வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்து முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய நபர்கள் : பொலிஸார் விசாரணை!!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர்.

இதன் போது வீட்டிற்குள் உள் நுழைந்த 5 பேர் கொண்ட இனம் தெரியாத குழு ஒன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியினை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

கட்டார் வாகன விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் சோகம்!!

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்று வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் வயது 24 என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று தகனம் செய்யப்படவுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகனையும் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு யாழ் நோக்கி வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் விபத்திற்குள்ளானதில் தாயொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனனர்.

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனது கணவரையும், மகனையும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரேஞ் ஜூஸ்!!

இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஒரேஞ் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஒரேஞ் ஜூஸின் விலை 4565 ரூபா எனவும், வரிகள் 1055 ரூபா எனவும், சேவைக் கட்டணம் 456 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கள் காரணமாக பல ஹோட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பில் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு!!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது.

கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது.

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து விபத்து : ஒருவர் பலி!!

யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துதானது கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.

சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அழகி வெற்றி!!

சமோவா மாநிலத்தில் முதன்முறையாக இடம்பெற்ற சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழகி ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

சர்வதேச மிஸ் குளோபல் அழகி போட்டியில் சமோவா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முத்து குருப்பு என்ற யுவதியே இரண்டாம் இடத்தைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரது தாயார் சமோவா நாட்டைச் சேர்ந்த பெண் எனவும், தந்தை இலங்கையர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச மிஸ் குளோபல் அழகிப்போட்டியில் இணையும் வாய்ப்பையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளுக்கு டுபாய் நாட்டில் வாழும் கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவரே தலைமை தாங்கியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்துருவ றோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளரான அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேராவை கொலை செய்வதற்கு இதற்கு முன்னரும் ஒருவரை கொஸ்கொட சுஜி, நியமித்திருந்தார் என தெரியவந்துள்ளது.

சமன் பிரசன்ன நொடிப்பொழுதில் உயிர் பிழைத்ததாகவும், அவரது வெளிநாட்டு முதலீட்டாளர் சுடப்பட்டு காயமடைந்ததாகவும் பாதாள உலகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எஸ்.டி.எப் நந்துன் என்பவர் இருந்த காலத்திலிருந்து கொஸ்கொட சுஜீக்கும், சமனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுஜீயின் எதிரிகளான கொஸ்கொட தாரக உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையினால், அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, சமன் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீயை இலங்கைக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்கல்ல அசேல என்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சாட்சியமளித்தவரை கொலை செய்த சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சமன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் அன்று, அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமன் பெரேராவுக்குச் சொந்தமான டிபென்டரில் அந்த 5 பேரும் சம்பவ வழக்கில் பங்கேற்க வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியாவை வந்தடைந்த மடு மாதாவின் திருச்சொரூப பவனி!!

மடு தேவாலய மாதாவுக்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது.

1924ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான நிகழ்வாகும்.

இதற்கமைய இந்த ஆண்டும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சொரூபம் மடுவிலிருந்து மன்னார் , வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையிலேயே மடு மாதாவின் திருச்சொரூபம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது. குறித்த பவனியினை வரவேற்கும் முகமாக வரவேற்பு நடனம், பட்டாசுகள் , பேனர்கள், ஒளி அமைப்புக்கள் என பல்வேறு விதங்களின் பவனிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இன்றைய திருச்சொரூப பவனியில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் ஆரம்பித்து 7வருடங்கள் நிறைவுற்ற நிலையில் (2529 ஆவது நாள்) இன்று (23.01.2024) மதியம் 12 மணியளவில் அவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு கதறி அழுது போராட்ட களத்தில் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்களாக இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 30க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்து தரிந்து நின்றுள்ளது.

இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வருகை தந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

இதன் போது இரு பேரூந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேரூந்தின் லைட் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச, தனியார் பேரூந்து ஆகிய இரு பேரூந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

கட்டுநாயக்க நோக்கி பயணத்துக் கொண்டிருந்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை இடமாறலில் பல வாகனங்கள் நேற்று(22.01.2024) பணம் செலுத்தும் கருமபீடத்திற்கு அருகில் வரிசையில் நின்றுள்ளன.

இதன்போது பின்னால் வந்த கெப் ரக வண்டியொன்று அந்த கார்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இரு பேரூந்துகள் மோதி கோர விபத்து!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் அல்லைப்பிட்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் படு காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து சம்பந்தமான முழுமையான விபரம் விரைவில்..

எலி கடித்ததால் பெரும் அவதி : மன உளைச்சலுக்கு ஆளான பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

எலி கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையாமல் அவதிப்பட்டு வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மகள் குருவம்மாள் (வயது 32). அவருக்கு திருமணமாகவில்லை. இவர் கொரோனா பாதிப்பின் போது ஒப்பந்த அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவம்மாளை எலி கடித்துள்ளது.

இதனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சரியாக குணமடையாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டார். இதனால் மன வேதனையடைந்த குருவம்மாள் கடந்த 18ம் தேதி வீட்டில் கத்தியால் கழுத்து மற்றும் கைகளை திடீரென அறுத்து கொண்டார்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குருவம்மாள் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து குருவம்மாளின் தாய் வசந்தி (53) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி : அமைச்சர் அறிவிப்பு!!

மரக்கறி..

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உணவு பாதுகாப்பு கொள்கைக்குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என கூறியுள்ளார். இதேவேளை,

கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறிகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் ரசம் : இப்படியும் இலகுவாக செய்யலாம்!!

உடல் எடையை குறைக்க..

நெல்லிக்காயைப் பயன்படுத்தி ரசம் செய்யலாம் தெரியுமா? நெல்லிக்காய் கண்கள், முடி, தோல், இதயம் மற்றும் செரிமான அமைப்புக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஆகவே நெல்லிக்காய் வைத்து எப்படி தினசரி சாப்பிடும் உணவில் ரசமாக சேர்த்துக்கொள்ளலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பேஸ்ட் – 1 கப்

மிளகு – 1/2 தேக்கரண்டி

தக்காளி – 1

எண்ணெய் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 5 பல்

சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி

உப்பு

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலைகள்

இஞ்சி

தண்ணீர் – 2கப்

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் மிக்ஸியில் பூண்டு, சீரகப் பொடி, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் நெல்லிக்காய் பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொதித்தவுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான நெல்லிக்காய் ரசம் தயார்!