புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று (30.12.2023) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு திசை நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் திசை நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் , ஒருவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், இந்த விபத்தின் போது இரண்டு சொகுசு கார்களும் சேதமடைந்துள்ளன.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக திருகோணமலை வாசி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா கலகெட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழிற்சாலையில் அவருடன் பணிபுரியும் திருமணமான நபரொருவருடன் பல வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.இந்நிலையில் அந்நபர் இந்த காதல் உறவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதனை அறிந்து கொண்ட பெண் அந்நபரின் மகளின் புகைப்படங்களை நிர்வாணப்படங்களாக தயாரித்து அந்நபரின் வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஈழத்து குயில் கில்மிஷா முதல் பரிசை வென்றார்.இவ்வாறான நிலையில், தென்னிந்திய திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக ஈழத்து குயில் கில்மிஷா தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய நிலையிலேயே சிறுமி கில்மிஷா இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நாட்டில் தனக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த அனைவர்க்கும் நன்றியையையும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு ஆதரவளித்த நாட்டு மக்களுக்கும், தென்னிந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு வாழ்த்து தெரிவித்தமை தொடர்பில் பெருமை அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ்ப்பாண மக்களின் வரவேற்பானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆதரவளித்த சகோதர மொழி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.இதேவேளை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கான அழைப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இசைத்துறையில் மிகப்பெரிய பின்னணி பாடகராவதே தன்னுடைய விருப்பம் என்றும் அதனுடன் வைத்தியராக வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கியும் பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிஐடி எனக் கூறி வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவர் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று(30.12) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பேரூந்து தரிப்பிடப் பகுதியில் நேற்றைய தினம் (29.12) நின்ற மூன்று இளைஞர்கள் அவ் வீதியால் மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவரை மறித்து தாம் சிஐடி எனக் கூறி, தம்மை தாண்டிக்குளம் குளக்கட்டு பகுதியில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளனர்.
இதனை நம்பிய குறித்த இளைஞன் அவர்களை ஏற்றிக் கொண்டு தாண்டிக்குளம் குளக்கட்டுப் பகுதியால் சென்ற போது குறித்த இளைஞனிடம் இருந்த கைத்தொலைபேசியை பறித்துக் கொண்டு மூன்று இளைஞர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த மூவரும் மடுகந்த பகுதிக்கு சென்று அங்கு வீதியால் சென்ற பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பாதிகாரி ஜெயதிலக தலைமையில் பொலிஸ் சார்ஜன்டுகளான திசாநாயக்க, ஜெயதுங்க, உபாலி மற்றும் சியான் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதன்போது குறித்த மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சங்கிலி மற்றும் கைத் தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது வவுனியாவில் திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதுடன், கிளிநொச்சியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், மடிக்கணனி ஒன்றும், கைத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டது.
இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 28 வயதுடைய இரு இளைஞர்களும், கிளிநொச்சியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் திருடப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி பொலிசாரிடம் வவுனியா பொலிசார் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் திருடப்பட்ட பொருட்களையும் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் ஆலய பகுதியில் அமைந்துள்ள அசரால் காலத்தில் உருவாக்கப்பட்ட கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் தான் இந்த மந்திரி மனை.
குறித்த மந்திரி மனை இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் தான் இது.
இந்த கட்டிடத்தை யாழ் இந்து மகளிர் கல்லூரி படித்த பெண்ணொருவர் நிஜத்தில் உள்ளது போல அப்படியே ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். புகைப்படத்தை முகநூலில் பார்த்த இணையவாசிகள் குறித்த பெண்ணை பாராட்டி வருகின்றனர்.
ஜனவரி முதல் கையடக்க தொலைபேசிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் துஷார ரத்னவீர தெரிவித்துள்ளார்.சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இவ்வாறு கையடக்க தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக, பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வட்டாரங்கள் ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விலையில் 1,300 முதல் 1,500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளன.அதேவேளை சில்லறை சந்தையில் இதன் விலை சுமார் 1,800 ரூபாய் என கூறப்படுகிறது.
அதன்படி, பச்சை மிளகாய் காய் ஒன்றின் விலை சுமார் 15 ரூபாவாக உள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.பேலியகொட மானிங் மாலில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 2,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.இரத்மலானை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் விலை 1,650 முதல் 1,670 ரூபா வரை பதிவாகியுள்ளது.
கெப்பிட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1200 முதல் 1300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மிளகாய் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதுடன் அரசாங்கம் இதில் தலையிட்டு மரக்கறிகளுக்கான நிர்ணய விலைகளை வெளியிடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியினைச் சேர்ந்த இளைஞருக்கு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டின் மூலம் 25 இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவருக்கான காசோலையினை நேற்று (29.12.2023) புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். அதிர்ஷ்டம் வென்ற நபருக்கான 25 இலட்சம் ரூபா காசோலை இதன் போது வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கத்தை (TIN Number) வைத்திருப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையம் மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிந்து இலக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அரச விதிமுறைகளை மீறி பதிவு செய்யாதோருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.அதேவேளை வருடாந்தம் 12 லட்சத்திற்கு மேலாக வருமானம் பெறும் ஒவ்வொருவரும் வரி செலுத்துவதற்கான பதிவை மேற்கொள்ள வேண்டும். பதிவு எண்ணைப் பெறுவதும் வரிக் கோப்புகளைத் திறப்பதும் தனித்துவமான செயல்முறைகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எண் இருக்கும் போது, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் பதிவு எண் கட்டாயமாகும். தனிநபர்கள் வரிவிதிப்புக்கு பொறுப்பேற்க போதுமான வருமானம் இருந்தால் வருமான வரி செலுத்துவதற்கான கோப்பைத் திறப்பது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம், எப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் 13 வயதுடைய இரு சிறுவர்களுடன் தங்கியிருந்த 51 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக எப்பாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 27ஆம் திகதி அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் பயிற்சிக்காக தனது பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயது சிறுவர்களை அழைத்துச் செல்வதாக இந்தப் பாடசாலை ஆசிரியர் பெற்றோரிடம் கூறியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் இரண்டு பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பாமல் எப்பாவலயிலுள்ள தங்குமிடமொன்றில் தங்கியிருந்துள்ளார். இதன்போது இனந்தெரியாத ஒருவரால் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் மர்மமாக உயிரிழந்த இளம் தாதியின் உடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய இளம் தாதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். குறித்த தாதி 2018 ஆம் ஆண்டு தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய நோய் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 25 ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் சென்றிருந்த நிலையில், 26ஆம் திகதி சுற்றுலா பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில்,மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (27) தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் எச்.கே.என்.சுரங்கவினால் அவரது சடலம் மீதான பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளை கருத்திற்கொண்ட பண்டாரவளை மரண விசாரணை அதிகாரி மேனகா ரத்நாயக்க, உடல் உறுப்புகளை ஒப்படைப்பதற்கு திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தொடர்ந்து உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டு சந்துனி சுலோச்சனாவின் இறுதிக் கிரியைகள் பெருந்தொகையான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நேற்று (28) பிற்பகல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் இன்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை குணசேகரம் ரோஜிதன் என்ற இளைஞன் சுகயீனம் காரணமாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும், களுவாஞ்சிகுடி இலங்கை வாங்கி உத்தியோகத்தரான துசாந்தன் என்ற இளைஞன் திடீர் சுகயீனம் ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இரு இளைஞர்களுக்கும் முகநூலில் அஞ்சலிகளை உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று இன்று (28.12.2023) காலை கரையொதுங்கியுள்ளது.அப்பகுதி கடலில் கடந்த (27.12.2023) ஆம் திகதி மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள மீனவர்கள் அவதானித்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வாறு கரையொதுங்கியுள்ள பொருள் என்ன என்பது தமக்குத் தெரியாது, இப்பொருள் தொடர்சியாக இவ்விடத்திலேயே இருக்குமாக இருந்தால் தமது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக அமையும் எனவே இதனை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பொருளை களுவாஞ்சிகுடி பொலிஸாரும் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பொருள் சிவப்பு நிறத்தில் கூம்பக வடிவில் போத்தல் போன்று பெரியதாக அமைந்துள்ளதுடன் பொருளின் மேற்பகுதியில பி.எம்.ரி. எனவும் பின்பக்கம் பி என்ற எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த பொருளில் ஒருபக்கம் சிறிய ரக ரயர் ஒன்று பொருத்தப்பட்டு அதில் இரும்பிலான சங்கிலியும் பொருத்தப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவரின் திடீர் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட குறித்த தாதி, தனது பயிற்சிக் காலத்தை முடித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றி வந்தார்.கடந்த 25ஆம் திகதி பண்டாரவளை பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு திரும்பி வந்து 26ஆம் திகதி உல்லாசப் பயணத்திற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
காலை உணவு பெற சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், இந்த தாதி பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
எனவே மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகளுக்கு உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் காணப்படவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 771 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த 771 வழக்குகளும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு விடயங்களிற்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகும்.
இதேவேளை பாவனையாளர்கள் அதிகார சபையினால் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார், அரச அலுவலகர்கள் என பல தரப்பினருக்கும் பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் கடமைகள், பாவனையாளர் சட்டங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.