மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் எடுத்த விபரீத முடிவு!!

ஹொரணையில்..

ஹொரணை பிரதேசத்தில் வாகன விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து, துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். கடந்த 20ஆம் திகதி, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் அவரது கணவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய கணவனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு கிடைத்து சென்ற போது மனைவி உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் வீட்டிற்கு வந்தவுடன் விஷம் குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!!

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25.01) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தேசத்தில் தற்போது வசிக்கும்,

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!!

இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் 24.01.2024 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரனிடம் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சாரணன் யோகதாஸ் கஜேந்திரன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும் ஆவர். இவர் 2002ம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய நட்புறவு பாசறையில் இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்தார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டாவாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 28 அகவை உடைய க.நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைதுசெய்துள்ளனர்.

விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அமெரிக்க இளைஞனை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி தமிழக பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள்.

இவர்களுடைய மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியாவுக்கு நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும் மைக்கேல், ஏஞ்சல் தம்பதியின் மகனான மென்பொருளாளர் சாம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களுடைய நட்பு, காதலாக மாறியது.

இதனைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால், பிரியா தனது வீட்டில் இதை பற்றி தெரிவித்து பெற்றோர் சம்மதத்தை பெற்றார்.

ஆனால், பிரியாவுக்கு அமெரிக்காவில் திருமணம் செய்வதை விட, இந்திய முறைப்படி சொந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் ஆசை இருந்ததால் அதனை சாமிடம் தெரிவித்தார். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து தனது பெற்றோருடன் அமெரிக்காவில் இருந்து சிவகங்கைக்கு வந்தனர்.

அங்கு, சில நாட்களாக திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை காரைக்குடியில் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி மாக்கோலம், மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை, நாதஸ்வர இசையுடன் கெட்டிமேளம் முழங்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது சாமின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து உற்சாகத்துடன் மணமக்களை வாழ்த்தினர்.

மனைவியைக் கொன்ற கணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

கேரளாவில்..

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பகுதியில் பினு (40), ஷீஜா (38) ஆகியோர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலையில் இந்த தம்பதிகளின் குழந்தைகள் இருவரும், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் அழுதபடியே வீட்டிலிருந்து அருகில் உள்ள வீடுகளை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று வீட்டிற்குள் பார்த்தபோது,

அங்கு ஷீஜா, அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 11 மற்றும் 8 வயது சிறுவர்கள் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் உள்ள கொரட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் ஆய்வு செய்தபோது அது பினு என்பது தெரிய வந்தது. இதனால், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிவிட்டு, பினு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சற்று உடல்நலம் தேறிய பிறகே, இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனை : உலகம் முழுக்க நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில்..

நீங்கள் அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக நாம் ஹெட்போன் அணிந்து அப்படியே அதிக நேரம் திரையை பார்த்து வீடியோ கேம் விளையாடினால் நம் கண்கள் பாதிப்பு அடைவதோடு,

காதுகளும் பாதிப்பு அடையும். எப்போதும் ஹெட்போன் அணிந்து வீடியோகேம் விளையாடுவதால் காதிரைச்சல் (Tinnitus) அல்லது கேட்கும் திறன் இழந்து போகும் வாய்ப்பு ஏற்படவுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹெட்போன் அணிந்து கேம் விளையாடும் போது அனுமதிக்கப்பட்ட சத்தத்தை விட அதிகமான சத்தம் தான் நம் காதுகளுக்கு கேட்டு கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

அப்போது, 20 முதல் 68 சதவிகிதம் இளைஞர்கள் வீடியோ கேம் விளையாடுகின்றனர் என்று தெரியவந்தது. அதில் 60 சதவிகிதத்தினர் கேமிங் செண்டர் சென்று விளையாடுவதாக தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

மேலும், அமெரிக்காவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதிக சத்தத்துடன் வீடியோ கேம் விளையாடுவதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, காது கேளாமைக்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், நிரந்தரமாக அவர்களுக்கு காது கேட்கும் திறன் இழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த இளைஞன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தீபிகா.28 வயதாகும் இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவர்.

இவருடைய கணவர் லோகேஷ். இவர்களுடைய மகன் 8 வயது லோகேஷ். ஜனவரி 20ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற தீபிகா நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

காணாமல் போன தீபிகாவின் வாகனம் மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் வாசலில் நிற்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணையில் அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கைப்பற்றினர்.

இறுதியில் அது மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொடூரமாக கல்லால் தாக்கி கொலை செய்து உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நித்தேஷ் கவுடா என்ற 22 வயது இளைஞருடன் பழகி வந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகாவுடன் ரீல்ஸ் தயாரிப்பு பணியில் நித்தேஷ் கவுடா உடன் இருந்தார். தீபிகாவுடன் நெருங்கிப் பழகிய சூழ்நிலையில் நாளுக்கு நாள் இவரின் போக்கு சரியில்லாததால் தீபிகா இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் நித்தேஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாட தீபிகாவை, மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். கோவிலில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் தீபிகாவின் சுடிதார் சால் மூலம் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பயத்தில் உடலை எரித்து மலையடிவாரத்தில் புதைத்துள்ளார். பாதி எரிந்த தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கைக்கு பிறகே தீபிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.

உலகின் உயரமான பெண் 23 வயதில் மரணம் : உயிரைப் பறித்த ஜலதோஷம்!!

சீனாவில்..

உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண் ஒருவர், ஜலதோஷத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது 23ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த Xiao Mo, 7அடி 5 அங்குல உயரம் கொண்டவர்.

உலகின் உயரமான பெண் என அழைக்கப்படும் Xiao Mo, சீன சமூக உடகங்களில் பிரபலமானவர் ஆவார். தனது அசாதாரண உயரம் காரணமாக இதயப் பிரச்சினை உட்பட அவருக்கு பல உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன.

இந்நிலையில், ஜல்தோஷம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகளால், Xiao Mo இம்மாதம், அதாவது ஜனவரி மாதம் 15ஆம் திகதி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது வாழ்வைக் குறித்த தகவல்களை சீன சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்த Xiao Moவை 152,000 பேர் பின்தொடர்கிறார்கள். Xiao Moவை அவரது தாயும் தந்தையும் கைவிட்டுவிட்டதால், அவரது தாத்தா பாட்டிதான் அவரை வளர்த்தார்கள்.

Xiao Moவின் உடல் தகனம் செய்யப்பட்டபின்பு, அவரது அஸ்தியைக்கூட இதுவரை அவரது தந்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என கூறப்படுகிறது. Xiao Mo உலகின் உயரமான பெண் என சிலரால் அழைக்கப்பட்டாலும், உண்மையில், துருக்கி நாட்டவரான 7 அடி 7 அங்குல உயரமுடைய, Rumeysa Gelgi என்னும் பெண் தான் உலகின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வயது குழந்தை கங்கையில் மூழ்கடித்து கொலை : மூடநம்பிக்கையால் விபரீதம்!!

உத்தராகண்ட் மாநிலத்தில்..

நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்துவிட்ட போதும் இன்னும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் மாறவில்லை. இவை பல நேரங்களில் விபரீதத்தில் கொண்டு விடுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண் குழந்தைக்கு ரத்தப் புற்று நோய் ஏற்பட்டது.

இதனை குணப்படுத்துவதாக குழந்தையை பெற்றோர் கங்கை நீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த கொடூர வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து கங்கைக்கு வருகை தந்த குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர்கி பௌரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என நம்பிக்கையில் தொடர்ந்து குழந்தையை தண்ணீரில் வைத்து அமுக்கி எடுத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைப்பதும், அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிப்பதையும் காணமுடிகிறது. ‘இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி’ என ஆவேசமாக கூறி வருகிறார்.

தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைத்ததும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டனர். அப்போது ஆவேசம் அடைந்த அந்த பெண் குழந்தையை மீட்ட நபரை தாக்க முயற்சித்துள்ளார். தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை பெற்றோரே மூழ்கடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வந்த நெதர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

களுத்துறையில்..

களுத்துறைக்கு வருகை தந்த நெதர்லாந்து பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரோனெல்லா எக்னிடா மரியா என்ற 42 வயதான நெதர்லாந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாட்டாளரிடம் நட்பு ரீதியான பழக்கம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டாளரான பெண் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தெரிவித்த பொலிஸார், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேகநபர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக,

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பெண்ணொருவருடன் தவறானமுறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் சாதனை படைத்த இராணுவத் தளபதி!!

இலங்கையில்..

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர் பரசூட் மூலம் குதித்து சாதனை புரிந்துள்ள முதலாவது நிகழ்வு இதுவாகும்.

ஊவா குடா ஓயா பரசூட் பயிற்சி மையத்தில் அதற்கான பயிற்சிகளை விகும் லியனகே பெற்றுக் கொண்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மாலைதீவின் இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தின்,

அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றுடன் அம்பாறை உகணை விமானப்படை வளாகத்தில் வைத்து அவர் வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை செய்துள்ளார்.

ஒரேவீட்டில் பறிபோன இரு உயிர்கள்!!

ஆனமடுவவில்..

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் வியாழக்கிழமை (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம, வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விஷேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் மனுஜ பிரபாஸ்வர ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரர் , மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது தந்தையும் மகனும் உயிரிழந்த நிலையில் தாய் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (25.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் தயாபரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையினை இந்து கலாச்சார உத்தியோகத்தர் சிவகஜனால் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர், தமிழ் விருட்சம் அமைப்பினர், நகரசபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமண வீட்டிலிருந்து சென்ற சனத் பலி : வேதனையில் புதுமண தம்பதி!!

கட்டுநாயக்கவில்..

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணமான மணமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. எனக்காக என்னை பார்க்க வந்த பயணித்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” என அவர் பதிவிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்!!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இலங்கையில் வைத்து இன்று (25.01.2024) மாலை காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் இசைஞானி இளையராஜா, அவரது மகள் பவதாரணி காலமான தனியார் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.

இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. குறித்த இசை நிகழ்ச்சிக்காக நேற்றையதினம் இசைஞானி இளையராஜா இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.