சாரதி ஒருவரின் நெகிழ்ச்சியான செயல் : மகிழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவன்!!

நீர்கொழும்பில் (Negombo) இருந்து கண்டி (Kandy) செல்லும் பேருந்தில் கையடக்க தொலைபேசியை விட்டு சென்ற மாணவனை தேடி ஒப்படைத்த பேருந்து சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

மாவனல்லையில் (Mavanalla) தனியார் பல்கலைக்கழகம் செல்வதற்காக நீர்கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பேருந்தில் ஏறிய மாணவன் தனது கையடக்க தொலைபேசியை மறந்து விட்டு சென்றுள்ளார்.

கையடக்க தொலைபேசி தொலைந்து போனதை அறிந்த மாணவன், தனது நண்பரின் கையடக்க தொலைபேசியில் இருந்து அழைத்தபோது, ​​சாரதி தன்னிடம் கையடக்க தொலைபேசி இருப்பதாகவும், மாநகர பேருந்து நிலையம் அருகே வந்து எடுத்துச் செல்லுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால் தனது விரிவுரைகள் ஆரம்பமாகி விட்டதாக கூறிய மாணவன், போது மீண்டும் நீர்கொழும்பு செல்வதால் கையடக்க தொலைபேசி மாவனல்லைக்கு கொண்டு வந்து கொடுப்பதாக சாரதி வாக்குறுதியளித்துள்ளார். அதற்கமைய, அவர் அதனை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

இப்படிப்பட்ட உன்னதமானவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது நமது அதிர்ஷ்டம் எனவும் இந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கையடக்க தொலைபேசியை பெற்றுக் கொண்ட மாணவனின் தந்தை பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

காலநிலையில் இன்றையதினம் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி இன்று(05.04.2024) நண்பகல் 12.12 அளவில் பலப்பிட்டி, எல்பிட்டி, மொரவக்க மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இன்று முதல் 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பெருந்தொகை பணமோசடி : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

இலங்கையில் ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோரை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நபரின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசடி விசாரணைப் பணியகத்தின் (Fraud Investigation Bureau) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான நலன்புரிச் சங்கமொன்றை ஆரம்பித்து, அவர்களுக்காக பணத்தைச் சேகரித்து, அந்த பணத்தினை சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.

சந்தேகநபர் வாக்குறுதியளித்தபடி நன்மைகளை வழங்காததால், ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர்கள் அவருக்கு எதிராக மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதற்கமைய, சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில்.

தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!!

ஆனமடுவ(Anamaduva) பகுதியில் பாடசாலைக்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட போது, லொறி மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ-ரதனபால தேசிய பாடசாலையில் 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே நேற்று(04.04.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹவுஸ்வெவ வெலேவவ வடக்கு பிரதேசத்தில் வசிக்கும் குடும்பத்தின் மூத்த பிள்ளையான, ஈக்ஷனா காயத்மி என்ற 13 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மாணவி பாடசாலையில் அகில இலங்கை நடனப் போட்டிக்கான பயிற்சியில் கலந்துகொண்டு, வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்காக நடைபாதை வழியாக ஓடிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் அதிரடியாக கைது!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 30ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. படுகாயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை இளைஞர்கள் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

டுபாயில் பணியாற்றிய நிலையில், உயிரிழந்த இளைஞர்கள் இருவரின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் டுபாயில் பணியாற்றிய இருவர் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவேல்கெலேயைச் சேர்ந்த எஸ். எம். ஜி. தோட்டத்தில் வசிக்கும் பி. எம். 28 வயதான சந்துன் மதுசங்க என்ற திருமணமாகாத இளைஞரும், ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தை இலக்கம் 343 இல் வசிக்கும் மொஹாந்திரம்லைச் சேர்ந்த ரமேஷ் உதர திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னர் குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து டுபாய்க்கு வேலைக்குச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தினமும் தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள நிலையில், உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தமது உறவினர்களிடம் தாம் சுகவீனமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இலங்கை அரசு தலையிட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வந்து, முறையான விசாரணைகளை நடத்தி, மரணத்திற்கான காரணங்களை கண்டறியுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சடலங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தனித்தனியாக 12 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவாகும் எனவும், இது தொடர்பில் அரசாங்கம் உதவுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டிற்கு கொண்டுவந்து பிரேத பரிசோதனை செய்யுமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் வினவியபோது, ​​சட்டரீதியாக வெளிநாட்டில் மரணம் ஏற்பட்டால், அவர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான குறிப்பிட்ட தொகையை வெளிவிவகார அமைச்சு வழங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு!!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04) விடுவிக்கப்பட்டது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிசார் அங்கு இருந்த 8 பேரை கைது செய்ததுடன் ஆலயத்தில் இருந்த பாெருட்களையும் எடுத்துச் சென்றிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர். இதனைத் தாெடர்ந்து நீதவான் நீதிமன்றின் அனுமதியோடு பாெலிசாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு!!

வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் நேற்று (04.04) இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது.

கண்டியில் இருந்து அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள், இராட்டினத்தில் சுற்றுதல், தலையில் நீர் கொண்டு செல்லல், சிறுவர்களை இராட்டினத்தில் ஏற்றி சுற்றுதல், மோட்டார் சைக்கிளில் பயணித்தல்,

வளையத்தின் ஊடாக பாய்தல், நெருப்பு வளையத்தின் ஊடாக பாய்தல், துப்பாக்கி சூடு நடத்தியவரை விரட்டிப் பிடித்தல் போன்ற பல சாகச நிகழ்வுகளை மோப்ப நாய்கள் மேற்கொண்டிருந்தன. மோப்ப நாய்களின் சாகசத்தை பார்பதற்காக பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபை மைதானத்தில் சித்திரைக் கலைவிழா கோலாகலமாக ஆரம்பம்!!

வவுனியாமாவட்ட கலாசார அதிகாரசபை நடாத்தும் சித்திரைக் கலைவிழா நேற்று (04.04.2024) கோலாகலமாக ஆரம்பமாகியது.

வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரச அதிபர் சரத் சந்திர நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதில் மாவட்ட கலாமன்றங்களின் கண்காட்சிக் கூடங்கள், மாணவர்களின் சித்திரக் கண்காட்சி, சமுர்த்தி பயனாளிகளின் விற்பனை மற்றும் கண்காட்சி நிலையங்கள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தல்கள், இராணுவம் மற்றும் பொலீஸ் பிரிவுகளின் சாகச நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை குறித்த நிகழ்வு இன்றயதினமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பல இலட்சம் பணத்துடன் பெருமளவு கஞ்சா மீட்பு : மூவர் கைது!!

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

நேற்று குறித்த நபர்கள் கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதனை வழிமறித்த பொலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த காரினுள் ஒன்பது கிலோகிராம் கஞ்சா மற்றும் பத்தொன்பது இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணமும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி,ஒட்டுசுட்டான், ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரனைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதி விபத்து : தப்பிச் சென்ற கார் : இருவர் காயம்!!

வவுனியாவில் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு கார் ஒன்று தப்பிச் சென்றுள்ளதுடன், குறித்த விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று (04.04) மாலை இடம்பெற்றது.

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்று சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஒன்று குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனத்தை நிறுத்தாது தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். சேதமடைந்த மோட்டார் சைக்கிள் பொலிசாரால் எடுத்துச் செல்லப்பட்டதுடன்,

தப்பிச் சென்ற காரினை அப் பகுதியில் நின்றவர்கள் எடுத்த புகைப்படடம் மற்றும் சிசீரீவி கணொளி உதவியுடன் வவுனியா பொலிசார் தேடி வருகின்றனர்.

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!!

கடன் தொல்லை காரணமாக உணவக உரிமையாளர் தனது மனைவியுடன் நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த நிலையில் மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் மருத்துவம் முடித்துவிட்டு தனது கணவருடன் கனடாவில் வசித்து வருகின்றனர்.

மனோகரன் மற்றும் சுமதி தங்களது இளைய மகளுடன் விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் சவுரிபாளையம் மற்றும் சேரன்மாநகர் பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மனோகரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினர் இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் உணவகத்திற்கு சென்ற மனோகரன், மதியம் வீடு திரும்பி உள்ளார்.

பின்னர் மாலையில் சேலம் செல்வதாக கூறிவிட்டு மனோகரனும் சுமதியும் காரில் சென்றுள்ளனர். அப்போது கருமத்தம்பட்டி கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்தபோது, காரை இணைப்பு சாலையில் நிறுத்தி விட்டு தாங்கள் வாங்கி வந்த விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதனால் சிறிது நேரத்தில் சுமதி உயிரிழந்த நிலையில், மனோகரன் உயிருக்குப் போராடியுள்ளார். நெடுஞ்சாலை ஓரம் கார் நிற்பதைக் கண்டு சந்தேகமடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்துவிட்டு சுங்கச்சாவடியில் இருந்த மருத்துவ பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு சென்ற மருத்துவக் குழுவினர், இருவரையும் பரிசோதித்ததில் சுமதி ஏற்கெனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த மனோகரனை மீட்டு நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் சண்முகவேலு தலைமையிலான போலீஸார் அங்கு வந்து சுமதியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், இருவரும் பூச்சிக்கொல்லி மருந்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மனோகரனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கடன் பிரச்சினை மற்றும் உடல் நலப் பிரச்சினையால் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தது தெரியவந்தது.

மேலும் இந்த பிரச்சினைகளால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17545 கோடி சொத்துக்களை இழந்து பைஜூஸ் நிறுவனம் பூஜ்யத்திற்கு வந்த கதை!!

பைஜூஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு நோட்டிஸ் பீரியட் கொடுக்காமல் சாதரணமாக போன் கால் மூலமாக வேலையை விட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

`உங்கள் வேலை 2024 மார்ச் 31 உடன் நிறைவடைகிறது. சம்பளம் பின்னர் தறப்படும்` என்று போன் காலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இச்செயலுக்குக் கடுமையான விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது.

மேலும், இதன்மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம எனத் தகவல்கள் வெளியாகிள்ளன. இது குறித்து பைஜூஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், `வணிக கட்டமைப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதால் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் கடந்த 2023-ல் மறுகட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது. சட்டச் சிக்கல்கள் காரணமாக, நிறுவனத்தில் அசாதாரணமான சூழ்நிலையை நாங்கள் சந்திக்கிறோம்.` என்று தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில், பைஜூஸ் நிறுவனம் குறைந்தபட்சம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பிரபல பைஜூஸ் நிறுவனம்.

ஆன்லைன் வழியே கல்வியை வீடுகளுக்கே கொண்டு வந்த சேர்த்த மிகப்பெரிய நிறுவனமாக பைஜூஸ் மாணவர்களிடையே பரந்து விரிந்துள்ளது. இதன் எதிரொலியாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம் பிடித்தார் பைஜூஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரன். 2 வருடங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் , வருவாய் இழப்பு , கடன் சுமை என அடுத்தடுத்து பைஜுஸ் நிறுவனத்திற்கு அடிமேல் அடி விழுந்தது.

அதே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை முதலீட்டாளர்களுடன் பிரச்சனை என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தது. இந்நிறுவனம் ரூ28000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு Byju’s நிறுவனம் ரூ9754 கோடியை அனுப்பி உள்ளது.

ரூ944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக இந்நிறுவனம் செலவு செய்தாலும் அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை இந்நிறுவனம் சமர்ப்பிக்க தவறியது.

இதனால் ரூ. 9,362 கோடிக்கு அந்நிய செலவாணி மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பல சவால்களை இந்நிறுவனம் சந்திக்க தொடங்கியது. நிதி கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. கடனுக்கான வட்டி தொகையை செலுத்தவில்லை என அடுத்தடுத்து வழக்குகள்.

அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை வைத்து நிறுவனம் மறைத்தது கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீடு இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைந்தது.

தொடர் குற்றச்சாட்டுகளால் முதலீட்டாளர்கள் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வாடகை செலுத்த கூட முடியவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்பு பைஜு ரவீந்திரனின் நிகர மதிப்பு ரூ17,545 கோடி மற்றும் அவர் பல மதிப்புமிக்க ‘உலகின் பணக்காரர்’ பட்டியல்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸ் பில்லியனர் இன்டெக்ஸ் 2024 ன் படி, ரவீந்திரனின் நிகர மதிப்பு பூஜ்ஜியமாகக் குறைந்திருப்பதாக கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர்.

இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென தலைமறைவான கணவன் குறித்த வேதனையில் இருந்து வந்த புதுமணப்பெண், தன் எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையில் தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சிந்தலைசேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜோதிடரான இவரது மகள் ஹேமலதா (19). பெங்களூரு இஸ்ரோவில் பணிபுரிந்து வருபவர் மணிவாசகம். சுரேஷ் உறவினரான இவரது வீட்டிற்கு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷன் மகள் ஹேமலதாவுக்கும், மணிவாசகத்தின் மகன் சந்துருவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்தது, காதலர்கள் இருவரும், தேனி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில், பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டிக் கொண்டு, மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரது பெற்றோர்களும் இவர்களின் காதலை ஏற்காத நிலையில், திருமணத்திற்கு பின்பு, ஹேமலதாவின் தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மணமகளுக்கு 19 வயதும் மணமகனுக்கு 20 வயதும் ஆனதால், மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று புதுமண தம்பதிகள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

சந்துருவின் பெற்றோர் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா மீண்டும் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சந்துருவை தேடி வந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய காதல் கணவனைக் காணாததால், தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா தனது வீட்டிலேயே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான சந்துரு மீதும், அவரது பெற்றோர் மீதும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஹேமலதாவின் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு ஹேமலதாவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை போதாது… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!

வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சௌகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு கரிஷ்மா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, விகாசுக்கு வரதட்சணையாக காரும், ரூ.21 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கரிஷ்மாவை விகாசும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் கரிஷ்மா மனஉளைச்சலில் இருந்துள்ளார். வரதட்சனை தொடர்பாக விகாசுக்கும் கரிஷ்மாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.

பின்னர் கிராம பஞ்சாயத்து மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. அப்போது, விகாசின் குடும்பத்துக்கு மேலும் ரூ.10 லட்சம் ரொக்கத்தை கரிஷ்மாவின் குடும்பத்தினர் கொடுத்தனர்.

இனி தனது பிரச்சனை தீர்ந்து விடும் என எண்ணிய கரிஷ்மாவுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. தங்களுக்கு வரதட்சணையாக மேலும் ரூ.21 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு காரை வழங்க வேண்டும் எனக்கூறி கரிஷ்மாவை விகாசின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பான பிரச்சனை அதிகரித்த நிலையில், கடந்த வெள்ளியன்று விகாசும் அவரது அம்மாவும் சேர்ந்து கரிஷ்மாவை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதையடுத்து கரிஷ்மா, தனது சகோதரரான தீபக்கை தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார். உடனடியாக தீபக், கரிஷ்மாவை வந்த பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார்.

இது தொடர்பாக தீபக் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், விகாசையும் அவரது தந்தையையும் கைது செய்தனர். மேலும், தப்பியோடிய விகாசின் தாய் மற்றும் சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி!!

அருணாசலப் பிரதேச மாநிலம் ஹாபோலியில் உள்ள ப்ளூ பைன் என்ற ஹோட்டலுக்கு கடந்த மார்ச் 28-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த தம்பதி வந்தனர். அவர்களுடன் அவர்களது நண்பரான ஆசிரியை வந்திருந்தார். ஹோட்டல் அறையில் அறை எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர்.

ஏப்ரல் 1-ம் தேதி இரவு வரை அவர்கள் ஓட்டல் அறையில் இருந்த வெளியே வராததால், ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர்.

ஹோட்டல் அறையில் தம்பதி, குளியலறையில் ஆசிரியை ஆகியோர் மணிக்கட்டில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தனர். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர்கள், கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ தம்பதிகளான நவீன் தாமஸ் (35), தேவி (35) என்று கண்டறியப்பட்டனர்.

அவர்களுடன் தங்கியிருந்தவர் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஆர்யா (29) என்பது தெரிய வந்தது. ஹோட்டல் அறையில் இருந்து போலீசார் ஒரு கடிதத்தைக் கைப்பற்றி உள்ளனர்.

மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மற்றும் தடவியல் நிபுணர்கள் விரைந்து சென்று அறையில் இருந்து ஆதாரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

ஆசிரியர் ஆர்யா நாயரைக் காணவில்லை என்று திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருவனந்தபுரம் நகர காவல் துணை ஆணையர் நாகராஜு கூறுகையில், உயிரிழந்த மூவரின் நடத்தையில் ஏதோ அசாதாரணமானது இருப்பதாகத் தெரிகிறது, ஆனால் அவர்களின் செல்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை ஆய்வு செய்யும் வரை எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவர்களின் மரணம் சூனியத்தால் நிகழ்ந்ததா என்று சொல்ல முடியாது. அவர்கள் மூவரும் எதற்காக அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றார்கள், அவர்களின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்நிலையில், மர்மமாக உயிரிழந்த தம்பதியரின் குடும்ப நண்பரான சூர்யா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தேவியின் தந்தை வனவிலங்கு புகைப்படக் கலைஞர். இவர்களின் மரணத்திற்குப் பின்னால் சூனியம் இருப்பதாகக் கருதுகிறார்.

அந்தத் தம்பதிகள் சூனிய வலையில் விழுந்ததாக அவர் (தந்தை) என்னிடம் சொன்னார். அத்துடன் ஆன்லைன் வர்த்தகத்திற்காக தம்பதியினர் தங்கள் ஆயுர்வேத தொழிலை கைவிட்டனர். மேலும், நவீன் மற்றும் தேவி ஆகியோர் சூனியம் செய்யும் தொழிலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இறந்த மூவரும் நன்றாகப் படித்தவர்கள். எதற்காக இப்படி முடிவெடுத்தார்கள் என்று தெரியவில்லை என்றார். இவர்களின் மூவரின் மரணம் குறித்து அருணாச்சல பிரதேச போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.