தடுப்பூசி போட்டதும் 3 மாத குழந்தை பரிதாபமாக பலி… கதறும் தாய்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி பகுதியில் வசித்து வருபவர் சூரியமூர்த்தி. இவரது மகன் கபிலன் . மனைவி ஏஞ்சலின் ருபீஸியா . கபிலன் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இதனால் அவர் தனது மனைவியுடன் நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சுஜன். இந்த குழந்தைக்கு ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் முத்தாண்டிபாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று 2வது தடுப்பூசி போட்டனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

திடீரென நேற்று காலை குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிவிட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தூக்கிக் கொண்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு ஓடினர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது குறித்து குழந்தையின் பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தையின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பூசி போடப்பட்ட மறுநாள் 3 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலுக்கு மேல் பறக்கும் தொடருந்து : உலகை வியப்பில் ஆழ்த்திய சீனா!!

சீனாவில்..

சீனா தனது முதல் கடல் கடந்த அதிவேக தொடருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தொடருந்து பாதையானது பெய்ஜியான் மாகாணத்தின் ஃபுசோ தொடங்கி தைவான் ஜலசந்திக்கு அருகேயுள்ள சியாமன் பகுதியை இணைக்கும் வகையில் அமைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதிநவீன தொழில்நுட்பத்தில் கடலின் மேல் அமைக்கப்பட்ட ஓடுபாதையில் இயங்கும் அதிவேக தொடருந்து சேவையினால் போக்குவரத்து மற்றும் வர்த்தக வளர்ச்சி ஏற்படும் என சீனா எதிர்ப்பார்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளது.

மேலும் கடலுக்கு மேலான அதிநவீன தொடருந்து சேவையானது 545 பயணிகளுடன் மணிக்கு 350km வேகத்தில் பயணிக்க கூடியது என்பதனால் பயணிகளை அதிகம் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மறைந்து வாழும் பிரித்தானிய பெண்!!

இலங்கையில்..

13 மாதங்களாக இலங்கையில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண் கெல்லி பிரேசரை (35) (Kayyleigh Fraser) ஐக்கிய இராச்சியத்திற்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கெல்லி பிரேசரை பத்திரமாக பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து சான்றிதழை பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லின் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

காலிமுகத்திடலில் நடந்த அரகலய போராட்டத்தின் போது இலங்கையில் தங்கியிருந்த பிரித்தானிய பிரஜையான கெய்லி பிரேசர் மீது குற்றம்சாட்டப்பட்டு , அவரது வீசாவை இலங்கை குடிவரவுத் திணைக்களம் ரத்து செய்தது.

அர்சாங்கத்திற்கு எதிரான அரகலயபோராட்டத்திற்கு’ ஆதரவளித்த குற்றச்சாட்டின் காரணமாக, பிரச்சனைகளுக்கு உள்ளான அவர் தற்போது காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் இல்லை.இவ்வாறான நிலையிலேயே குறித்த பெண்ணை ஐக்கிய இராச்சியத்திற்கு அழைத்து செல்ல பிரிதானியா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மீண்டும் கைவிடப்பட்ட ஜப்பானில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் மரண விசாரணை!!

ஜப்பானில்..

ஜப்பானில் 2021 ஆம் ஆண்டு உயிரிழந்த இலங்கை யுவதியின் மரணம் தொடர்பில், குடிவரவு மையத்தின் அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் குற்றம் சுமத்தாதிருக்க முடிவெடுத்துள்ளதாக ஜப்பானில் உள்ள சுயாதீன நீதித்துறை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.ரத்நாயக்க லியனகே விஷமா சந்தமாலி, 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33 வயதில் மரணமடைந்தார்.

இவர் ஜப்பானில் உள்ள நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்திருந்தார்.இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான மக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியம் தொடர்பில் அந்த நேரத்தில் அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

இருந்தபோதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி, ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.எனவே அவர்கள் குற்றத்தை பொறுப்பேற்க, தொடர்ந்து போராடப்போவதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகம், “சட்டத்தரணிகளின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் நிலையில் இல்லை” என்று கூறியுள்ளது.விஷ்மா ஒரு மாணவியாக 2017 இல் ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதன்போதே அவரின் மரணம் சம்பவித்திருந்தது.

இலங்கையில் உடல், உறுப்புக்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!!

இலங்கையில்..

செப்டெம்பர் 27ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த 51 வயதுடைய நபரொருவரின் சடலம் களனி ஆற்றங்கரையில் இருந்து வியாழக்கிழமை (செப்.28) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

டி.ஜி பிரதீபா என அடையாளம் காணப்பட்ட இறந்தவர், தலை துண்டிக்கப்பட்டு உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இறந்தவரின் உறவினர்கள் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். பிரதீபாவின் மகள் புதன்கிழமை (செப். 27) தனது தாய் காணாமல் போனதாக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

விசாரணையின் போது கிடைத்த சிசிரிவி காட்சிகளில், இறந்தவர் 55 வயதுடைய சந்தேக நபரை, கடுவெல நகரில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வெளியே சந்தித்ததாகவும், அதனைத் தொடர்ந்து KI 3030 என்ற இலக்கத் தகடு கொண்ட அவரது காரில் இருவரும் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சியமபலபே பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சுதீர வசந்த என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், இறந்தவருடன் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சியாமபலபேயில் கைவிடப்பட்ட வீட்டில் இரத்தக் கறைகள், முடிகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பணம் தொடர்பான பிரச்சினையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் வசிப்பிடத்திலிருந்து சுமார் ஒரு மீற்றர் தொலைவில் களனி ஆற்றின் கரையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர். இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த மற்றும் முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உணவகம் ஒன்றில் பிரியாணியில் கிடந்த பூரான் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

இந்தியாவில்..

இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்றுள்ளனர்.குறித்த குடும்பத்தினர் உணவுக்காக பிரியாணி பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கப்பட்ட பிரியாணியில் இறந்த நிலையில், பூரான் ஒன்று காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோபமடைந்த குடும்பத்தினர் உணவக உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு முறைப்பாட்டையும் அளித்துள்ளனர்.

தொடரும் சீரற்ற காலநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

காலநிலை..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அனர்த்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நில்வள கங்கை, ஜின் கங்கை மற்றும் குடா கங்கை ஆகிய நீரேந்து பிரதேசங்கள் மற்றும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணித்தியாலங்களில் கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.குறித்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் வாகன சாரதிகள் இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாளை (01) காலை 10.00 மணி வரை வெள்ள அபாய எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரித்து வரும் காரணத்தால், பொதுமக்களை விழிப்புணர்வுடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வளவ கங்கை, களு கங்கை மற்றும் சமனலவௌ நீர் நிலைகளில் நீர் மட்டம் தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பம்பஹின்ன, சமனலவௌ மற்றும் கல்தொட்ட ஊடாகவும் கூரகல புனித பூமி மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், தூவிலி எல்ல போன்ற பிரதேசங்களை பார்வையிட செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு சமனலவௌ மற்றும் கல்தொட்ட பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆற்றங்கரையில் கூடாரம் அமைத்து தங்குவது, செல்ஃபி புகைப்படம் எடுப்பது, நீராடுவது, மீன் பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் முற்றாக குறித்த செயற்பாடுகளை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதிவேகத்தால் வீதியில் கவிழ்ந்த கார்!!

நுவரெலியாவில்..

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த கார் ஒன்று, விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (29) அதிகாலை 1 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக பயணித்த கார் கனமழை காரணமாக வழுக்கிச் சென்று வீதிக்கு அருகில் உள்ள மண் மேட்டில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது சாரதி மட்டுமே வாகனத்தில் இருந்த நிலையில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல் : காட்டிக்கொடுத்த சீசீரிவி!!

இலங்கையில்..

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் களவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தியோகத்தர் களவெடுத்த சம்பவம் அங்கிருந்த சீசீரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் அங்குமிங்கும் பார்த்த பின்னர் தாம் அணிந்திருந்த ஜேர்சியை ஓரிடத்தில் கழற்றிவைக்கின்றார்.

அதன் பின்னர் ஜேர்சியையும் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை தனது ஜேர்சிக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றார்.

அத்துடன் , அங்கிருந்த ஒரு சோடி காலணியையும் திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றார். பெண் கிராம உத்தியோகத்தர் பொருட்களை திருடும் காணொளி விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் அரச ஊழியர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

வாழைக்குலை திருடச் சென்ற இளைஞர்களில் ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

இலங்கையில்..

பாதுக்க லியன்வல பிரதேசத்தில் நீரில் மூழ்கி 21 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஹல்கந்தவத்தை பிரதேசத்தில் காணி ஒன்றில் வாழைக்குலை ஒன்றை திருடி தப்பிச் சென்றுக் கொண்டிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இந்த மூவரையும் கிராம மக்கள் துரத்திச் செல்லும் போது, ​​ஹல்கடவத்தை பிரதேசத்தின் ஊடாக பாயும் புஸ்ஹெலி ஆற்றில் குதித்து இருவர் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

ஏற்கனவே ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து இருந்தமையினால் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. மற்ற 2 பேரையும் அப்பகுதி மக்கள் பிடித்து பொலிஸில் ஒப்படைத்தனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், இசை நிகழ்ச்சி ஒன்றை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்குவதற்காக வாழைக்குலையை திருடிச் சென்றது தெரியவந்தது.

காணாமல் போன இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கையை பொலிஸ் கடற்படை பிரிவினர் மேற்கொண்டுள்ள நிலையில், இதுவரை காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமையை எதிர்க்கும் விவேக் ராமசாமி!!

அமெரிக்காவில்..

சட்ட விரோதமாக குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் இரத்து செய்வேன் என விவேக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிமி வேலி பகுதியில் அமைய பெற்ற ரொனால்ட் ரீகன் நூலகம் மற்றும் அருங்காட்சியகத்தில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் தங்களது திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்யும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த விவாதத்தில் அகதிகள் குடியுரிமை தொடர்பில் விவேக் ராமசாமி கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு தீவிரமாக போட்டியிடுகின்றனர்.

டொனால்ட் ட்ரம்ப் மீது பல மாநிலங்களில் வழக்குகள் உள்ளதால் அவர் பதவிக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் அக்கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபரான விவேக் ராமசாமி தேர்தல் களத்தில் தீவிரமாக உள்ளார்.

சட்ட விரோதமாக இந்நாட்டில் குடியேறிய பெற்றோர்களின் குழந்தைகள் இந்நாட்டில் பிறந்தால் அக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் “பர்த்ரைட் சிடிசன்ஷிப்” (birthright citizenship) எனப்படும் பிறப்புரிமை குடியுரிமை முறையை நான் ரத்து செய்து விடுவேன்.

அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது திருத்தம் குறித்து எதிர்ப்பாளர்கள் வாதிடலாம். ஆனால், நான் அந்த திருத்தத்தை படித்திருக்கிறேன். அதன்படி நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி, அதன் பின்பு இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதை தடை செய்வது அரசியலமைப்பு சட்டப்படி சரியானதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் திருநங்கை ஒருவரின் உருக்கமான கோரிக்கை!!

யாழில்.

திருநங்கைகளை மனதளவில் புண்படுத்தும் நடவடிக்கைளை செய்ய வேண்டாம் என யாழ்ப்பாணத்தை சேர்ந்த திருநங்கை ஷாலினி உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட ஷாலினி தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றார். இந்த நிலையில் அவர் பல விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், மக்களிடம் கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 12 வயதிலேயே நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்தேன். எனக்கு பெற்றோர் இல்லை. உறவினர்களுடனே நான் இருந்து வந்த நிலையில் நான் ஒரு திருநங்கை என்று உணர்ந்த பின்னர் உறவினர்கள் என்னை விரட்டிவிட்டனர்.

இந்த நிலையில் நான் தற்போது காக்கைத்தீவு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு ஹோட்டலொன்றில் சுத்தப்படுத்தல் வேலையை செய்து வருகின்றேன். எனினும் நாளாந்தம் நான் வீதியில் சென்று வரும் போது என்னை பலரும் வித்தியாசமாக பார்க்கின்றனர்.

அதில் சிலர் அலி, ஒன்பது என்றெல்லாம் கேலி செய்கின்றனர். பெண்கள் என்னை மதிப்பதுடன் எனக்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். என்ற போதும் ஆண்களே என்னை மனதளவில் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மொத்தமாக சுமார் 5600 திருநங்கைகள் இருக்கின்றனர். அப்பிடியிருந்த போதும் நிறைய பேர் தன்னை வெளிகாட்டிக் கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முழுமையாக தான் பெண்ணாக மாறுவதற்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் எனினும் தனக்கு அதற்கான உதவிகளை வழங்க யாரும் இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், திருநங்கைகளை புண்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறும், அது தம்மை மிகவும் கஷ்டப்படுத்துவதாகவும் அவர் மிகவும் உருக்கமாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.

யாழில் பெரும் குடிமகன் அரங்கேற்றிய சம்பவம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை வடக்கில் ஒருவரின் காணிக்குள் இருந்த மாதா சொரூபம் மூன்றாவது தடவையாகவும் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

நபர் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்வதாக மருதங்கேணி பொலிசாரிடம் காணி உரிமையாளர் ஒ முறைப்பாடு பதிவு செய்ததிருந்தார்.

இதனை அறிந்த மதுபோதையில் இருந்த குறித்த நபர் நேற்று இரவு காணிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கே நிறுவப்பட்டிருந்த மாதா சொரூபத்தை அடித்து நொறுக்கியுள்ளார்.

அதேவேளை குறித்த நபர் குறித்த மாதா சொருபத்தை மூன்றாவது தடவையாக இவ்வாரு அடித்து நொறுக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டதில் இருவர் படுகாயம்.!!

தம்பிலுவிலில்..

அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதில் இருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று முன்தினம் புதன் கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்துள்ளதாகவும் திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் தம்பிலுவில் பிரதான வீதி வீ.சி. வீதிக்கு அருகில் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறிச் சாரதியை கைது செய்ததுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்!!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023)ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு (முல்லைத்தீவு நீதிபதிக்கு) எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ( Court of Appeal) எனது தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்பட்டு இரண்டு வழக்குகள் கோப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.

இது குறித்த பதவி விலகல் கடிதத்தினை கடந்த (23.09.2023) அன்று பதிவுத் தபால் ஊடாக நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

உலகின் 8 ஆவது கண்டம் கண்டுபிடிப்பு!!

8 ஆவது கண்டம்..

உலகின் 8 ஆவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இந்த புதிய கண்டத்தை விஞ்ஞானிகள் ஜீலந்தியா (Zealandia) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். கண்டுபிடிக்கபப்ட்ட புதிய கண்டம் 375 ஆண்டுகள் மறைந்திருந்ததாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

8 ஆவது கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த நிகழ்வு உலக நாடுகள் பலவற்றில் முக்கிய செய்தியாக மாறியுள்து.கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஜீலந்தியா கண்டமானது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது.

இதில் நியூசிலாந்தை போல சில தீவுகள் உள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், முன்னதாக பாறை மாதிரிகள் சிலவற்றை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.புதிய கண்டம் மடகாஸ்கர் தீவை காட்டிலும் 6 மடங்கு பெரியது எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதனுடன் சேர்த்து உலகில் மொத்தம் 8 கண்டங்கள இருப்பதாக புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.அந்தவகையில் உலகில் தற்போது ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய 7 கண்டங்கள் உள்ள நிலையில், விரைவில் இந்த புதிய கண்டத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.