பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின் கும்பலுடன் தொடர்புடைய 2 யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது, போதைப்பொருள் உட்கொள்ள வந்த மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களுடன், 250 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 15 போதை மாத்திரைகள், இலத்திரனியல் தராசு, சுருட்டு சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் காகிதம், 8 கையடக்கத் தொலைபேசிகள், 2 லைட்டர்கள் மற்றும் போதைப்பொருள் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் பொலத்தீன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று (18.02.2024) பணம் கேட்ட குடும்பஸ்தருக்கு வீட்டார் பணம் கொடுக்காததால் இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால் குடும்ப அங்கத்தவர்களோடு வன்முறைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
புத்தளம் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய ஜி.ஜி.அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்த நாள் விழாவின் போது இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மினுவாங்கொடை, பன்சில்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போது மினுவாங்கொடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அனுராதபுரத்தில் மகன் திடீரென உயிரிழந்தமையை தாக்க முடியாத தந்தை உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 10 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், அவரது இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
எனினும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்தால் அவரது தந்தையும் மனம் உடைந்து விஷம் அருந்திய நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த உடற்கட்டமைப்பாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் குடித்துவிட்டு வந்து வீட்டின் அருகே கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.
எனினும், இந்த நபர் தாக்கப்பட்டரா?, அவரது உடலை வளர்க்க பயன்படுத்திய ஊக்கமருந்துகளால் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நிலை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த உடற்கட்டமைப்பு வீரரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற வான் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் வானும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர்.
குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான,
பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001), சொய்சா (67436), டிசாநாயக்க (34831), பொலிஸ் கொஸ்தாபர்களான குமார (77779), விதுசன் (91800) ஆகியோரினால் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிசார் இன்று சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 80000 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, புதிய சாளம்பைக்குள மக்களின் முறைப்பாட்டையடுத்து வவுனியா மாநகரசபையின் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று (17.02) பார்வையிட்டார்.
வவுனியா மாநகரபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கழிவுகள் வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த கழிவுகளால் அதன் அருகில் உள்ள புதிய சாளம்பைக்குளத்தில் வாழும் மக்கள் தாம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கழிவுகள் காற்று மற்றும் நீர் ஊடாகவும், கால்நடைகள் மூலமாகவும் தமது குடிமனைக்குள் வருவதாகவும் இதனால் நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புதிய சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனிடம் முறையிட்டடிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பகுதி மக்களுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இன்று (17.02.2024) இந்நிகழ்வு இடம்பெற்றது.
யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் விலங்குகளால் விவசாய செய்கைக்கு சேதம் ஏற்படுத்தப்டபட்டு வருகின்றது.
இதன் காரணமாக, பல விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் என்பன பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகளின் விவசாய செய்கைக்யை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 125 பேருக்கு குறித்த விவசாய பாதுகாப்பு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல பொருட்கள் மீட்கப்பட்டதாகவும், 30 இற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் என பல வகையான பொருட்களை திருடிய சம்பவங்களுடன் இருவரும் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெருந்தொகை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் நேற்று (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைபயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகரசபை வளாகத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டர் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
நடைபயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக குறித்த பெண் வருகை தந்த போது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் இரவு முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட ஆறு அரை லட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுண் நகைகளும் உடமையில் இருந்து மீட்கப்பட்டதுடன், திருட்டுச் சம்பவத்தின் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண் ஒருவர் சந்தேக நபருக்கு உணவு வழங்கிய நிலையில் சந்தேகநபரும் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
உணவு கொடுத்த பெண்மணியின் மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகளின் 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னர் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, பிரதேசவாசிகள் இணைந்து சிறுமிய தேடியுள்ளனர்.
காவலாளி சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தாக அயவலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, பிரதேச இளைஞர்கள் காவலாளியிடம் விசாரணை செய்தனர். எனினும் தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென கூறினார். இளஞர்கள் சிறுமியை தேடுவதில் ஈடுபட காவலாளி வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.
இதையடுத்து காவலாளி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளிக்கு , தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர்.
தகவலறிந்து பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர். பொலிஸார் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது சிறுமியின் பின்னால் காவலாளி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன. அதோடு சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.
இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சந்தேக நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சந்தேநபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று (16.02) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.
அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்க்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல்,
புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை ஒளிப்பதிவு செய்த காணொளிகள் , புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வடமாகாண மக்கள் முறைப்பாடுகள் , போதைப்பொருள் போன்ற தகவல்களை தமிழ் மொழி மூலம் வழங்குவதற்காக 107 எனும் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் என்னக்கருவில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் 107 அவரச அழைப்பு மத்திய நிலையம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ளமையுடன் எதிர்வரும் 17ம்திகதி பாதுகாப்பு அமைச்சர் , அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.
17.02.2024 ம் திகதி முதல் இவ் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை செயற்படுத்தப்படவுள்ளமையுடன் இதன் மூலம் மக்கள் இலகுவான முறையில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கக்கூடியதாகவிருக்கும் அல்லது 107COMPLAINTSCENTER@POLICE.GOV.LK என்ற ஈமெயில் மூலமும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களின் தகவல்கள் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படும் எனவும் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பவர்களின் விபரங்களும் சேமிக்கப்படாது எனவே மக்கள் தயக்கமின்றி தமிழ் மொழி மூலம் 107 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.