வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு கடற்றொழிலாளர் சங்க எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் 18 அடி நீளம் கொண்டதும் 10 அடி அகலம் கொண்ட அடையாளம் தெரியாத மிதவைக்கலம் ஒன்று கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
இன்று (01.01.2024) காலை கரையொதுங்கிய குறித்த மிதவைக்கலத்தை கடற்றொழிலாளர்கள் கரைக்கு இழுத்து வந்துள்ளனர். கரையொதுங்கிய கலம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம அலுவலருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு வடமராட்சி கிழக்கு உடுத்துறை வேம்படி கடற்கரையிலும் மிதவை ஒன்று கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா – செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் (30.12.2024) சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதன்பின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் குறித்த இளைஞன் எலிக்காய்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில் சமரி அத்தபத்து குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் அவர் இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீராங்கனையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனினும் சர்வதேச கிரிக்கெட் களத்தில் திறமையை வெளிப்படுத்திய சமரி அத்தபத்து இந்த வருட இந்திய மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேக்கரி தொழிற்துறையினரும், பேக்கரி உரிமையாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நாட்டு மக்களை நினைத்து பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டதுடன், அதிகரிப்பினால் ஏற்படும் பாரிய நட்டத்தை பேக்கரி உரிமையாளர்களே சுமக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
லிட்ரோ எரிவாயு நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி இன்று (1.1.2024) முதல் எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2.3 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 795 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,707 ரூபாய் ஆகும். மேலும், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4,250 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த விலை அதிகரிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுராதபுரம் மைலகஸ்சந்தியை அண்மித்த ஹோட்டல் அறையில் ஆண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில், மணமகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பரசங்கஸ்வெவ, வரகொட பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய இந்திக ரணவீர பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அவர் அநுராதபுரத்தில் கையடக்கத் தொலைபேசி பழுதுபார்க்கும் தொழில் ஈடுபட்டு வந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 21 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இருவரும் மைலகஸ்சாந்தி அருகே உள்ள ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதியில் பெண்ணுக்கு தலைவலி ஏற்பட்டதாகவும் அதற்காக கணவர் கொடுத்த மருந்துகளை உட்கொண்டவுடன் உறங்கிவிட்டதாகவும் மனைவி குறிப்பிட்டுள்ளார். கண்விழித்த போது அறையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் கணவன் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக, மனைவி குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் வசித்து வந்த 39 வயதான இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் செய்து 2024 ஆம் ஆண்டுக்கான தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (02.01.2024) காலை 8.30 மணிக்கு மாவட்ட அரச அதிபர் பி.ஏ.சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் செய்து கொண்டனர்.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களை பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அதன் பின்னர் சமயத்தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். செட்டிகுளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞருக்கு சிலதினங்களா காய்ச்சல் இருந்துள்ளது.
இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் இன்று மரணமடைந்தார். சம்பவத்தில் செட்டிகுளம் முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் வயது 22 என்ற இளைஞரே இவ்வாறு மரணமடைந்தார்
நாடு முழுவதும் புதுவருடப் பிறப்பு மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கமைய வவுனியா இந்து ஆலயங்களில் இன்று (01.01.2024) காலை விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
வவுனியா கந்தசாமி ஆலயம் மற்றும் குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயம், வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் ஆகிய ஆலயங்களில் விசேட அபிசேக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், அடியவர்கள் நெய் தீபம் ஏற்றி வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட தீப ஆராதனைகளுடன் புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றதுடன் கலந்து கொண்டோர் தமக்குள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.
நெடுங்கேணி 17ஆம் கட்டை பகுதியில் வீட்டினை தீயிட்டு கொழுத்திய நபர் ஒருவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்தநிலையில் இருவருக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டமையால் அந்த பெண் பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் கடந்த சிலநாட்களாக அவரது மனைவியான அந்தபெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தி வருவதாக பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடு வழங்குவதற்காக அவசர பொலிசாருக்கு பலமுறை அழைப்பை ஏற்ப்படுத்தி அறிவித்திருந்தோம் இருப்பினும் அவர்கள் வருகைதரவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இன்றையதினம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினையும் பதிவுசெய்திருந்தனர். இந்நிலையில் குறித்த நபர் இன்று மாலை தனது மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு சென்று வீட்டினை தீயிட்டு எரித்துள்ளதுடன் அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார்.
இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்துள்ளது. இதனையடுத்து ஒட்டுசுட்டான் பொலிசாரால் அந்நபர்
கைதுசெய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடுமையாக உயர்வடைந்திருந்த பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.300 முதல் 350 ரூபா வரை இவ்வாறு பெரிய வெங்காயத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை 600 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்பட்டது.பெரிய வெங்காய ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், பாகிஸ்தான், துருக்கி, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள முக்கிய பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை தற்போது 2000 முதல் 2200 ரூபா வரை அதிகரித்துள்ளது.
கொத்து, ப்ரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை நாளை(01.01.2024) அதிகரிக்கப்படவுள்ளது. அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், தேநீர் மற்றம் பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, சாதாரண தேநீர் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்சான் தெரிவித்துள்ளார்.
மதிய உணவுப் பொதி, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் உள்ளிட்ட உணவுகளின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் நிலையில், பேருந்து கட்டணங்கள், முச்சக்கரவண்டி கட்டணங்கள் உள்ளிட்ட சேவை கட்டணங்களும், தொலைபேசி இணைப்புக்களுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு இந்த அதிகரிப்புகள் பேரிடியாக காணப்படுகின்றது.
புதிய கோவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உலகளவில் கோவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மற்றும் தனிநபர் இறப்புகள் மீண்டும் அதிகரித்துள்ளன.புதிய கோவிட் 19 திரிபு இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதை விசேட நிபுணர்களுடன், சுகாதாரத் திணைக்களங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பில் அண்டை நாடான இந்தியா அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ளது.புதிய கோவிட் 19 திரிபு குறித்து அடிமட்டத்தில் எந்தவொரு ஆராய்வும் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்த நாட்களில், சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் அதிகரித்துள்ளனர்.
கோவிட் 19 தொற்று உள்ளவர்கள் என சந்தேகிக்கக்கூடிய பல நோயாளிகள் நாட்டில் காணப்படுகின்றனர். அதனால் புதிய திரிபு ஓரளவுக்கு நாட்டில் பரவி வருகிறது என்பது தெளிவாகிறது.ஆகவே, எந்த ஒரு நபரும் ஆபத்தில்லை என்று சொல்ல முடியாது. இந்த விவகாரம் குறித்து அரசு தரப்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும்.
பின்னர் இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எவ்வாறாயினும், பொதுமக்களும் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவதும் இந்த நேரத்தில் அவசியம். விமான நிலையத்தில் தனிமைப்படுத்தல் தொடர்பான எந்த செயல்முறையும் இல்லை.
அதனால் நாட்டுக்குள் தொற்றுநோய்கள் நுழைய வாய்ப்பு உள்ளது. எனவே அனைவரும் இது குறித்து கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடைமுறைக்கு வரவுள்ள புதிய வற் (VAT) வரி திருத்தத்தின் மூலம் எரிவாயு விலை ஜனவரி 1 முதல் உயரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மீதான வற் வரி மேலும் சேர்க்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவுக்கு துறைமுகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் விதிக்கும் 2.5% வரி நீக்கப்பட்டு 15.5% வீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
தற்போது 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 3565 ரூபாவிற்கு விற்கப்படும் நிலையில் நாளைமுதல் 500 அதிகரிக்கப்பட்டு 4065 ரூபாய்க்கு விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு எரிவாயு விலையின் இந்த சடுதியான அதிகரிப்பினால் உணவுப்பொதிகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதோடு பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
குறிப்பாக எரிவாயு விலை அதிகரிப்பினால் சிறிய, நடுத்தர குடும்பத்தினர் மற்றும் நகர்புறங்களில் தொழில்புரிவோர் மற்றும் கூழித்தொழிலாளிகளும் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். கடந்த ஒக்டோபர் மாதம் 04 திகதி எரிவாயு விலைகள் இறுதியாக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மும்பை அருகே பழுதடைந்த விமானமான ஏர் இந்தியா A320 ஐ லொரியில் வைத்து எடுத்துச் சென்றபோது பாலத்தில் திடீரென சிக்கிக் கொண்டதை அடுத்து அங்கு போக்குவரத்து தடைப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு பழைய ஏர் இந்தியா விமானத்தை லொரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்தின் அடியில் திடீரென விமானம் சிக்கிக் கொண்டது.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில மணி நேரம் போராட்டத்திற்கு பின் லொரி மீட்கப்பட்டதாகவும் லொரி சாரதியிடம் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஏர் இந்தியா A320 2021 இல் சேவையில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து சமீபத்தில் ஒரு தொழிலதிபரால் ஏலத்தில் வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.