நண்பருடன் சென்றவர் உயிரிழப்பு : நடந்தது என்ன?

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் நண்பருடன் வேட்டைக்கு சென்ற இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று (12) செவ்வாய்க்கிழமை மாலை ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவர் வேட்டைக்கு சென்ற போது அவர்கள் பயன்படுத்திய வேட்டைத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் குறித்த நபர் உயிரிழந்தமை பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சம்பவத்தில் ஓட்டமாவடி – நாவலடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இம்தியாஸ் எனும் இளைஞன் பலியாகியுள்ளார். இந்நிலையில் அவருடன் வேட்டைக்குச் சென்ற நபர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 வயது இலங்கைச் சிறுவன் புதிய உலக சாதனை!!

5 வயது இலங்கை சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். கடந்த ஜனவரி 18 ஆம் திகதி இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நுவரேலியா – தலவாக்கலையைச் சேர்ந்த பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இச் சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

யாழில் கடத்தப்பட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

காரைநகர் பகுதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று வீடு திரும்பி கொண்டிருந்த கணவன், மனைவி பொன்னாலை பாலத்துக்கு அருகில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

கடத்திச் சென்றவர்கள் கணவனை தாக்கி படுகாயங்களை ஏற்படுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக விட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் மனைவியை சித்தங்கேணி பகுதியில் வீதியில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் படுகாயங்களுடன் விட்டுச் செல்லப்பட்ட கணவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்றைய தினம் (12.03.2024) யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடலில் வெட்டுக்காயங்கள், கூரிய ஆயுதங்களால் குத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கிய காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், மூச்சுக் குழாய்க்குள் இரத்தம் சென்றதால் மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை மதிய உணவு உட்கொண்டனர் – சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர்

வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் இல்லை…

வவுனியா சிறைச்சாலையில் வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் சிறைக்காவலில் உள்ளவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்று வெளிய வந்த பின்னர் அவர்கள் நேற்றயதினம் காலை நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்படும் போதிலிருந்து தற்போது வரை அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க அவர்கள் சுகயீனம் காரணமாக காலை உணவினை உட்கொள்ளவிலை என்பதுடன் தற்போது அவர்கள் உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா நெடுங்கேனி வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களின் உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் – கஜேந்திரன்

உடல்நிலை மோசமடைவதற்கு முன்னர் அவர்களை விடுவிக்க வேண்டும் – கஜேந்திரன்

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் இன்று (13.03) பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து பொலிசாரினால் பொய் குற்றச் சாட்டுகள்களின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 8 பேருக்குமான விள்ளமறியல் நீடிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. கடந்த காலங்களில் இதே வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்களுக்கு கட்டுப்பட்டு அந்த தீர்ப்புக்களின் பிரகாரம் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர், ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் என 8 பேரை பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசார் கைது செய்தனர்.

19 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரக்தி அடைந்த 8 அப்பாவிகளும் சிறைச்சாலையில் பெரும் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். அதில் 5 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். நேற்று (12.03) காலை முதல் உணவை எடுக்க மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். இதன்காரணமாக என்ன ஆகுமோ என்ற அச்சம் அவர்களது குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசு அதாவது தொல்பொருள் திணை திணைக்களம், வனவளத் திணைக்களம், பொலிசார் கூட்டிணைந்து சிங்கள பௌத்தமயமாக்கல் திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வழிபாட்டில் ஈடுபடுகின்ற தமிழர்களை விரட்டியடித்து அந்த இடத்தில் பௌத்தமயமாக்க எடுத்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில் ஆலய பூசகரையும் பக்தர்களையும் கைது செய்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்தப் பகுதிக்கு யாரும் செல்ல முடியாத அச்சநிலையை ஏற்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்த பின்னரே தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றிடம் கடிதங்கள் பெறப்பட்டு அப்பாவிகளை குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பொய் குற்றச்சாட்டில் உள்ள 8 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். இதில் ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இவர்கள் உடல் மோசமடைவதற்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும். இவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் உடனடியாக வடக்கு- கிழக்கில் போராட்டம் முன்னெடுக்கப்படும். இதற்கான முன்னெடுப்புக்கள் பொது அமைப்புக்கள் மற்றும் சமய அமைப்புக்கள் முன்னெடுத்துள்ளனர்.

பெய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்திய நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இனவாத செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க இராஜதந்திர அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம்

உணவு தவிர்ப்பு போராட்டம்…

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றையதினம் (12.03.2024) வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து தமக்கு நீதிகோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் 12.03.2024ம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல் பொருட் சின்னங்களை சேதப்படுத்தியதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து குறித்த 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்றையதினம் (13.03.2024) காலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிட சென்றிருந்தனர். இதன் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டு நபர்களின் ஜவர் நேற்று (12.03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திலகநாதன் கிந்துஜன் , சுப்பிரமணியம் தவபாலசிங்கம் , மதிமுகராசா , துரைராசா தமிழச்செல்வன் , விநாயகமூர்த்தி ஆகிய ஐந்துபேரும் நேற்றைதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம்

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது சங்கத்திற்க்கான புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அந்தவகையில் புதிய தலைவியாக சிவானந்தன் ஜெனிற்றா தெரிவுசெய்யப்பட்டார், செயலாளராக துரைசிங்கம் கலாவதி, பொருலாளராக சர்வேஸ்வரன் கலாராணி, உபதலைவராக பேரின்பராசா பாலேஸ்வரி, உபசெயலாளராக பத்மநாதன் சோதிமலர் ஆகியோரும் 11 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.’

குறித்த நிர்வாகத்தெரிவானது வவுனியா மாவட்டத்தின் பொது அமைப்புக்களான தனியார் பேருந்து உரிமையாளர்சங்கம், முச்சக்கவண்டி உரிமையாளர்சங்கம்,தமிழ்விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பு,ஜனனம் அமைப்பு ஆகியவற்றின் முக்கியஸ்தர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றிருந்தது

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு

வவுனியா நகர சபையின் திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறப்பு…..

வவுனியா நகர சபையினால் வவுனியா ஹொரவப்பொத்தான வீதியில் மரக்கறி விற்பனை சந்தைக்கு முன்பாக திண்ம கழிவுகள் சேகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

நகர சபையின் செயலாளர் இராசையா தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தபி.ஏ.சரத்சந்திர அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன், வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வ.சுரேந்திரன், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.கிருபாகரன், நகர சபை அலுவலர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திண்மக்கழிவுகள் சேகரிப்பு நிலையமானது வாரத்தின் ஏழு நாட்களும் மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை திறந்திருக்கும்

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம் திறந்து வைப்பு – நியமனக்கடிதமும் வழங்கி வைப்பு

ஐக்கிய மக்கள் சக்தி தலமைக்காரியாலம்…

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலமைக்காரியாலம் இன்று (13.03.2024) மாலை 4.00மணியளவில் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வவுனியா அமைப்பாளர்களான பிரியதர்சினி ரசிக்கா மற்றும் ச. நிரேஷ்குமார் , அமைப்பின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதேச இணைப்பாளர்களுக்கான நியமனக்கடிதமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் மக்களுக்கு தேர்தல் தொடர்பிலான விளக்கங்களையும் கட்சியின் பொதுச்செயலாளர் வழங்கியிருந்தார்.

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு

வவுனியா செட்டிகுளத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு….

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடி நீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடி நீர் திட்டம் ஒன்று இன்று (13.03) வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நேரியகுளம் கிராம அலுவலர் ஊடகவியலாளரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் அற்புதராஜன் விஜயகுமாரி என்பவரின் நிதி உதவியில் ஊடக உறவுகளின் பாலம் அமைப்பின் ஊடாக குறித்த குடிநீர் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

செட்டிகுளம், நேரியகுளம், 5ஆம் குறுக்கு வீதியில் 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று நீண்ட நாட்களாக குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர் நோக்கியிருந்ததுடன், வீட்டுடன் கூடிய வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்தும் நீர் இல்லாமையால் வீட்டுத் தோட்டம் செய்ய முடியாது, பெண் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து தமது ஜீவனோபாயத்தை கொண்டு நடத்தி வந்தார்.

இக் குடும்பத்தின் நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு மற்றும் நீர் தொட்டி என்பன அமைத்து கொடுக்கப்பட்டது. இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். அத்துடன் குறித்த குடும்பத்தின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக குறித்த காணியில் பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

செட்டிகுளம், நேரியகுளம் கிராம அலுவலர் தேவகி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பூசணிப்பிட்டி அ.த.க பாடசாலை அதிபர் இ.சற்சொரூபன், செட்டிகுளம் பிரதே செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், நேரியகுளம் சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், சமூக செயற்பாட்டாளர் அற்புதராஜன் விஜயகுமாரி மற்றும் அப்பகுதி மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா புளியங்குளத்தில் நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து! ஒருவர் காயம்!

நெல் ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து…

வவுனியா புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். குறித்த விபத்து இன்று மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த கென்ரர் ரக வாகனம் புளியங்குளம் சந்திக்கு அண்மையில் சென்றுகொண்டிருந்த போது வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.

விபத்தில் வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்தார்.வாகனத்தின் முன்சக்கரம் வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள் – 8பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் மல்கி அழுத உறவுகள்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது

இந்நிலையில் அவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துச்செல்லும் அந்த காட்சியினை பார்த்து நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற அவர்களின் உறவினர்கள் எந்தவொரு குற்றமும் செய்யாமல் இறைவனை வழிபட்டமைக்கு இவ்வாறு சிறைவாசம் அனுப்பவிப்பதாக தெரிவித்து கண்ணீர் மல்கி அழுதிருந்தனர்

அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று (12.03) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது இன்றையதினம் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு!!

வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா – மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை துப்பரவு செய்த போது குறித்த குழிக்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை வவுனியா நீதிமன்றின் அனுமதியுடன் அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மடுகந்தை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் மரதன் ஓடிய மாணவனின் உயிரிழப்பு – விசாரணைகள் ஆரம்பம்!!

அம்பாறை – திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

அத்துடன் மாணவனின் மரணம் குறித்து இன்றைய தினம் (12.3.2024) அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி..!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சற்று முன் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான விசாரணை நீதிமன்றில்

சற்று முன் விசாரணை நீதிமன்றில்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த (09.03) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும் நீதிமன்றினுள் சென்றுள்ளனர்