காலியில் தடுப்பூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.
ஊசியை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மஹரகம வைத்தியசாலையிடம் வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவி மற்றும், 4 வயது குழந்தையை துடிதுடிக்க கொலை செய்த கணவரின் செயல் மகாராஷ்டிராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட் பகுதியில் ஏக்நாத் ஜெயபாயே என்பவர் வசித்து வருகிறார். இராணுவத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு பாக்யஸ்ரீ என்ற மனைவியும், 4 வய்தில் குழந்தையும் உள்ளனர்.
தற்போது ராஜஸ்தானில் பணிபுரிந்து வரும் இவரது மனைவி மீண்டும் 2-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லாமல் கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளது. மேலும் ஏக்நாத், தனது மனைவி பாக்கியாவை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.
அதோடு தாயார் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வரும்படி வரதட்சணை கொடுமை செய்து தாக்கியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஏக்நாத், தனது மனைவியை தாக்கியுள்ளார். அதோடு நிறைமாத கர்ப்பிணி என்றும் எண்ணாமல், அவரை கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர் தனது 4 வயது மகளையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்.
கொலை செய்த பின்னர், ஏக்நாத், தானே சென்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்த மனைவி, மகளின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் நோயை சரியாக கணிக்கத் தவறிய மருத்துவரால் 9 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முகேஷ் மற்றும் கீதா தம்பதியின் மகள் 9 வயதான ரியா ஹிரானி. பிரித்தானியாவில் Strep A பாதிப்பு பரவலாக காணப்பட்டு வந்த போது, மூன்று நாட்களாக காய்ச்சல், தொண்டை வலி, பேச முடியாமை உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனையை நாடியுள்ளனர்.
ஆனால் சிறுமியின் நிலை பயப்படும்படி இல்லை என தெரிவித்து வீட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். கடந்த 2022 டிசம்பர் 23ம் திகதி சிறுமி ரியாவின் வாயில் இருந்து நுரை வெளியேற, பயந்துபோன தாயார் கீதா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி மூச்சுத் திணறுகிறாள் என்று நினைத்து அவள் முதுகில் தட்டியுள்ளார் தந்தை முகேஷ். சட்டென்று சிறுமி ரியா சுருண்டு விழவும், Great Ormond Street மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதில் சிறுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன், கடுமையான மூளை பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சையில் இருந்த சிறுமி ரியா, சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீண்ட 10 ஆண்டுகள் போராடி, கடைசியில் IVF முறைப்படி பிறந்த குழந்தை ரியா என நீதிமன்ற விசாரணையின் போது முகேஷ் மற்றும் கீதா தம்பதி நினைவு கூர்ந்துள்ளனர்.
சம்பவத்தன்று மருத்துவரிடம் தமது மகளின் நிலை குறித்து விரிவாக எடுத்துக் கூறியும், மருத்துவரால் நோயின் தன்மையை உறுதி செய்ய முடியாமல் போனது எனவும் கீதா குறிப்பிட்டுள்ளார்.
தமது மகளுக்கு Strep A பாதிப்பாக இருக்கலாம் என தனது சந்தேகத்தை எடுத்துக் கூறியும், அந்த மருத்துவர் கருத்தில் கொள்ளவில்லை என கீதா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறுமி ரியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் எனவும் அதிகாரிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் ”திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் ஊர்திப் பவனியானது அம்பாறை பொத்துவில் பகுதியில் ஆரம்பித்து திருகோணமலையில் வலம் வந்திருந்தது.
இந்நிலையில், திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வைத்து குறித்த ஊர்தி மீது சிங்கள காடையர்களால் நேற்று (17.09) தாக்குதல் நடத்தப்பட்டதுடன், குறித்த ஊர்தியுடன் வந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து சேதமாக்கப்பட்ட குறித்த ஊர்தி தம்பலகாமம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் அங்கு தங்கியிருந்தனர்.
இந்நிலையில் வடக்கில் இருந்து சென்ற இளைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் துணையுடன் குறித்த ஊர்தியும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களும் திருகோணமலையில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
குறித்த ஊர்திப் பவனயானது வடக்கில் தொடர்ந்தும் நினைவேந்தலுக்கான தரிசிப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.
சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif, 41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool, 29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik, 28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிசார் தேடி வந்த நிலையில், அவர்கள் புதன்கிழமை பிரித்தானியா திரும்பினார்கள்.
இங்கிலாந்திலுள்ள Gatwick விமான நிலையத்தில் அவர்களுக்காக காத்திருந்த பொலிசார், அவர்கள் மூவரும் விமானத்திலிருந்து இறங்கியதும் அவர்களைக் கைது செய்தனர்.
அவர்கள் மூவரும் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இன்று அதிகாலை, ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகிய மூவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை ஒன்றின் சாவுக்குக் காரணமாக இருந்தது அல்லது சாவை அனுமதித்தது என்னும் குற்றச்சாட்டும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும், இன்று Guildford மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் மழைக்கால நோய்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. வழக்கமாக வரும் சளி, இருமல், காய்ச்சல் இவைகளுடன் டெங்கு, நிஃபா வைரஸ்களும் பரவத் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் வசித்து வரும் சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவபடிப்பை முடித்து விட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக சிந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று காலை அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் என முடிவுகள் வெளியாகின.
இதனையடுத்து மீண்டும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் முடிவுகள் வருவதற்கு முன்னர் இன்று அதிகாலையில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குருப்பம்பாடி பகுதியை சேர்ந்த தம்பதி பினு ஜேக்கப்-மஞ்சு. இவர்களது மகள் அல்கா அன்னா பினு (20). இவர், கொளஞ்சேரியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 5ம் தேதி மாணவி அல்கா வீட்டில் இருந்தார்.
அப்போது அவரது வீட்டுக்குள் இரிங்கோல் பகுதியை சேர்ந்த பசில் (21) என்ற வாலிபர் வந்தார். மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த அவர் தன்னிடம் இருந்த கத்தியால் மாணவியை வெட்டினார். அதனை தடுத்த மாணவியின் தாத்தா மற்றும் பாட்டிக்கும் வெட்டு விழுந்தது.
இந்த தாக்குதலில் 3 பேரும் காயம் அடைந்தனர். தலை மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாணவி அல்கா பெரும்பாவூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக ஆலுவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், வீடு புகுந்து மாணவியை வெட்டிய பசிலை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வாலிபர் பசில் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மாணவியை வெட்டி விட்டு வாலிபர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில் மாணவியும், வாலிபரும் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து வந்ததும், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும், மாணவியை வாலிபர் காதலித்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் வாலிபருடன் பேசுவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே தனது காதல் தோல்வியடைந்த ஆத்திரத்தில் மாணவியை வெட்டி வாலிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் வாலிபரால் வெட்டப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். விக்டோரியாவின் பெரிக் பகுதியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர் இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இலங்கையரான அனுருத்த பிரியங்கர கொடிப்பிலி (49) என்பவர் உயிரிழந்துள்ளார். வாகனத்தின் சாரதியும் மற்றுமொரு பெண்ணும் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
வெள்ளை நிற சுபாரு காரும் நீல நிற போர்ட் காரும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்து பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பண்டாரவளைக்கு இன்று (17) காலை திரும்பிக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்று (16-09-2023) பிற்பகல் பூநகரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்த நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பூண்டுலோயா பாலுவத்த பகுதியில் வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் 17 வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். அக்கரப்பத்தனை உருலவள்ளி பகுதியை சேர்ந்த 17 வயதான விஜயராஜ் திவ்யராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிந்த சிறுமியின் சடலம் கொத்மலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வாகை மரக்கிளை முறிந்து விழுந்ததில் சிறுமி பலியான சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி, வன்னியசிங்கம் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.உரும்பிராயைச் சேர்ந்த இளைஞனும், அவருடன் வந்த கும்பலும் வீட்டுக்குள் நுழைந்து உடைமைகளைச் சேதப்படுத்தியதுடன், பெற்றோல் குண்டுத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த 5 பேர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த வீட்டில் இருந்த யுவதியுடன் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருதலைக் காதலைக் கொண்டிருந்ததாகவும்,
தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரை வற்புறுத்தி மிரட்டி வந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்குப் பெற்றோர் மறுப்புத் தெரிவித்த நிலையிலேயே இத் தாக்குதல் சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு கொக்குவில்லை சேர்ந்த சாந்தகுமார் எப்சிபா என்னும் 16 வயதுடைய மாணவி கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
தனது மகளின் இறப்பிற்கு மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகமே முழுக்க முழுக்க காரணம் என மரணித்த பிள்ளையின் பெற்றோர் இன்று வைத்தியசாலையின் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த மாணவி தோல் சம்பந்தப்பட்ட நோய்காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் சென்று வந்த நிலையில் காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின்னர் சலம் நிறமாற்றத்துடன் வெளியேறியதனை தொடர்ந்து மரணித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் வைத்தியர்களிடம் வினவியபோது, டெங்கு நோயிற்கான அறிகுறி தென்பட்டதனால் அதற்கான மருந்தினை வழங்கினோம்,பிள்ளைக்கு இரத்தத்தில் கிருமி கலந்து விட்டது, பிள்ளைக்கு குஸ்ரரோகம் என்னும் தோல் வியாதி இருந்துள்ளது இதனால் தான் பிள்ளை மரணித்துள்ளது என பல பதில்களை கூறியுள்ளனர்.
இவர்கள் கூறும் காரணங்களை எம்மால் ஏற்க முடியாது. எனது பிள்ளையின் இறப்பிற்கு நியாயம் வேண்டும் என பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகதிற்கு எதிராக தங்கள் கண்டங்களை தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு நகர்புறத்தில் உள்ள பெரியஉப்போடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஞானச்செல்வம் தக்ஸா என்னும் 23 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தற்கொலைக்கான காரணம் குடும்பத்துக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மனஅழுத்ததில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பெண் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை பழைய மாணவி என்பதுடன், இவரின் கணவர் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.