வீட்டு வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர், அவருடன் நெருங்கிய உறவை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம மல்வனேகம பிரதேசத்தில் வசிக்கும் 41 வயதுடைய பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஓமானில் வீட்டு வேலை செய்யச் சென்றிருந்த நிலையில், லஹிரு மதுசங்க என்ற நபரை பேஸ்புக் ஊடாக அவர் அடையாளம் கண்டுள்ளார்.
இராணுவத்தை சேர்ந்தவர் என கூறிக்கொண்டு குறித்த நபர் அந்த பெண்ணுடன் உறவை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை அழைத்து செல்வதற்காக இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்குவந்துள்ளார்.
பின்னர் குறித்த நபர், குறித்த பெண்ணுடன் கொழும்புக்கு வந்து அவரது வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு கண்டிக்கு அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.
இராணுவ முகாமுக்குச் செல்ல வேண்டும் எனக் கூறி கல்கமுவ பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பானம் ஒன்றை கொடுத்து மயங்க வைத்துள்ளார்.
குறித்த பெண் மயங்கியவுடன் ஏழரை லட்சம் ரூபாய் பணம், தங்க சங்கிலி, இரண்டு வளையல்கள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் என்பனவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண் கல்கமுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், கல்கமுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த ஜயசிறி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட பணிக்குழாமினர் நோயாளர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் வழங்கும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதுளை நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கெந்தகொல்ல பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் உள்ளிட்ட பணிக்குழாமினரே இவ்வாறு மக்களுக்கு சேவை செய்கின்றனர்.
குறித்த வைத்தியர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் இவ்வாறு சுமார் 50 நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அந்த வைத்தியசாலையின், பிரதம வைத்திய அதிகாரி சசித் பண்டார தெரிவிக்கையில், ”கடந்த வருடத்தில் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் தொற்றா நோய் கிளினிக்குகளை மேற்கொள்ளும் போது நான் கண்டது என்னவென்றால், பெரும்பாலான முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களினால் ஒரே இடத்தில் இருப்பவர்களால் எமது வைத்தியசாலைகளுக்கு வரமுடியவில்லை.
அதாவது போக்குவரத்து சிரமங்கள், மலைகளில் இருக்கிறார்கள், கடினமான வீதிகளில் உள்ளவர்கள் இருக்கிறார்கள், பொருளாதார பிரச்சினைகளால் முடியாதவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போதைய பொருளாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு நோயாளிகள் எங்கள் மருத்துவமனைக்குச் வருவதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கு பரிகாரமாக நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சையை வழங்கி அவர்களின் உடலநலத்தை முன்னேற்ற முயற்சித்து வருகிறோம்.
பணிக்குழாமினரும் இதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இந்த வேலையைச் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த நடவடிக்கை அந்த நோயாளிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க முன்னெடுக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு இளைஞர்களின் சடலங்கள் தற்போது அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கலகொட பிரதேசத்தினை சேர்ந்த பொடி மண்டிஸ் என அழைக்கப்படும் ஹலம்ப உதேஸ் மதுரங்க மற்றும் தடல்லவைச் சேர்ந்த சிதும் சஞ்சனா ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று உயிரிழந்த கவிஷ்க அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
காலி எல்பிட்டிய பிரதேசத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர் உயிரிழந்தவரின் மைத்துனரான சுதேஷ் பிரியங்கர என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கொலை செய்யப்பட்ட சிறுமி வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தமையினால் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபரை எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எல்பிட்டிய தலாவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 17 வயது சிறுமியின் சடலம் கடந்த 9 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தது.
கரந்தெனிய, தல்கஹாவத்தை பகுதியைச் சேர்ந்த ஹன்சிகா நதிஷானி, என்ற சிறுமியே அவரது மைத்துனரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இவரது சகோதரி எல்பிட்டிய மண்ணகந்த பகுதியில் வசித்து வந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ஹன்சிகாவை அந்த வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அந்த நேரத்தில், அவர் தனது சகோதரியின் கணவருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளார். கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வீட்டுக்கு வந்த மருமகன், தனது இளைய மகளை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக ஹன்சிகாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
பிறகு ஹன்சிகா வீட்டிற்கு வந்த நிலையில், மீண்டும் மறுநாள் வந்து ஹன்சிகாவை மைத்துனர் அழைத்து சென்றுள்ளார்.
இதற்கிடையில், ஹன்சிகா தொலைபேசி ஊடாக அழைத்து, வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னைக் காப்பாற்றுமாறு தனது தாயிடம் கூறியுள்ளார்.
முறைப்பாட்டை விசாரிப்பதற்காக பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய ஹன்சிகா தனது தாய் மற்றும் சகோதரியுடன் முச்சக்கரவண்டியில் எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, மேலும் இருவருடன் வந்த அவரது மைத்துனர் அவரை முச்சக்கரவண்டியில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, மற்றொரு முச்சக்கரவண்டியில் கடத்தி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்குக் கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.
இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியைக் கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.
இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி தரையில் விழுந்து உருகுவதற்கு பல மணி நேரம் சென்றதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
பனிக்கட்டி விழுந்த இடத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் எனினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வானில் இருந்து இவ்வளவு பெரிய பனிக்கட்டி வீழ்ந்தது வரலாற்றில் முதல் தடவை என பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் உதய குமார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வறட்சியான காலநிலையின் போது சிறிய பனிக்கட்டிகள் விழுவதாக கூறப்படுகின்ற போதிலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பனிக்கட்டி விழுந்தது இதுவே முதல் முறை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொரியாவில் அண்மையில் தீயினால் ஏற்பட்ட பெரும் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை இளைஞருக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரியாவின் உல்சான் நகரில் பணிபுரியும் காலியை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் நிபால் என்ற இளைஞனே இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.
கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி கொரியாவின் உல்சானில் உள்ள குளோபல் ஹவுஸின் ஐந்து மாடி ஊழியர் தங்கும் விடுதியின் இரண்டாவது மாடியில் தங்கியிருந்த இந்த இளைஞன், மூன்றாவது மாடியில் புகைமண்டலத்தை பார்த்துள்ளார்.
தீயணைப்புத் துறை உடனடியாக நிறுவன அதிகாரிகளுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்த இளைஞன், இரவு பணிக்கு செல்வதற்கு முன் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, இந்தோனேசியா, உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் குழுவொன்று அங்கு தங்கியுள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து 30 நிமிடங்களில் தீயை முழுமையாக அணைத்தனர். தீப்பிடித்த பகுதியில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
மொஹமட் நிபால் ஊடகத்திடம் கூறுகையில், கட்டிடம் புகையால் நிரம்பியதைக் கண்டு பயந்தேன், ஆனால் அந்த நேரத்தில் அவர் தனது சக ஊழியர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெள்லை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றி உள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த 10ம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தன.
இராணௌவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை தெற்கு பகுதியில் இராணுவத்தினரால் சிறு கோயில் போன்ற அமைப்புக்குள் பிள்ளையார் , சிவலிங்க உருவங்களும் இலட்சுமின் உருவப்படமும் வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.
இந் நிலையில் காணி விடுவிப்புக்கு முன்னரான காலப்பகுதியில் குறித்த சிவலிங்க திருவுருவத்தை வெள்ளை நாக பாம்பு சுற்றியிருக்கும் காணொளியானது இராணுவத்தினரால் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
அதேசமயம் குறிப்பாக இந் நாக பாம்பானது வெள்ளி , பௌர்ணமி தினங்களில் ஆலய வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தததாக அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.
குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் அபூர்வமானதாக கருதப்படும் வெள்ளைநாகம் சிவலிங்க ம்பெருமானை தருசிக்க வருவதாக கூறப்படும் சம்பவம் அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
இலங்கையில் இணைய மோசடிச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டு மக்களுக்கான விசேட கோரிக்கை ; மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி நாட்டு மக்களுக்கான விசேட கோரிக்கை ; மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடி இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிறிப்டொ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பின் சிரேஸ்ட தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு பொறியிலாளர் சாருக தமுனுகொல தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் 1609 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 110 சம்பவங்களும், பெப்ரவரி மாதம் 213 சம்பவங்களும், மார்ச் மாதம் இதுவரையில் 100 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுதல், நிதி மோசடி, சமூக ஊடகங்களின் ஊடான மோசடிகள், போலி கணக்குகளை உருவாக்குதல், அனுமதியின்றி கணக்குகளுக்குள் பிரவேசித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், பொன்னாலை கடற்படை முகாம் முன்பாக நேற்று மாலை கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு காரணம் கடந்த வருடம் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிவாங்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று கடத்தப்பட்டு கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் ஒருவர், இரண்டு வருடங்களின் முன்னர் சாதி மாறி திருமணம் செய்துள்ளார். பின்னர் 2022ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையில் அவர்களின் பிரதேசத்தில் உள்ள கோயில் திருவிழாவின் போது, அந்த இளைஞன் சுவாமி தூக்க முயன்றார்.
அப்போது சிலர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். சாதி மாறி திருமணம் செய்ததால் சுவாமி தூக்க முடியாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். கோயிலில் இருந்து வெளியேறிய அந்த இளைஞன், தனது மூத்த சகோதரனிடம் நடந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த பவித்திரன், தனது தம்பியை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்குவதாக குறிப்பிட்டு, வட்டுக்கோட்டை, மாவடியில் வைத்து, சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை வாளால் வெட்டியுள்ளார்.
அதன்பின்னர், பிரதேசத்தை விட்டு வெளியேறிய அவர், மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள பகுதியொன்றில் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.
நேற்று, மாலை 3 மணியளவில் வட்டு தென்மேற்கிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற போது, அவர் வருவதை அறிந்த குழுவினர் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.