நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டா என்ற குற்றவாளி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளைப் பற்றி தகவல் வழங்குவோருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
முனியபாலகே ரவிந்து சந்தீப குணசேகர என்ற சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 9 ஆம் திகதி முதல் தலைமறைவாகியுள்ளார்.சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071 8591960 பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு நிலையத் தளபதி பிரிவு (1) – 0718596150
அம்பலாங்கொடயில் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்த யுவதியொருவர் இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகளை கடுமையாக கடித்து காயப்படுத்தியுள்ளார்.
ஒரு அதிகாரியின் இடுப்பையும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியின் விரலையும் இளம் பெண் கடித்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.இரு பொலிஸ் அதிகாரிகளை கடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக கடமையாற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் உத்தியோகத்தர்கள், குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர்.
இதன் போது இரு இளைஞர்களில் ஒருவரின் காதலி பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதுடன், குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.
அதனை கட்டுப்படுத்த சென்ற இரு பெண் பொலிஸாரையும் கடித்து காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த பொலிஸார் இருவரும் தற்போது பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எத்தனை தொழில் நுட்ப வளர்ச்சிகள் அடைந்தாலும் சில மூடபழக்க வழக்கங்கள் நம்பிக்கைகளை விட்டொழிப்பதே இல்லை. காதல் திருமணங்களில் பெரும் பிரச்சனையாக இருப்பதே ஜாதியும், மதமும் தான்.
ஜாதி மதம் தாண்டி திருமணம் செய்பவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது, ஆணவக் கொலை செய்வது என பல பகுதிகளில் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் மகள் காதல் திருமணம் மதம் விட்டு மதம் மாறீ செய்ததால் தந்தையே மகளையும், மருமகனையும் ஆணவக் கொலை செய்த விஷயம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மான்கூர்டு பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த சனிக்கிழமை வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
இதில், அந்த வாலிபர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இருப்பினும் அவர் யார்? என்ற அடையாளம் தெரியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை நவிமும்பை பன்வெல் பகுதியில் புதருக்குள் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் உடல் கிடந்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பன்வெல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணும் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
2 பேரும் ஒரே மாதிரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன்- மனைவியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், கொலையான பெண் மும்பை கோவண்டி பகுதியை சேர்ந்த கோரா கான்(வயது50) என்பவரின் மகள் குல்னாஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோரா கானை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விசாரணையில், அவரது மகள் குல்னாரை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கரண் ரமேஷ் சந்திரா(22) என்ற வாலிபர் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. தனது மகள் வேறு மதத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்ததை கோரா கானால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே காதல் திருமணம் செய்த தம்பதி உத்தரபிரதேசத்தில் வசித்து வந்தனர். சமீபத்தில் கோரா கான் அவர்களை தொடர்பு கொண்டு பேசி மகள், மருமகனையும் மும்பை வரவழைத்து உள்ளார்.
பின்னர் தனது மகன் சல்மான் மற்றும் சல்மானின் நண்பர் முகமது கான் ஆகியோருடன் சேர்ந்து மகள் குல்னாசையும், மருமகன் கரண் ரமேஷ் சந்திராவையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இந்த படுகொலையை மறைப்பதற்காக அவர்கள் கரண் ரமேஷ் சந்திரா உடலை மும்பை மான்கூர்டில் உள்ள கிணற்றிலும், குல்னாஸ் உடலை நவிமும்பை பன்வெல் காட்டுப்பகுதியிலும் வீசி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் கோரா கான், சல்மான், முகமது கான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு உதவியதாக 3 சிறுவர்களையும் போலீசார் பிடித்தனர்.
இவர்கள் அனைவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கொலையாளிகளிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பையில் மதம் மாறி திருமணம் செய்த இளம் தம்பதி ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் எஞ்சினீயர் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக ரகசிய திருமணம் செய்தார். இதையறிந்த முதல் மனைவி, மண்டபத்தை முற்றுகையிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததால் மணப்பெண் தாலியை கழட்டி வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 25 வயதான இவர் பி.இ சிவில் இஞ்சினீயரிங் படித்துவிட்டு துபாயில் வேலைபார்த்து வந்துள்ளார்.
வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகாவும், விக்னேஷும் 2016ஆம் ஆண்டு முதல் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு விக்னேஷ் வீட்டில் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்திகாவை 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி திண்டுக்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார் விக்னேஷ்.
அதன்பிறகு திட்டக்குடியை அடுத்த ஆவட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து கார்த்திகாவும் விக்னேஷும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் வேலைக்காக விக்னேஷ் துபாய் சென்றுவிட்டார். கடந்த மாதம் மீண்டும் ஊர் திரும்பிய நிலையில், கார்த்திகாவுடன் அவ்வப்போது தங்கி வந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்த்து வருவதாகக் கூறி ஊருக்கு சென்ற விக்னேஷ், அதன் பிறகு திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே பெற்றோர் தனக்கு பார்த்து வைத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணை கார்த்திகாவுக்கு தெரியாமல் கோயிலில் வைத்து ரகசியமாக 2வது திருமணம் செய்துள்ளார்.
அதன்பிறகு எறையூர் கிராமத்திலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்துள்ளது. விக்னேஷுக்கு திருமணம் என்பதை அவரது நண்பர் மூலமாக கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகா, உடனடியாக வரவேற்பு நடைபெற்ற திருமண மண்டபத்திற்குள் நுழைந்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும், தனக்கும் விக்னேஷுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்று கூறி கதறி அழுதார். இது மணமகள் வீட்டாருக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்த மங்களமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரித்த நிலையில், விக்னேஷ் கார்த்திகாவை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தியது உறுதியானது.
இதனையடுத்து, 2வது திருமணம் செய்து ஏமாற்றிய விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மணப்பெண், என்னை ஏன் ஏமாற்றினாய் எனக் கூறி கட்டிய தாலியை கழற்றி விக்னேஷின் முகத்தில் ஆவேசமாக வீசியெறிந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷை 15 நாட்கள் காவலில் வைக்க குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பெரியதாழை பகுதியில் வசித்து வருபவர் ஜோசி. இவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த கலைவாணனும் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெரியவர்கள் சம்மத்துடன் செப்டம்பர் 13ம் தேதி பெரியதாழையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் திருமண சான்றிதழ் வேண்டி தட்டார்மடம் அருகே கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்திருந்தனர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று ஜோசி, கலைவாணன் இருவரும் கொம்மடிக்கோட்டை சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து, காதல் திருமண தம்பதியை அழைத்து சமாதானம் செய்தனர்.
சார்பதிவாளர் சுகத்திடம் அழைத்து சென்று சான்றிதழ் வழங்குமாறு அறிவுறுத்தினர். அப்போது விரைவில் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சார்பதிவாளர் சுகம் உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குடி பகுதியில் வசித்து வருபவர் முருகன் . இவரது மகன் பால்ராஜ். இவர், தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரியா . இவர்களுக்கு 7 வயதில் ரிஷியும், 4 வயதில் நிதர்சனாவும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா விராலிமலையில் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பால்ராஜ், அவரது 2 குழந்தைகளுடன் கட்டக்குடியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் செல்போனில் பிரியாவை, பால்ராஜ் தொடர்பு கொண்டார்.
அப்போது குழந்தைகள் உன்னை பார்க்க விரும்புகின்றனர். அதனால் விராலிமலை முருகன் கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பிய பிரியா விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார்.
பின்னர் மலை அடிவாரத்தில் நின்றிருந்த பால்ராஜிடம், குழந்தைகள் எங்கே என்று பிரியா கேட்டுள்ளார். அதற்கு பால்ராஜ், குழந்தைகள் மலைமீது உள்ளதாக கூறியுள்ளார்.
இதனை நம்ப மறுத்த அவர் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த பால்ராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்து பிரியாவின் உடலில் ஆங்காங்கே குத்தினார். பிரியா காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பால்ராஜை சுற்றி வளைத்து பிடித்து விராலிமலை போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் பால்ராஜ் வெளியே வந்தார்.
அதிகாலை பால்ராஜ் தனது மகள் நிதர்சனாவை அழைத்து கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. கட்டக்குடி தர்மகுளம் குளத்தில் பால்ராஜூம், நிதர்சனாவும் சடலமாக மிதந்தனர்.
அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இலுப்பூர் போலீசார் விரைந்து வந்து குளத்தில் இறங்கி 2 உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
பால்ராஜ் தனது மனைவியுடன் கொண்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள் நிதர்சனாவுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அங்கு வந்த பால்ராஜின் உறவினர்கள் 2 பேரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.
இடியாப்பத்தால் ஆரம்பித்த சண்டையில் இறுதியில் நீதிமன்றம் வரை சென்று மனைவி கொடுத்த புகாரில் கணவருக்கு 20 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது நீதிமன்றம்.
சென்னையை சேர்ந்தவர் வேணுகுமார், இவரது மனைவி வனிதா. இவர்கள் இருவருக்கும் இது 2-ம் திருமணம். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வேணுகுமார் குடிப்பழக்கம் உள்ளவர், இவர் ஒருநாள் மனைவி வனிதாவிடம் இடியாப்பம் செய்து தரும்படி கேட்டுள்ளார். ஆனால் வீட்டில் இடியாப்ப குழல் இல்லை. எனவே இடியாப்பம் செய்ய முடியாது என்று மனைவி கூறியுள்ளார். இதனால் அவர் மனைவியை அடித்து தாக்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து வனிதா போலீசில் புகாரளித்தார், விசாரணையின்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் திருமணம் முடிந்த காலத்தில் இருந்தே தான் துன்பங்களை அனுபவித்து வருவதாக வனிதா கூறியுள்ளார்.
இந்நிலையில், வீட்டில் தொடர்ந்து பிரச்சனையை உருவாக்கியதால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த 2018-ல் தான் ஆசையாய் அவரது பிறந்தநாளுக்கு ‘காப்பி கப்’ வாங்கி கொடுத்ததை சிகரெட் சாம்பல் கொட்டும் குவளையாக பயன்படுத்தி எனது உணர்வுகளை புண்படுத்தினார் என்று மனைவி கூறியுள்ளார்.
இதனை மறுத்த கணவர் “தனக்கு வீட்டில் உணவு சமைத்து தருவது கிடையாது.இதனால் அடிக்கடி வெளியே சாப்பிட்டதாக கூறினார். மேலும் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாக” கூறியுள்ளார். மேலும், தனது சொத்துக்களை அபகரிக்க போட்டிருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.
நீதிபதி அனிதா ஆனந்த் “எதிர்மனு தாரரான வேணுவிடம் எதுவும் இல்லாத நிலையில் மனுதாரர் சொத்துக்களை எப்படி அபகரிக்க முடியும்? எதிர்மனுதாரர் தனது பொருளாதார நிலைமையை மறைத்து ஒரு பெண்ணை திருமணம் செய்து உணர்வு ரீதியாக துன்புறுத்தி குடும்ப வன்முறைக்கு ஆளாக்கியது தெளிவாகிறது” என்று கூறி வனிதாவுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்கும்படி உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம், லாலா பேட்டையில் வசித்து வருபவர் கௌதம் ஆனந்த் இவருக்கு வயது 33. இவர் மனைவி பவித்ரா. இவர்களின் ஒரே மகள் 4 வயது மிதுஸ்ரீ. கௌதம் திருமங்கலம் அருகே பெரிய பொக்கம்பட்டியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, தந்தையும் மகளும் வீட்டில் சமைத்த, ‘சிக்கன்’ சாப்பிட்டனர். அடுத்தடுத்து தந்தை மகள் இருவருமே வயிற்றுவலியால் துடித்தனர். உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி செய்தனர்.
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் இரவு மிதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகள் இறந்த துக்கம் தாங்காமல் கௌதம் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். திடீரென அவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
புதுச்சேரி கடல்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் அலை சீற்றத்துடனும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டு வருகிறது. புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே உள்ள கடல் பகுதி காலை முதலே சிகப்பு நிறமாக காட்சி அளித்து வருகிறது.
இது தொடர்பாக புதுச்சேரி முழுவதும் வேகமாக பரவவே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.குறிப்பாக இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால் ஆற்றில் உருவாகும் ஒரு வகையான பூஞ்சை காளான் கடல் நீரில் கலக்கும்போது இந்த ரசாயன மாற்றம் ஏற்பட்டு அதன்காரணமாக கடல் நீர் செந்நிறமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடல்நீரானது செந்நிறமாக மாறியுள்ளதை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். புதுச்சேரி நகர கடற்கரை பகுதிகள் மட்டுமின்றி, கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூர அளவிற்கு இந்த நிறமானது மாறியுள்ளது.
மேலும் இந்த நிறமானது படிபடியாக நாளை அல்லது நாளை மறுதினம் குறைந்து மீண்டும் நீலநிறமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றமாக இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடல்நீரானது 500 மீட்டர் அளவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், வீடியோவாக பதிவு செய்தும் கடல் முன்பு நின்று செல்பி எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடல் நிறம் திடீரென மாறி உள்ளதால் கடலில் இறங்கி நிற்கவோ குளிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைக்கு வரும் பொது மக்களை கண்காணிக்க போலீசாரும் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்கு பையில் சில்லறை காசுகளுடன் பிச்சைக்காரர் போல் வந்த ஒருவர், ஐபோன் 15 ரக போனை வாங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனியார் மொபைல் கடை ஒன்று அமைந்துள்ளது. ஐ-போன் விற்பனை கதையான இங்கு, பிச்சைக்காரர் ஒருவர் வந்துள்ளார்.
அங்கே வந்த அவர், தன்னிடம் இருந்த சில்லறை காசுகளை கொடுத்து ஐ-போன் 15 ரக போனை பெற்று சென்றார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், நபர் ஒருவர் பிச்சைக்காரர் போல் கிழிந்த அழுக்கு துணியுடன் இருக்கிறார்; மேலும் அவர் தனது கையில் ஒரு பெரிய பையில் 2 சாக்கு மூட்டைகளை வைத்திருக்கிறார்.
தொடர்ந்து அதே கோலத்தோடு அந்த பகுதியில் இருக்கும் ‘தீபக்’ என்ற போன் கடைக்கு செல்கிறார். அவரை கண்டதும், அந்த கடையின் ஊழியர்கள் முதலில் துரத்துகின்றனர்.
தொடர்ந்து அவர் இந்தியில் பேச, மீண்டும் மீண்டும் அவரை விரட்டுவதிலே அந்த ஊழியர்கள் முனைப்பு காட்டுகின்றனர். அப்போது இதனை கண்ட அந்த கடையின் உரிமையாளர், அவரை உள்ளே விடும்படி கூறினார்.
தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், தான் ஐ-போன் வாங்க வந்திருப்பதாக கூறினார். இதனை கேட்டதும் சற்று யோசித்த அவர், அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது தன்னிடம் போன் வாங்க தேவையான பணம் சில்லறைகளாக இருப்பதாக கூறி, தான் கொண்டு வந்த சாக்கு மூட்டையில் உள்ள சில்லறைகளை ஒரு ஓரமாக தரையில் கொட்டினார்.
பின்னர் அவயனைத்தையும் ஊழியர்கள் எண்ணினர். தொடர்ந்து அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கடையின் உரிமையாளர், அவர் கேட்ட ஐ-போன் மொபைலை அந்த இளைஞருக்கு வழங்கினார்.
கடந்த 5-ம் தேதி வெளியான இந்த வீடியோ அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பலரும் இது ஒரு ஸ்கிரிப்ட் வீடியோ என்றும், தற்போது எந்த ஒரு பிச்சைக்காரரும் இதுபோல் இருப்பதில்லை என்றும், பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எனினும் ஒருவரது தோற்றத்தை வைத்து எடை போட கூடாது என்பதையே இந்த காணொளி காட்சி வாயிலாக நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே நிசப்தமான உண்மை.
தொடர்ந்து யார் எப்படி வந்தாலும் உள்ளே யார் விடுகிறார்கள் என்பதை அறியவே பிச்சைக்காரர் போல் வேடமணிந்து வந்ததாக அந்த இளைஞர் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ள இந்த வீடியோ சுமார் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த இளைஞர் ‘experiment_king’ என்ற இன்ஸ்டா பக்கத்தில் இதுபோல் அதிகமான வீடியோக்களை பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவனை கொன்ற வழக்கில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு இந்தியாவில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரமன்தீப் கௌர் என்ற பெண்மனி (38) இந்தியாவை சேர்ந்த சுக்ஜீத் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து இந்தியாவின் டெல்லியைலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
கணவர் மட்டும் இங்கிலாந்தில் பணிக்காக தங்கியிருந்த நிலையில் 2016ஆம் ஆண்டு, விடுமுறைக்காக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவர் சுக்ஜீத் சிங்குக்கு மனைவி உணவில் தூக்க மருந்தைக் கலந்து கொடுத்திருக்கிறார். அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இரவு கதவைத் திறந்து Gurpreet Singh என்னும் நபரை வீட்டுக்குள் வரவழைத்திருக்கிறார்.
குர்பிரீத், தூங்கிக்கொண்டிருந்த சுக்ஜித் சிங் தலையில் சுத்தியலால் அடித்திருக்கிறார். பின்னர் அவரிடமிருந்த கத்தி ஒன்றை வாங்கிய ரமன்தீப் கௌர், தன் கணவர் இன்னமும் உயிரோடிருக்கும் நிலையில், அவரது கழுத்தைக் கத்தியால் அறுத்து அவரைக் கொன்றிருக்கிறார்.
ஆனால், தம்பதியரின் இளைய மகன், ஒன்பது வயது சிறுவன், நடந்தததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறான். அவன் தன் தாய் கொடுத்த தூக்க மருந்து கலந்த உணவை சாப்பிடாததால், சத்தம் கேட்டு தூக்கத்திலிருந்து விழித்திருக்கிறான்.
அப்போது, தன் தந்தையின் நெஞ்சின் மீது உட்கார்ந்திருந்த தன் தாய், தலையணையை அவர் முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டிருப்பதை அவன் பார்த்திருக்கிறான்.அவன் அளித்த சாட்சியத்தின்பேரில், ரமன்தீப் கௌர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உதவிய குர்பிரீத் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். ரமன்தீப் கௌரின் கணவரான சுக்ஜீத் சிங்கும், குர்பிரீத் சிங்கும் சிறு வயது நண்பர்கள். தன் நண்பரைக் காண அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்த குர்பிரீத்துக்கும், நண்பரின் மனைவியான ரமன்தீப் கௌருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த ரமன்தீப் கௌர், விடுமுறைக்காக இந்தியா வந்த நேரத்தில், காதலர் உதவியுடன் கணவரைக் கொன்றுவிட்டார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கில், தன் மகன் கண் முன்னே கணவரைக் கொலை செய்த ரமன்தீப் கௌருக்கு தற்போது தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜா – எல, ஏக்கல, கோரலெலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.கோஷிலா ரோஷன் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த 8 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் வகுப்புக்கு செல்வதாகத் தெரிவித்து வீட்டிலிருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், 12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறியுள்ளார்.குறித்த சிறுமி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் வீட்டின் சிசிரீவி கமெராவில் பதிவாகியுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய், “மகளைப் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை. நாங்கள் இனியும் காத்திருக்க முடியாது. யாராவது எனது மகளைக் கண்டால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குங்கள்” என கூறியுள்ளார்.
சவூதி – ரியாத் நகருக்கு வேலைக்குச் சென்ற பெண் ஒருவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக கிராமசேவகர் குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். ஹொரண, மதுராவளை அங்குருவாதொட்ட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான ஹிருஷிகா சந்தமாலி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றிருந்த வேளையில் இந்தப் பெண் மூன்று மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாக கடந்த 17ஆம் திகதி அவரது உறவினர்களுக்கு கிராமசேவகர் தெரிவித்துள்ளார்.
குடும்ப வறுமை காரணமாக மருதானையில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வமாக பதிவு செய்துவிட்டு 2021ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 2ஆம் திகதியன்று வெளிநாட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.
சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்களாக ரியாத்தில் உள்ள ஒரு வீட்டில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டாருடன் தொடர்பு கொள்ளவில்லை. மற்ற மாதங்களிலும் இவ்வாறு நீண்ட இடைவெளியில் பேசியதால் குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித சந்தேகமும் வரவில்லை.
கிராமசேவகரிடம் வெளிவிவகார அமைச்சின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து அதுபற்றி விசாரிக்குமாறு உயிரிழந்த பெண்ணின் கணவர் கோரியுள்ளார்.இறந்த பெண்ணின் கணவர் மறுநாள் தொலைபேசி எண்ணுக்கு அழைத்தபோது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறினர்.
மறுநாள் கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது மனைவி தொடர்பான தகவல் எதுவும் தனக்கு தெரியாது என்றும் இது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் விசாரிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திடம் பேசும் போது, 3 மாதங்களுக்கு முன்னர், அவரது மனைவி இறந்து விட்டார் என்ற செய்தி அவர்களுக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
மனைவி வெளிநாடு சென்ற மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் கணவர் சென்று தொடர்பு கொண்ட போது, அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று வெளிவிவகார அமைச்சுக்கு சென்ற பின்னர் இது தங்களுக்கும் சந்தேகத்திற்குரிய சம்பவம் என தெரிவித்துள்ளனர். கடவுச்சீட்டிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் காத்திருந்த உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு இது தொடர்பில் நேற்று மாலை வரை எவ்வித அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு குறித்து பின்னர் அறிவிப்பதாக உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பால் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானத்திற்கு வந்துள்ளது.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் தலைவர் திரு.ஹர்ஷன ருக்ஸான் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பது இன்று பிற்பகல் வேளையில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல, ஏக்கல,கொரலேலியவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.கோஷிலா ரோஷேன் என்ற சிறுமி கடந்த (08.10.2023) ஆம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் 12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.
குறித்த யுவதி கடந்த (08.10.2023) ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய், “அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை.
தொடர்ந்தும் காத்திருக்க முடியாமல்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.”
ஹொரண பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் புகுந்த சிலர், அங்கு உணவருந்திக் கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்றுள்ளனர். பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
எனினும், கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் ஊழியர்கள் பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட ஹொரணை பொலிஸ் அதிகாரிகள், கடத்தப்பட்ட பெண்ணை சுமார் 3 மணித்தியாலங்களில் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், கடத்தலுக்கு வந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம, அங்குருவத்தோட்ட வீதியில் லெனவர உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.