வவுனியா பூங்கா வீதியில் புலனாய்வு பிரிவிற்கு காணி வழங்குமாறு ! ஆளுநர் பரிந்துரை! ஒருங்கிணைப்புகுழு எதிர்ப்பு

வவுனியா பூங்கா வீதியில் புலனாய்வு பிரிவிற்கு….

வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை,பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது

அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்

வவுனியாவில் புகையிரத பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் – அதிகரிக்கும் விபத்துக்கள்

வவுனியாவில் புகையிரத பாதுகாப்பு கடவையில்….

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல் , புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை ஒளிப்பதிவு செய்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் வவுனியாவில் முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றமில்லை – முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர்

எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும்

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் மக்களின் நிலமைகளை கருத்தில் கொண்டு நாம் எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை என வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி கட்டண அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் அடிக்கடி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் எரிபொருளின் விலை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் மக்களின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாம் கடந்த ஒரு வருடமாக எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை

வவுனியா மாவட்டத்தில் எமது சங்கத்தின் கீழ் பதிவிலுள்ள முச்சக்கரவண்டிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 150 ரூபாவும் அடுத்த இரண்டாவது கிலோமீற்றருக்கு 100ரூபாவும் , 20கிலோமீற்றருக்கு மேல் ஒரு கிலோமிற்றருக்கு 90 ரூபாவும் அறவிடுகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாம் சாரதிகளின் நலனை கருத்தில் கொண்டும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் சிறிதளவில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு நாம் தள்ளப்படுவோம்

அடுத்ததாக எமது சங்கத்தின் கீழுள்ள சாரதிகளின் வாழ்வாதாரங்களும் பாதிப்படைந்துள்ளன இதனை யாருக்கு தெரிவிப்பது யார் நிறைவேற்றி வைப்பார்கள் என தெரியவில்லை , எரிபொருள் அதிகரிப்பு , உதிரிப்பாகங்கள் அதிகரிப்பு , திருத்துதல் செலவுகள் , லீசிங் வட்டி வீகிதம் அதிகரிப்பு போன்ற பல காரணங்களினால் எமது முச்சக்கரவண்டி சாரதிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சில குடும்பத்தினர் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளனர். அவ்வாறான நிலமையே முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு காணப்படுகின்றது.

வாழ்க்கை செலவீனம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தினசரி நான்கு அல்லது ஜந்து பயணிகள் கூட சில சாரதிகளுக்கு கிடைப்பதில்லை இதனால் பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்து முச்சக்கரவண்டியினை விற்று வேறு தொழிலினை நோக்கி செல்ல வேண்டிய நிர்ப்பத்திற்கு ஆலாகியுள்ளனர். எனவும் வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.

யாழில் கோர விபத்து : தந்தையும் 6 மாத மகளும் பரிதாபமாக பலி!!

யாழ். கோண்டாவில் – காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இனுவில் கிழக்கு புகையிரத கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (14.02.2024) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வானில் பயணித்த வேளை, இனுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான மூவரில் கணவன் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரசவ நாளில் தேர்வு… நீதிபதியாக சாதனை படத்தை பழங்குடியின இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டுகள்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகும் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி என்ற பெண். மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர், ஏலகிரி மலையில் கல்வி கற்றார்.

இதைத்தொடர்ந்து B.A.,B.L., சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனினும் படிப்பை கைவிடாத இவர், தனது குடும்பத்தினர் உறுதுணையால் சட்டப்படிப்பை முடித்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்த இவர், அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கும் வகையில், தேர்வு தேதியின்போது, இவருக்கு பிரசவ தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.

இதனால் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட இவர், ஒரு பக்கம் குழந்தை மறுபக்கம் புத்தகம் என இருந்து தேர்வுக்கு முழுமையாக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பிரசவித்து 2 நாட்களில் தேர்வு. இதற்காக மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேர்வு எழுத புறப்பட்டார்.

சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வெழுத சென்னை சென்றார். அங்கே வெற்றிகரமாக தேர்வு எழுதினார். இந்த நிலையில் தற்போது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக சாதித்து காட்டியுள்ளார்.

பழங்குடியினர் பிரிவை சேர்ந்த வெறும் 23 வயதே ஆன இளம்பெண், குழந்தை பிறந்து 2 நாட்களில் பல கி.மீ பயணித்து தேர்வுக்கு சென்ற நிலையில், அவரது முழு முயற்சிக்கும் பலன் கிட்டியது போல் இன்று சாதித்துள்ளார். தற்போது ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மனைவியை கதறக் கதற கொலை செய்த கணவர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக சியாமளா தேவி, வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் சியாமளா தேவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்தம் பீறிட்டு வெளியே வந்த நிலையில் சியாமளா தேவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்தார்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் செய்கிற வேலையா இது.. பள்ளி சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை..!

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நாளில் பல்கலைக்கழகத்தில் மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை : அதிர்ச்சியில் சக மாணவர்கள்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம், நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் (வயது 20) பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத் நேற்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் தனது விடுதி அறையில் மஞ்சுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் கௌகிவாலி பள்ளி அகிலா(19). இவர் விடுதியில் தங்கி இருந்து பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன் கோயில் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலனுடன் சேர்ந்து மது அருந்திய கல்லூரி மாணவி திடீர் மரணம்!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், காதலனுடன் சேர்ந்து மது அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழந்தஹ்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது போதை பழக்கத்தால், இளம்பெண் ரிதி ஏஞ்சலின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவரது தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.

அதே போன்று ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரிதி ஏஞ்சல் (19). இவரும், ஆகாசும் ஊட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்த பழக்கத்தில், அதன் பின்னரும் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்களது நெருக்கமான பழக்கம், நாளடைவில் காதலாக மாறிவிட்டது.

இதற்கிடையே ரிதி ஏஞ்சல் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியிலும், ஆகாஷ் நீலகிரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தனர். காதலர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க ரிதி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்தார். அங்கு காதலி ரிதி ஏஞ்சலை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட ஆகாஷ், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்தார். இதைத் தொடர்ந்து ஆகாசும், ரிதி ஏஞ்சலும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் அதையும் சேர்த்து இருவரும் சாப்பிட்டு உள்ளனர்.

இதனால் போதை தலைக்கு ஏறி இருவரும் நிலைகுலைந்து காணப்பட்டு உள்ளனர். பின்னர் 2 பேரும் தூங்கிவிட்டனர். காலையில் கண்விழித்து எழுந்த ஆகாஷ், ரிதி ஏஞ்சல் படுக்கையை விட்டு எழுந்திரிக்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். எவ்வளவோ எழுப்பியும் ரிதி ஏஞ்சல் எழுந்திருக்கவில்லை என்பதால், 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார்.

அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, ரிதி ஏஞ்சல் இறந்து விட்டார் என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆகாஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ரிதி ஏஞ்சல் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து!!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் நேற்று (13.02) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 1700 வருட பழைய வாய்ந்த முட்டை!!

இங்கிலாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள பெர்ரிஃபீல்ட்ஸ் எனும் இடத்தில் 1700 ஆண்டுகள் பழமையான முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த முட்டையை ஆய்வு செய்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், முட்டையின் உள்ளே மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக பாதுகாக்கப்படும் விடயமானது ஆச்சரியமளிப்பதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் இங்கிலாந்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடுல்ஃப் கருத்து தெரிவிக்கையில், ‘‘மனித தலையீடு இல்லாமல் 1,700 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக் கருவைக் கொண்ட உலகின் ஒரே முட்டை இதுவாகும்.

மேலும், இந்த முட்டை எந்த பறவை இனத்தினுடையது என்பது பற்றி மேலும் அறிய ஒரு தனித்துவமான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கென்ட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டபோது முட்டைக்குள் உள்ள திரவ உள்ளடக்கத்தை உறுதிப்படுத்த முடிந்தது” என கூறியுள்ளார்.

வீட்டிலிருந்து கடைக்கு சென்ற குடும்பஸ்தர் அடுத்த நாள் சடலமாக மீட்பு!!

கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை அண்டிய கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டதுடன் சடலத்தை அடையாளம் காண்பதற்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. சம்ப்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் (12.02.2024) மீட்கப்பட்ட இந்த சடலம், மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 59 வயதான கதிரவேல் பத்மராஜ் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தெரிவித்து வெளியே சென்றதாகவும் சடலமாக மீட்கப்படும் வரை அவரை தேடியும் கிடைக்காததினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை குடும்பத்தினர் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கல்முனை பகுதியில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது என்பதை அறிந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சென்று அங்கே பிரேத அறையில் வைக்கப்பட்ட சடலம் தனது கணவர் தான் என்பதனை உறுதிப்படுத்தியதாகவும் மரணமடைந்தவரின் மனைவி தெரிவித்தார்.

இந்த நிலையில் உயிரிழந்த குடும்பஸதரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை உலுக்கிய ஆயிஷா சிறுமியின் மரணம் : குற்றவாளிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!

களுத்துறை – அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 27 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு பாணந்துறை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளது.

பண்டாரகம, அட்டலுகம பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலை சம்பவம் முழு நாட்டையும் உலுக்கிய கொடூரச் சம்பவமாக பதிவானது.

கோழி வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுதினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபருக்கு இன்றையதினம் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இளைஞன் பலி : தவிக்கும் இளம் மனைவி!!

கொரியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதிவாகி உள்ளது. பல வருடங்களாக தென் கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் இலங்கைக்கு வந்த நிலையில் மீண்டும் அங்கு செல்ல தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கம்பளை போவல, பலதொர பிரதேசத்தில் வசிக்கும் இளம் வர்த்தகரான மகேஷ் சமரநாயக்க (30) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருமணமான அவர் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் இயந்திரங்கள் மூலம் மரம் வெட்டும் தொழில் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். இதன்போது மரம் ஒன்றை வெட்டும் போது அது அவர் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தலையில் அடிபட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரும் அவரது மனைவியும் கொரிய பரீட்சையில் சித்தியடைந்து மீண்டும் கொரியா செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது இந்த அசம்பாவித சம்பவத்தை எதிர்கொண்டனர்.

பிரேத பரிசோதனையை மேற்கொண்ட கம்பளை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அமிலதா மரம் விழுந்ததில் தலை மற்றும் மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அழகு கலை நிலையத்திற்கு சென்ற பெண் செய்த மோசமான செயல்!!

களுத்துறை – மொரகஹஹேன கோனபொல பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த அழகு கலை நிலையத்திற்கு கள்ளக்காதலனுடன் வந்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்ற பெண், சம்பவ தினத்தன்றே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரான பெண், வைத்தியசாலையில் இருந்து தப்பி அயல் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் 14,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தப்பியோடி ஒளிந்திருந்த பெண்ணை மொரொன்துடுவ பிரதேசத்தில் வைத்து 19 நாட்களின் பின்னர் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பிலியந்தலை மடபாத பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலன் மீது கொடூரமாக பலமுறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்ட இளம் காதலி!!

கம்பளையில் பல வருட காதலை முடிவுக்கு கொண்டுவர முயன்ற காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய காதலி எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

19 வயதுடைய சந்தேகநபரை காதலி கம்பளை பதில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி கம்பளையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 22 வயதுடைய ஒருவருடன் பல வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். சில நாட்களாக காதலன் தன்னை தவிர்ப்பதை அறிந்த இளம்பெண் இது குறித்து காதலனிடம் கேட்க முடிவு செய்துள்ளார்.

காதலன் தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று கூறியதும், காதலனை வேறு பெண்ணை காதலிக்க கூடாது என எண்ணி அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படத்தை அந்த யுவதி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செயலால் ஆத்திரமடைந்த காதலன், அந்த புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு காதலியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த காதலனை சந்திப்பதற்காக காதலியின் தாயும் சகோதரனும் கம்பளை பொதுச்சந்தைக்கு வந்துள்ளனர். ​​காதலியின் சகோதரனை காதலன் தாக்கியதில், படுகாயமடைந்த சகோதரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் குறித்த இடத்தில் இருந்த காதலி மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனை பல தடவைகள் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது கடைக்கு அருகில் இருந்த பலர் அந்த இளம் பெண்ணை கட்டுப்படுத்தி, கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த காதலனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான காதலி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

உலகிலே மிகக்குறைந்த சம்பளம் வழங்கும் நாடு : இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

2023ஆம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக மாதாந்த சம்பளம் மற்றும் குறைந்த மாதாந்த சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் இருக்கும் நாடுகள் தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

குறித்த அறிக்கையை சிஈஓ வோர்ல்டு இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 105 நாடுகள் குறித்து தகவல்கள் எடுக்கப்பட்டன.

அந்த அறிக்கையின் படி, உலகில் குறைந்த சராசரி சம்பளம் பற்றிய பட்டியலில் இலங்கைக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

இதிலே இலங்கை 105 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் ஆசியக் கண்டத்தில் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைந்த ஊதியம் கொண்ட நாடாகவும் இலங்கை (US$ 143.46) பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச மட்டத்தில் சுவிட்சர்லாந்து கூடுதல் ஊதியம் வழங்கும் நாடாகவும் ( US$6142.1 ) ஆசியக் கண்டத்தில் சிங்கப்பூர் அதிகூடிய ஊதியம் வழங்கும் நாடாகவும் (US$4350.79) பட்டியலிடப்பட்டுள்ளது.

அதே நேரம் சர்வதேச ரீதியாக 104 நாடுகளை கொண்டு நடத்தப்பட்ட பலம்வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 96வது இடத்தையே பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.