அப்பாவுக்கு குட் பை சொல்லு… 3 வயது மகனை சுட்டுக்கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, உங்களது மகனுக்கு குட்பாய் சொல்லுங்கள் என தனது முன்னாள் கணவருக்கு அந்த பெண் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் 3 வயது மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, தாய் தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அரங்கேறியது. இதுதொடர்பான விசாரணையில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, உயிரிழந்தவர்கள் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்தவர் சவான்னா கிரிகர் (வயது 32) மற்றும் அவரது மகன் கேடன் (வயது 3) என்பது தெரிய வந்துள்ளது.

திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, கிரிகர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தனித்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி கிரிகர் தனது முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அங்கு வீட்டில் யாரும் இல்லாததை கண்டதும் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தனது வீட்டிற்கு சென்ற அவர், ஆத்திரத்தில் அங்கிருந்த தனது திருமண புகைப்படங்களை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தொடர்ந்து குழந்தை பராமரிப்பு நிலையத்திற்கு சென்று, அங்கிருந்த தனது மகன் கேடனை அழைத்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து தனது முன்னாள் கணவரை தொடர்புகொள்ளும் முயற்சி தோல்வியுற்றதால், செல்ஃபோனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “இப்போது வீட்டிற்குச் செல்ல உங்களுக்கு எதுவும் இல்லை. மேலும் நாள் முடிவில் உங்களிடம் எதுவும் இருக்காது” என கிரிகர் தெரிவித்துள்ளார்.

பிறகு சான் ஆன்டனியோ பகுதியில் உள்ள பூங்காவுக்கு மகனுடன், காரில் சென்றுள்ளார். அங்கிருந்து தனது முன்னாள் கணவரை செல்ஃபோன் மூலம் மீண்டும் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

இதையடுத்து, ”உங்கள் மகனுக்கு குட்பாய்” சொல்லுங்கள் என அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும், ”உனது அப்பாவுக்கு குட்பாய் சொல்லு, அவர் இங்கு இல்லாததற்கு மன்னித்துக் கொள் என கூறி தனது மகனுக்கு முத்தமிடும்” வீடியோ ஒன்றையும் கிரிகர் பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து தனது மகனை தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, மார்ச் 19ம் தேதி பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பூங்காவில் இருந்து கிரிகர் மற்றும் கேடனின் உடலையும், அங்கிருந்த செல்ஃபோனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கிரிகரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்களின் உறைகள், அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிக்கான தோட்டாக்களின் உறைகளுடன் சரியாக பொருந்தியுள்ளன. எனவே இது தற்கொலை தான் என்பது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நூதன முறையில் ஏ.ரி.எம் இயந்திரங்களில் பணம் கொள்ளை!!

வவுனியாவில் பெண்ணொருவரின் ஏ.ரி.எம் பண அட்டையிலிருந்த 37ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.05.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு பெண் ஒருவர் சென்றபோது அப்பணத்தை பெற நபரொருவர் உதவி புரிவதுபோல நடித்து அட்டையை இயந்திரத்தினுள் சிக்கவைத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வங்கி பாதுகாப்பு அலுவலகரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு அலுவலகரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய, வங்கியிலிருந்து 37ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருட்டுச்சம்பவம் தொடர்பில் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராவின் உதவியுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் அறிமுகமாகும் புதிய வீசா நடைமுறை!!

கனடாவில்(Canada) வாழ்பவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை அந்நாட்டுக்கு அழைத்து வருவதற்கான சிறப்பு வீசா நடைமுறையை கனடா அறிமுகம் செய்துள்ளது.

குறித்த வீசா நடைமுறை மே மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறையில் இருக்கும் என கனடா அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்த 35,700பேருக்கு, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அழைப்பிதழ்களை அனுப்புவதை நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தவர்கள், தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது வரை பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவருவதற்காக விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால், புதிய வீசா நடைமுறையை பயன்படுத்தி உங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை கனடாவுக்கு அழைத்துவர ஒரு வாய்ப்பு உள்ளது என கனடா அறிவித்துள்ளது.

இதன்படி, கனடாவுக்கு வரும் உங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை ஒரு நேரத்தில் 5 ஆண்டுகள் வரை கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், உங்கள் இருப்பை கனடாவில் இருக்கும்போது நீட்டிக்கவும் முடியும் என கூறப்பட்டுள்ளது.

குறித்த விசாவிற்குத் தகுதிபெற, அவர்களுக்கு விண்ணப்பம் செய்பவர் ஒரு கனேடிய குடிமகனாக, அல்லது, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவராக அல்லது பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோராக இருக்கவேண்டியது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட அளவிலான பணம் தங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் விண்ணப்பிக்கப்பட்ட பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி முறையான, செல்லுபடியாகும் மருத்துவக் காப்பீடு பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

காதலியை பார்க்க சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : குடும்பத்தினர் கொலை செய்தார்களா?

தனது காதலியை பார்ப்பதற்காக சென்ற நிலையில், காணாமல் போன குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதம்பே பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியிலேயே குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞன் காணாமல் போனதை தொடர்ந்து காதலியின் குடும்பத்தினர் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து நேற்றையதினம் தந்தை நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். காதலி கர்ப்பமானதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரால் அவர் கொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் பரிதாபமாக பலி!!

வெளிநாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழ் இளைஞன் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார். மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியா சென்றுள்ளார்.

தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய நிலையில் உயிரிந்துள்ளார். அவரது சடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாண இளம் குடும்பஸ்தர் : நோர்வேயில் துயரம்!!

நோர்வேயில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரிலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோர்வேயில் குடும்பத்துடன் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளி்ன் தந்தையான அரசரத்தினம் துஷ்யந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் நோர்வே வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் சினிமா பாணியில் நடந்த பயங்கரம் : பணக்கார தந்தையின் மோசமான செயல் அம்பலம்!!

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாத தம்பதியினர், வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கும் பல்வேறு அழுத்தங்கள் தந்தையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடும் அழுத்தம் காரணமாக மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதி, கொழும்பில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திய சிலர் வந்துள்ளனர்.

இதன்போது, வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின் புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீண்டும் இரண்டு இலட்சத்தை நோக்கி அதிகரிக்கும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள நிலவரம்!!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.

இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.

இன்றைய நிலவரம்

இதன்படி, இன்றைய தினம் (08.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாகவும் உள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,410 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா உட்பட பல மாவட்டங்களில் இன்று முதல் ஏற்படவுள்ள மாற்றம்.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

சாதி மறுப்பு காதல்.. கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் புல்லாணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கொத்தனார் கூலி தொழிலாளியான இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த செவிலியரான சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு அஜய்(16) என்ற மகனும் அக்ஷிதா(12) என்ற மகளும் உள்ளனர். சரண்யா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் கணவனுக்கு தெரியாமல் அதிகமாக கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை தன்னுடன் பழகிய இளைஞர் ஒருவருக்கும் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவியின் அதீத கடன் விவகாரம் கணவனுக்கு தெரியவரவே அது குறித்து மனைவி சரண்யாவிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார் பன்னீர் செல்வம். அதற்கு சரண்யா முறையான காரணம் சொல்லவில்லையென கூறப்படுகிறது.

எனவே கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அருகருகே உள்ள தெருவில் இருவரும் வசித்து வந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் பன்னீர்செல்வத்தோடும் சரண்யா அவரது தந்தையோடும் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சரண்யா பன்னீர்செல்வத்தின் மகள் பூப்பெய்த நிலையில் உறவினர்கள் இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்ததோடு கடனை சமாளிக்க நீராட்டுவிழா வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு கடனை அடைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் மகள் காலில் அணிந்திருந்த கொலுசு காணாமல் இருந்ததை பார்த்த பன்னீர் செல்வம் அது குறித்து கேட்கவே அம்மா வாங்கி சென்றதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் கேட்க போன போது சரண்யா காலில் இருந்த கொலுசும் காணாமல் இருந்ததை பார்த்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏதேதோ காரணம் சொல்லி இறுதியாக அதனை விற்றதை அறிந்து மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று இரவு பன்னீர் செல்வம் அவரது வீட்டின் முன்பாக தலை குப்புற கிடந்ததாக சொல்லப்படுகிறது.

அவரது மகன் அவரை எழுப்பி பார்த்த போது வயிற்றில் குத்துப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . . இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக சரண்யாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு சரண்யா வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் ஏ.எஸ்.பி சிவராமன் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சரண்யாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சரண்யாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

12ம் வகுப்பு தேர்வில் தோல்வி : மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா. முத்தாண்டிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த அபிநயா, அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்றிருந்த நிலையில், கணக்குப் பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். எனினும் தமிழில் 85, கணினி அறிவியலில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 360 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.

இன்று தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த அபிநயா, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது.

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம் மறுதேர்வு எழுதி உடனடியாக உயர்கல்வி பயிலலாம் என முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் வைரவன்கோவிலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் ஜெயவேலின் மகள் சௌமியா. இவர் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதினார். நேற்று முடிவுகள் வெளியான நிலையில் சௌமியா எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார்.

இதனால் மாணவி சௌமியா யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பூசேரியில் வசித்து வருபவர் சத்யா. இவர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மாணவர்களிடையே பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை.. பெண் மர்மமான முறையில் மரணம்!!

வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் புவனேஸ்வரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100 எண் கால் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று புவனேஸ்வரி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுதாகர் வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து பெண் காவலரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது.

புவனேஸ்வரிக்கும் அவரது கணவர் சுதாகருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் புவனேஸ்வரியின் தந்தை முரளி தனது மகளை கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் மனைவி இறந்ததாக தகவல் அறிந்த கணவன் சுதாகர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஓராண்டுகளே ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

வாணியம்பாடி அருகே எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மற்றும் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குளியாப்பிட்டிய இளைஞன் கடத்தல் விவகாரம் : சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் : பிரதான சந்தேகநபருக்கு பிணை!!

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.  இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இளைஞர் காணாமல்போன சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிகிதி என்ற சுஜித் பெர்னாண்டோவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரை அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர், பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை நாடளாவிய ரீதியில் தேடுவதில் அரசாங்க அதிகாரிகள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டதாகவும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராக இருந்தால், அவர் பொலிஸார் முன் வந்திருக்க முடியும் என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அரங்கில் மீண்டும் இலங்கைப் பாரம்பரிய உணவை சமைத்து அசத்திய இலங்கைத் தமிழர்!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார்.

பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.

இலங்கையின் பாரம்பரிய உணவு

எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.

எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர்.

தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.

முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்ததுடன் நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாடிய போது நேர்ந்த சோகம் : அந்தரங்கப் பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி!!

கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.

குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார். இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.