வவுனியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் : மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், வவுனியாவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிற்கு 4 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க நாளை (04.01) வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர், வெள்ளிக்கிழமை (05.01) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வவுனியாவில் இடம்பெறவுள்ளதுடன், மாவட்ட மட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தொவித்தனர்.

அதன்பின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அரச அதிகாரிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. அதனடிப்டையில் வவுனியா வைத்தியசாலையில் 39 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், குறித்த 39 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையிலேயே டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று தாக்கம் பெரியளவில் ஏற்படவில்லை.

எனினும், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து டெங்கு தொற்றில் இருந்து தம்மையும், சமூகத்தையும் காக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம் : 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

டோக்கியோவில்..

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து இடம்பெறும்போதும் ஐப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் உட்பட 379 பேர் இருந்துள்ளனர். விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, ஜப்பானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஜப்பான் கடலோர காவற்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவற்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது.

2 விமானங்களும் எப்போது, எப்படி மோதிக் கொண்டன என்பது தொடர்பில்”விசாரிக்கப்பட்டு வருவதாக” கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் எரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பேரும், கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். அவர்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹனேடா விமானநிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டதாக, அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், அந்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்துப் பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பிரித்தானியாவில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றுவதில் விமான குழுவினரும் விமானிகளும் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

“போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது,” என தெரிவித்த அவர், ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை பாதுகாப்பதில் “உலக தலைவர்” என பாராட்டினார். “பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு அது தொடர்பில் பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது” என்றார்.

மேலும், “அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது” என்றார்.மேலும், “விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்” என்றார்.

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்!!

போகஹகும்புரத்தில்..

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள்குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெலிமடை போகஹகும்புர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பாத்திமா ரிப்ஷா .

கடந்த 29ஆம் திகதி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், 30ஆம் திகதி பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.குறித்த தாய்க்கு கருப்பையில் வாயுக் கட்டி இருந்த போதிலும் சாதாரண பிரசவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் பிரசவத்தின் போது ஐந்து மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்களுக்கு உதவ பத்து மருத்துவ மற்றும் தாதியர் ஊழியர்களும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் வயிற்றில் கட்டி வெடிக்கும் அபாயத்தில் இருந்த போது வைத்தியர்கள் உரிய சிகிச்சை வழங்கவில்லை எனவும் அவசர வேளையில் தொடர்பு கொள்ள வேண்டிய நுவரெலியா அல்லது பதுளை பிரதான வைத்தியசாலைகளையும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் போகஹகும்புர பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தாயின் வயிற்றில் கட்டி வெடித்து இரத்தம் கொட்டியதால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டபோதும், தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் வெலிமடை வைத்தியசாலை பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஆபத்தான நிலையில் இருந்த தாயையும் பிள்ளையையும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், குழந்தை மட்டும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

தாயார் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து பதுளை வைத்தியசாலையின் அனைத்து மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்களும் அவசர சிகிச்சைப் பிரிவில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் திகதி சிகிற்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்புக்கு , வெலிமடை வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து, பெண்ணின் உறவினர்களும் கிராம மக்களும் வெலிமடை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மோதலின் போது, ​​வைத்தியசாலை ஜன்னல்களும் சேதமடைந்தன. இளம் தாய் உயிரிழந்ததை அடுத்து பிரதேசவாசிகள் ஆவேசமாக நடந்துகொண்டிருந்த நிலையில் வருட இறுதி விருந்தில் கலந்துகொண்ட வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை , இந்த சம்பவங்கள் தொடர்பில் வைத்தியசாலையிடமோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினரிடமோ முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இளம் தாயின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்படி, சுகாதார அமைச்சின் குழுவொன்று இந்த வாரம் வெலிமடை வைத்தியசாலை மற்றும் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்!!

திருச்சி விமான நிலையம்..

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் புதிய வடிவமைப்பானது இந்து மதத்தின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி இந்திய மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் முனையமானது இன்றைய தினம் (02) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 4,000 சர்வ தேச பயணிகள் மற்றும் 1,500 உள்நாட்டு பயணிகளின் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பாக இந்தியாவின் தமிழ் கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்செல்லும் வெளியேறும் வாயில்களிலும் இந்து ஆலய கோபுர முகப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே சுவரில் நடராஜர் சிற்பங்கள் , இந்து கடவுள்களின் படங்களும் வரையப்பட்டுள்ளதுடன் பிரமான்ட திரையில் ஆலய தேர் கலாசார நடனங்களும் உள்ளன.

இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்தின் உள்ளே புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 பரிசோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் மேம்பாலங்கள், 3 இடங்களில் முக்கியஸ்தர்களின் காத்திருப்பு அறைகள்,1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முனையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் மகளின் தாக்குதலில் பரிதாபமாக பலியான தந்தை!!

தென்னிலங்கையில்..

காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது மகளால் தாக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரயவந்துள்ளது. அப்போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் அவரது மகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

22 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த தந்தை 54 வயதானவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும், ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மேல் இருந்தால், வரி செலுத்த வேண்டும் என வரி திணைக்களத்தால் அடையாளம் காணப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்வது குறித்து குறிப்பிட்ட குழுவால் தவறான கருத்து பரப்பப்படுகின்றது.

அனைவரும் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். பதிவு கட்டாயம். ஆண்டுக்கு 12 லட்சத்தை தாண்டினால், அவர் வரி செலுத்துபவராக மாறுகிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் கொவிட் தொற்றால் ஒருவர் மரணம்!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அனுராதபுரம், பதவியா பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் (02.01) இரவு மரணமடைந்தார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்ரியன் பரிசோதனையில் கொவிட் தொற்று பீடித்துள்ளமை கண்டறியப்பட்டது.

பதவியாவை சேர்ந்த 55 வயதான நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வவுனியாவில் ஒரு வருடத்திற்கு பின்னர் மீண்டும் ஒருவர் கொவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனம் விட்டு பேச வேண்டும் வா என அழைத்த முன்னாள் காதலி.. நம்பிச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

தெலங்கானாவில்..

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் முன்னாள் காதலனை பழி வாங்க, இளம்பெண்ணொருவர் கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டம் படித்து வருபவர் ஷ்ரவன்.

இவருக்கு முன்னாள் காதலியான ரிங்கி திடீரென போன் செய்து நேரில் சந்திக்க அழைத்துள்ளார். ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாதங்களுக்கு முன்பே பிரிந்த நிலையில், ”உன்னிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேச வேண்டும் வா” எனக் கூறியதால் ஷ்ரவன் நம்பி அவர் கூறிய பார்க்கிங் பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு ரிங்கி அவரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் ரிங்கியின் நண்பர்கள் ஐவர் ஷ்ரவன் வந்த காரில் 40 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலத்தை போட்டுவிட்டு ஓடியுள்ளனர்.

பின்னர் அவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ஷ்ரவனின் காரை சோதனை செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், ஷ்ரவனை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் ரிங்கி தன்னை போன் செய்து அழைத்தது முதல் காதல் விவகாரம் வரை விவரமாக கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் ரிங்கியை பிடித்து விசாரித்தபோது முன்னாள் காதலனை பழி வாங்க கஞ்சா கடத்தல் பழியை சுமத்தியதாக ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ரிங்கி மற்றும் அவரது ஐந்து நண்பர்களையும் பொலிஸார் கைது செய்தனர்.

வரதட்சணை கேட்டு கொடுமை.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கேரளாவில்..

கேரள மாநிலம் திருவல்லம் வந்ததடாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று மாலை வந்திதடாவை சேர்ந்த ஷாஹினா என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் நௌபால், மாமியார் சுனிதா ஆகியோர் மீது திருவல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நௌபல் மற்றும் சுனிதா இருவரும் தொடர்ந்து ஷாஹினாவை அடித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவல்லம் வண்டித்தடம் பகுதியைச் சேர்ந்த ஷாஹினா என்பவருக்கும், கட்டக்கடை வஜ்ரம் எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் நௌபலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

ஷாஹினாவின் குடும்பத்தினர் கூறுகையில், திருமணத்திற்காக 75 பவுன் தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன. திருமணமான அன்றே கணவர் மற்றும் மாமியார் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தாக்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நௌஃபல் தனது சகோதரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஷாஹினாவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு வந்திருந்தார். ஷாஹினா தன்னுடன் செல்ல மறுத்ததால், குழந்தையை மட்டும் அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் ஷாஹினா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். 75 பவுன் நகை கொடுத்தும், தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலில் இருந்த ஷாஹினா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஷாஹினாவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.

இலங்கையில் ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி கண்டுபிடிப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் முதன்முறையாக, ஒளியியல் மாயையுடன் கூடிய வீதிப் பகுதியைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் ஆய்வின் மூலம் ஒளியியல் மாயையுடன் கூடிய வீதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாவுல – எலஹெர பிரதான வீதியில் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இந்த வீதிப் காணப்படுகிறது. இது தொடர்பில் முன்னாள் இராணுவ கேணல் ரத்னபிரிய பந்து காணொளி மூலம் பேராசிரியருக்கு தெரியப்படுத்தியதுடன், அவ்விடத்தை பார்வையிட வந்த பேராசிரியர், இலங்கையில் இவ்வாறானதொரு இடம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் கூறியள்ளார்.

வேறு பல நாடுகளில் இதுபோன்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த இடம் பார்ப்பதற்கு மேடு போல் இருந்தாலும், உண்மையில் இது ஒரு பள்ளத்தாக்கு என பேராசிரியர் விளக்கியுள்ளார்.

யாழில் புத்தாண்டு தினத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞர் : கலங்கும் குடும்பத்தினர்!!

யாழில்..

யாழ் மல்லாகம் பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று திங்கள் காலை (1) வலிவடக்குபிரதேச சபையில் சாரதியாக பணிபுரிந்து வரும் இளைஞர் வீட்டில் விபரீத முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவத்தில் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரசன்னா வயது 28 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். மல்லாகம் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் வீரரான குறித்த இளைஞர் விளையாட்டில் சிறந்த வீரர் என்றும் கூறப்படுகின்றது.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இளஞர் உயிரிழந்தமைக்கான காரண,ம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை வந்த பரக் ஒபாமா : சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தவறானது என்று சரிபார்ப்பில் தெரியவந்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறை, கடந்த சில மாதங்களாக குறிப்பிடத்தக்க எழுச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் பல புகழ்பெற்றவர்களும் இலங்கைக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தற்போது இலங்கையில் விடுமுறையை கழிப்பதாக தவறான சமூக ஊடக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அவர் இலங்கை வீதியிலுள்ள சிறிய விற்பனையகத்தில் இளநீரைக் குடித்துக்கொண்டிருப்பதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எனினும், பராக் ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என்பதை பல நம்பத்தகுந்த தரப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தநிலையில், பராக் ஒபாமா, இளநீரை ருசிக்கும் உண்மைப்படங்கள், 2016இல் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது லாவோஸுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் படங்கள் இந்தோனேசிய படைப்பாளரான அகன் ஹராஹாப்பினால் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு கவலையளிக்கும் செய்தி : அரசாங்கத்தின் தீர்மானத்தால் பாரிய சிக்கலில் நகர்ப்புற மக்கள்!!

இலங்கையில்..

நகர்ப்புறங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தினரையும், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களையும் இந்த புதிய வற் வரி திருத்ததம் கடுமையாக பாதிக்கும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

வற் வரி திருத்தம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். புதிய வற் வரி திருத்தமானது கிராமப்புற மக்களை விட நகர்ப்புற மக்களையே அதிகம் பாதிக்கும். இந்த வற் வரி திருத்தத்தின் மூலமாக நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொள்வர்.

வற் வரியால், நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் விலை உயரக்கூடும்.

அதேசமயம், பேக்கரி பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.இது இந்நாட்டின் கிராமப்புற மக்களை விட நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரையும் ஏழை மக்களையும் அதிகம் பாதிக்கலாம்.

நகர்ப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த பொருட்கள் மற்றும் சேவைகளின் அதிகரிப்பை தாங்க முடியாத சூழலுக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி எண் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வரி எண்களை பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் மேலும், வரி எண்ணை பதிவு செய்வது தொடர்பான விண்ணப்பத்தை அதன் இணையதளத்தில் சென்று பூர்த்தி செய்து கொள்ளலாம்.மதிப்பீட்டு ஆண்டிற்கு 1,200,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் வரிக் கோப்பைத் திறக்க வேண்டும்.ஒரு வருடத்தின் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலம் மதிப்பீட்டு ஆண்டாகக் கருதப்படுகிறது.

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.பதிவு செய்துக் கொள்ளாதவர்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பதிவு செய்யும் எனவும் இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் விபத்தில் உயிர்நீத்த இளைஞனுக்கு அஞ்சலி செலுத்தி மரம் நடுகை மேற்கொண்ட நண்பர்கள்!!

வவுனியா ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் கடந்த 01.01.2022 அன்று பிக்கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த செல்வராசா றஜீபன் (வயது 37) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

அவரின் இரண்டாவது வருட நினைவு தினத்தினையடுத்து அவரின் நண்பர்கள் விபத்து இடம்பெற்ற தாண்டிக்குளம் பகுதியில் அன்னாரின் உருவப்படத்திற்கு வைத்து மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியமையுடன் அப்பகுதியின் வீதியோரங்களில் அன்னாரின் நினைவாக மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.

இவ் நினைவஞ்சலி நிகழ்வில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் , நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரிவின் பின்னரும் இன்னும் உன் நண்பர்களின் கண்களில் இருந்து கொண்டு தான் இருகிறாய் வடிந்தோடும் கண்ணீராயல்ல அவர்களின் கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய் என்ற கவிதையுடன் நண்பர்களின் உணர்வு அவரின் பிரிவினை உணர்த்தி நின்றமை வீதியில் சென்றவர்களின் மனதை நெகிழவைக்கும் நிகழ்வாக அமைந்திருந்தது.