9 முறை பாம்பு கடித்து உயிர் பிழைத்த மாணவன்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகா ஹலகார்த்தி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 14 வயதில் பிரஜ்வல் என்ற மகன் இருக்கிறான்.

இவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். இவை ஜூலை 3ம் தேதி வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது ஒரு பாம்பு அவனை கடித்துவிட்டது. இதற்காக அவனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகும் மீண்டும் அவனை பாம்பு கடித்து விட்டது. இது வரை இந்த சிறுவனை 6 முறை பாம்பு கடித்துள்ளது. இதற்காக அவர் 3 முறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமானான். மேலும் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டான்.

இதனால் பயந்துபோன விஜயகுமார்-உஷா தம்பதி மகனுடன் சித்தாப்பூருக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துவிட்டது. இதற்காக கலபுரகி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 27ம் தேதி 9வது முறையாக பிரஜ்வலை பாம்பு கடித்துவிட்டது. தற்போது அவன் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறான். அவனது உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இதுவரை சிறுவனை தவிர பாம்பை அவரது பெற்றோர் யாரும் பார்த்ததில்லை என கூறப்படுகிறது. எனவே விஜயகுமார்-உஷா தம்பதி, நாகதேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 9 முறை பாம்பு கடித்தும் 9ம் வகுப்பு மாணவன் உயிர் பிழைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

மனைவிக்கு திருமண நாள் பரிசாக ஏகே47 துப்பாக்கி.. சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர்!!

இந்தியாவில்..

முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) முன்னாள் தலைவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர், தனது திருமண நாளில் மனைவிக்கு ஏகே 47 துப்பாக்கியை பரிசாக அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரியாசுல் ஹக்கியின் மனைவி சபீனா யாஸ்மின் இந்த துப்பாக்கியுடன் போஸ் கொடுக்கும் வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ சிறிது நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. கடும் விமர்சனம் காரணமாக இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து ரியாசுல் நீக்கியுள்ளார்.

இந்த வீடியோ மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தில் தாலிபான் ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சிபிஎம் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் அமைதியும், பாதுகாப்பும் மோசமாகிவிட்டதாக மம்தா அரசு மீது கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

ராணுவம் மற்றும் துணை ராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட AK 47 துப்பாக்கி, முன்னாள் TMC தலைவரின் கைகளுக்கு எப்படி வந்தது என்பதை அறிய பாஜக மற்றும் CPM தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இது போன்ற வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதன் மூலம் ரியாசுல் என்ன மாதிரியான சமிக்ஞையை தெரிவிக்கிறார் என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆனால் ரியாசுல், திருமண பரிசாக மனைவிக்கு ‘பொம்மை துப்பாக்கி’ மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது உண்மையான துப்பாக்கி இல்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், வீடியோவில் வெறும் பொம்மை துப்பாக்கியுடன் காணப்பட்டதால், இந்த விஷயத்தில் தனது மனைவி மீது எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி ரியாசுல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம் : கண்ணை இழந்த பரிதாபம்!!

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே இன்று (01.09) கரடி தாக்கியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன்,

தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

இலங்கையில் பொலிஸாரின் மோசமான செயல் : பசியால் தவித்த குடும்பம்!!

கம்பளையில்..

கம்பளையில் முக்கிய பிரமுகர் ஒருவர் பயணித்த வீதியொன்றின் முன்னால் பழாக்காய் ஒன்றை கழுத்தில் வைத்த நிலையில் தந்தையும் அவரின் பிள்ளையையும் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். குறித்த பிரமுகர் அவ்விடத்தை விட்டு செல்வும் வரை தந்தையையும் மகனையும் அவ்வீதி வழியே செல்ல அனுமதிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அந்த குடும்பத்திற்கு ஒரு நேர உணவு இல்லாமல் போய்விட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார். கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு வந்துள்ள இந்த பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், யாரிடமும் அறிவிக்காமல் வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றுள்ளார்.

பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்தாலும், அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மகனுடன் மதிய உணவிற்கு பலாப்பழம் ஒன்றை தேடிக் கொண்டு, பிரமுகர் வரும் பாதையில் பயணிப்பதனை கண்டு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.

மேலும், மூன்று பிள்ளைகளும் மனைவியும் பசியுடன் இருந்ததால், பழாக்காயை எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார். எனினும் தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளதுடன் பிரமுகம் வெளியேறும் வரை தடுத்து வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் அவர் கூறினார். தனக்கு வேலை இல்லை என்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துவதாகவும் தந்தை கூறியுள்ளார்.

பல மில்லியன் பெறுமதியான திமிங்கல வாந்தியுடன் சிக்கிய இராணுவத்தினர்!!

கம்பஹாவில்..

கம்பஹா, நெதகமுவ பிரதேசத்தில் 646 கிராம் எடையுள்ள அம்பர் எனப்படும் பாதுகாக்கப்பட்ட கடல் திமிங்கல வாந்தியின் 3 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதனை வைத்திருந்த ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நெதகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நெதகமுவ பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 48 வயதுடைய ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரும், கலகெடிஹேனையைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிக பெறுமதியான அம்பர் விற்பனைக்கு இருப்பதாக மேல் மாகாண புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கம்பஹா பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.குறித்த மூவரிடமும் கைப்பற்றப்பட்ட அம்பர் 80 லட்சம் ரூபாய் பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் பலி : மற்றொரு சிறுவன் படுகாயம்!!

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (30.08) மாலை இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று மாலை பயணித்துள்ளது.

இதன்போது தீடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியது. இதன்போது, உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு பூவரசங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், குறித்த இரு சிறுவர்களில் ஒரு சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணித்துள்ளதாக வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதான ச.சதுசன் என்ற சிறுவன் மரணமடைந்ததுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ ஆர் முறை நீக்கம்!!

எரிபொருள்..

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கியூ ஆர் அடிப்படையிலான முறை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.

குறித்த திட்டமானது இன்று (01.09.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் அதிகம் நிலவியிருந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த கியூ ஆர் முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.மேலும் நாட்டில் எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தரத்தில் தொங்கியபடி 295 அடி உயரத்தில் உணவருந்தும் ஜோடி!!

பிரேசிலில்..

இதை பைத்தியம் என்று ஆயிரம் விதமாக சொல்வார்கள்.. இப்படிப்பட்ட பெரியோர்களின் வார்த்தைகளை உண்மையாக்கி, இன்றைய தலைமுறை இளம் பெண்களும், ஆண்களும் பல வினோதங்களை செய்து வருகின்றனர்.

ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்.. நிஜமாகவே பைத்தியக்காரர்கள் என்று தோன்றும். குறிப்பாக திருமணம், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் செய்யும் சில விஷயங்கள் அப்படிதான் இருக்கின்றன. அதுமட்டுமல்ல.. எந்த விதமான பயமும் இல்லாமல் பலர் நடந்து கொள்கிறார்கள்.

இருப்பினும், ஒவ்வொரு மனிதனுக்கும் பயம் இருக்கிறது. ஒவ்வொருவரின் பயத்திற்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். சிலர் இருளைக் கண்டு பயப்படுகிறார்கள்.

மற்றவர்கள் உயரத்திற்கு பயப்படுகிறார்கள். சுவாரஸ்யமாக, பலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பயத்தில் வாழ்கின்றனர். இருப்பினும், சிலர் அதை சமாளிக்க தங்களை சவால் விடுகின்றனர். இதற்கா அவர்கள் பயப்பட வேண்டும், இதில் பயப்பட ஒன்றுமில்லை என்று நினைக்கிறார்கள்.

இருந்தாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு காலம் வரும். அப்போதுதான் அவர்களின் பயம் நீங்கும். அப்படிப்பட்ட ஜோடியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இது இன்ஸ்டாகிராமில் (@jetblacktravel) என்ற கணக்கின் மூலம் வெளியிடப்பட்டது. இது நெக்ஸ்ட் லெவல்.. நீங்களும் முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இந்த வீடியோ பிரேசிலில் எடுக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இங்கே ஒரு ஜோடி 295 அடி உயரத்தில் அந்தரத்தில் ஒரு டைனிங் மேசையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

அதை ஒட்டி ஒரு அருவி பாய்கிறது. இருவரும் மேசையில் சாப்பிட்டு மகிழ்கின்றனர். சில தின்பண்டங்கள் மற்றும் ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் மேசையில் காணப்படுகின்றன. பாதுகாப்புக்காக இருவரும் கயிற்றால் கட்டப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 20ஆம் திகதி பகிரப்பட்ட இந்த வீடியோ, ஏற்கனவே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், நுகர்வோர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இலவசமாகக் கூட இந்த சாகசத்தைச் செய்யக் கூடாது என்று பலர் சொல்கிறார்கள்.

இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்வது ஆபத்தானது என நெட்டிசன்கள் பலர் கூறுகின்றனர். கேபிள்கள், கம்பிகள் மூலம் அவற்றை கட்டி வைத்தாலும் உயிரிழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இது ஒரு கேபிள் கார் போன்ற அனுபவம். ஒரே வித்தியாசம் என்னவென்றால், கார் மூடப்பட்டிருக்கும், ஆனால் இதில் எல்லாம் திறந்தபடிருக்கிறது.

எனவே நீங்கள் தைரியமாக இருந்தால் போதும்.. இவ்வளவு உயரங்களுக்கு நீங்கள் பயப்படாவிட்டால், நீங்களும் அத்தகைய இடத்திற்கு சென்று சாகசத்தை அனுபவிக்கலாம்.

ஒரே நாளில் 7000 பெண்கள்.. சாதனை படைத்த ஆசிரியர்!!

இந்தியாவில்..

ஒரே நாளில் சுமார் 7000 பெண்கள் ஆசிரியருக்கு ராக்கி கட்டியுள்ளனர். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரக்சா பந்தன் விழாவையொட்டி பாட்னாவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் ஆசிரியர் கான் சர் தனது பயிற்சி மையத்தில் ரக்சா பந்தன் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் அனைத்து பெண் மாணவிகளும் அவரின் மணிக்கட்டில் கிட்டத்தட்ட 7,000 ராக்கிகளைக் கட்டி உள்ளனர்.

இதில் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது சுமார் 7,000 பெண்கள் அவரது மணிக்கட்டில் ராக்கி கட்டி உள்ளனர். இது போன்ற சம்பவம் இதுவரை நடந்ததில்லை இது உலக சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதில் அதிகளவான மாணவிகள் கலந்துக்கொண்டதால் அனைவருக்கும் ராக்கி கட்ட முடியவில்லை. கான் சார் ஒவ்வொரு பெண்ணையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து ராக்கி கட்டிக் கொண்டார்.

“தனக்கு சொந்தமாக ஒரு சகோதரி கூட இல்லை. எனவே அவர் இந்த பெண்கள் அனைவரையும் தனது சகோதரிகளாக கருதிகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தனது மாணவர்களால் எனக்கு ராக்கி கட்டப்படுகிறது. தன்னைப் போல அதிக ராக்கிகளை உலகில் யாரும் கட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக இளைஞர்கள் 24 மணிநேரம் நடனமாடி சாதனை!!

மலையகத்தில்..

மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த இளைஞர் யுவதிகள் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகளுமே இவ்வாறு சாதனை படைத்துள்ளனர்.குறித்த நிகழ்வு ஹட்டன், டன்பார் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் ஆகஸ்ட் 30ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர்.

லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கட்டங்கட்டமாக ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் சிறிது நேரம் அனுமதி வழங்குவதற்கு சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.குறித்த இளைஞர், யுவதிகளின் சாதனை ஆட்டத்தை கண்டுகளிக்க பெருமளவானோர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பிரமுகரால் பட்டினியில் வாடிய வறிய குடும்பம்!!

கம்பளையில்..

அதிவிசேட பிரமுகர் (வி.ஐ.பி) ஒருவர் உறவினர் வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றதனால், அவர் திரும்பும்வரை ஐவர் அடங்கிய ஒரு குடும்பத்தையே பட்டினியால் வாட செய்த சம்பவமொன்று கம்பளை, வாரியகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பலாக்காயை தோளில் சுமந்திருந்த தந்தையும் சிறு பிள்ளையும் அதிவிசேட பிரமுகர் கடந்து செல்லும் வரை பிரமுகரின் பரிவாரங்கள் வீதி ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

கண்டி தலதா பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவை பார்வையிடுவதற்காக கண்டிக்கு சென்ற அதிவிசேட பிரமுகர், பெரஹரா ஆரம்பிப்பதற்கு முன்னர், வாரியகல பிரதேசத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு மதிய உணவை உண்பதற்காக சென்றுள்ளார்.

பிரமுகர் யாருக்கும் தெரிவிக்காமல் இந்த பகுதிக்கு வந்திருந்த நிலையில் , அந்த தகவல் அப்பகுதி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதற்கிடையில் அப்பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது மதிய உணவிற்கு பலாக்காய் ஒன்றை பிடுங்கி, தோளில் சுமந்தவாறு, வந்துள்ளார்.

அதிவிசேட பிரமுகர் திரும்பிச்செல்லும் அந்த வீதியில், சிறுவனுடன் ஒருவர் வருவதைக் கண்டு, பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, மூன்று குழந்தைகளும் மனைவியும் பசியுடன் இருக்கின்றனர்.ஆகையால் பகல் உணவுக்கு பலாக்காயை அவிப்பதற்கு எடுத்துச் செல்வதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பலாக்காயை கொண்டுவந்த தந்தையையும் பிள்ளையையும் பொலிஸார்; அழைத்துச் சென்று, அப்பகுதியை விட்டு அதிவிசேட பிரமுகர் வெளியேறும் வரை வீதியோரத்தில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.

இதன் காரணமாக அன்றைய மதியம் தானும் மனைவியும் 3, 7 மற்றும் 9 வயதுடைய பிள்ளைகளும் பட்டினியால் வாட நேர்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கூறினார்.

குறித்த குடும்பஸ்தர் வாழும் வீடு, புடவை மற்றும் சீட்டுகளால் ஆனது என்றும் கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்துவதாகவும் பாதிகப்பட்டவர் தெரிவித்துள்ளர்.

பணிபெண்ணாக சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண் கதறல்!!

இரத்தினபுரியில்..

என்னை இங்கு (சவூதி) கொடூர சித்திரவதைக்கு உட்படுத்துகின்றனர். இங்கு இருக்க முடியாது. என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என மலையகத் தாயொருவர் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

சரஸ்வதி புஷ்பராஜ் என்பவரே இந்தக் கோரிக்கையை விடுத்துதாக கூறப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டம், எகலியகொட, பனாவல தோட்டத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி புஷ்பராஜ்.

இவருக்கு இரு பெண் பிள்ளைகள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். வறுமை காரணமாக இவ்வருடம் ஜுலை 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அங்கு அவர் வேலை செய்யும் வீட்டில், வீட்டுக்காரர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டு உடலில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன் தமக்கு உணவுகூட முறையாக வழங்கப்படவில்லை என்று தமது குடும்பத்தாருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் தற்போது அவரின் தொலைபேசியும் வீட்டுக்காரர்களால் பறிக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கும் பெணின் உறவினர்கள், அவரைச் சவூதிக்கு அனுப்பிய இலங்கையில் உள்ள முகவர்களையும் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அழைப்பை எடுத்தால்கூட அவர்கள் பதிலதிப்பதில்லை என கூறும் உறவினர்கள் , சரஸ்வதி புஷ்பராஜ் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாகவும்,ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் இன்று முதல் 341 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என்பதுடன், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 359 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 231 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

 

2 வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த சோகம் : பெற்றோர்களே எச்சரிக்கை!!

சென்னையில்..

சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதிக்குச் சக்தி, லட்சுமி என இரண்டு வயது பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று காலை பாலாஜி வழக்கம்போல் டிரைவர் வேலைக்குச் சென்றுவிட்டார்.

இதனால் வீட்டில் மனைவி மற்றும் தாத்தா, குழந்தைகள் இருந்துள்ளனர். பின்னர் தாத்தா கடைக்குச் சென்றுள்ளார். இதனால் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது நந்தினி கழிவறைக்குச் சென்றுள்ளார். அந்நேரம் மூத்த மகள் சக்தி வீட்டிலிருந்த ஆல் அவுட்டை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். இதை பிடுங்கிய இரண்டாவது மகள் லட்சுமி அதை எடுத்து வாயில் வைத்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் குழந்தையிடம் இருந்து ஆல் அவுட்டை எடுத்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே குழந்தை லட்சுமியின் வாயில் நுரை வந்துள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் இதுபற்றி கணவனுக்கு செல்போனில் தகவல் கொடுத்துள்ளார். பிறகு அருகே இருந்தவர்கள் குழந்தையை ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த குழந்தை லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆல் அவுட் குடித்து 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 மகன்களை எரித்து கொன்ற தாய்.. தானும் தற்கொலை செய்த சோகம்!!

திருவட்டாரில்..

திருவட்டார் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை எரித்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பூவன்கோடு புத்தன்வீட்டுவிளையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (45).

சென்ட்ரிங் கான்ட்ராக்டர். இவரது மனைவி ஷீபா (40). இவர்களுக்கு கெபின் (15), கிஷான் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு பக்கவாத நோய் தாக்கியதால் காலில் சிறிய குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காலை சற்று சாய்த்தவாறு செல்வர்.

அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது தொடர்பாக ஏசுதாஸ் மற்றும் ஷீபா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே கணவன், மனைவி இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏசுதாஸ் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டில் 2 மகன்களுடன் மனைவி உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு இருந்துள்ளார்.

பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் நொந்து போன ஏசுதாஸ் அதே பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திடீரென்று அவர்கள் வீட்டில் இருந்து காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் 3 பேரும் தீயில் கருகி துடித்துக் கொண்டிருந்தனர். திருவட்டார் போலீசார் வந்து 3 பேரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அடுத்தடுத்து மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குடும்ப தகராறில் 2 மகன்களை தீவைத்து கொன்றுவிட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மாணவனின் காதைப் பொத்தி அறைந்த ஆசிரியர் மீது விசாரணை முன்னெடுப்பு!!

வவுனியாவில் 10ஆம் தர மாணவன் மீது ஆதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம்10 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் மீது அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த மாணவனின் செவியில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை குறித்த ஆசிரியரே சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பாடசாலை அதிபர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரான சு.அன்னமலரிடம் கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்திருந்தார்