இரண்டு வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து விபரீத முடிவு!!

மதுரையில்..

திருப்பரங்குன்றம் அருகே தனது 2 வயது மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் தாலுகா தனக்கன்குளம் பகுதி கிணற்றில் பெண் ஒருவர், தனது 2 வயது மகளுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு திரு நகர் போலீஸார், திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று கிணற்றில் இருந்து தாய், மகள் உடல் களை மீட்டனர். போலீஸார் விசாரணையில் தனக்கன்குளம் ஜெயம் நகர் அருகிலுள்ள மிட்டல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்.

இவரது மனைவி ஷாலினி (23), மகள் விசாகா (2). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடல் நிலை பாதித்த நிலையில் கணவர் உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாமல் விரக்தியில் ஷாலினி தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து திரு நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மின்சாரத்தால் ஏற்பட்ட விபரீதம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணம்!!

கன்னியாகுமரியில்..

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சித்தன் விளையை சேர்ந்த தம்பதியினர் ராம் மற்றும் சித்ரா.

இவர்களுக்கு ஆதிரா என்ற மகளும் அஸ்வின் என்ற 17 வயது மகனும் உள்ளனர். இதில், ஆதிரா என்பவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், நேற்று கனமழை பெய்து கொண்டிருந்த போது அஸ்வின் வெளியே கடைக்கு பால் வாங்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அருகே உள்ள தாமஸ் என்பவரின் வீட்டில் உள்ள மின்சார ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அதில் இருந்து எதிர்ப்பாராதவிதமாக அஸ்வின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

அப்போது, அவரைக் காப்பாற்ற சென்ற தாய் சித்ரா மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மேலும், அவர்களை இருவரையும் காப்பாற்ற சென்ற ஆதிராவையும் மின்சாரம் தாக்கியது.

இதில், மின்சாரம் தாக்கிய மூவரும் நிகழ்விடத்திலேயே கிடந்துள்ளனர். பின்பு, மழை நின்ற பிறகு அக்கம், பக்கத்தினர் பார்த்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தகவலறிந்த பொலிசார், மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தளர்த்தப்படவுள்ள 67 வகையான வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்!!

இறக்குமதி கட்டுப்பாடுகள்..

வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வாரத்தில் இறக்குமதி கட்டுப்பாட்டை மேலும் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக, சில பொருட்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. சில பொருட்கள் தடை செய்யப்பட்டன. இதனால் குறிப்பாக சுங்கத் திணைக்களத்திற்கு அழுத்தம் ஏற்பட்டதுடன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.இந்த நிலையில் 299 பொருட்களுக்கும், வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் 67 வகையான வாகனங்களுக்குமான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்து உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு : தேநீருக்கும் புதிய விலை!!

விலை அதிகரிப்பு..

கொத்து மற்றும் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொதிகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு,

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் கொத்து ரொட்டியின் விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் அறிவித்துள்ளது.

கணவனுடன் கருத்து வேறுபாடு.. திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான ஒரே வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

Msc., Mphil பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கணேஷ் சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் படுத்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போடாததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை தட்டி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து வீட்டின் வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து உள்ளறையில் படுத்து இருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் கதவு திறக்காததை தொடர்ந்து கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நிலை கம்பில் சேலையில் தூக்கு போட்டு சுஜாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கணேசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் போலீசை கொன்று உயிரோடு இருப்பதாக 2 வருடங்களாக நம்ப வைத்த காதலன்!!

டெல்லியில்..

டெல்லியில் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் போலீசை தீர்த்து கட்டிவிட்டு 2 ஆண்டுகளாக பொய் சொல்லி நாடகமாடி வந்த ஏட்டுவை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு கடந்த 2 ஆண்டுகளாக அந்த பெண் போலீஸ் உயிருடன் இருப்பதுபோல் அவரது குடும்பத்தினரை நம்ப வைத்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரை சேர்ந்தவர் மோனா. இவர் பிஎட் படிப்பை முடித்தார். இதையடுத்து அரசு அதிகாரியாக மாற விரும்பினார். இதையடுத்து போட்டி தேர்வுகளில் அவர் பங்கேற்று வந்தார். போலீஸ் தேர்வில் அவர் வெற்றி பெற்றார்.

இதையடுத்து 2014ம் ஆண்டு போலீஸ் பணியில் அவர் சேர்ந்தார். அதன்பிறகு அவர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லி கட்டுப்பாட்டு அறையில் அவர் பணியமர்த்தப்பட்டார். இதற்கிடையே அவர் எஸ்ஐ தேர்விலும் வெற்றி பெற்றார். உத்த பிரதேசத்தில் அவருக்கு பணி கிடைத்தது.

ஆனால் அந்த பணியை மோனா விரும்பவில்லை. இதையடுத்து பணியை ராஜினாமா செய்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வுக்காக அவர் டெல்லியில் தங்கி படிக்க தொடங்கினார். இந்நிலையில் தான் கடந்த 2021 செப்டம்பர் மாதம் திடீரென்று மோனா மாயமானார். அவரது குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், 15 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வீட்டுக்கு வருவதாகவும் அவரது குடும்பத்தினருக்கு ஒரு தகவல் சென்றது. இதையடுத்து மோனாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோனா எங்கு உள்ளார்? என்பதை அறிந்து அவரை கண்டுபிடிக்க முயன்றனர்.

ஆனால் எங்கு தேடியும் மோனா கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மோனாவை அவருடன் பணி செய்ய ஏட்டு ஒருவர் கொன்று உடலை புதைத்து கடந்த 2 ஆண்டுகளாக நாடகமாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் டெல்லியில் ஏட்டுவாக பணியாற்றி வரும் சுரேந்திர ராணா (வயது 42) என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அவர் கூறிய தகவல் திடுக்கிட வைத்துள்ளார். இதுகுறித்து டெல்லி போலீசார் கூறியதாவது:

கைதாகி உள்ள சுரேந்திர ராணா போலீசில் 2012ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவருக்கு 12 வயதில் மகன் உள்ளார். சுரேந்திர ராணாவும், மோனாவும் டெல்லி கட்டுப்பாட்டு அறையில் ஒன்றாக பணியாற்றினர்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுரேந்திர ராணா, மோனாவை காதலிக்க தொடங்கினார். இதனை அவர் மோனாவிடம் கூறவில்லை. இதற்கிடையே தான் மோனா யுபிஎஸ்சி தேர்வுக்காக டெல்லியில் தங்கி பயில தொடங்கினார்.

இதையடுத்து சுரேந்திர ராணா, மோனாவின் நடவடிக்கையை கண்காணித்து பின்தொடர தொடங்கினார். இதனை மோனா கண்டுபிடித்ததோடு, ஏன் பின்தொடர்கிறீர்கள்? என கேட்டார். அப்போது சுரேந்திர ராணா அவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மோனா, ‛உங்களை தந்தை ஸ்தானத்தில் வைத்து பார்க்கிறேன்” எனக்கூறி அவரது காதலை ரிஜெக்ட் செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திர ராணா மோனாவை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி மோனாவை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்று சாக்கடையில் புதைத்து கற்களை அடுக்கி வைத்தார்.

மோனாவின் உடலை புதைக்க சுரேந்திர ராணாவுக்கு அவரது உறவினர்களான ரவின் (26) மற்றும் ராஜ்பால் (33) ஆகியோர் உதவி செய்துள்ளனர். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து கொலையை மறைக்க திட்டம் போட்டனர். இதையடுத்து சுரேந்திர ராணா, மோனாவின் குடும்பத்தினரை போனில் தொடர்பு கொண்டு பேசினார். மோனா திடீரென்று மாயமாகி உள்ளதாக கூறினார். மேலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளிக்கவும் அவர் உதவி செய்தார்.

வழக்கு விசாரணையின்போது மோனாவின் குடும்பத்தினருடன் சுரேந்திர ராணா பலமுறை போலீஸ் நிலையத்துக்கு சென்று வந்தார். அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து மோனா மாயமாகி இருந்தாலும் கூட அவர் உயிருடன் தான் இருக்கிறார் என குடும்பத்தினரையும், போலீசையும் நம்ப வைக்க சுரேந்திர ராணா திட்டம் போட்டுள்ளார். இதற்காக அவர் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டுள்ளார்.

அதாவது மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளதாக மோனாவின் குடும்பத்துக்கு தெரிவித்தார். அதோடு மோனா கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வேறு மாநிலத்துக்கு தப்பித்து சென்றதாகவும் கூறியுள்ளார். அதோடு கொரேனா தடுப்பூசியை மோனா செலுத்தி கொண்டதற்கான போலி சான்றிதழையும் அவர் உருவாக்கி குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு மோனாவின் செல்போன் சிம் கார்டை உறவினரான ராபின் என்பவரிடம் வழங்கி அவரை மோனாவின் காதலனான அரவிந்த் போல் பேச செய்துள்ளார். அவரும் மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, ‛‛நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். இப்போது குர்கானில் உள்ளோம். காதல் திருமணம் செய்ததால் மோனா உங்களிடம் பேச பயப்படுகிறார். நாங்கள் 10-15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வருவோம்” என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த குடும்பத்தினர் மோனா உண்மையில் காதல் திருமணம் செய்து தலைமறைவாகி உள்ளதாக நம்பினர். போலீசாரையும் அவர்கள் நம்ப வைத்தனர். ஆனால் கூறியபடி இருவரும் மோனாவின் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் எங்களுக்கு சந்தேகம் வலுத்தது.

இதற்கிடையே செல்போன் எண்ணை கண்காணிக்க ஆரம்பித்தோம். அப்போது அந்த செல்போன் எண் ஹரியானாவின் டேராடூன், ரிஷிகேஷ் மற்றும் முசோரியில் உள்ள ஓட்டல்களில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்தபோது மோனாவின் பெயரில் அறைகள் எடுத்து இருப்பது உறுதியானது.

இதனால் மோனா உயிருடன் இருப்பதாக நினைத்தோம். அதோடு உண்மையிலேயே மோனா காதல் திருமணம் செய்துள்ளார். பெற்றோர் திட்டுவார்கள் என்பதால் அவர் வீட்டுக்கு செல்ல விரும்பிவில்லை என நினைத்தோம்.

மேலும் அடிக்கடி மோனாவின் குரல் பதிவுகளை போல் எடிட் செய்த ஆடியோக்களும் மேனாாவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மோனா உயிருடன் இருப்பதாக போலீசார் எண்ணினார்கள்.

இதற்கிடையே தான் இந்த வழக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வேளையில் மோனாவின் காதலனான அரவிந்த் என்பவர் தொடர்பு கொண்ட செல்போன் எண் குறித்த விபரம் கிடைத்தது. அதனை ஆய்வு செய்தோம்.

அப்போது அந்த செல்போன் எண் இன்னொரு குற்றவாளியான ராஜ்பாலுக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தோம். இந்த செல்போன் எண்ணின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் மோனாவை, ஏட்டு சுரேந்திர ராணா கொலை செய்து உறவினர்களான ராபின் மற்றும் ராஜ்பால் ஆகியோருடன் சேர்ந்து உடலை மறைத்ததை கண்டுபிடித்து கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றனர்.

மேலும் மோனாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டினர். அது மோனாவின் உடல் தானா? என்பதை உறுதி செய்யும் வகையில் அதில் இருந்த எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்கான போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். உடன் பணிபுரிந்த போலீஸ் பெண் காதலை ஏற்காத நிலையில் அவரை கொன்று உறவினர்கள் உதவியுடன் புதைத்து 2 ஆண்டுகளாக நாடகமாடிய ஏட்டுவின் இந்த செயல் டெல்லியை அலற வைத்துள்ளது.

பெற்றோர் கண்ணெதிரே பரிதாபமாக உயிரை விட்ட கல்லூரி மாணவி.!!

கோவையில்..

கோவையில் இளம் கல்லூரி மாணவி வாகனத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவர் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக பலியானார்.

கோயம்புத்தூர் மாவட்டம் நரசீபுரம், பூண்டி சாலை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 40). இவர் கூலிக்கு விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு இளமதி, ஆதிரா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இளமதி (17) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை கணிதவியல் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால், தாய், தந்தை வேலை செய்யும் தோட்டத்திற்கு சென்று, பசு மாட்டிற்கு தேவையான பசுந்தீவனத்தை, இருசக்கர வாகனத்தில் வைத்து, தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்று, முறிந்து இளமதி மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் மாணவி மரம் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

35 நாட்களாக கணவர் வீட்டிற்கு முன் போராடும் மனைவி!!

வேலகவுண்டனூரில்..

சேலம் மாவட்டம் ஓமலூர் வேலகவுண்டனூரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் பவித்ரா அதே பகுதியில் வசித்து வரும் மோகனை 10 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதைக் காண சொந்த ஊருக்கு மோகன் வந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவே இல்லை. மனைவியுடன் பேசவும் இல்லை. எந்த தகவலும் இல்லை.

இதனால் ஏமாற்றம் அடைந்த பவித்ரா வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்த நிலையில் கணவரின் பெற்றோரான முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.

பவித்ரா ஜூலை 24ல் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.இந்தபுகாரின் அடிப்படையில் கணவர், மாமனார், மாமியார் உள்பட 7 பேர் மீது மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பவித்ரா, வேலகவுண்டனுாரில் உள்ள கணவர் வீடு முன் உறவினர்களுடன், தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

35வது நாளாக இன்று தர்ணா போராட்டம் நடந்து வரும் நிலையில் பவித்ரா இது குறித்து ” ஆகஸ்ட் 23 முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறேன். இடையில், 2 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு சென்றேன். கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தாலே போதும். அதுவரை போராட்டம் தொடரும்” எனக் கூறியுள்ளார்.

ஆவியைத் திருமணம் செய்ததன் பலனை அனுபவிக்கும் பெண்!!

பிரித்தானியாவில்..

நீண்ட காலம் முன்பு மரணமடைந்த போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்ட பாடகி ஒருவர், திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டார்.

ஆனால், அதன் பலனை தான் அனுபவித்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளில், மரத்தை திருமணம் செய்பவர்கள், பொம்மையைத் திருமணம் செய்பவர்கள், நதியைத் திருமணம் செய்பவர்கள், தன்னைத்தான் திருமணம் செய்பவர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.

அவ்வகையில், பிரித்தானியாவின் Oxfordshireஐச் சேர்ந்த பிரபல பாடகியும், பாடலாசிரியருமான Brocarde என்பவர், நீண்ட காலம் முன்பு மரணமடைந்த Edwardo என்னும் போர் வீரர் ஒருவரின் ஆவியைத் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், Edwardoவுடனான Brocardeஇன் திருமணம் ஒரே ஆண்டுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. Edwardoவுக்கு நடிகை மர்லின் மன்றோ என்றால் உயிராம். மர்லின் மன்றோவின் ஆவி தங்கள் திருமணத்தில் பங்கேற்ற நாள் முதல் அவர் மீது பைத்தியமாகி அவர் பின்னால் சுற்றத்துவங்கிவிட்டாராம் Edwardo.

மேலும், குழந்தை ஒன்றின் அழுகுரல் மூலமாகவும் Edwardo தன்னை தொந்தரவு செய்யத் துவங்கிவிட்டதாகவும் தெரிவித்த Brocarde, தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட அதே ஆலயத்தில் சென்று தங்கள் திருமணத்தை முடித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

ஆவியைத் திருமணம் செய்ததன் பலனை அனுபவிக்கும் Brocarde
ஆனால், விவாகரத்து செய்தும், Edwardo தன்னை தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார் Brocarde.

Edwardoவுடனான வாழ்வு முடிந்துவிட்டது என முடிவு செய்து, பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்றிருந்தாராம் Brocarde. ஈபிள் கோபுரத்துக்குச் சென்றிருந்த Brocarde, பிரான்ஸ் நாட்டவரான ஆண் ஆவி ஒன்றை சந்தித்துள்ளார்.

தன்னை Fabienne என அறிமுகம் செய்துகொண்ட அந்த ஆவி, Brocardeயின் பின்னாலேயே அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்துவிட்டதாம். சரி, பாரீஸ் நகர ஆவி ஒன்றுடன் ஜாலியாக இருக்கலாம் என முடிவு செய்தாரான் அவர். ஆனால், பின்னர், தான் வேறு யாருமில்லை, Edwardoதான் என்று கூறியதாம் அந்த ஆவி.

சரி, இனி மனிதர்களைக் காதலிக்கலாம் என Brocarde ஆண் நண்பர்களுடன் பழகத் துவங்கினாலும் தொந்தரவு செய்கிறதாம் Edwardoவின் ஆவி. எப்படியாவது, Edwardoவிடமிருந்து விடுபடலாம் என ஆவிகளுடன் பேசும் ஒருவரைச் சென்று சந்தித்திருக்கிறார் Brocarde.

ஆனால், இனி ஒருபோதும் Edwardoவின் ஆவி உங்களை விட்டுப் பிரியாது, எப்போதுமே உங்களுடன்தான் இருக்கும் என்று கூறிவிட்டாராம் அந்த நபர். ஏண்டா இந்த ஆவியைக் காதலித்துத் தொலைத்தோம் என்றிருக்கிறதாம் Brocardeக்கு!

படிக்கச் சொன்னதால் விபரீதம்.. 6ம் வகுப்பு மாணவி 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

ஹைதராபாத்தில்..

இன்றைய இளம் பிள்ளைகளுக்கு கேட்பதற்கு முன்பே பெற்றோர்கள் அனைத்தையும் வாங்கி குவித்து விடுகின்றனர். எதற்கும் நோ சொல்வதே கிடையாது. இதனால் என்ன கேட்டாலும் கிடைத்து விடும் என்ற மனோபாவத்தில் வளர்கின்றனர்.

வளர்ந்த பிறகு இது முடியாது, இதை செய் என சொன்னால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி விபரீத முடிவுகளுக்கு போய் விடுகின்றனர். ஹைதராபாத்தின் நல்லகண்டலா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி அஹானா.

இவருக்கு 12 வயது. இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்ட பள்ளி தேர்வுகளில் கணக்கு பாடத்தில் போதிய மதிப்பெண்கள் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து தங்களது அடுக்குமாடி குடியிருப்பிலேயே கணித பாடத்துக்கு டியூசன் சேர்த்து விட்டனர்.

அஹானா தினமும் மாலை 1 மணி நேரம் கணக்கு டியூஷன் செல்ல ஆரம்பித்தார். இதனால் தனது வழக்கமான விளையாட்டு நேரம் பறிபோவதாக அந்த சிறுமி கூறிக்கொண்டே இருந்தார். பெற்றோர் கேட்காமல் அவளை வற்புறுத்தி டியூஷன் அனுப்பி உள்ளனர்.

வழக்கம் போல் பள்ளியில் இருந்து 4 மணிக்கு வீடு திரும்பிய அஹானா கணக்கு டியூஷன் போகப் பிடிக்கவில்லை; பிரண்ட்ஸ் உடன் சேர்ந்து விளையாடப் போகவேண்டும்’ என்று பெற்றோரிடம் அடம் பிடித்தார். கோபமடைந்த பெற்றோர், டியூஷன் போயே ஆக வேண்டும் என கண்டித்தனர்.

இதனால் அஹானா மனமுடைந்த நிலையில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அதே கட்டிடத்தில் அமைந்திருக்கும் டியூஷன் டீச்சர் வீட்டுக்கு போகாமல் பால்கனிக்கு சென்றார்.

பலரும் நடமாடிக் கொண்டிருந்த நேரத்தில் பால்கனி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தார். அவர்கள் வசிக்கும் 15வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதனால் அஹானா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் தனக்கு பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லை என தாயாருக்கு மொபைலில் தகவல் அனுப்பிவிட்டு, அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தின் பாதிப்பில் 6ம் வகுப்பு சிறுமியும் மன அழுத்தத்தில் தவறான முடிவை தேடியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

1.5 லட்சம் மதிப்புள்ள உரிமையாளரின் தாலியை உணவுடன் சேர்ந்து விழுங்கிய எருமை மாடு!!

மகாராஷ்டிராவில்..

உணவுடன் சேர்ந்து ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தாலியை விழுங்கிய எருமை மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தாலி வெளியே எடுக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரில் அமைந்துள்ளது சார்சி என்ற கிராமம். இங்கு கீதாபாய் போயர் என்ற பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டில் எருமை மாடு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மாட்டுக்கு கீதாபாய் தான் உணவு வைத்து வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த செப்., 27-ம் தேதியும் இரவு நேரத்தில் இந்த மாட்டுக்கு சோயாபீன் அடங்கிய உணவை வைத்துள்ளார்.

பின்னர் அவரது வீட்டிற்குள் சென்றுவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்க்கையில் அவரது கழுத்தில் இருந்த தாலி திடீரென காணாமல் போயுள்ளது. இதனை அவர் தேடியுள்ளார்; ஆனால் கிடைக்கவில்லை.

எனவே அவரது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். பின்னர் அனைவரும் சேர்ந்து தேடியுள்ளனர். வீட்டின் அனைத்து பகுதிகளில் தேடியும் தாலி கிடைக்கவில்லை. இதையடுத்தே அவருக்கு தான் இரவு உணவு வைக்கும்போதுவ் வரைக்கும் கழுத்தில் தாலி இருந்தது நினைவுக்கு வந்துள்ளது.

இதையடுத்து மாட்டின் அருகே சென்றும் தேடியுள்ளனர். அப்படியும் கிடைக்கவில்லை. எனவே, ஒருவேளை மாட்டின் உணவோடு விழுந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவரால் மெட்டல் டிடெக்டரை வைத்து சோதனை செய்துள்ளனர். அப்போது மாட்டின் வயிற்றுக்குள் செயின் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செப்.28-ம் தேதி மாட்டுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகே, ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தாலி வெளியே எடுக்கப்பட்டது.

மாட்டுக்கு சுமார் 60 -70 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மாடு நலமுடன் இருப்பதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

சாப்பாடு கொடுக்கும்போது தவறுதலாக மாட்டின் உணவில் தாலி கழன்று விழுந்திருக்கலாம் எனவும், பின்னரே மாடு அதனை சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம் எனவும் கூறபடுகிறது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குருக்களின் உதவியாளர் மரணம் : குருக்கள் கைது!!

கிளங்கனில்..

நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டார்.

அதன் பின்னர் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம், செவ்வாய்க்கிழமை (03) மாலை கொண்டுச்செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆலய குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒஸ்பன் தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வந்த எஸ். ஜனநாதன் (வயது 16) சிறுவனே தோட்டத்தின் விநாயகர் ஆலய அறையில் செவ்வாய்க்கிழமை (03) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் பிரதான குருக்களுக்கு உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு சிறுமிகள் மாயம்!!

தெபலவில்..

நன்னடத்தை திணைக்களத்தின் மேற்பார்வையில் பிபில பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுமிகள் காப்பகத்தில் இரண்டு சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறுமிகள் இல்லத்தின் உதவி கண்காணிப்பாளர் பிபில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சிறுமிகள் தெபல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைப் பைகளை வகுப்பறையில் வைத்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் இல்ல உதவி காப்பாளருக்கு அதிபர் அறிவித்ததையடுத்து அவர்கள் திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது.

பதினாறு வயதுடைய இரு சிறுமிகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.சிறுமிகளைத் தேடுவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிபில பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்!!

வாகனங்கள்..

பல வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(04.10.2023) இடம்பெற்று வரும் அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக, சில பொருட்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, சுங்கத் திணைக்களம் மற்றும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன .தற்போதைக்கு, HS குறியீடு 304 தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர, ஏனைய பல வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவோம் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயுவின் விலை : நள்ளிரவு முதல் நடைமுறை!!

லிட்ரோ..

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை​ 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 3470 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1393 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாதாந்த விலை சூத்திரத்தின்படி, இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04.10.2023) நள்ளிரவு அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 2,982 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.

மேலும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,256 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறித்த விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப் பதக்கம்!!

தங்கப் பதக்கம்..

Colombo (News 1st) 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கதை வெற்றிகொண்டார். தருஷி கருணாரத்ன 2.3 நிமிடங்களில் போட்டித் தூரத்தை கடந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்போட்டியின் வௌ்ளிப்பதக்கத்தை இந்தியாவும், வெண்கல பதக்கத்தை சீனாவும் பெற்றன.

2002 ஆம் ஆண்டுக்கு பிறகு மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகளில் இலங்கை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் இன்றைய வெற்றி பதிவாகியுள்ளது.19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் Hangzhou-வில் இடம்பெற்று வருகிறது