புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த ரசிகா பிரியதர்ஷனி என்ற திருமணமான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புலத்சிங்களவில் இருந்து பரகொட செல்லும் வீதியில், கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், லொறியொன்று நிறுத்தியதன் காரணமாக லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து அந்த இடத்திற்கு வந்த ஒருவர் தாக்கியதில் லொறியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புலத்சிங்கள மரண விசாரணை அதிகாரி சிரத் பரத பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மேலதிக பரிசோதனைக்காக சடலத்தை ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மொனராகலை பொத்துவில் வீதியில் கிவுலேயாய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தம, கிராவணபெரலிய பகுதியைச் சேர்ந்த கே.எம். ரசிக லக்மால் தர்மப்பிரிய என்ற 29 வயதுடைய சூரியவெவ பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
மொனராகலையில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக தனது மனைவி மற்றும் உறவினர்கள் இருவருடன் மொனராகலை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, அம்பாறை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கார் மீது மோதியுள்ளது.
காரை ஓட்டி வந்த கான்ஸ்டபிள், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இருவர் காயமடைந்து சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சியம்பலாண்டுவ பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி ரவீந்திர ஹேரத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
வவுனியாவில் அனைத்து பாடசாலைக்கு முன்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த 24ம் திகதி இசுறுபாயவிற்கு முன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து முன்னெடுத்து ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றையதினம் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடும் அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான அரசின் கொடூர தாக்குதலை எதிர்ப்போம், ரணில் ராஜபக்ஷ அரசின் கேவலமான குண்டர் தாக்குதலை கண்டிப்போம், சம்பளம், சம்பள நிலைவை மீது அறவிடும் வரியை உடன் நிறுத்து போன்ற பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சீரழிக்காதே சீரழிக்காதே அடிப்படை ஜனநாயகத்தை சீரழிக்காதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான யுத்தத்தின் போது உயிரிழந்த இலங்கைப் பெண்ணான அனுலா ரத்நாயக்கவின் உடல் நாளை இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளையதினம் காலை குறித்த பெண்ணின் உடல் இலங்கையை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். மோதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் இறந்துவிட்டாரா என்பதை கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவரது குழந்தைகளின் டிஎன்ஏ மாதிரிகளைப் பயன்படுத்தி அந்த உறுதிப்படுத்தல்கள் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக பெண் உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான தம்பதியரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் (26) வியாழக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , இருவரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தென் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தகவல் தொடர்பாடல் உத்தியோகஸ்தராக கடமையாற்றும் பெண்ணொருவர் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.
பணத்தை இழந்த இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம் முறையிட்டுள்ளார். இதை அடுத்து , முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரான பெண்ணை கைது செய்தனர்.
பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த மோசடி சம்பவத்துடன் , அவரது கணவனுக்கும் தொடர்பு இருப்பதனை கண்டறிந்து கணவனையும் கைது செய்த நிலையில், இருவரையும் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் – கொடிகாமத்தில் தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தலைதெறிக்க தப்பி சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தனது பிள்ளையை முன் பள்ளியில் இருந்து ஏற்றிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். இதன் போது , ஆள்நடமாற்றம் அற்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் நின்ற இருவர் , அவரை மறித்து நபர் ஒருவரின் பெயரை கூறி வினாவியுள்ளனர்.
இதன்போது குறித்த நபரை தனக்கு தெரியாது என கூறி, அவர் செல்ல முற்பட்ட வேளை அவரது கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்டு , பிள்ளையுடன் மோட்டார் சைக்கிளை தள்ளி விட்டு, தமது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
உடனே சுதாகரித்துக்கொண்ட இளம் தாய் , தனது மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டவாறு கொள்ளையர்களை துரத்தி சென்றார். அப் போது , வீதியில் பயணித்தவர்கள் கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மேலும் பொலிஸார் , கொள்ளையர்கள் கைவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.
மஸ்கெலியா- நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்டம் எமில்டன் பிரிவில் மூன்று பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போயுள்ள மூவரும் நீர் குழாயொன்றை உடைத்து விட்டதால் வீட்டார் திட்டுவார்கள் என்ற பயத்தில்பாடசாலை செல்வதாகக் கூறி நேற்றைய தினம் (26.10.2023) வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜா நிலூக்ஷன் 15 வயது யோகராஜன் திவாகர் 13 வயது ராஜா சன்தூர் 14 வயது ஆகிய மூன்று மாணவர்களே காணாமல் போயுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகவல் வழங்கியுள்ளார். இவர்களை கண்டால் அருகாமையிலுள்ள பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் இன்று (27) உயிரிழந்துள்ளார்.விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடபில் மேலும் தெரியவருகையில்,கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். விபத்து , அராலி தெற்கு பகுதியைச் சேர்ந்த காரின் சாரதி இன்றைய தினம் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில்நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கிருஸ்ணகுமார் கிருசாந் வயது 27 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.அதேவேளை இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.
வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் இன்று (27.10) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன், அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் மற்றும் வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பாதிக்கப்பட்ட தாய்மார் தமக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொலிசாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிட்டனர்.
கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா நகரசபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்த விடாது இரு பகுதி தாய்மாரையும் அங்கிருந்து வெளியிற்றியிருந்தனர். வெளியேறிய இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வராது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி, செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி, சிவாநந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா, பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
வவுனியா மாவட்டத்தில் க.பொ.த.உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு நேற்று (26.10.2023) மாலை 4.00 மணிக்கு கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகவானது வவுனியா தெற்கு ஆசிரியர் ஆலோசகர் கே.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இல் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு கல்வி பணிப்பாளர் சுரேந்திரன் அன்னமலர், சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் என். கமலதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளின் மங்கள விளக்கேற்றலை நிகழ்வுகள் ஆரம்பமாகியது.. முதல் நிகழ்வாக பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் அதிதிகளால் பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாடசாலை அதிபர்களின் உரை இடம்பெற்றது.
நிகழ்வின் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் அதி உயர் சித்திகளை பெற்ற தமிழ் , சிங்களம் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அதிதிகளால் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விசேடமாக மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலாம் இடத்தை பெற்ற, வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் நடராசா நிசாந்தன் மற்றும் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் விமலராஜா விதுவர்சன் ஆகியோருக்கு நெல்லி ஸ்டார் விடுதி உரிமையாளர் தேவேந்திரராசா கிருஸ்னரூபன் தங்கப்பதக்கங்களை வழங்கி கௌரவித்திருந்தார்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மணப்பாறை கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதிக்கு மணிமேகலை (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி இறந்துவிட்டார்.
இதனையடுத்து ராஜரெத்தினம் கலையரசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மணிமேகலை திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆயுதபூஜையையொட்டி தொடர் விடுமுறைவிடப்பட்டதால் மணிமேகலை வீட்டுக்கு வந்து இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தங்கி இருந்தார். நேற்று காலையில் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது, மணிமேகலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமேகலை தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துப் பிரச்னையில் தன்னுடைய சொந்தச் சகோதரிகளை விஷம்வைத்துக் கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர்.மும்பை அருகிலுள்ள அலிபாக்கில் வசிக்கும் கணேஷ் மொஹிதே (36), வனத்துறையில் வேலை செய்கிறார். இவருக்கு சோனாலி, ஸ்நேகா என இரண்டு சகோதரிகள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 16-ம் தேதி அடுத்தடுத்த நாளில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார்கள். இதில் ஸ்நேகா உயிரிழப்பதற்கு முன்பு போலீஸாரிடம் அளித்திருந்த வாக்குமூலத்தில், தன்னுடைய சகோதரன் சூப்பில் விஷம் கலந்து கொடுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
ஸ்நேகாவின் தாயார் தன்னுடைய மகளின் சாப்பாட்டில் உறவினர் யாரோ விஷம் வைத்துக் கொலைசெய்துவிட்டதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீஸார் கணேஷைப் பிடித்துச் சென்று விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து அலிபாக் போலீஸ் அதிகாரி சோம்னாத் பேசுகையில், “கணேஷின் தந்தை இறந்தவுடன் குடும்பத்துக்குச் சொந்தமான வீட்டைத் தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். அதோடு குடும்பத்தை கவனித்துக்கொள்வதாகக் கூறி, தன்னுடைய தாயாரிடம் சொல்லி, வனத்துறையில் வேலை பார்த்து இறந்துபோன தந்தையின் வேலையைத் தனக்கு வாங்கிக்கொடுக்கும்படி கணேஷ் கேட்டுக்கொண்டார்.
உடனே அவரின் தாயாரும், தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்கப் பரிந்துரை செய்தார்.வேலை கிடைத்தவுடன், தன்னுடைய தாயாரின் வங்கிக் கணக்கிலிருந்து கணேஷ் சட்டவிரோதமாக கையெழுத்து போட்டு, பணத்தை எடுக்க ஆரம்பித்தார். கணேஷின் சகோதரிகள் இரண்டு பேரும் குடும்பச் சொத்தில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டனர்.
ஆனால், கணேஷ் அதற்குத் தயாராக இல்லை. இதையடுத்து தன்னுடைய கணவரின் வேலையை, தன் மகள்களில் ஒருவருக்குக் கொடுக்கும்படி கணேஷ் தாயார் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் கணேஷ் கடும் கோபத்துக்கு ஆளானார்.
அதையடுத்து, கணேஷ் தன்னுடைய சகோதரிகளைக் கொலைசெய்யத் தேவையான விஷத்தை இணையதளங்களில் தேடி வாங்கியிருந்தார். 53 வெப்சைட்டுகளில் விஷத்தைத் தேடியிருந்தார். கணேஷ் காரில் எலி மருந்து தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கணேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகிறோம்” என்றார்.
போரால் பாதிக்கப்பட்ட காசா இளம்பெண் வெளியிட்டுள்ள வீடியோ பார்ப்போர்களை கண் கலங்க வைத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் ராணுவம் இடையே கடந்த 19 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலின் கோர தாக்குதலால், காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து மக்கள் அனைவரும் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஸாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பேசிய வீடியோ காண்போரை கலங்கவைத்துள்ளது. அந்த வீடியோவில், “காஸாவின் டல் அவ் ஹவாவில் வசித்து வந்த நாங்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டோம். நல்ல வேளையாக என்னுடைய நாயை காப்பாற்றிவிட்டேன்.
எங்களது வீடு பறிபோய்விட்டது, அம்மாவின் வேலையும் பறிபோகியுள்ளது.வெளியேற்றப்பட்ட நிலையில், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு சாப்பிட உணவு இல்லை, மின்சாரம் இல்லை, கழிப்பறைக்கு கூட செல்ல முடியவில்லை.
நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருவேளை அடுத்ததாக நான் கூட உயிரிழக்கலாம். எப்படியானாலும் இது எங்கள் மண் தான். நதி முதல் கடல் வரை எங்களுடையதுதான். இதை மறந்துவிடக்கூடாது” என்று பேசியுள்ளார்.
எருமை மாட்டு வளர்ப்பின் மூலம் மாதம் 1 கோடி ரூபாய் ஈட்டி வரும் இளைம்பெண்ணின் சாதனை அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத் நகர் அருகில் இருக்கும் நிகோஜ் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்ரத்தா தவான் என்ற 23வயது பெண் எருமை மாடுகளைக்கொண்டு பால்பண்ணை நடத்தி வருகிறார்.
வீட்டில் ஸ்ரத்தாவின் தந்தைக்கு உடல் ஊனம் என்பதால் வீட்டு வேலைகளை தனது 11 வயதிலேயே தனது தோழில் சுமக்க ஆரம்பித்தார். அப்போது வீட்டில் ஒரு எருமை மாடு மட்டும் இருந்தது. அந்த ஒரு மாடு படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. ஸ்ரத்தா படித்துக்கொண்டே தன் வீட்டில் மாடுகளையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தார்.
இன்றைக்கு ஆண்டுக்கு ஒரு கோடி சம்பாதிக்கும் ஸ்ரத்தா தான் கடந்து வந்த பயணம் குறித்து அளித்த பேட்டியில்,”எருமை மாடுகள் எனது குடும்பத்தின் உறுப்பினர்களாக இருக்கிறது. எனது தந்தை இந்த தொழிலை என்னிடம் கொடுத்த போது மாடுகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்தது. என் தந்தையால் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாது. எனது தம்பியும் சிறியவன்.
எனவே நானே இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்யவேண்டியிருந்தது. காலையில் அனைத்து சிறுமிகளும் பள்ளிக்கு தயாராகிக்கொண்டிருப்பார்கள். ஆனால் நான் காலையிலேயே மாடுகளிடமிருந்து பால் எடுப்பது மற்றும் இரு சக்கர வாகனத்தில் தெருத்தெருவாக சென்று பால் சப்ளை செய்து கொண்டிருப்பேன்.ஆரம்பத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் சப்ளை செய்வது வெட்கமாக இருந்தது.
எங்களது ஊரில் பெண்கள் யாரும் இரு சக்கர வாகனமே ஓட்டமாட்டார்கள். நான் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் விற்பனை செய்வதை பார்த்து சிலர் என்னை உற்சாகப்படுத்தி இருக்கின்றனர். எங்களிடம் இருந்த மாடுகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததால் மாடுகளுக்கு தனியாக கொட்டகை கட்டினேன்.
2015-ம் ஆண்டு நான் 10-வது வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது தினமும் 150 லிட்டர் பால் சப்ளை செய்தேன். 2016-ம் ஆண்டு மாடுகளின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது. ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் அளவுக்கு வருமானம் கிடைத்தது. மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் சவால்களும் அதிகரித்தது. அதிக அளவில் தீவனம் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் கிடைத்த தீவனம் போதுமானதாக இல்லை.
எனவே வெளியில் இருந்தும் வாங்க ஆரம்பித்தேன். இதனால் லாபமும் குறைந்தது. இதனால் தீவனம் எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதை தேடிப்பார்த்து வாங்க ஆரம்பித்தோம். மாடுகளின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தினமும் 450 லிட்டர் பால் கிடைத்தது. மாடுகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டதால் ஏற்கனவே இருந்த ஷெட்டில் மேல் மாடியை கட்டி அங்கு சில மாடுகளை மாற்றினோம்.
எனது தம்பி கொட்டகையை சுத்தம் செய்வது உட்பட சில வேலைகளை கவனித்துக்கொள்வான். நான் தனியாகவே 20 மாடுகளிடம் பால் கரந்துவிடுவேன். வேலைக்கும் ஆட்கள் வைத்திருக்கிறேன். பால் பண்ணையை கவனித்துக்கொண்டாலும் படிப்பை கைவிடவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டே கல்லூரி படிப்பை தொடர்ந்தேன். தற்போது மண்புழு உரம் தயாரிக்கும் தொழிலையும் செய்து வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் கிலோ மண்புழு உரம் சி.எஸ் அக்ரோ ஆர்கானிஸ் என்ற பெயரில் விற்பனை செய்கிறோம். அதோடு மாட்டுச்சாணத்தில் இருந்து பயோகேஸ் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது பால் பக்கத்து பண்ணைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. பால் மற்றும் மண்புழு உரம் விற்பனை மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
மாட்டுப்பண்ணையையும் பார்த்துக்கொண்டே தனது எம்.எஸ்.சி.படிப்பையும் முடித்துள்ள ஸ்ரத்தா முன்னேற நினைக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். பால் பண்ணையில் கிடைத்த பணம் முழுவதையும் தொடர்ந்து மீண்டும் அதிலேயே முதலீடு செய்த ஸ்ரத்தா இதன் மூலம் வெளியில் கடன் வாங்குவதையும் தவிர்த்துள்ளார். மாடுகள் வாங்குவதாக இருந்தாலும், தீவனம் வாங்குவதாக இருந்தாலும் குறைந்த விலையில் கொடுக்கும் வியாபாரிகளை தேடிக்கண்டுபிடித்து வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சொத்துக்காக அண்ணன் தனது உடன்பிறந்த 2 சகோதரிகளை விஷம் கொடுத்து கொலை செய்துள்ள பயங்கரம் சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், அலிபாக் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் மோகித்- இவரின் சகோதரி சோனாலி சங்கர் மோஹித் (வயது 34).
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டடார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாள் சோனாளியின் தங்கையான சினேகா சங்கர் மோஹித் (வயது 30), அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக பன்வேலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவர் அக்டோபர் 20ஆம் தேதி உயிரிழந்தார்.உயிரிழப்பதற்கு முன்னதாக சினேகா அதிகாரிகளிடம் தனது மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனது சகோதரரின் மீது நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனது அக்காவின் மரணத்திலும் மர்மம் உள்ளது. எங்களது உணவில் விஷப்பொருள் ஏதேனும் கலந்திருப்பார் என கூறியிருக்கிறார்.
இதனையடுத்து, களத்தில் இறங்கிய காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சொத்துக்காக சொந்த தங்கைகளே அண்ணனை கொலை செய்த பயங்கரம் தெரியவந்தது. அதாவது, கடந்த 2009 ஆண்டு கணேஷ் மோகித்தின் தந்தை வனத்துறையில் பணியாற்றி மறைந்துள்ளார். அவரது வேலையை கருணை அடிப்படையில் பெற்றுக் கொள்ள தாய் தனது மகள்களுக்கு அளிக்க விரும்பியுள்ளார்.
மேலும், அவரின் பெயரில் உள்ள பணத்தை மகனிடம் கொடுக்கவும், சொத்துக்களை சரி பங்காக மூவருக்கு பிரிக்கவும் எண்ணி இருக்கிறார்.இதில் விருப்பமில்லாத கணேஷ் முதலில் சம்மதிப்பது போல நடித்து, பின் பிரச்சனை செய்ய தொடங்கி இருக்கிறார். மேலும், போலியான ஆவணங்கள் கொண்டு சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றவும், வனத்துறை வேலையை தான் வாங்கவும் முயற்சிகள் நடைபெற்ற நிலையில், அவை தோல்வியுற்றன.
இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து தந்தையின் பணி மற்றும் வருவாயை பிரித்துக் கொள்ளலாம் என பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சொத்துக்களை பிரிக்க மனம் இல்லாத கணேஷ் தனது தங்கைகளை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அவரின் திட்டப்படி உணவில் எலி மருந்து கலந்து கொடுத்து கொலை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சி தகவலை விசாரணையில் உறுதிப்படுத்திய காவல்துறையினர், கொலைகளை செய்த கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.