படுகொலை செய்யப்பட்ட 17 வயது யுவதி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

17 வயது யுவதியொருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தல்கஹவத்த – கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஹன்சிகா நதிஷானி எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்தவரும் சந்தேகநபரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எல்பிட்டிய பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக யுவதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். உயிரிழந்த பெண் தனது மூத்த சகோதரியின் கணவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் சந்தேகநபரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் கடந்த 4ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை விசாரிப்பதற்காக கடந்த 8ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் மேலும் பலருடன் முச்சக்கரவண்டியில் வந்து தல்கஹவத்தை பிரதேசத்தில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்றுள்ளார்.

யுவதியை கடத்திச் சென்ற சந்தேகநபர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் எனவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய மற்றும் கரந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவை உலுக்கிய 6 இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான பின்னணி!!

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பார்ஹேவன் இல் உள்ள அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த கனடாவில் கல்வி கற்கும் பிராங்க் டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் பரிதாபமாக உயிரிழந்த அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நட்பின் அடிப்படையில் அவருக்கு உதவ தனுஷ்க விக்கிரமசிங்க முன்வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக் கொள்ள அவர் முயற்சித்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், தனுஷ்க விக்கிரமசிங்க தாக்குதலில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடொன்றில் இடம்பெற்ற விருந்து : இளம் யுவதிகள் உட்பட 19 பேர் கைது!!

ஹோமாகம – மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 19 பேரையும், 08 யுவதிகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மாகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட இந்த குழுவினரை சுற்றிவளைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 3 பேரிடம் இருந்து ஹாஷிஸ் போதைப்பொருளும், மேலும் மூன்று சந்தேகநபர்களிடம் இருந்த போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, காலி, கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இலங்கையர்கள் கொலை : சந்தேக நபரின் மோசமான மறுபக்கங்கள்!!

கனடாவின் ஒட்டாவாவில் வசித்த இலங்கை குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த இளைஞன் தான் படிக்கும் பாடசாலையில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒட்டாவாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றின் இளம் தாய் ஒருவரும் அவரது நான்கு பிள்ளைகளும் குடும்பத்துடன் வசித்து வந்த மற்றுமொருவருமே உயிரிழந்துள்ளனர். கொலையை செய்த 19 வயதுடைய பேப்ரியோ டி சொய்சா என்ற இளைஞனும் இவர்களுடன் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தாரின் தந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் உயிரை மாய்க்கும் எண்ணத்தில் இருந்ததாக தாக்குதலுக்கு இலக்காகி உயிர் பிழைத்த குடும்பத்தின் தந்தை பிரதேச பௌத்த விகாரையின் தலைவர் மற்றும் அவரது மற்றுமொரு நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கணவன் – மனைவிக்கு இடையில் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அடுத்தவர்களின் பிள்ளைகளுக்கு உதவ சென்றே இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் தந்தையால் மகனை சரியான முறையில் வழி நடத்த முடியவில்லை என்பதனாலேயே உயிரிழந்த பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து வைத்திருந்தார் என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

மகள் அந்த இளைஞனை அனுப்பிவிடுமாறும் கூறிய போதிலும் உதவி செய்யும் நோக்கில் தங்க வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்: நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

கடன் பெற்றவர்களுக்கு புதிய சலுகைகள்…

வங்கிகளில் கடன் பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(5) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளது.

எனவே, அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளதால் பல தொழிலாளர்களின் குடும்பங்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பராடே சட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டாலும் தற்போதும் வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானவர்கள் தங்களின் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை மீள செலுதத முடியாது என தெரிவித்து, கடன் மறுசீரமைப்புக்கு சென்றிருக்கிறது.

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும். மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஆயிரம் ரூபா சம்பளத்தில் அவர்களால் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக ஆவது அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

5000 ரூபா நாணயத்தாள் தொடர்பில்….

5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை ஊடகப்பேச்சாளரும் பிரதி காவல்துறை மா அதிபருமான நிஹால் தல்தூவ பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5000 ரூபா நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை! கல்வி அமைச்சிற்கு பறந்த கடிதம்

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடை…

வடக்கு மாகாண ஆசிரிய இடமாற்றம் தடைப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கத்தால் அவசர கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது தடைப்பட்டுள்ள வருடாந்த ஆசிரிய இடமாற்றத்தை விரைந்து செயற்படுத்தவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேவைக்காலங்கள் பூர்த்தியான பின்னர், முறையாக விண்ணப்பித்து, அதனை கல்வி வலயங்களும் மாகாணமும், ஆசிரிய இடமாற்ற சபைகளும் அங்கீகரித்ததன் பின்னர் இடமாற்றம் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணத்தை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு வெளிப்படுத்த வேண்டும், என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கத்தினால் கையொப்பமிடப்பட்டு கல்விச் செயலாளரிடம் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஆசிரிய இடமாற்றங்களினை தாமதப்படுத்துவதன் மூலம் ஆசிரியர்களை உளரீதியாக வதைத்து அவர்களின் அர்ப்பணிப்பான சேவையைத் தடுத்து அதன்மூலம் மாணவர் கல்வியை அழிக்க நாம் இடமளிக்க முடியாது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2024 ஆண்டு வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு தாபனவிதிக்கோவை மற்றும் சுற்றறிக்கைகளின்படி இடமாற்றம் வழங்கப்படுவது சட்டரீதியானது என்றும், அதனைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் இடமாற்றத்தின் மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு ஆசிரியர்களைச் சமப்படுத்துவதும். தேடுவதும் திணைக்களத்தின் கடமை என அதில் சுட்டிக்கப்பட்டுள்ளது.

தவிரவும் அந்தக் கடமைகளைச் செய்ய பலர் நியமிக்கப்பட்ட்டுள்ளனர், விண்ணப்பித்த ஆசிரியர்களை விடுவிக்கும் காலம்வரை இழுத்தடித்து அவர்களுக்குப் பதிலீடாக பிழையான தரவுகளோடு ஆசிரியர்களைத் தேடியலைவது நிர்வாகச் செயற்பாட்டிற்கு முரணானது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய துறைசார் அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களில் இவ்வாறு நடைபெறுவதில்லை என்பதனால் இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குள் இடமாற்றம் வழங்க வேண்டும். இல்லையேல் ஆசிரியர்களாகவே ஒரு முடிவினை எடுப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எனக் கூறி அந்தக் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை! படையெடுக்கும் மக்கள்

கனடாவில்10 டொலர்களுக்கு காணி விற்பனை!…

கனடாவில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய மக்கள் கூடுதல் நாட்டம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ மாகாணத்தின் கோச்ரென்ஸ் நகரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கோச்ரென்ஸ் நகரின் மேயர் பீற்றர் பொலிடிஸ் அறிவித்துள்ளார்.

நபர்கள் தங்களுக்கு விருப்பான காணித் துண்டை தெரிவு செய்து கொள்ள முடியும் எனவும் அந்த காணி 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

வீடு நிர்மானம் செய்வதற்கான கால வரையறை உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் பத்து டொலர்களுக்கு காணித் துண்டு விற்பனை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுமார் மூவாயிரம் தொலைபேசி அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நகரில் சுமார் 1500 காணித் துண்டுகள் 10 டொலர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. நகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த பத்து டொலர் காணித் துண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தக் காணித்துண்டுகளை கொள்வனவு செய்வோரே பகுதியின் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினையும் ஏற்க வேண்டுமென மேயர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவை வந்தடைந்த இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி

இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி…

இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை விமான படையின் 25வது துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி நாளை 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான இந்த துவிச்சக்கர வண்டி போட்டி ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளதுடன் அதன் நான்காம் கட்டமாக இன்று (06.03.2024) திருகோணமலையிலிருந்து வவுனியா விமானப்படை முகாம் வரையிலான துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

திருகோணமலை – வவுனியா 144.5கிலோ மீற்றர் தூரத்தினை ஓடி முடித்து முதலாவது இடத்தினை கடற்படையினை சேர்ந்த பிரபாஸ் மதுசங்க என்பவரும் இரண்டாவது இடத்தினை கதீரான ஸ்பிட் கழகத்தினை சேர்ந்த உமேஸ் விரசிங்க என்பவரும் மூன்றாவது இடத்தினை இந்தியா வீமானப்படையினை சேர்ந்த கிர்ஷ்ண நாணயக்கொடி என்பவரும் பெற்றிருந்தனர்.

குறித்த போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இறுதி நாளான நாளையதினம் 7ஆம் திகதி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும் துவிச்சக்கர வண்டி ஓட்டப் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி – மெட்டாவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

திடீரென செயலிழந்த பேஸ்புக் செயலி…

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் செயலிழந்தமையினால் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் பேஸ்புக் இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகிய செயலிகள் நேற்றைய தினம் திடீரென செயலிழந்ததால் அதன் பயனாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

எனினும் 2 மணி நேரத்தின் பின் அவை மீண்டும் வழமைக்குத் திரும்பின.

சமூகவலைதளங்கள் செயலிழந்ததற்கு தொழில்நுட்பக் கோளாறு தான் காரணம் என ‘மெட்டா’ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ‘மெட்டா’ நிறுவனத்தின் வருமானம் 1.5 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி குறித்து மற்றுமொரு அனுமதி: வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான செய்தி

வாகன இறக்குமதி குறித்து மற்றுமொரு அனுமதி…

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கால எல்லையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தை 2024 ஜூன் 30 வரை நீடிக்க கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

கோடிக்கணக்கில் சம்பளம்..! பிரித்தானியாவில் அரிய வேலைவாய்ப்பு

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து நாட்டுக்குச் சொந்தமான தீவொன்றில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அங்கு பணிக்கு வரும் மருத்துவர்களுக்கு, ஆண்டுக்கு 150,000 பவுண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்துக்குச் சொந்தமான Uists மற்றும் Benbecula தீவுகளில் கடும் மருத்துவர் பற்றாக்குறை நிலவுகிறது.

ஆகவே, பிரித்தானிய மருத்துவ அமைப்பான NHS, அந்த தீவுகளுக்கு பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 150,000 பவுண்டுகள் சம்பளம் (இலங்கை மதிப்பில் 5,84,77,279.68 ரூபாய்) வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

அங்கு பணி செய்யும் மருத்துவர்களுக்கு, வாரத்துக்கு 40 மணி நேர வேலை, போனஸ், 41 நாட்கள் விடுமுறை என பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு…

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும்.

இதற்கிடையில், உத்தேச கல்வி சீர்திருத்தங்கள் மூலம், குழந்தைகள் அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை பெற்றிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்: மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அவசர அறிவிப்பு

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்…

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உண்மைகளை முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அமைச்சரவை அறிவித்துள்ளது.

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் பிரதானிகளுக்கு அமைச்சரவை இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்தமை தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பள அதிகரிப்பு விவகாரத்திற்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜனாதிபதியும் தனது ஆட்சேபனையை தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், சம்பள அதிகரிப்பு தொடர்பான உத்தரவுகளை வழங்குவதற்கு நிதியமைச்சர் மற்றும் அமைச்சரவைக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாததால், இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு மத்திய வங்கியின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா இடம்பெறும்

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில்….

வெடுக்குநாறிமலை ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம்பெறும் என்று ஆலயத்தின் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஆலயம் தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வவுனியா நீதிமன்றிற்கு இன்றையதினம் சமூகம் அளித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், குருந்தூர் மலை விகாராதிபதி எமது ஆலயத்தினை இலக்காக வைத்து சில கடும்போக்குவாதிகளை அழைத்துக்கொண்டு அண்மையில் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் எதிர்வரும் சிவராத்திரி தினத்தன்று மக்களை அணிதிரட்டி அதனை குழப்பும் விதமான கருத்துக்களை முகநூலில் பகிர்ந்துள்ளார்.இவ்வாறு அவர் நடந்து கொள்கின்றமை மிகவும் வருத்தம் அளிக்கின்றது.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது தொன்று தொட்டு எமது மக்களால் வழிபடப்பட்டுவந்த ஒரு ஆலயம். பௌத்த கடும்போக்குவாதிகளின் தூண்டுதலின் பெயரிலேயே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிகின்றது.

இருப்பினும் எதிர்வரும் மகாசிவராத்திவிழா மிகவும் சிறப்புற இடம்பெறும் என அனைத்து மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம் என்றார்.

வவுனியாவில் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் பிறந்த தினம் அனுஸ்டிப்பு

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின்…

சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபுவின் 167 ஆவது பிறந்த தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மாவட்ட ஆணையாளர் யோ.கஜேந்திரன் தலைமையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்த நிகழ்வில் பேடன் பவல் பிரபுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சாரண மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் 10 ஆவது தேசிய ஜம்போறியில் பங்குபற்றிய சாரண மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் குருதி வங்கியில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் சாரணர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆணையாளரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஓய்வுநிலை அதிபருமான ம.ச.பத்மநாதன் அவர்களும், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும் வவுனியா வடக்கு பிரதி கல்விப் பணிப்பாளருமான ம.ஜெயரூபன் அவர்களும், சாரணர் சங்க உபதலைவரும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தின் அதிபருமாகிய தமிழழகன் அவர்களும், உதவி மாவட்ட ஆணையாளர்கள், ஜனாதிபதி சாரணர்கள், திரி சாரணர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டதுடன் குருதிக் கொடையிலும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.