வவுனியா வைத்தியசாலை விவகாரம் : வடக்கு ஆளுநர் உத்தரவின் பேரில் மூவர் கொண்ட குழு விசாரணைக் குழு நியமனம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் உத்தரவின் போரில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் (15.08.2023) நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவருடன் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் முரண்பட்ட நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் குறித்த முரண்பாடு தொடர்ந்து நிலையில் அவ்விடயம் தொடர்பாக குழந்தையின் தந்தையால் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வவுனியா சுகாதார வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆளுனரின் ஆலோசனைக்கமைய வட மாகாண சுகாதார பணிப்பாளர் இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையில் கலந்துரையாடியதுடன் மூவர் கொண்ட குழுவும் விசாரணைக்காக நியமித்துள்ளார்.

யாழில் வெளிநாட்டு பண உதவியுடன் அரங்கேறிய மோசமான சம்பவம்!!

யாழில்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள தங்கத்தின் விலை!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நாளுடன் (14.08.2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.08.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (14.08.2023) 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,960 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் ( 15.08.2023) 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 40 ரூபாவினால் அதிகரித்து 173,000 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான விடுமுறை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கான விடுமுறை..

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

எனவே, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்!!

தொடம்கொடவில்..

தொடம்கொட பிரதேசத்தில் வீடு புகுந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சம்பவம் காரணமாக போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட குழுவினர் கூரிய ஆயுதங்களுடன் தொலலந்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திமுத் சாமிக்க என்ற தொடங்கொட தொலலந்த பிரதேசத்தில் வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நபர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் மதுபான விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போதைப்பொருள் வியாபாரி மற்றும் குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பலைச் சேர்ந்தவர் எனவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருந்து விலகியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கிராமத்திற்கு தலைவலி என கொலைசெய்யப்பட்ட நபர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததன் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர், கொலைசெய்யப்பட்ட நபர் தொடம்கொட பொலிஸ் நிலையத்திற்கு வந்த வீடு திரும்பும் போது, ​​போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடித்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் விட்டு சென்றிருந்ததாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் தொடருந்து நிலைய உணவகத்தின் உணவுகள் மீது எலி : ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த மக்கள்!!

அநுராதபுரத்தில்..

அநுராதபுரம் தொடருந்து நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர், சீலை உடைத்து, உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன், மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அநுராதபுரம் தொடருந்து நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தொடருந்து நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

மலையக குயில் அசானிக்கு பின்னணி குரல் கொடுத்த யாழ் கில்மிக்ஷா!!

தென்னிந்தியாவில்..

தென்னிந்திய தொலைகாட்சியில் இடம்பெறும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமையால் ஒட்டுமொத்த உலகவாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா, மற்றும் பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானி ஆகியோரே தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்துகொடுத்துள்ளது தென்னிந்திய தொலைகாட்சியின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி.

இந்த வாரம் நடைபெற்ற பக்தி பாடல்கள் சுற்றில் நடுவர்கள் முதல் சரிகமப அரங்கத்தினையே அசானி பக்தி பரவசப்படுத்தியுள்ளார்.“தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா” என அவர் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அசானிக்கு பின்னணியில் யாழ் குயில் கில்மிசாவும் பாடுகின்றார்.மலையக குயிலும் ஈழத்து குயிலும் பாடிய பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் சமுர்த்தி முகாமையாளர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-08-2023) இடம்பெற்றுள்ளது.

சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் சமுர்த்தி முகாமையாளரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் A9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் விபத்து : மூவர் பலி!!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15.08.2023) அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கியதில் இரண்டு லொறிகளில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதமடு ஆலயப் பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் டிரோன் திடீர் மரணம்!!

மன்னாரில்..

மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி ஜெகநாதனின் உடலில் விச ஜந்து ஒன்று தாக்கியதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

இவர் மடுத் திருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் பணியை செய்துள்ளார்.மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிரோன் (வயது 28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13) இரவு எட்டாம் நாள் நவநாள் ஒளிப்பரப்பு நிகழ்வுகளை முடித்துவிட்டு மடுவில் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் உரையாடிக் கொண்டிருந்தபோதே இவர் திடீரென மரணித்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27ஆவது வயதில் மடுவில் காலமானார்.

கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில், நேற்று (13.08.2023) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழிப்பறைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

களுத்துறையில்..

களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர்.

களுத்துறை – கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.பள்ளியின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து , களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து அதிநவீன கருவியின் உதவியுடன் இரண்டு சுவர்களைத் தள்ளி காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

11 மணி நேரத்தில் 11ம் வகுப்பு மாணவனின் சாதனை… தென்னை ஓலையில் 1330 திருக்குறள்கள்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் 11மணி 36 நிமிடத்தில் 1300 திருக்குறளை தென்னை ஓலையில் எழுதி சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஷாக்.

இவர் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷகீலா பானு. இந்த தம்பதிகளின் மூத்த மகன் வஜாகத்(15) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்து கொண்டு 2 சாதனைகளை படைத்துள்ளார். இதில் முதல் சாதனையாக 6 வகையிலான ரூபிக்ஸ் க்யூப் இணைத்து கொண்டே 160 திருக்குறளை 7 நிமிடம், 41 நொடியில் உச்சரித்துள்ளார்.

மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 தென்னை ஓலையில் பேனா மூலம் தொடர்ந்து எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவன் கூறுகையில், ”நான் 2 சாதனைகளை நிகழ்த்துவதற்கு எனது பெற்றோர் மற்றும் தம்பி, உறவினர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒத்துழைப்பு தந்ததால் தான் தன்னால் முடிந்தது என்றும் இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது லட்சியம்” எனறு கூறியுள்ளார்.

மஞ்சள் வாசம் கூட மறையலயே இப்படி பண்ணிட்டாளே…. தூக்கில் தொங்கிய இளம் மனைவி!!

தென்காசியில்..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி கிராமம் வஉசி நகரில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மகள் குமுதா. இவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

இதில் சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் வாழ்ந்தார். சென்னையில் வீடு பார்த்து விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.

கூறியபடி குமுதாவை அழைத்துச் செல்லவில்லை. குமுதா தொலைபேசியில் அழைத்தாலும் சுதர்சன் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு குமுதாவிடம், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.

நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் எந்தவித பலனும் இல்லை. தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.

தன்னை அழைத்து செல்வார் என்ற ஏக்கத்திலேயே இருந்த குமுதா, நேற்று முன் தினம் இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டுக்கு சென்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாயிலில் இருந்த போதும் சுதர்சனின் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சுதர்சன் குமுதாவை மொபைலில் அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

மன அழுத்தத்தில் இருந்த குமுதா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பதான கல்யாணமாச்சு… தாலிக் கயிற்றின் மஞ்ச வாசம் கூட மறையலையே அதுக்குள்ள என்ன அவசரம் இப்படி தூக்கில் தொங்கிட்டாளே… என இச்சம்பவம் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் அதிகாலையில் இடம்பெற்ற பயணிகள் பேருந்து விபத்து: பெண்கள் உட்பட 7 பேருக்கு நேர்ந்த சோகம்..!

கொழும்பில்..

கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த போது தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் பெண்கள் இருவர் மற்றும் ஆண்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டி சாகசத்தை காணொளி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

பாணந்துறையில்யில்..

முச்சக்கர வண்டி ஓட்டப்பந்தயத்தை காணொளி பதிவு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி இடம்பெற்ற முச்சக்கரவண்டி போட்டியை மோட்டார் சைக்கிள்களில் காணொளி எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்துள்ளது.

இதன்போது நல்லுருவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பில் தவறுதலாக சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன்!!

நீர்கொழும்பில்..

நீர்கொழும்பு பிட்டிப்பன மீன் சந்தைக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் இளைஞன் நேற்று காலை தலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட தவறினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தெரிவித்தார்.நீர்கொழும்புக்கு வடக்கே பிட்டிப்பன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய தனுஷ்க அஞ்சன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் விரைவில் திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பிட்டிப்பன லெல்லம என்ற இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரால் குறித்த இளைஞன் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதன்போது, ​​பிட்டிப்பன லெல்லம மீன் சந்தைக்கு அருகில் அதிகளவான மக்கள் சுற்றித் திரிந்த நிலையில், சந்தேகநபர்கள் இளைஞனைக் கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

சாதாரண காதல் விவகாரத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் தொடர்பில்லாத நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞரைப் போன்று மேலும் ஒருவர் இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஹன சில்வா இந்த கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் உயிரிழந்த இளைஞருக்கு கிடைத்த தொலைபேசிச் செய்தி இலக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வது கடினம் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.