மழையுடன் கூடிய காலநிலை தற்போது நிலவுவதால், மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த அறிவிப்பு இன்று (09.10.2023) இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்களுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலையில் உள்ள தோப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்றைய தினம் (08-10-2023) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.மேலும் குறித்த சம்பவத்தில் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய கிலுறுதீன் அம்ஹர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் வீட்டில் வைத்து மின்குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியுள்ளதாகவும், சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருகின்றது.
உயிரிழந்த சிறுவன் ஜனாஸா தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.
தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று மாலை இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உயிர்ச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ் தேசிய கட்சிகள் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன.
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும்- கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன.
கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியுன் தலைவர் விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சிறீகீந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே மகன் காதல் திருமணம் செய்த விரக்தியில் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த பெருகோபனப்பள்ளியை சேர்ந்தவர்கள் சரவணன் (50). இவரது மனைவி கீதா(45). இவர்களுக்கு, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இவரது மூத்த மகன் ரஞ்சித்குமார் (25) துணி வியாபாரம் செய்து வருகிறார். இவர் எதிர்வீட்டில் வசித்த பழனி, முருகம்மாள் தம்பதியின் மகள் தீபிகா (23) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
தீபிகா எம்.எஸ்.சி., பட்டதாரி. ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். தீபிகா படித்து வேலையில் இருப்பதாலும், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்வர்கள் என்பதாலும், இவர்களின் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வீட்டில் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என எண்ணிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து தீபிகாவின் பெற்றோர் ரஞ்சித்குமார் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு தங்கள் மகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மகனிடம் எவ்வளவு கூறியும் கேட்காமல் திருமணம் செய்த வருத்தத்தில் இருந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கினர்.
அவர்கள் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் செல்லும் வழியிலேயே இறந்தனர். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வீட்டு வாசலில் ஏன் எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டுகின்றனர் பொதுவாக வீடுகளிலும் சரி அலுவலகங்களிலும் சரி வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை ஒரு நூலில் கோர்த்து கட்டிவைத்திருப்பார்கள் இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் கலாசாரம் சார்ந்த ஒரு நம்பிக்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.
இன்னும் சிலர் இதனை மூட நம்பிக்கை என சொல்லுவார்கள் ஆனால் நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலின் பின்னாலும் ஒரு துள்ளியமான அறிவியல் காரணம் அல்லது மருத்துவ காரணம் இருக்கும் என்பது இது போன்ற பல விடயங்ளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வீட்டு வாசலில் இவ்வாறு எலுமிச்சை மற்றும் மிளகாயை கட்டுவதன் அறிவியல் பின்னணி என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அலட்சுமிக்கு மிகவும் விருப்பமானது புளிப்பு, காரம் மற்றும் அவருக்கு பிடித்தமான விஷயங்கள் வீட்டு வாசலிலேயே இருப்பதால் அவற்றை சாப்பிட்டுவிட்டு வீட்டில் நுழையாமலேயே சென்றுவிடுவாள்.
அதனால் தான் நாம் வீட்டு வாசலில் தொங்கவிடுகிறோம் என நம்மில் பலரும் நம்புகின்றோம் ஆனால் இதன் பின்னால் அறிவியல் காரணம் இருக்கின்றது. எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் – சி’ அதிகமாக காணப்படுகின்றது இதனை ஒரு பருத்தி நூலில் கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெதுவாக பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாகின்றது.
இவ்வாறு வெளியேறும் இந்த வாசனை காற்றில் கலப்பதனால் நம் சுவாச ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கின்றது. இந்த வாசனை காற்றில் பரவுவதன் மூலம் ஒரு புத்துணர்வு கிடைக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. அதன் மூலம் உண்டாகும் நோய் தொற்றிலிருந்தும் காக்கின்றது.
பெதுவாகவே எலுமிச்சைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை அதிகமாக இருப்பதால் அதனை வீட்டு வாசலில் கட்டி வைப்பதன் மூலம் நம்மை நோக்கி நல்ல சக்திகளை ஈர்க்கவும் இது உதவுகின்றது.
வவுனியா சிதம்பரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 04.10.2023 அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவித்து அவரின் மனைவியினால் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை இதனையடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சாரம் மற்றும் பிங்க் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார். எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்) , 0774136383 (மனைவி) , 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர்.
யாழ் – வடமாராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் இளைஞன் ஒருவன் தனது தவறான முடிவினால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர்,
வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (07.10.2023) மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 24 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவனொருவர் நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
பரத் மோகன் நிர்மலா தேவி தம்பதியின் மகனான சென்னையைச் சேர்ந்த ஹரேஷ் பரத் மோகன் தலைமன்னாரில் நேற்று முன் தினம் (06.10.2023) இரவு 11.37 மணியளவில் கடலில் குதித்து நீந்த தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் சனிக்கிமை பிற்பகல் 11.29 மணியளவில், சுமார் 11 மணி நேரம் 52 நிமிடம் நீந்தி தனுஷ்கோடி அரிச்சல் முனையை அவர் வந்தடைந்துள்ளார்.
அரிச்சல்முனை வந்தடைந்த ஹரேஷ் பரத் மோகனை அவரது தாய் கண்ணீர் மல்க முத்தமிட்டு வரவேற்றதை பார்த்து அப்பகுதியிலிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். ஹரேஷ் பரத் மோகன் ஆட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னனியில் புலம்பெயர் தேசத்தில் இருந்து வந்தவர் செயல்பட்டதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் கட்டுவன் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் வன்முறை கும்பலை துரத்திச்சென்றுள்ளனர்.
இதன் போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ள நிலையில் அதனை பாதிக்கப்பட்ட வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதேவேளை நேற்று நள்லிரவு யாழ்.தென்மராட்சி மீசாலை மேற்கு பகுதியிலுள்ள வீட்டின்மீது இனம்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இடையை சேவையில் ஈடுபடவுள்ள குறித்த கப்பலின் சோதனை ஓட்டம் இன்று (08.10.2023) இடம்பெறவுள்ளது.
காலநிலையைக் பொறுத்து குறித்த திகதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.அடுத்த வருடம் ஐனவரி முதல் முழுமையான கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கப்பலில் 150 பயணிகள் பயணம் செய்யமுடியும் என்பதுடன் இரு வழி பயணக் கட்டணமாக 53,500 ரூபாயும் ஒரு வழி பயணக் கட்டணமாக 27,000 ரூபாயும் அறவிடப்படவுள்ளது.
பகுதி நேர செவிலியராக பணியாற்றி வந்த இளம்பெண் மாடி படிக்கட்டில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன்.
இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணியாற்றி வந்தார்.
பணிக்காக அவர் சுகாதார நிலையம் அருகே உள்ள வீட்டில் மாடி அறையை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார். சமீபகாலமாக பிரீத்தி ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையிலும் சிகிச்சையும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது மயக்கம் ஏற்பட்டதால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பிரீத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த நல்லூர் காவல்துறையினர், பிரீத்தி உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் செவிலியர் இறந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 9 -ம் திகதி, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்து உள்ள சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றது. இதில், மணப்பெண் ஆர்த்தி கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர்களுடைய திருமணமானது, 3,500 பேருக்கு பிரியாணி விருந்து, 80 சவரன் நகை என ஆடம்பரமாக நடைபெற்றது. திருமணமாகி 22 நாள்கள் புதுமண தம்பதிகள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 3 -ம் திகதி சேலையூர் அருகே உள்ள தான் படித்து வரும் தனியார் பள்ளிக்கு செல்வதாக ஆர்த்தி கூறியுள்ளார். ஆனால், கல்லூரி போன ஆர்த்தி வீடு திரும்பவில்லை. அவருடைய மொபைல் போனும் ஸ்விட்ச் ஆஃப் -ல் உள்ளது.
இதன் பின்னர், வீட்டில் பார்த்த போது தான் 80 சவரன் நகையும் காணவில்லை என்பது தெரிந்துள்ளது. இதனால், ஆர்த்தியின் கணவர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது தான், ஆர்த்திக்கு திருமணத்திற்கு முன்பு சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவருடன் பழக்கம் இருந்தது பெண் வீட்டார்கள் மூலம் தெரிந்தது. இதனால், கல்லூரி மாணவருடன் சேர்ந்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
காதலியுடன் பேசிக்கொண்டிருந்த நியூயார்க் நகர கவிஞரை மர்ம நபர் ஒருவர் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்தவர் ரியான் கார்சன் (32). இவர் ஒரு கவிஞர் மற்றும் சமூக ஆர்வலரும்கூட. இவரை இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அதில், ரியான் கடந்த 2ஆம் தேதி, அதிகாலை 4 மணியளவில், தன் காதலியுடன் கிரவுன் ஹைட்ஸ் பேருந்து நிறுத்ததில் அமர்ந்திருக்கிறார். அப்படியே இருவரும் பேசிக்கொண்டுள்ளனர். பின்னர், இருவரும் எழுந்து கொஞ்ச தூரம் முன்னால் நடக்கின்றனர்.
அப்போது அவர்களை முந்தியபடி இளைஞர் ஒருவர் செல்கிறார். அங்கு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர்களை காலால் உதைக்கிறார். பின்னர் திரும்பிவந்து, ரியானைத் தாக்குகிறார்.
அவர் அதிலிருந்து தப்பிக்க முயல்கிறார். அப்போது முகமூடி அணிந்த நபர், ‘என்ன எஸ்கேப் ஆகப் பார்க்கிறியா’ எனக் கேட்டப்படியே அவரை கத்தியால் குத்துகிறார். இதனால் அவர் சரிந்து கீழே விழுகிறார்.
அருகில் இருந்த காதலியும் அவரைத் தடுக்க முயல்கிறார். ஆனால், அவரையும் குத்த முயல்கிறார். இறுதியில் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரியான், அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Ryan Carson, New York City activist who advocated for the very policies that make the city unsafe, didn’t stand a chance in this encounter. Video is censored to remove any disturbing imagery. pic.twitter.com/nq5RxRhzEO
கடலூர் மாவட்டம் பாலூர் நடுக் காலணி பகுதியில் வசித்து வருபவர் வினோத்குமார் . இவர் நத்தம்பேட்டை பகுதியில் வசித்து வரும் இளைஞருடன் நண்பராக பழகினார். இருவரும் நெருங்கிய நண்பர்களான பிறகு தன்பாலின ஈர்ப்பாளர்களாக மாறி காதலிக்கத் தொடங்கினர்.
இதனையடுத்து அந்த இளைஞன் வினோத்குமாரிடம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறினால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
நண்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய வினோத்குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறி பெயரை வினோதினி எனவும் மாற்றிக் கொண்டார். இதன் பிறகு இருவரும் ஒரே வீட்டில் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வினோதினியுடன் குடும்பம் நடத்த முடியாது எனக்கூறிவிட்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கே சென்றுவிட்டார். மகன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவருக்கு திருமணம் செய்ய அவரின் பெற்றோர்கள் அவசரப்படுத்தினர்.
வினோதினி, அவர்களது வீட்டிற்கு சென்று சண்டை போட்டுள்ளார். மேலும், அந்த இளைஞரை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ஊர் பஞ்சாயத்திலும் முறையிட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஊர் பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் வினோதினியை கடுமையாக தாக்கி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வினோதினி, இளைஞனுக்கு எதிராக புகார் அளிக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே அங்கு வந்து தடுக்க முயன்றதில் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்த வினோதினியை காப்பாற்றினர். போலீசார் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வினோதினி, “என்னை திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை செய்ய சொன்னதே அவன் தான். அவனை நம்பித்தான் நானும் அறுவை சிகிச்சை செய்தேன். 7 வருடங்களாக இருவரும் ஒற்றுமையாகதான் இருந்தோம்.
இப்போது அவன் என்னிடம் உன்னைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் வினோ… ஆனா எங்க அம்மா என்ன கல்யாணம் பண்ணச் சொல்றாங்கனு சொல்றான். அதுகுறித்த ஆடியோவும் என்கிட்ட இருக்கு. என்னுடைய வாழ்க்கையே அவனால்தான் வீணாகப் போயிடுச்சி. அவன் கூட மட்டும்தான் வாழ்வேன்” என கண்ணீர் மல்க கூறியுள்ளார்
திருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு புதுமண காதல் ஜோடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூவரசன் வயது (26). இவர் தொழிற்படிப்பு முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சௌமியா வயது (20).
பூவரசன் சௌமியா இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது முதல் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். சில நாட்கள் பிறகு காதலாக மாறியுள்ளது. பூவரசன் சௌமியா ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர்.
இந்நிலையில், பூவரசன் மற்றும் சௌமியா காதலித்து வந்தது இருவரின் வீட்டிற்கும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு இருவரின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களது திருமணம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் பெண்ணின் வீட்டார் இவர்களை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புதுமண காதல் ஜோடி தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் தங்களது வீட்டில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு புதுமண காதல் ஜோடி உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.