வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்த கணவர்.. விரக்தியில் மனைவி தற்கொலை முயற்சி.!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூரில் பிரசவத்திற்காக மனைவி தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ரீல்ஸ் செய்வது போல் வீடியோ எடுத்து அனுப்பியதால் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் இருணாபட்டு கொல்ல கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் தனேந்திரன். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் ஷாலினி (19). ஷாலினிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு டேம் பகுதியைச் சேர்ந்த சங்கீத் (25) என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு இரு வீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

கணவர் வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் குழந்தையோடு ஷாலினி தனது தாய் வீட்டிற்குச் சென்றார். ஒன்றரை மாதமாக தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணவர் சங்கீத், தனக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஷாலினியிடம் கூறியுள்ளார்.

மேலும், அந்த பெண்ணிற்கு புடவை எடுப்பது போல் புகைப்படங்களையும், அதே பெண்ணுடன் இருப்பது போன்ற ரீல்ஸ் வீடியோவையும் ஷாலினிக்கு கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அனுப்பியிருக்கிறார். இதனால், விரக்தியடைந்த ஷாலினி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஷாலினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த குரிசிலாப்பட்டு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஷாலினியின் கணவர் கூறியது உன்மையா? அல்லது விளையாட்டாக கூறினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கொணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி பாவித்தமைக்காக 4 மாத கடூழிய சிறைத் தண்டனை!!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருக்கு தொலைபேசி பாவித்தமைக்காக 4 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். இச் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் கடந்த 24 ஆம் திகதி தொலைபேசி மீட்கப்பட்டதுடன், அதிலிருந்து 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் சென்றமை மற்றும் பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்பகள் உரையாடியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

தொலைபேசி பாவித்தமை தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் நீதிமன்றுக்கு தெரிவித்த நிலையில், தொலைபேசி பாவித்த குற்றத்திற்காக பிரதான சந்தேக நபருக்கு 4 மாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கி வவுனியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழில் விபத்தில் உயிரிழந்த மாணவன் படைத்த சாதனை!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு, உயிரியல் பிரிவில் 2ஏ , பி பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. யாழ்ப்பாணம் துன்னாலை மத்தியை சேர்ந்த சங்கர் சஞ்சீவி எனும் மாணவன் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று , உயர்தர பரீட்சை எழுதி விட்டு , பெறுபேறுக்காக காத்த்திருந்த வேளை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரிழந்த மாணவன் , 2ஏ , பி பெறுபேறு பெற்று , மாவட்ட மட்டத்தில் 97ஆவது தரத்தையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மாணவனின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், உயர் கல்வியில் சாதனை படைத்துள்ளமை மாணவின் குடும்பத்தினரை இன்னும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

புற்றுநோயுடன் போராடும் மாணவர் : உயர்தர பரீட்சையில் படைத்த சாதனை!!

பாதுக்கவில்..

பாதுக்க பிரதேசத்தில் புற்றுநோயுடன் போராடி உயிரியல் பிரிவில் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்ட மாணவர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. யோஹான் தெவ்திலின என்ற இந்த மாணவர் அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

அதற்கமைய, மாணவர் இரண்டு ஏ சித்திகளையும் ஒரு சி சித்தியையும் பெற்றுள்ளார்.“தேர்வுக்கு 6 மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. வீட்டில் இருந்தே படித்தேன். பரீட்சைக்கு போகும்போது நடக்கக்கூட முடியாது. என் தந்தை என்னுடன் வந்தார்.

எனது எதிர்கால நம்பிக்கை மருத்துவராக வேண்டும் என்பதுதான். சுகாதாரத் துறையில் உள்ளவர்களுக்கு உதவ விரும்புகிறேன்’’ என சித்தியடைந்த மாணவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீதியில் பயணித்த காதலர்களுக்கு நேர்ந்த சோகம்!!

மொரகஹஹேனவில்..

மொரகஹஹேன நகரில் பாதசாரி கடவையில் இளம் காதலர்கள் இருவருக்கு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் சாரதி ஐந்து நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹொரணையில் இருந்து மீப்பே பகுதிக்கு காரை செலுத்திச் சென்ற போது மொரகஹஹேன நகரின் மத்திய பகுதியில் வெள்ளைக் கோட்டில் பயணித்த இளம் ஜோடிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டியதுடன் விபத்து இடம்பெற்ற சிறிது நேரத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் காயமடைந்த இளம் தம்பதியினர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பன்னிபிட்டிய, தலங்கம வீதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

யாழில் வித்தியாசமான சாதனை படைத்துள்ள இளைஞன்!!

யாழில்..

முதுகில் செடில் குத்தி 10 கடல் மைல் தூரம் கடலில் படகினை இழுத்து செல்வா விளையாட்டுக் கழகத்தை சேர்ந்த சாண்டோ வீரர் பிரமசிவன் விமலன் சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய திருநாளை முன்னிட்டு செல்வா விளையாட்டுக் கழகத்தின் ஆதரவுடன் குறித்த படகிழுத்தல் நிகழ்வு நேற்று (06.09.2023) புதன் கிழமை இடம்பெற்றுள்ளது.

குடத்தனை வடக்கு கடற்கரையில் இருந்து சுப்பரமடம் கடற்கரை வரையான சுமார் 10 கடல் மைல் தூரத்திற்கு இவ்வாறு முதுகில் செடில் குத்தி படகினை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.இந்த சாதனை நிகழ்வு காலை 7.30 மணிக்கு ஆரம்பித்த முற்பகல் 09:15 மணிக்கு நிறைவுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்னிலங்கையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் 2 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த சோகம்!!

மாத்தறையில்..

மாத்தறை, கம்புருபிட்டிய பிரதேசத்தில் தைராய்ட் சத்திர சிகிச்சைக்கு உள்ளான 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் கம்புருபிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரின் அலட்சியத்தாலும், வைத்தியசாலை ஊழியர்களின் அலட்சியத்தாலும் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

காலி யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த விக்கிரமசிங்க கிராமத்தைச் சேர்ந்த சிராணி நிமல்கா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த பெண்ணின் தைராய்ட் சுரப்பியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கம்புருப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

குறித்த வைத்தியர் வழங்கிய வைத்திய ஆலோசனையின் பேரில் கடந்த 27 ஆம் திகதி தைராய்ட் சுரப்பி அறுவை சிகிச்சைக்காக கம்புருப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சத்திர சிகிச்சைக்கு பிறகு, மருத்துவமனையின் 10வது அறையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண்ணின் கழுத்து பகுதியில் வீக்கம் இருப்பதாகவும், அவரால் பேச முடியாத நிலையில் இருப்பதையும் கவனித்துக் கொள்ள அங்கு வந்த அவரது சகோதரி, ஊழியர்களிடம் தெரிவித்தார்.

சுமார் அரை மணி நேரம் கழித்து, ஒரு மருத்துவர் வந்து அவரை பரிசோதித்து, ஆபத்தான நிலையில் தனது சகோதரியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார் என்று இறந்த பெண்ணின் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் உறவினர்கள் சத்திர சிகிச்சையை மேற்கொண்ட விசேட வைத்தியரை சந்தித்து பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என விசாரிக்க முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.

அறுவை சிகிச்சையின் போது தவறு நடந்ததாக மருத்துவர்கள் ஒப்புக்கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். கம்புருபிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 5ஆம் திகதி உயிரிழந்ததார். இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா செல்ல முயற்சித்த இலங்கையரின் சிறப்பான செயல் : 21 வருடங்களில் கிடைத்த வெற்றி!!

மாத்தறையில்..

அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெறும் நோக்கில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பரீட்சையில் சித்தியடைந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் தொடர்பில் செய்தியொன்று பதிவாகியுள்ளது. மாத்தறை உயன்வத்தையைச் சேர்ந்த நளின் தர்ஷன வீரதுங்க என்ற 40 வயதான நபர் 18 நாட்களில் பரீட்சைக்குத் தயாராகி பரீட்சையில் சித்தியடைந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி 2 பாடங்களில் மாத்திரம் சித்தியடைந்து 21 வருடங்களின் பின்னர் இரண்டாவது தடவையாக தனியார் விண்ணப்பதாரராகத் தோற்றியுள்ளார்.அது கலைப் பிரிவில் இந்த வருட உயர்தர பரீட்சையில் சிங்களம் மற்றும் ஊடகக் கற்கைகள் பாடங்களுக்கு சி மற்றும் அரசியலில் எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாத்தறை ராகுல கல்லூரியின் பழைய மாணவரான வீரதுங்க மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். இவரது மனைவி மாத்தறை பொது வைத்தியசாலையில் வைத்தியராக உள்ளார்.இரண்டு மகன்கள் ராகுல கல்லூரியிலும் மகள் சுஜாதா கல்லூரியிலும் கல்வி கற்கிறார்கள்.அவரது முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த நளின் தர்ஷன வீரதுங்க, “அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற வேண்டுமானால் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அற்கமைய, நான் தேர்வு எழுத முயற்சித்தபோது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி முடிந்து விட்டது. அதை எனது மற்றுமொரு நண்பரான பிரதி அதிபர் அருண இந்திக்க வீரசிங்கவிடம் கூறிய போது, ​​கொழும்பு பரீட்சை திணைக்களத்திற்கு சென்று முயற்சிக்குமாறு கூறினார்.

அதன்படி பரீட்சை திணைக்களத்திற்குச் சென்று இம்முறை பரீட்சைக்கு வர சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன்.சரியாக 18 நாட்களில் படித்தேன். அதன்படி, என் வாழ்நாளில் இதுவரை படிக்காத மூன்று பாடங்களை எதிர்கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.கிரீன் கார்ட்கிடைக்கா விட்டாலும் என் வாழ்வில் இதுவே பெரிய சாதனை என்று நினைக்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மனைவியின் மண்டையை உடைத்து கழுத்தை அறுத்து கொன்ற கணவர்.. கடைசியில் கணவருக்கு நேர்ந்த சோகம்!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானாவில் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்தவர் சவுக்கான். இவரது மகள் தீபா. பங்கர் குடவை சேர்ந்தவர் அருண்.

இவருக்கும் தீபாவுக்கும் கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட அருண் அவரை அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து தீபா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவரது பெற்றோர் தீபாவுக்கு அறிவுரை வழங்கி சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அருணின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் விரத்தி அடைந்த தீபா தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெற்றோர் தீபாவை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். கடந்த மாதம் 28ஆம் தேதி மாமியார் வீட்டிற்கு வந்த அருண் மனைவியை இனிமேல் கொடுமை படுத்தாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்தார்.

இதனை உண்மை என நம்பிய அவரது பெற்றோர் தீபாவை கணவருடன் அனுப்பி வைத்தனர். தீபாவை வீட்டிற்கு அழைத்து வந்த நாள் முதல் மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கினார்.

நேற்று முன்தினம் இரவு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருண் தீபாவின் தலையை சுவற்றில் மோதினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

வலியால் அலறி துடித்த அவரை பார்த்தும் அருணுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த தீபாவை கத்தியை எடுத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்றார்.

அப்போது இந்த சம்பவம் அருணின் தந்தைக்கு தெரியவரவே அவர் போலீஸ் நிலையத்தில் சரணடைய சென்ற அருணை வீட்டிற்கு அழைத்துள்ளார். இதையடுத்து அருண் தனது பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

அப்போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் அருண் ஓட்டிச் சென்ற பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கணவன் மனைவி 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கொலை செய்ய உதவியதாக அருணின் பெற்றோர் ஜெயவந்த் ராவ், லட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

காதலனுடன் சேர்ந்து பெண் பொறியியலாளரை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கை!!

தெலங்கானாவில்..

நகை, பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறுவதை தடுத்த பெண் இன்ஜினியரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு காதலனுடன் தலைமறைவான தங்கையை போலீசார் கைது செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஜகிர்த்தியாலாவை சேர்ந்தவர் தீப்தி (22), சாப்ட்வேர் இன்ஜினியர். கடந்த 28ம்தேதி இவரது பெற்றோர் வெளியூர் சென்றுவிட்டனர். தீப்தி மற்றும் அவரது தங்கை சந்தனா (20) ஆகிய இருவர் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர்.

மறுநாள் (29ம் தேதி) வீட்டில் மர்மமான முறையில் தீப்தி இறந்து கிடந்தார். அவரது தங்கை வீட்டில் இல்லை. அவர் மாயமானது தெரியவந்தது. வீட்டில் இருந்த 70 சவரன் நகைகள் மற்றும் ₹2 லட்சம் ரொக்கமும் மாயமானது.

இதுகுறித்த தகவலின்பேரில் ஜகிர்த்தியாலா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். மேலும் தீப்தியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனர்.

இதன் அறிக்கை போலீசாரிடம் அளிக்கப்பட்டது. அதில் தீப்தி கழுத்து நெரித்து மூச்சுத்திணற வைத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும் மாயமான சந்தனாவை தேடிவந்தனர்.

இந்நிலையில் கொலை நடந்த அன்று ஜகிர்த்தியாலா பஸ் நிலையத்தில் மாயமான சந்தனா, வாலிபர் ஒருவருடன் நடந்துசென்று பஸ் ஏறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது தெரிந்தது. இதையடுத்து சந்தனா மற்றும் வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஆர்மூர் பகுதியில் சந்தானவும் வாலிபரும் தங்கியிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் சந்தானவுடன் தங்கியிருந்தவர் அவரது காதலன் உமர்ஷேக் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சந்தனாவும், ஐதராபாத்தை சேர்ந்த உமர்ஷேக் (21) என்ற வாலிபரும் கல்லூரிக் காதலர்கள். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் வீட்டில் இருந்து வெளியேறி சென்று திருமணம் செய்ய சந்தனா திட்டமிட்டிருந்தார்.

கடந்த 28ம்தேதி இரவு தனது காதலனுக்கு சந்தனா போன் செய்து, `இருவரும் திருமணத்தை தள்ளிப்போடக்கூடாது, விரைந்து திருமணம் செய்யலாம்’ எனக்கூறியுள்ளார். அதற்கு உமர்ஷேக், நம் இருவருக்கும் இன்னும் வேலை கிடைக்கவில்லை.

எனவே வேலைக்கு சென்று சிறிது சம்பாதித்துவிட்டு அதன்பின்னர் திருமணம் செய்யலாம் எனக்கூறியுள்ளார். ஆனால் ஏற்க மறுத்த சந்தனா, தற்போது வீட்டில் பெற்றோர் யாரும் இல்ைல, உடனடியாக வந்தால் எனது அக்கா தூங்கியவுடன் நகை, பணத்துடன் வெளியேறி விடலாம் என அழைத்துள்ளார்.

இதையறியாத தீப்தி தூங்கச்சென்றுள்ளார். இதையறிந்த சந்தனா, உடனடியாக தனது காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அவர் வந்தவுடன் வீட்டில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ₹2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றனர்.

அப்போது சத்தம் கேட்ட தீப்தி, கண் விழித்தபோது தனது தங்கை வாலிபர் ஒருவருடன் நகை, பணத்துடன் வீட்டில் இருந்து வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தங்கையிடம் கேட்டபோது, காதல் விவகாரம் ெதரிந்தது. அதற்கு தீப்தி, `இந்த திருமணத்திற்கு நமது பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

எனவே இருவரும் காதலை கைவிடுங்கள்’ எனக்கூறி நகை, பணத்தை அவர்களிடம் இருந்து பறிக்க முயன்றார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த உமர்ஷேக், சந்தனா ஆகிய இருவரும் தீப்தியை சரமாரி தாக்கி அவரது துப்பாட்டாவால் அவரது கழுத்தை நெரித்து படுக்கையறையில் தள்ளியுள்ளனர். இதில் மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் தீப்தி இறந்தார்.

தீப்தி இயற்கையாக இறந்ததுபோல் காண்பிக்க துப்பாட்டாவை அகற்றிவிட்டு ஷோபாவில் தீப்தியின் சடலத்தை வைத்துவிட்டு இருவரும் தப்பியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் காதல்ஜோடி இருவரையும் கைது செய்தனர்.

மேலும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் தந்த உமர்ஷேக்கின் தாய் சையத்அலியா, உறவினர் ஷேக்அசியாபாத்திமா, அபீஸ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹1.20 லட்சம் பணம், 70 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆத்திரமடைந்த உமர்ஷேக், சந்தனா ஆகிய இருவரும் தீப்தியை சரமாரி தாக்கி அவரது துப்பாட்டாவால் அவரது கழுத்தை நெரித்து படுக்கையறையில் தள்ளியுள்ளனர். இதில் மூச்சுத்திணறி சிறிதுநேரத்தில் தீப்தி இறந்தார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் முல்லைத்தீவு நோக்கி பயணித்த முள்ளியாவெளியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் இருவரே உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆகியோர்,

ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 21 வயதான இளைஞன் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

இலங்கையில்..

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்றையதினம் (05-09-2023) மாலை ஆணைதீவு பகுதியில் இடம்பெற்றதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் ஈச்சிலம்பற்று – இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சந்திரராஜா கஜேந்திரராஜா என பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த இளைஞன் வெருகல் பகுதியிலிருந்து இலங்கைத்துறை முகத்துவாரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் .

சாக்கு மூட்டையில் கிடந்த இளம் பெண்ணின் சடலம்.. 5 நாட்களுக்குப் பின்னர் 80 கி.மீ தாண்டி சிக்கிய காதலன்!!

கோவாவில்..

கோவாவில் இருந்து 80 கி.மீ தூரத்தில் இருக்கும் மகாராஷ்டிராவின் அம்போலி காட் என்ற பகுதி உள்ளது. இங்கிருக்கும் காட்டுப்பகுதி ஒன்றில் சாக்குமூட்டை கிடந்துள்ளது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் அதனை திறந்து பார்த்ததில், அதில் இளம்பெண் ஒருவரது சடலம் இருந்துள்ளது.

இதையடுத்து அதனை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி தங்கள் விசாரணையை தொடங்கினர். அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சி உள்ளிட்டவையை ஆய்வு செய்து விசாரிக்கையில் சந்தேகத்திற்குரிய வகையில் இளைஞர் ஒருவர் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து அதனை வைத்து விசாரித்ததில் கோவாவில் இருக்கும் போர்வோரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் சுஞ்சவாட் (22) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இதுகுறித்து விசாரிக்கையில் ஆரம்பத்தில் இதனை தெரியாதது போல் பதிலளித்து வந்த அவர், போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்டார்.

அதன்படி தனது காதலி தன்னை பிரேக் அப் செய்துவிட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். அதாவது சாக்குமூட்டையில் கிடந்த பெண்ணின் பெயர் காமாட்சி (30). அந்த பெண்ணும் பிரகாஷும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அந்த பெண் இவரை பிரேக் அப் செய்துள்ளார். மேலும் இவரது மொபைல் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

எனவே காதலன் பிரகாஷ், காமாட்சியிடம் பலமுறை பேச முயன்றும் அது பலனளிக்காமல் போனது. தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், காமாட்சி போலிசில் புகார் அளித்துள்ளார்.

எனவே கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி காமாட்சியை சந்திக்க வேண்டும் என்று தனியே அழைத்துள்ளார். ஆரம்பத்தில் மறுத்த அவர், இதுவே கடைசி என்பதால் பிரகாஷை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலியை குத்தி கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த காமாட்சியின் சடலத்தை மறைக்க தனது நண்பரின் உதவியோடு 80 கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் வீசி சென்றுள்ளார்.

இவையனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது காதலன் பிரகாஷ் சுஞ்சவாட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலில் விஷம் கலந்து 5 மாத பெண் குழந்தை கொலை.. சித்தி செய்த கொடூரம்!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5மாத பெண் குழந்தையை விஷம் வைத்து கொன்ற 4 பிள்ளைகளின் தாயை பொலிஸார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது, சொத்து பறிபோகும் என்பதால் குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகா பபலா கிராமத்தை சேர்ந்தவர் சித்தப்பா. இவரது முதல் மனைவி பெயர் ஸ்ரீதேவி. 11 ஆண்டுக்கு முன்பு இந்த தம்பதிக்கு திருமணம் நடந்திருந்தது.

ஸ்ரீதேவியை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. ஸ்ரீதேவிக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறி, கடந்த 7 ஆண்டுக்கு முன்பு தேவலம்மா என்பவரை சித்தப்பா 2வதாக திருமணம் செய்து கொண்டார்.

இதனால் சித்தப்பாவுடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் ஸ்ரீதேவி பிரிந்து சென்று தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சித்தப்பா, தேவலம்மா தம்பதிக்கு 4 குழந்தைகள் பிறந்திருந்தது.

இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு சித்தப்பா மற்றும் ஸ்ரீதேவியை சமாதானப்படுத்தி, அவர்களது குடும்பத்தினர் மீண்டும் சேர்த்து வைத்திருந்தனர்.

இதையடுத்து ஒரே வீட்டில் சித்தப்பாவுடன் ஸ்ரீதேவி, தேவலம்மா, குழந்தைகள் வசித்து வந்துள்ளனர்.கடந்த ஆண்டு ஸ்ரீதேவி கர்ப்பம் அடைந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் (ஆகஸ்டு) 30ம் தேதி ஸ்ரீதேவியின் 5 மாத குழந்தை திடீரென்று இறந்து விட்டது. குழந்தையின் வாயில் நுரை தள்ளி இருந்ததால் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து வடகேரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது குழந்தைக்கு வழங்கப்பட்ட பாலில் விஷத்தை கலந்து கொடுத்ததால், பச்சிளம் குழந்தை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வடகேரா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். அப்போது சித்தப்பாவின் 2வது மனைவி தேவலம்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் தேவலம்மாவை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 5 மாத குழந்தையைக் கொலை செய்ததை தேவலம்மா ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில், தனக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் இருப்பதாலும், தற்போது ஸ்ரீதேவிக்கு பெண் குழந்தை பிறந்ததால் கணவர் சித்தப்பாவின் சொத்தில் அந்த பெண் குழந்தைக்கு பங்கு கொடுக்க வேண்டும்.

இதனால் தனக்கும், தன்னுடைய குழந்தைகளுக்கும் சொத்து பறிபோகும் என்பதால் 5 மாத குழந்தைக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணைக்கு பின்பு தேவலம்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து பறிபோகும் என்பதால் கணவரின் முதல் மனைவியின் 5 மாத குழந்தையை, 4 பிள்ளைகளின் தாய் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் உயிருக்கு போராடிய இரு சிறார்கள்… காப்பாற்ற துணிந்த தமிழர் சடலமாக மீட்பு!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ளது Brecon Becons ஏரி. இந்த ஏரியிலேயே வெள்ளிக்கிழமை உயிருக்கு போராடிய இரு சிறார்களை மீட்கும் முயற்சியிலேயே 27 வயதான தமிழரான மோகனநீதன் முருகானந்தராஜா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தின் போது மீட்பு குழுவினருக்கு இளைஞர் மோகனின் சடலம் கண்டெடுக்க முடியாமல் போயுள்ளது. ஆனால் 7 மணியளவில் Ystradfellte பகுதியில் சடலம் மீட்கப்பட்டதாக கூறுகின்றனர்.

மேலும் நீருக்கடியில் செயல்படும் கமெராவை பயன்படுத்தியே அப்பகுதி பொலிசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இருப்பினும் கடுமையான காலநிலை சூழல் காரணமாக அடுத்த நாள் பகல் வரையில் நீரில் இருந்து சடலம் மீட்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறப்பு வீரர்களை வரவழைத்து, சடலத்தை மீட்டுள்ளனர். மோகனின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளது.

மட்டுமின்றி, மோகனின் இறுதிச்சடங்குகளுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதியும் திரட்டப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் Dyfed-Powys பொலிசார் தெரிவிக்கையில், வெள்ளிக்கிழமை சுமார் 4.40 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும், சிறார்கள் இருவரை மீட்கும் முயற்சியில் ஏரியில் குதித்த நபர் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து பல தரப்பு அதிகாரிகள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்ததாக தெரிவித்தனர். அத்துடன் பிரித்தானிய ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவையும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் சேவையும் களமிறக்கப்பட்டது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயல்படும் கமெராவால் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சடலத்தை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அடுத்த நாள் பகல் வரையில் காத்திருக்கும் சூழல் உருவானதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு கல்வி வலய மாணவி வடமாகாண ஆங்கில தினப் போட்டியில் முதல் முறையாக முதலிடம்!!

வடக்கு மாகாண ஆங்கில தினப் போட்டியில் முதல் முறையாக வவுனியா வடக்கு வலய மாணவி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆங்கில தினப் போட்டிகள் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று (04.09) வெளியாகின.

அதில், ஆங்கில கட்டுரை எழுதுதல் போட்டியில் வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த புதுக்குளம் மாகவித்தியாலய தரம் 12 மாணவி கி.கிருசாளினி மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு வலய மாணவி ஒருவர் ஆங்கில தினப் போட்டி ஒன்றில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.