வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில்….

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட கற்க்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் அழுகிய நிலையில் உள்ளமையினால் சில தினங்களிற்கு முன்னராகவே இறந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மர்மமான முறையில் உயிரிழப்பு : கொழும்பு மருத்துவருக்கு நடந்தது என்ன?

கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய மருத்துவரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இளம் வைத்திய சடலமாக மீடக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் இளம் ஈழத்தமிழ் மருத்துவரின் நெகிழ வைக்கும் செயல்!!

கனடாவின் ஸ்காப்ரோவில் மருத்துவர் ஒருவர் இசை மூலம் சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்து அதில் வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழத் தமிழ் மருத்துவர் ஒருவரே இவ்வாறு சிறுவர்களுடன் நெருங்கிப் பழகவும் அவர்களுக்கான நிதி திரட்டவும் இசையை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜின் ராஜேந்திரம் என்ற சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவரே இவ்வாறு இசை முலம் சிகிச்சை வழங்கி வருகின்றார்.

அவர் வெளியிட்ட இசைத் தொகுப்புகளின் ஊடாக கிடைக்கும் வருமானத்தை ஓட்டிசம் உள்ளிட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கான சிகிச்சைகளுக்காக பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரெஜின், மருத்துவர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த ரப் இசைக்கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் தனது இசை மூலம் விசேட தேவையுடைய சிறார்களுக்காக பாடல்களை வெளியிட்டு நிதி திரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டிலும் இசைத் தொகுப்புகள் மூலம் ஒரு மில்லியன் டொலர்களை திரட்டுவதற்கு உத்தேசித்துள்ளதாக அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த பொலிஸார் – சாரதியை கைது செய்ய முயற்சி

வவுனியாவில் சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் இன்று (03.03.2024) காலை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தியினை மறித்த போக்குவரத்து பொலிஸார் சாரதியையும் கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்விடத்தில் சற்று பரபரப்பான சூழ்நிலமை நிலவியது.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேச பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினுள் உள்நுழைந்த சமயத்தில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தமையுடன் ஊர்தி அருகே சென்ற வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொருப்பதிகாரி ஊர்தியினை இவ்விடத்தில் தரித்து நிறுத்த முடியாது அவ்வாறு தரித்து நிறுத்தினால் சாரதியினை கைது செய்வோம் எனவும் ஊர்தி சாரதியினை வாகனத்தினை விட்டு கீழே இறங்குமாறு தெரிவித்தமையினால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியது.

அதன் பின்னர் ஏற்பாட்டு குழுவினர் பழைய பேரூந்து நிலையத்திலுள்ள வாகன தரிப்பிடத்தில் ஊர்தியினை தரித்து நிறுத்தி அஞ்சலி நிகழ்வினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியாவில் சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும் – கண்ணீர் மல்கி அஞ்சலி செலுத்திய மக்கள்

சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி நிகழ்வும் இறுதி பேரணியும்…

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சாந்தன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த ஜனவரி மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் (28) அதிகாலை அவர் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது

இந்நிலையில் சாந்தனின் புகழுடல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக எடுத்து வரப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டமையுடன் பிரேத பரிசோதனை முடிவின் பின்னர் இன்று (03.03.2024) காலை வவுனியாவிற்கு சாந்தனின் புகழுடல் எடுத்து வரப்பட்டது

வவுனியா முன்னாள் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் புகலுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஊர்வலமாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதுடன் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சிகளின் பிரமுகர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் , வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தியமையுடன் கண்ணீர் மல்கி தமது கவலைகளை வெளிப்படுத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புதிய பேரூந்து நிலையம் வரை சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி சென்றடைந்தது.

அதனைத்தொடர்ந்து சாந்தனின் புகழுடல் தொடர்ந்து மாங்குளம் பகுதிக்கு 10.30 மணிக்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு பின்னராக யாழ்ப்பாணத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் அடுத்த தினமான திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

புது மண தம்பதிகளுக்கு ஏற்பட்ட சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

திருமணமான இரண்டே மாத்தில் இந்தியாவின் காஸியாபாத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி அபிஷேக்-அஞ்சலியின் உயிரிழப்பு குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைந்த இருவரும், திங்கட்கிழமை (பிப்ரவரி 26) டெல்லியில் உள்ள விலங்கியல் தோட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

அப்போது அபிஷேக், 25, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறவே, மனைவி அஞ்சலி நண்பர்களின் உதவியுடன் அபிஷேக்கை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அபிஷேக் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனையடுத்து அபிஷேக்கின் நல்லுடல், தம்பதியின் வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் காதல் கணவன் உயிரிழாந்ததை தாங்க முடியாத அஞ்சலி, யாரும் எதிர்பாரா வண்ணம் திடீரென்று , ஏழாம் மாடியிலிருந்த தங்கள் வீட்டு மாடத்திலிருந்து கீழே குதித்தார்.

கணவரின் அகால மரணத்தைத் தாங்க முடியாமல் அஞ்சலி திடீரென்று மாடத்தை நோக்கி ஓடியபோது உறவினர்கள் சுதாரித்துக்கொண்டு அவரைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.

மாடியில் இருந்து விழுந்ததில் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

 

யாழ் விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன்.. கண்கலங்க வைத்த வீடியோ!!

யாழ். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் நேற்று (01.03.2024) காலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்.

இதன்போது மாணவன் பயணித்த துவிச்சக்கரவண்டி பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்திற்கு காரணமாக பேருந்து சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மாணவனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை காப்பாற்றிய இளைஞனின் நெகிழ்ச்சியான தகவல்

தாயின் கையிலிருந்து விழுந்த குழந்தையை…

கேகாலை, கித்துல்கல பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் இருந்து கீழே விழுந்த கைக்குழந்தையின் உயிரை காப்பாற்றியமை மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

மாத்தறையை சேர்ந்த ருவன் சஜித் குமார் சூரியஆராச்சி என்ற இளைஞனே இந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

நாங்கள் குடும்பமாக ஸ்ரீ பாத சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். இரவு உணவு சாப்பிட இடம் தேடினோம்.

அப்போது நள்ளிரவு 12 மணியை நெருங்கிவிட்டது. கித்துல்கல வீதியில் ஏதோ துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது.

எனினும் அதற்கு மேல் வாகனத்தை ஓட்டி வந்துக் கொண்டிருந்த போது திடீரென சந்தேகம் ஏற்பட்டது. வானை நிறுத்தி பரிசோதித்த போது ஒரு கைக் குழந்தை ஒன்று உயிருடன் இருந்தது.

எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை எப்படி இந்த வழியில் விழுந்தது என்று நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

வீதியோரம் காடு. மிருகத்திடம் சிக்கியிருந்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாகியிருக்கும். விசாரணை நடத்துவதற்காக இந்தக் குழந்தையை கித்துல்கல பொலிஸாரிடம் ஒப்படைத்தேன்.

எனினும் பின்னர் தான் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயின் கைகளில் இருந்து குழந்தை வீதியில் விழுந்தமை தெரிய வந்ததாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு…

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் சிவில் சமூக அமைப்பு ஒன்றினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்ற ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிக்க ஆர்வமாக இருப்பதாகவும் அந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அந்தந்த நாடுகளில் இருந்து வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சிவில் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவில் அமைப்பின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் சாதகமான பதிலை வழங்கியதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியினை தடுத்து நிறுத்த திட்டம்!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…

வடக்கில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வெடுக்கு நாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் 8 ஆம் திகதி மகா சிவராத்திரி வழிபாட்டில் சைவ மக்கள் ஈடுபடவுள்ளார்கள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பௌத்த பீடம் ஒன்று பிக்கு மார்கள் இணைந்து செயற்படவுள்ளதாக அவர்களின் முகநூலில் பதிவுகளை செய்து வருகின்றார்கள் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தி.தவபாலன் தெரிவித்துள்ளார்.’

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்களில் குருந்தூர் மலையாக இருக்கலாம் வெடுக்குநாறி மலையாக இருக்கலாம் எந்த விடயங்களாக இருந்தாலும் தமிழர் தேசத்தில் நாங்கள் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

மேலும் சிங்கள பௌத்த மனநிலை உள்ள தலைவர்கள் தமிழர்களின் தீர்வினை தாம்பாளத்தில் வைத்து தரமாட்டார்கள் என்று எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கின்றார்கள் அதை காலம் உணர்த்திக்கொண்டிருக்கின்றது.

ஆகவே எவராக இருந்தாலும் தமிழர்களின் தீர்வினை தருகின்ற மனநிலையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் : திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

நாட்டின் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் சில பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாக்கு நீரிணையை நீந்திக்கடந்து புதிய உலக சாதனை படைத்த திருகோணமலை மாணவன்!!

திருகோணமலையைச்சேர்ந்த 13 வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
இவர் தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்திக்கடந்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி பாக்குநீரிணையை நீந்தி சாதனையை நிகழ்த்தி உள்ளார். குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்திக்கடந்துள்ளார். இவர் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் திஇ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவன் தன்வந்த்திற்கு அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். குறித்த சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார். இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மீள் பரிசீலனை செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சையின் மீள் பரிசீலனை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருத்தப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கையை பாடசாலைகள் ஆரம்பிக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சு, தமது பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலைகளிலேயே படிவத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் மார்ச் 07, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்! ரி.ஐ.டி விவகாரத்தை மறுக்கும் காவல்துறையினர்

கிழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 30 பேர்…

காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட 30 சந்தேக நபர்களும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் அதிகாலை நடைபெற்ற சுற்றிவளைப்பில் சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த பகுதிக்கு அதிகளவிலான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்நிலைய பொறுப்பதிகாரி டி. பி. கஜநாயக்கவை தொடர்புகொண்ட போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “காத்தான்குடியில் இன்று மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் உடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சஹ்ரானின் உறவினர்களும் உள்ளடங்குகின்றனர்.

குறித்த தரப்பினர் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நாளைய தினம் காத்தான்குடி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அத்துடன், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம், கைது செய்யப்பட்ட 30 பேரும் ஒப்படைக்கப்படவில்லை. இது தொடர்பில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை“ என தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு! ரணிலின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு

அரச ஊழியர்களின் அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும் என அதிபர் சுட்டிக்காட்டினார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

“கடந்த ஆண்டு முதல் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இத்திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படுகிறது என்பதை அறிய இன்று வில்கமுவவிற்கு வந்தேன்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, நாடு வங்குரோத்தடைந்த தருணத்தில் தான் நான் அதிபர் பொறுப்பை ஏற்றேன். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எந்தத் தலைவரும் முன்வரவில்லை.

இத்தகைய வங்குரோத்து சூழலில், மக்கள் தங்கள் தொழில்களை இழந்து, பல நெருக்கடிகளை எதிர்கொண்டனர். எனவே, நாட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன

அதன்படி நாட்டை பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தோம். அதன்பிறகு, மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில், “அஸ்வெசும” திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்தோம்.

அதன்படி அஸ்வெசும மூலம் சமுர்தித் திட்டத்தை விட மூன்று மடங்கு உதவிகளை மக்களுக்கு வழங்க முடிந்தது. இதன்படி, அஸ்வெசும நிவாரணம் தேவைப்படும் அனைவரையும் கண்டறிந்து, அவர்களுக்கு உதவிகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.

கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைக் கண்டறிந்து செயற்படுவதன் மூலம் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளது. நம் நாட்டில் சுமார் 16 இலட்சம் சமுர்த்திப் பயனாளிகள் இருந்தனர். ஆனால் நிவாரணப் பயனாளிகளின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கிறோம்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் முதல் அவர்களுக்கு 10,000 ரூபா வழங்கப்படும்.

2015ஆம் ஆண்டு நான் பிரதமராக பதவி வகித்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தேன். அடுத்த சம்பள உயர்வை பத்து வருடங்களில் வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2024 இல் அதனை வழங்க முடிவு செய்தோம்.

மேலும் நாங்கள் ‘உறுமய’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். 1935 ஆம் ஆண்டு முதல் காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் காணி உரித்து பெற்ற அனைவருக்கும் ‘உறுமய’ திட்டத்தின் கீழ் முழுமையான காணி உரிமையைப் பெறுவர்.

சட்டப்பூர்வ உரிமை கிடைப்பதால், மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வந்த பிரச்சினை தீரும். உறுமய திட்டத்தின் கீழ் 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் பத்து இலட்சம் காணி உறுதிகள் வழங்கப்படும்.

இந்த அனைத்து வேலைத் திட்டங்களின் கீழும் மக்களுக்குப் பாதுகாப்பான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். அஸ்வெசும மற்றும் உறுமய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், பிரதேச செயலகங்களுக்கு அதிகளவான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும். இப்போது நாட்டின் பொருளாதாரம் சாதகமான வளர்ச்சியைக் காட்டுகிறது.

எனவே, இந்த மாகாணத்தில் வருமான வழிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுற்றுலாப் பிரதேசமாக இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும். நவீன விவசாயம் மற்றும் ஏற்றுமதிக்கான பலசரக்குப் பொருள் கைத்தொழிலை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொக்கோ மற்றும் கோப்பித் தோட்ட அபிவிருத்திக்கு புதிய முதலீட்டாளர்களுடன் புதிய தோட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாத்தளை மாவட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மாணவர் வரவேற்பு

வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயத்தில்…

வவுனியா, அல் இக்பால் மகாவித்தியாலயத்தில் தரம் 6 மாணவர் வரவேற்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

பாடசாலையின் முதல்வர் ஏ.கே.உபைத் தலைமையில் இன்று (01.03) இந்நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதான வீதியில் இருந்து பாடசாலை பான்ட் அணி வகுப்பு மரியாதையுடன் புதிதாக தரம் 6 இல் கல்வி கற்க வரும் மாணவர்கள் அழைத்து வரப்பட்டதுடன், தரம் 7 மற்றும் தரம் 8 மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மலர் கொடுத்து வரவேற்றனர்.

அத்துடன், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் மாணவர்களின் விடயத்தில் பெற்றோர்களின் பங்கு தொடர்பில் கருத்துரைகள் இடம்பெற்றதுடன், மாணவர்களின் வருகையை நினைவுபடுத்தி பாடசாலை கற்றல் சூழலை மேலும் மெருகூட்டும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது.

இதில் பாடசாலையின் ஆசிரியர்கள், இஸ்லாமிய மதகுருமார், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.