வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

மஹியங்கனையில்..

மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 15 வயதுச் சிறுவன்!!

புத்தளத்தில்..

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுவனை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தரம் 8 இல் கல்வி கற்கும் இந்த சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.முறைப்பாட்டிற்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து : இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி வேரவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கிளிநொச்சி பூனகரி பிரதேசத்துக்குட்பட்ட வேரவில் பிரதான வீதியில் நேற்று (15-10-2023) உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதிகாலை உயிரிழந்துள்ளார்.

பூநகரி வலைப்பாட்டைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய சிதம்பரநாதன் வர்மகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஜெயாபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் 17 வயது சிறுவனும் பெண்ணும் அதிரடியாக கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.கோப்பாய் பொலிஸிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆயிரத்து 500 மில்லி லீட்டர் கசிப்புடன் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

அதேவேளை, பிறிதொரு இடத்திலும் கசிப்பு விற்பனை இடம்பெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பொலிஸார் 44 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்ததுடன், அவரது உடைமையில் இருந்து 5 லீட்டர் கசிப்பை மீட்டுள்ளனர்.

மேலும் கசிப்புடன் கைது செய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் மின்கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி சாரதா தியேட்டர் வீதியில், நேற்றையதினம் (15) இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழுகாமத்தை பிறப்பிடமாகவும் களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவநீதன் சசிகலா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது வளவில் முருங்கை மரத்தில் முருங்கைக்காய் ஆய்வதற்கு எத்தணித்தபோது முருங்கைக்காய் ஆய்வதற்கு பயன்படுத்திய கொக்கு துரட்டி மின்கம்பியில் விழுந்ததால் பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோத்தராக கடமை ஆற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளதோடு இவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தாய் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

82 வயதான இவரின் தந்தை முழுமையாக செயல்பட முடியாதவர் என்பதோடு இவரின் கட்டுப்பாட்டில் வைத்து பராமரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணையினை களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேற்கொள்வதும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இளம் பெண் கொலை : தப்பியோடிய கணவன் கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா (வயது 23) என்கிற இரண்டு பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் சந்தேகத்தின் பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.இன்றைய தினம் திங்கட்கிழமை (16) காலை குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் மீட்கப்பட்டபோது வீட்டில் கணவன் இல்லாத காரணத்தால் கணவரே கொலை செய்திருக்க வேண்டும் என்கிற பொலிஸாரின் சந்தேகம் வலுத்தது.அதனையடுத்து, கணவரை பொலிஸார் தேடிய நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் முச்சக்கரவண்டியில் சந்தேக நபர் தப்பிக்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டார்.மனைவியை கொலை செய்துவிட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து, தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தபோது, சந்தேக நபர், தான் மனைவியை தாக்கிய பின்னர், வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மனைவி உயிரிழந்தது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.இதனையடுத்து, கைதான சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கையில் மீண்டும் QR முறை அறிமுகமாகிறதா : எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் எரிபொருளுக்கான QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்தோடு எரிபொருளுக்கான எந்தவொரு ஒதுக்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் இன்றைய தினம் (16.10.2023) டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொழும்பில் புலமைப்பரிசில் எழுதிய மாணவனுக்கு நேர்ந்த கதி : பொலிஸாரின் நெகிழ்ச்சியான செயல்!!

கொழும்பில்..

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய போது விபத்துக்குள்ளான மாணவன் பொலிஸ் உத்தியோகத்தரின் உடனடி தலையீட்டினால் மீண்டும் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.நிலிஷா தேஷாஞ்சன என்ற மாணவனே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.இடைவேளையின் போது, ​​மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, ​​கட்டடத்தின் நுனியில் கால் இடறி விழுந்தமையால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக வந்த உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, மாணவனை தனக்கு சொந்தமான காரில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.பரீட்சை எழுதும் மாணவன் என்பதனால் உடனடியாக சிசிக்சையளிக்குமாறு அதிகாரி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாணவருக்கு சிகிச்சை அளித்தனர்.சிகிச்சையின் பின்னர் மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்த நிலையில் மாணவனுக்கு மேலதிக நேரம் ஒதுக்கப்பட்டு பரீட்சை எழுத சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் போது மாணவனுக்கு உதவி பொலிஸ் அதிகாரிக்கு அங்கிருந்த அனைவரும் நன்றி செலுத்தியுள்ளனர்.

குழந்தை இறந்ததால் மன அழுத்தம்.. கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜலபதி . இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.

அப்போது, இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பவருடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுத்து காதலாக மாறியது.

என்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியா, பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஜலபதியை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டால், பல்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை இறந்தது. குழந்தை உயிரிழந்ததால், மிகவும் மனஅழுத்துடன் காணப்பட்ட அபிசால்மியா, அக்டோபர் 6ம் தேதி, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பர்கூர் டிஎஸ்பி மனோகரன் விசாரணை நடத்தி வந்தார். இதில் தற்கொலை செய்வதற்கு முன்பு அபிசால்மியா எழுதிய கடிதத்தில், “என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான்தான் காரணம்.

எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க. ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கணும். அவ கூடவே இருக்கனும்னு தோணுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை.

யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம். வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்படிக்கு அபிசல்மியா” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, அபிசால்மியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கன்னியகுமரியில் உள்ள வீட்டிற்கு எடுத்து சென்று அவர்கள் அடக்கம் செய்தனர். இந்நிலையில், தனது குழந்தையும், மனைவி உயிரிழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஜலபதியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும், ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில், “என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கணும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன்.

லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள்.

செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன். அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம்.

இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று.

எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை. அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

காதலி பேச மறுத்ததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!!

சென்னையில்..

இன்றைய இளைஞர்கள் எதையும் எதிர்த்து போராடி வாழ்வில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்து வருகின்றனர். வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவிகள் நண்பர்கள் திட்டினாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவுகளை நோக்கி சென்று விடுகின்றனர்.

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் விக்னேஸ்வரா நகரில் வசித்து வருபவர் சரத்குமார். சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சரத்குமார், சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்குள் தூங்க சென்றார்.

இந்நிலையில், நேற்று காலை சரத்குமார், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரத்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் .

காதலி பேச மறுத்ததால் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொலைபேசியால் ஏற்பட்ட விபரீதம் : மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற தாய்!!

காலியில்..

காலி – பலப்பிட்டிய பிரதேசத்தில் 13 வயதுடைய மகனுக்கு எதிராக தாயார் பொலிஸ் நிலையம் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இணையம் ஊடாக கையடக்கத் தொலைபேசியில் வீடியோ கேம்களுக்கு அடிமையான தனது மகனை மீட்டு தருமாறு தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டிற்கமைய, வெள்ளிக்கிழமை மாலை பலப்பிட்டிய நீதிமன்றத்தில் மகன் முன்னிலைப்படுத்தப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தினால்,

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை பிள்ளையின் பாதுகாப்பை தந்தையிடமே வழங்குமாறு பலப்பிட்டிய பதில் நீதவான் லூஷன் வடுதாந்திரி உத்தரவிட்டார்.

பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கைது!!

கந்தானயில்..

கந்தானை நாகொட அணியகந்த வீதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பெண் ஒருவரை கொடூரமாக தாக்கிய தம்பதியினர் கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் நடத்தப்படும் சிசிடிவி காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் (03.10.2023) ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேகநபர்கள் நேற்று(14.10.2023) இரவு நாகொட லிப்டன் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கந்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸ் அவசர இலக்கமான 118க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தாக்கப்பட்ட பெண்ணின் நெருங்கிய உறவினர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தாக்குதல் நடத்திய கணவனும் மனைவியும் அணியகந்த பிரதேசத்தில் இணையம் மூலம் பொருட்களை வர்த்தகம் செய்யும் தொழிலை நடத்தி வந்துள்ளதுடன், தாக்குதலுக்கு உள்ளான பெண் சுமார் 3 வருடங்களாக இந்த உறவினர் வீட்டில் தங்கி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் தக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் என்ற காரணத்தினால் தாக்குதலுக்கு உள்ளான பெண் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் விவகாரத்தால் யுவதிக்கு நேர்ந்த கதி!!

கொழும்பில்..

கொழும்பில் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளம் யுவதி ஒருவர் கத்தியால் குத்திப் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொழும்பு – கடுவெல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஆர்.டபிள்யூ அனுதர்ஷினி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவதியின் வீட்டில் வைத்து அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யுவதியின் முன்னாள் காதலனைக் கைது செய்துள்ள பொலிஸார் மேலும் இருவரைத் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் தீயில் கருகிய உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாய்!!

யாழில்..

யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்துக் கொண்டே பெண்ணே உயிரிழந்துள்ளார்.

எரிகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த கர்ணிகா குமரன் வயது 29 என்ற மூன்று பிள்ளைகளின் இளம் தாய் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த பெண்ணுக்கு ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளும் அதில் கடைசி பிள்ளைக்கு 11 மாதங்கள் ஆன நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுசம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மகளை தடியால் அடித்து, கழுத்தை அறுத்து ஆணவக் கொலை செய்த கொடூர தந்தை!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி தாலுகா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுநாத் இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் . இதில் கவனா தனியார் நிறுவனத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்தார்.

மஞ்சுநாத்தின் 2-வது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மஞ்சுநாத் தனது மகளை கண்டித்துள்ளார். அக்டோபர் 10ம் தேதி அந்த இளம்பெண், தனது காதலனுடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவருக்கு 17 வயது மட்டுமே ஆவதால் போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரத்தில் தனது தங்கைக்கு, கவனா உதவி செய்திருக்கலாம் என மஞ்சுநாத் சந்தேகித்தார். இந்நேரத்தில் அவரது மூத்த மகள் கவனா, தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மஞ்சுநாத், காதலை கைவிடுமாறு கூறி மகளிடம் வாக்குவாதம் செய்தார்.

கவனா தனது காதலை கைவிட்டு விட்டதாக தந்தையிடம் கூறி உள்ளார். எனினும் மஞ்சுநாத் தனது மகளை ரகசியமாக கண்காணித்து வந்தார். கவனா, காதலை கைவிடாமல் இருந்து வந்தது மஞ்சுநாத்திற்கு தெரிந்தது. இதுகுறித்து மகளிடம் கேட்டு வாக்குவாதம் செய்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது மகளை கடுமையாக திட்டியதுடன், இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தார். அப்போது கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து, மகள் என்றும் பாராமல் தனது மகள் கவனாவின் கழுத்தை மஞ்சுநாத் அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கவனா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மஞ்சுநாத், விஸ்வநாதபுரம் போலீசில் சரண் அடைந்தார். மேலும் தனது மகளை ஆணவக்கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கவனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவனா, வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்ததால் அவரை மஞ்சுநாத் கொலை செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து மஞ்சுநாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீசார், “வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை மகள் காதலித்ததால் ஆத்திரத்தில், பெற்ற மகளை மஞ்சுநாத் கொலை செய்துள்ளார்.

அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலையில் தாக்கியதில் மயக்கமாக இருந்தபோது கவனாவை அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

தலைமறைவான காதல் கணவன்.. நியாயம் கேட்டு போராட்டத்தில் குதித்த மனைவி!!

திருப்பத்தூரில்..

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி மனைவி வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த முனிகண்ணன் மகன் திருப்பதி( 23) என்பவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகள் நீலாம்பரி (22) என்பவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் திருப்பதி, நீலாம்பரி ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து அவர்கள் பெண்ணின் வீட்டிலே இரண்டு மாதங்களாக வசித்து வந்தனர். இந்த நிலையில் திருப்பதி தனது வீட்டிற்கு பெற்றோர்களிடம் பேசி அழைத்து செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு சென்று உள்ளார்.

பின்னர் திருப்பதி ஒரு மாதம் ஆகியும் காணவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நீலாம்பரி கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென நீலாம்பரி,திருப்பதி வீட்டின் முன்பு தனது கணவனுடன் சேர்த்து வைக்கும் படி தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார். அவமானம் தாங்கமால் திருப்பதியின் தாயார் பிரபாவதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.

பின்னர் பிரபாவதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீலாம்பரி கணவனை சேர்த்து வைக்கும் படி திருப்பதி வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.