சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2400 முதல் 2600 ரூபா வரையிலும், தலபத் மீன் 3200 முதல் 3400 ரூபா வரையிலும், சால மீன் 650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்கரையில் மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது.
குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
மேலும், கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி, நாகர்கோவில், உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வானில் பயணித்த தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும் அவரது 31 வயது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும்.
ஈரமான, சேறு நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் அல்லது வயல்களில் வேலை செய்வோர் தங்கள் கால்களில் காயங்கள் அல்லது தோல் நோய்கள் இருப்பின் அவதானமாக இருத்தல் வேண்டும்.தற்போது பலர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காயச்சல், தலைவலி, உடல் வலி என்பன ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். குறிப்பாக அண்மையில் வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞன் எலிக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வயதுக் குழந்தையின் தாயை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை பின்னர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் இரவெல்லாம் தாயின் சடலத்துடன் வீறிட்டு அழுதபடி கிடந்த குழந்தை குறித்தான அவலம் குருகிராமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசம்மாநிலம் காசியாபாத் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக அந்த நபர் தனது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரின் வீட்டை அடைந்த போலீஸார், கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்த பெண்ணையும், அதன் அருகே அழுதபடி இருந்த ஒரு வயது குழந்தையையும் மீட்டனர்.
ஆக்ராவை சேர்ந்தவர் கவுரவ் சர்மா. ஆறு மாதம் முன்பாக மனைவி லட்சுமி ராவத் மற்றும் ஆண் குழந்தையுடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.
இதற்கு அப்பால் இந்த தம்பதியர் குறித்து அக்கம்பக்கம் வசிப்போர் அதிகம் தெரிந்திருக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் நகரம் ஆழ்ந்திருந்தபோது, கவுரவ் சர்மா வீட்டில் பயங்கரம் அரங்கேறி இருக்கிறது.
மனைவி லட்சுமி ராவத் தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டும், கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயின் சடலத்தின் அருகே அவரது ஒரு வயது மகன் இரவெல்லாம் அழுதபடி இருந்துள்ளான்.
அவனது தலையிலும் செங்கல்லால் தாக்கிய சிறு காயம் தென்பட்டுள்ளது. மனைவியை கொன்ற கவுரவ் சர்மா, மகனைக் கொல்லும் முயற்சியில் பின்னர் அதனை கைவிட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மனைவியை கொன்றதும், ஒரு வயது குழந்தையையும் அங்கேயே தவிக்கவிட்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய கவுரவ் சர்மா, கவுசாம்பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்துள்ளார். காலையில் பயணிகள் நடமாட்டம் அதிகரித்ததும் அங்கிருந்து வெளிப்பட்டவர் முதலாவது பிளாட்பாரத்துக்கு விரைந்துள்ளார்.
வைஷாலி நோக்கி விரையும் ரயில் அருகில் வந்ததும், தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இவை அனைத்தும் மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. கவுரவ் சர்மா, லட்சுமி ராவத் தம்பதியின் உடலை கைப்பற்றி இருக்கும் போலீஸார், கொலை – தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அருள் முருகன் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அருள் முருகனுக்கு குடி பழக்கம் உள்ளதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தம்பதி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அருள் முருகன் மனைவி அபிராமியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அபிராமி அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த அருள் முருகன் அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். போதையில் இருந்ததால் அருள் முருகனால் மனைவி அபிராமியை காப்பாற்ற முடியாத சூழலில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் தீயணைப்பு துறையினருடன் வந்து நள்ளிரவு முதல் இருவரது உடலை தேடிய நிலையில், அதிகாலையில் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகும் நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களானது நம்மில் பல பேர் தவறாமல் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். சாப்பாடு மற்றும் தூக்கத்தை விட இந்த சமூக வலைத்தளமானது முக்கியமானதாக திகழ்கிறது, அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருந்தது.
பலரும் யூடியூப் சேனல்கள் தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் யூடியூப் வீடியோ என அனைத்துவிதமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர்.
அவ்வாறு சமையல் வீடியோக்கள் மூலம் பெண் ஒருவர் மாதம் லட்ச ரூபாய் வருமானமாக பெறுகிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம், நிஷா மதுலிகா என்கிற பெண் அவர்களது வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான subscriberகளை பெற்று நன்கு சம்பாதித்து வருகிறார்.
தனது ஓய்வுகாலத்திலும் ஓய்வு எடுக்காமல் அந்த நேரத்தையும் பயனுள்ளதாக செலவழித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததும் தொழில்முனைவோரான எம்.எஸ். குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பகாலத்தில் ஆசிரியர் பணியாற்றிய இவர் பின்பு அவரது கணவர் தொழிலின் நிதியை கையாண்டு வந்தார். குடும்பத்துடன் நொய்டாவிற்கு மாறியபோது இந்த வேலையை மேற்கொள்வது கடினமாக இருந்ததால் இதை விட்டுவிட்டார்.
கணவர் அலுவலகத்துக்கு சென்றதும் சுமார் 6 மணி நேரம் வீட்டில் சும்மா இருப்பதை வெறுத்த இவர் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று விரும்பினார். நிஷா மதுலிகா 2007ஆம் ஆண்டில் சமையல் தொடர்பான பதிவுகளை எழுதி வெளியிட தொடங்கினார்.
இதில் பெரும்பாலானவை அவரது அம்மாவிடம் இருந்து கற்றுகொண்டவையே, இதை எழுத தொடங்கியபோது இவருக்கு 54 வயதாகும். இவரது மகன்களும், கணவருமே இணையத்தளங்களை உருவாக்க முற்றிலும் உதவினர். இவரது குறிப்புகளானது பெருமளவில் வரவேற்கப்பட்டதால், இவரை வீடியோ பதிவாக வெளியிடுமாறு கேட்டனர்.
2011 ஆம் ஆண்டில் தனது யூடியூப் channel ஐ ஆரம்பித்து 2200 வீடியோக்களை வெளியேற்றினார். சமையல் வீடியோக்களை வெளியிடுவோர்களில் மிகவும் பிரபலமான ஒருவராக நிஷா மதுலிகா உள்ளார்.
ஓய்வில் இருப்பதை நினைத்து வருந்திய இவர் தற்போது சற்றுக்கூட உட்கார இயலாத அளவிற்கு தன்னுடைய 64 வயதிலும் கடுமையாக உழைப்பது மட்டுமின்றி எல்லாருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
இவரது யூடியூப் channelக்கு 1.4 கோடிக்கும் மேற்பட்ட subscriberகள் உள்ளனர், லட்சக்கணக்கில் வருமான ஈட்டும் இவரது சொத்துமதிப்பானது ரூ.29 என்று மதிப்பிட்டுள்ளது.
இளம்பெண் ஜோதிக்கு வாழ்வில் நேர்ந்த கொடூரம் வேறு எந்த பெண்ணுக்கும் நேர கூடாது. எதிர்காலம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் எத்தனையோ கனவுகளுடன் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணின் வாழ்வில் அத்தனைப் பெரிய துன்பம் நேர்ந்து, அதிர்ச்சியளித்துள்ளது.
திருமணமான ஆறே மாதங்களில், புது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூரு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹாசன் மாவட்டத்தில், ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25).
ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஜீவன், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜோதி (22) எனும் இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சிறுவயதில் இருந்தே மாடர்ன் பெண்ணாக வலம் வந்த ஜோதி, தனது உடைகளையும் நவயுக யுவதியைப் போல அல்ட்ரா மார்டனாக அணிந்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் இப்படி அரைகுறையாக உடை அணிவதை, ஜீவனின் பெற்றோர் குற்றச்சாட்டாக, தங்கள் மகனிடம் குறை கூறியுள்ளனர்.
இதையடுத்து ஜோதியிடம் இப்படி உடல் பாகங்கள் தெரியும்படி அரைகுறையாக உடை அணியாதே என்று ஜீவன் கண்டித்துள்ளார். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் ஜோதி, தொடர்ந்து அரைகுறையாகவே உடை அணிந்து வந்துள்ளார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோதி வெளியே செல்லும் போது அரைகுறை உடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜீவன், தனது மனைவி ஜோதியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் இதை ஜோதி கேட்கவில்லை.
இதையடுத்து ஜோதியை தனது பைக்கில் அழைத்துச் சென்று விடுவதாக ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். கணவன் சமாதானமாகி, ஆசையாக அழைக்கிறார் என்று நம்பி பைக்கில் ஜோதி சென்றுள்ளார்.
ஆனால்,ஜோதியை அங்குள்ள வனப்பகுதிக்கு பைக்கில் ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜோதியை அவர் தாக்கியுள்ளார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அங்கிருந்து ஜீவன் தப்பியோடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரிசிகெரே புறநகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சென்று ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அரைகுறையாக ஆடை அணிந்ததால் அந்த ஆத்திரத்தில் காதல் ஜோதியை, அவரது கணவர் ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை தேடி வருகின்றனர். திருமணமான ஆறே மாதங்களில் காதல் மனைவியை கணவன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த சம்பவம், ஹாசன் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் பிபிஏ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, பிபிஏ படித்து வந்தார்.
பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு அனுப்ப அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வர்ஷினி மனவருத்தம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் இன்று வர்ஷினி அறைக்கு அவர் தாய் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மின்விசியில் தூக்கிட்டு வர்ஷினி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வில்சன் கார்டன் போலீஸார் விரைந்து வந்து வர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்தியப் பிரிவு காவல் துறை துணை ஆணையர் சேகர் கூறுகையில், ” பெங்களூரில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட் செய்ய பெற்றோரிடம் வர்ஷினி அனுமதி கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்காக மாலுக்குச் செல்ல அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.
இதன் காரணமாக வர்ஷினி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார். போட்டோ ஷூட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பிபிஏ மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதினரிடையேயான மாரடைப்பு மரணங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வயதைத் தாண்டாதவர்களிடையேயும், உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடி வரும் விளையாட்டு வீரர்களிடையே மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது.
17 வயதேயான மாணவன், உத்தர பிரதேச மாநிலத்தில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு, தண்ணீர் குடித்ததும், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் சைனி. இவர், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவிதாதேவி. இந்த தம்பதியினரின் மகன் பிரின்ஸ் சைனி (17). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சைனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் மூழ்கிய மகளைக் காப்பாற்ற முயற்சி செய்த நிலையில், அடுத்தடுத்து கடலில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர் சிவதாணு (46 ). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் அனைவரும் நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர். சிவதாணு தனது 19 வயதான மகள் நிவேதிதாவையும் அங்கு அழைத்து சென்றார்.
அங்கு அவா்களில் 9 பேர், கடலில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் மாலையில் குளித்தனா். அப்போது பெரிய அலையில் 9 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
நீச்சல் தெரியாத அவா்களின் அலறல் சப்தத்தைக் கேட்ட, கரையில் இருந்த சிவதாணு, தனது மகள் நிவேதிதாவை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றாா். ஆனால் அவரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா்.
அவா்களை மீட்கும் முயற்சியில் அங்கிருந்த பொதுமக்களும், மீனவா்களும் ஈடுபட்டனா். இதில் 4 பேரை பாதுகாப்பாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலைப் பகுதியைச் சோ்ந்த சு.பிரசாந்த் (18), துரைப்பாக்கம் பாா்த்தசாரதி தெருவைச் சோ்ந்த ஜெ.மானஸ் (18), நவீன் (26), நிவேதிதா ஆகியோா் தண்ணீரில் மூழ்கியதால், உடனடியாக மீட்க முடியவில்லை.
சிறிது நேர தேடுதலுக்கு பின்னா் நிவேதிதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அதே வேளையில் சடலமாக சிவதாணு, நவீன் ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டனா். இருவா் சடலங்களையும் கானத்தூா் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னர் கடலில் மூழ்கி காணாமல்போன பிரசாந்த், மானஸை போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினா், கடலோர காவல் படையினா் உதவியுடன் திருவான்மியூா் தொடங்கி மாமல்லபுரம் வரையில் இரவு முழுவதும் படகில் தேடினா்.
மேலும் கடலோரக் காவல் படையினா் ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை தேடுதல் பணி நடைபெற்றது. இதில் முட்டுக்காடு கடல் பகுதியில் மிதந்த பிரசாந்த் சடலம் மீட்கப்பட்டது. முட்டுக்காடு எம்.ஜி.எம். கடற்கரையோரம் மானஸ் சடலம் ஒதுங்கியது. இந்த சம்பவம் தொடா்பாக கானத்தூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
மானஸ், பிரசாந்த் சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தனா். இவா்கள் பகுதி நேர பணியாளா்களாக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மூன்று மகள்களை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகைகள் தயாரிப்பவர்.
இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13), குசுமபிரியா (9). சிவராமகிருஷ்ணா எந்த தொழிலும் இல்லாததாலும், பலரிடம் கடன் வாங்கியதாலும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறார். கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பலர் பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு வெளியேறிய சிவராமகிருஷ்ணா, அனகப்பள்ளி பகுதி அருகே வாடகை வீட்டில் தங்கினார். இருப்பினும், கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர்.
இதனால் சிவராமகிருஷ்ணா மிகுந்த வருத்தம் அடைந்தார். 3 மகள்களுடன் எப்படி வாழப் போகிறோம்? என மனைவி மாதவியிடம் அவ்வப்போது கூறியபடி குழம்பினான்.
இந்நிலையில், நேற்று முன்தினம், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவராமகிருஷ்ணா, தற்கொலை செய்து கொள்ளலாம் என, மனைவியிடம் கூறியுள்ளார்.
“நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டால், எங்கள் மகள்கள் அனாதைகளாகி விடுவார்கள்,” என, மனைவி சமரசம் செய்தார்.ஆனால், அதை ஏற்க மறுத்த சிவராமகிருஷ்ணா, மனைவி மற்றும் மகள்களை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி நேற்று இரவு விஷம் வாங்கிகொண்டு வீடு திரும்பினார். யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்து கொடுத்தார். இது தெரியாமல் மனைவி, மகள்கள் சாப்பிட்டுள்ளனர். மனைவி மற்றும் மகள்கள் தன் கண் முன்னே விஷம் கலந்த உணவை சாப்பிடுவதை கண்டு சிவராமகிருஷ்ணா கஷ்டப்பட்டுள்ளார். பிறகு அந்த உணவையும் சாப்பிட்டார்.
சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்தனர். சிவராமகிருஷ்ணா, மனைவி மாதவி, மகள்கள் வைஷ்ணவி, லட்சுமி ஆகியோர் படுக்கையிலேயே ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தாய், தந்தை, சகோதரிகள் இறந்ததை பார்த்து 3வது மகள் குசுமபிரியா கதறி அழுதார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குசுமப்பிரியாவை மீட்டு அனகப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அனகப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தடுத்து 4 பேரைத் திருமணம் செய்து இளம்பெண் அதிர்ச்சியளித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்ததை மறைத்து விட்டு, தன்னை 3வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது 4வது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
நன்றாக இருந்த அவரது குடும்பத்தில், மூன்று மாதங்களுக்குத் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்றுள்ளார். இதன் பின் அவர் காணாமல் போனார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரகு என்பவரை தனது மனைவி சினேகா திருமணம் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாவணகெரேவில் உள்ள கேடிஜே நகர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி தனது மனைவி காணாமல் போனதாக பிரசாந்த் புகார் செய்தார்.
இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில். “எனது மனைவி சினேகா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு குழந்தையை கலைத்துவிட்டு, எனக்கு தெரிவிக்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
எங்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாவதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த பிறகு தான் அவரது புதிய திருமணம் பற்றி அறிந்தேன். சமூக வலைதளங்களில் அவரைச் சந்தித்த பிறகு அவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்தேன்.
எனக்கு முன் இரண்டு ஆண்களை மணந்ததால் என் மனைவிக்கு நான் மூன்றாவது கணவன். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். நான் அவளை திருமணம் செய்யும் போது அவள் குடும்பத்தில் இருந்து யாரும் என்னிடம் அவள் முந்தைய திருமணங்களைப் பற்றி கூறவில்லை.
எதிர்காலத்தில் மற்ற ஆண்களை ஏமாற்றாமல் இருக்க சினேகா மீது மோசடி புகார் கூறியுள்ளேன்” என்றார். தற்போது பெங்களூரில் வசிக்கும் ரகு என்பவரை சினேகா நான்காவது திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில், அவரது மூன்றாவது கணவர் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சினேகா, வீடியோக்களில் அதில் பதிவேற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனை மொபைல் போன் பயன்படுத்துவதை தடுத்த கணவனை கத்தரிக்கோலால் குத்தினாள் பாதிக்கப்பட்டவரின் கணவர் தனது மனைவி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், இளம் மனைவி ஒருவர் தனது கணவரை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் தடுத்தபோது அவரது கண்களில் கத்தியால் குத்தியுள்ளார். கணவருக்கு கத்திரியால் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மனைவி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனைவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுத்தபோது, கோபமடைந்த அவர், வீட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது கண்ணில் குத்தியதாகவும் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கண்ணில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே சம்பவம் குறித்து பராட் சிஓ சவிரத்னா கவுதம் கூறுகையில், கணவன்-மனைவி இடையே மொபைல் போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மனைவி கணவரின் கண்களில் கத்திரிக்கோலால் அடித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையில், பாரௌத்தில் வசிக்கும் அன்கித் (28) என்பவர் ரமலா காவல் நிலையப் பகுதியின் சூப் கிராமத்தில் வசிக்கும் பெண்ணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து சில நாட்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக கணவன்-மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு பிரச்னையில் தகராறு, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இன்றும் அதேதான் நடந்தது.
அங்கித் தனது மனைவியை மொபைலைப் பயன்படுத்துவதைத் தடுத்ததும், அவள் கோபமடைந்து அறைக்குள் சென்றாள். சிறிது நேரம் கழித்து, அவள் கத்தரிக்கோலை எடுத்து கட்டிலில் அமர்ந்திருந்த கணவன் அங்கித்தின் கண்களில் குத்தினாள். இதனால் அங்கித் ரத்தம் கசிந்து தரையில் விழுந்தார்.
சத்தம் கேட்டு அந்த இளைஞனின் அண்ணியும், மருமகனும் ஓடி வந்தனர். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் வழக்கு பதிவு செய்தார். தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் பேசி வந்த மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள முஸ்துரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.
இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அர்பிதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தபோது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ரவி தனது மகளைக் கண்டித்து தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்ற பிறகும் அந்த இளைஞனிடம் அர்பிதா பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் அர்பிதாவை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ரவி கடந்த மே மாதம் அர்பிதாவை மறவேமன கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைக்கோல் இடையே எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்கும் போது நேற்று போலீஸ் நிலையத்திற்கு ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் அர்பிதாவை தந்தை ரவி கொன்றதாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரவி மீது போலீசார் கவனம் திரும்ப, போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது மகள் அர்பிதாவை கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மகளைக் கொன்ற தந்தை 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வந்தார்.
இவர் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் இரவு நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார். அதே கிளப்க்கு மங்கேஷ் அரோரா என்ற தொழிலதிபர் தனது காதலியான ரிக்கி என்பவரோடு வந்துள்ளார்.
அங்கு அவர்கள் இருந்தபோது மங்கேஷ் அரோரா உமா சுதரை நோக்கி ஆபாசமாக வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமா சுதர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் மங்கேஷ் அரோராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடருக்கு இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன் பின்னர் கிளப் ஊழியர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர். வெளியே வந்தும் வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், மங்கேஷ் அரோரா தனது காதலியுடன் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார்.
அப்போது அவர்கள் காருக்கு முன்சென்று ராஜ் குமார் மற்றும் உமா சுதர் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது காரை நிறுத்தாமல் மங்கேஷ் அரோரா அவர்கள் மேல் காரை ஏற்றியுள்ளார்.
இதில் உமா சுதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் மங்கேஷ் அரோராவை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.