மணமகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த பெண் வீட்டார்.. அதிர்ச்சி சம்பவம்!!

உத்திரபிரதேசத்தில்..

ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய் என்பது பழமொழி. கல்யாணத்தை பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் , முந்தைய தலைமுறை வரை பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தனர். தற்போது நிலைமை மாறிவிட்டது.

வரதட்சிணைகள் குறைந்து வரும் இந்த காலத்தில் சில இடங்களில் விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் வரதட்சணை கேட்டதால் மணமகனை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மணமகன் – மணமகளின் குடும்பத்தினருக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தடா காவல் நிலைய போலீசார், மணமகனை விடுவித்து அவரைக் கைது செய்தனர்.

இது குறித்து எஸ்எச்ஓ மந்தாதா கூறுகையில், “இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை சமரசம் ஏற்படவில்லை” எனறார். மேலும், “மாப்பிள்ளையின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மணமகன் அமர்ஜித் வரதட்சணை கேட்டு கோரிக்கை வைத்தார். திருமண விழா ஏற்பாடுகளில் பெண்ணின் தரப்பு செலவுகளை ஈடுசெய்வதற்கும், ஒரு சமரசத்தை எட்டுவதற்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்து கொண்டிருந்தது” என்று தெரிவித்தார்.

பெற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் : இறுதியில் நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னையில் 2½ வயது ஆண் குழந்தையை கொன்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செல்வபிரகாசம்- லாவண்யா.

இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது, இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் லாவண்யா குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக செல்வபிரகாசம் வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு லாவண்யா இல்லை. குழந்தை இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த செல்வபிரகாசம் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார், இதனையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெற்ற மகன் என்றுகூட பாராமல் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யாவே கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தாய் லாவண்யாவையும், அவரது ஆண் நண்பர் மணிகண்டன் என்பவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கல்லூரியில் படிக்கும்போதே மணிகண்டன்- லாவண்யா பழகி வந்துள்ளனர், இருவருக்கும் வேறொரு நபர்களுடன் திருமணமாகி ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

நாளடைவில் இருவரும் நெருங்கி பழக, இதை தெரிந்து கொண்ட மணிகண்டனின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். லாவண்யாவும் கணவருடன் சண்டையிட்டு தனியாக வசிக்கத் தொடங்கினார், இருவரும் கணவன்- மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்த மணிகண்டன் துன்புறுத்தி வந்துள்ளார், சம்பவ தினத்தன்று குழந்தை மணிகண்டனின் செல்போனை தண்ணீரில் போட்டுவிட, கோபமடைந்த மணிகண்டன் குழந்தை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனால் குழந்தையின் தலையில் பலமான அடி விழ, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து சிகிச்சை முடிந்து வரும்போது, குழந்தை வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

கொலையை மறைக்க அவன் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக லாவண்யா அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இதை அவர்களும் நம்பிவிட்டனர். ஆனால் பொலிசாரின் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது, இருவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த லண்டனை சேர்ந்த தமிழ்ச் சிறுமி!!

ஜோர்ஜியாவில்..

ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கராத்தே போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த சானுயா!!

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இலங்கையின் தமிழ் வீராங்கனையான சானுயா வெற்றிபெற்றுள்ளார்.

அதன்படி, இலங்கையின் தேசிய அணியில் இடம்பிடித்த சானுயா குறித்த கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிகொண்டார்.

சானுயாவை வழிநடத்திய ஆசிரியர் சென்சேய் விஜயராஜூக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்தவர்கள் தனது திறைமைகளால் இலங்கைக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத் தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவன் தமிழர்கள் மத்தியில் பெருமை சேர்த்தார். மேலும் ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி 10 கோடி சுருட்டிய மோசடி மன்னன் சிக்கினான்!!

ஐரோப்பிய நாடுகளில்..

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி மன்னன் மிரிஹான பொலிஸாரினால் நேற்றையதினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரால் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் சந்தேகநபருக்கு எதிராக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தில் மாத்திரம் 15க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையில் பணம் பெற்றுள்ளதுடன் அவர் கனடா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி ஏமாற்றியுளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளதுடன், சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயல்முறை பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகக் கூறி தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக 30 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபர் பல பிரதேசங்களில் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை மிரிஹான, மடிவெலவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மாப்பிள்ளையின் வயதை கேட்டு 23 வயது யுவதி எடுத்த விபரீத முடிவு!!

யுவதி..

பெற்றோர் திருமண ஏற்பட்டுகளை முன்னெடுத்த நிலையில் மாப்பிள்ளை பிடிக்காததால் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருகோணமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் இருபத்தி மூன்று வயதுடைய யுவதியே தன்னுயிரை மாய்துள்ளதாக த பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. யுவதியை விட பதினைந்து வயது மூத்த ஒருவரை திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடுகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை விரும்பாத யுவதி தற்கொலை செய்து கொண்டமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாட்டு அகதி முகாம் ஒன்றில் ஈழத்து தமிழ் குடும்ப பெண் பரிதாப மரணம்!!

இந்தோனேசியாவில்..

இந்தோனேசியாவின் அகதி முகாமில் வாழ்ந்து வந்த ஈழத் தமிழ் அகதிப் பெண் அசோக்குமார் லலிதா சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் (19.06.2023) உயிரழந்துள்ள செய்தி வேதனையளிப்பதாக இந்தியாவின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டிலே தாய் நிலத்திலிருந்து வெளியேறிய இந்த சகோதரி லலிதா புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கணவன் அசோக்குமார் மற்றும் இரு பிள்ளைகளுடன் இந்தோனேசியாவில் மெடான் நகரில், பெலவான் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், லலிதா நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டடிருந்த சூழலில் போதிய மருத்துவ வசதி இல்லாமலேயே அவர் உயிர் இழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

இறந்த இந்த சகோதரியின் 11 வயது மகன் தாயின் கடமைகளைச் செய்யும் போது, நான் 07 வயதிலே எனது தந்தையார் இறந்தபோது அவருக்கு நான் இறுதிக்கடமைகளை செய்த அனுபவத்தை என் கண்முன்னே வேதனையுடன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் இந்தோனேசியாவிலே நீண்ட காலமாக இந்துப் பாரம்பரியத்தோடு, இந்துக் கோயில்கள் வைத்து, இந்திய கலாச்சார பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களிடம் இறந்து போன இந்த அகதி சகோதரியின் உடலை, அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள நமது ஈழ உறவுகள் அணுகிய போது தங்களிடத்தில் ஒருபோதும் தகனம் செய்ய முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டார்களாம்.

இந்த நேரத்தில் தான் அங்கே பல தசாப்தங்களாக, அங்கே சகல உரிமைகளோடும் வசித்து வரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய சமூகத்தினர் மனித நேயத்தோடு இறந்த சகோதரியின் உடலை தங்களிடத்தில் தகனம் செய்வதற்கு அனுமதி கொடுத்து தங்கள் தோழமை உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழர்கள் தங்களுக்கிடையில் சாதி, மதம், பிரதேசவாதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பல்வேறு கூறுகளாக வன்ம உணர்வோடு பிரிந்து கிடப்பதால், தமிழ் மக்களுக்குள் இருக்கும் அறம் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இன்று இந்தோனேசியாவில் இடம் பெற்ற இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

உலகப் பந்தில் ஒரு தேசத்தை உருவாக்குவதற்குரிய தகுதி என்பது, ஒரு இனம் உலகில் எங்கு பரந்து வாழ்ந்தாலும் தர்ம சிந்தனையோடு, மற்றவர்களையும் தூக்கி விட வேண்டும் என்ற அடிப்படைப் பண்போடு வாழ வேண்டும். அப்போது தான் இந்த பூமிப் பந்தில் ஏனைய சமூகங்கள் போல் தமிழர்களும் சகல உரிமைகளோடு எழுந்து நிற்க முடியும்.

இறந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று இறைவனை பிரார்த்திப்பதோடு, சகோதரியின் இறப்பைத் தாங்க முடியாமல் தவிக்கும் சகோதரியின் கணவருக்கும், அவரின் பிள்ளைகளுக்கும், எனது குடும்பத்தின் சார்பிலும், உலகம் முழுவதும் உள்ள தமிழ் உறவுகள் சார்பிலும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த குழந்தைகளின் எதிர்காலத்தோடு இறைவனும், இயற்கையும் நல்ல மனிதர்களும் கூட இருக்க வேண்டும் என்றும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் பேரை வைத்து மேற்கொண்ட ஆராய்ச்சி : அதிர வைக்கும் ரிப்போர்ட்!!

பிரித்தானியாவில்..

உலக அளவில் மாரடைப்புகள் எந்தெந்த கிழமைகளில் வரும் என்பதைப் பற்றி பிரித்தானிய மருத்துவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வெளியான தகவல் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த தகவலின்படி திங்கட்கிழமைகளிலேயே அதிக அளவிலான மாரடைப்புகள் தான் ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள மாரடைப்பானது ஏன் திங்கட்கிழமைகளில் ஏற்படுகின்றது. அதற்கான காரணத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் காணப்படும். அதில் திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்குப் பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன.

பலருக்குப் பாடசாலை காலம் முதல் வாரத்தில் உள்ள 7 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை வகுப்பு எனப் பழக்கப்பட்டதால் கூட இவ்வாறு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் Monday Blues என்று சொல்வார்கள்.

இதை நாமும் சாதாரணமாகக் கடந்து சென்று இருப்போம். ஆனால், தற்போது இந்த விடயத்தில் தான் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பிரித்தானியாவின் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனமும், ரோயல் கல்லூரி ஆப் சர்ஜன்ஸ் கல்லூரியும் இணைந்து உலகம் முழுவதிலும் உள்ள 10,000 இதய நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினர். இதன் ஆய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அதிக அளவிலான நபர்களுக்குத் திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறையை முடித்துவிட்டு திங்கள்கிழமை பணிக்குச் செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்குக் காரணமாம்.

அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் இரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அலுவலக பணிகளுக்கும், சொந்த வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரித்தல், பணி அழுத்தத்தைச் சொந்த வாழ்க்கைக்குக் கொண்டு வராமல் இருத்தல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றைக் கடைப்பிடித்தால் இதுபோன்ற மாரடைப்புகளைத் தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் 8 மாத குழந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மணற்காடு பத்தழகுழியைச் சேர்ந்த தம்பதி எபி – ஜோன்சி.

இவர்களது 8 மாத ஆண் குழந்தை ஜோஷ். எபி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது குழந்தை ஜோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவமனையில் ஜோஷ் அனுமதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தைக்கு ஊசி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் குழந்தை திடீரென மூச்சுவிட முடியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட தாய் ஜோன்சி அலறியுள்ளார். உடனே பணியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள், நர்ஸுகள் வந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தையை காப்பற்ற முடியவில்லை.

குழந்தைக்கு அளிக்கப்பட்ட Infliximab எனும் அந்த ஊசியை செலுத்தினால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தெரிந்தே தான் மருத்துவர்கள் குழந்தையின் உடலில் கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் ஊசி செலுத்தியுள்ளனர் என குழந்தையின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், மருத்துவமனை மீது சுகாதார அமைச்சரிடம் புகாரும் அளித்துள்ளனர். ஆனால், குழந்தைக்கு கடுமையான இதய நோய் இருந்ததாகவும், மருத்துவமனையில் எந்த மருத்துவக் கோளாறும் இல்லை என்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அக்காவுக்கு பாலியல் தொல்லை… தட்டிக்கேட்ட தம்பி உயிரோடு எரிப்பு!!

ஆந்திராவில்..

அக்காவை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட தம்பி எரித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத்.

இவர் அங்குள்ள ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரில் அக்கா அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அமர்நாத்தின் அக்காவை அதே பகுதியை இருந்த வெங்கடேஷ் (வயது 23) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் மெசேஜ் மூலம் தொடர்ந்து ஆபாசமாக பேசிவந்துள்ளார். அக்காவின் மொபைலை பார்த்த அமர்நாத்துக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. அவர் தனது வீட்டாரிடம் இதுகுறித்து கூறிய நிலையில், அவர்கள் வெங்கடேஷை எச்சரித்துள்ளனர்.

இதனால் வெங்கடேஷ் அமர்நாத்தின் மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளார். இந்த நிலையில்ம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமர்நாத் சைக்கிளில் வெளியே சென்றபோதுபோது வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் அமர்நாத்தை வழிமறைத்து அவரின் கைகளை கட்டி, வாயை பொத்தியுள்ளார்.

மேலும் அங்கிருந்த தார்பாயில் அவரை சுருட்டி, தான் கொண்டுவந்த பெட்ரோலை வைத்து அமர்நாத்தை உயிரோடு எரித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அமர்நாத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் 90 சதவீத காயங்களோடு அமர்நாத் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் வெங்கடேஷ் மற்றும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 25 நாட்கள்.. கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் எடுத்த விபரீத முடிவு!!

தஞ்சாவூரில்..

பட்டுக்கோட்டை அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில், கணவன், மனைவி இருவரும் அடுத்தடுத்த நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நாட்டுச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(28). பிரிண்டிங் பிரஸ்சில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுவிதா(22). இருவருக்கும் கடந்தமே 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, சதீஷ் வீட்டில் தம்பதியர் வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வேலையில் இருந்த சதீஷை செல்போனில் தொடர்பு கொண்ட சுவிதா, உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால், சதீஷ் வேலையை விட்டுவிட்டு, நினைத்த நேரத்தில் வீட்டுக்கு வரமுடியாது எனக் கூறிவிட்டு, வேலையைத் தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, பிற்பகல் 3.45 மணியளவில் சதீஷை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட சுவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறிவிட்டு, வீடியோ அழைப்பை துண்டிக்காமலேயே தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பதறிப்போன சதீஷ் உடனடியாக வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, கயிற்றில் தொங்கிய நிலையில் இருந்த சுவிதாவை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சுவிதா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, சோகமாக இருந்த சதீஷ் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரது நண்பர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் இருந்து சதீஷ் வெளியேறினார். பின்னர், வீட்டுக்குச் சென்று, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரின் சடலங்களையும் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ( பொறுப்பு ) இலக்கியாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

கனடா விசா மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கனடா விசா மோசடி..

கனடாவில் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெருந்தொகை கட்டணத்திற்கு போலி விசாக்களை வழங்கும் முகவர்களினால் இந்தநிலை உருவாகிறது.

எனவே இதுபோன்ற மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்குமாறு விஎப்எஸ் குளோபல் (VFS GLOBAL) நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 240 நாடுகள் இந்திய மாணவர்களை உயர்கல்விக்காக சேர்த்துக்கொண்டுள்ளன.

பெருமளவிலான இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி கற்க முன்வருவதால், விசாக்களின் தேவை இதுவரை அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்திய மாணவர்கள் பலர் தங்கள் வெளிநாட்டுக் கனவுகளை நனவாக்க, போலி முகவர்களின் வலையில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை மாணவ வீசாக்களுக்கான தேவை பொதுவாக மே மாதத்தின் மத்தியில் தொடங்கி செப்டம்பர் வரை நீடித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் 2022ல் 7.5 லட்சத்தை எட்டியுள்ளதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா உறுதியளிக்கப்பட்ட ஒரு முடிவை கொண்டு தங்களை விசா சேவை வழங்குநர்களாகக் காட்டிக்கொள்ளும் மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 30,000 முதல் 55,000 ரூபாய்க்கு ஈடாக டெல்லியைச் சேர்ந்த இரண்டு முகவர்கள் மூலம் போலி ஆவணங்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விஎப்எஸ் குளோபல்(VFS Global) நிறுவனத்தின் முத்திரையை போலியாக தயாரித்து ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்தமை விசாரணையில் தெரியவந்தது. எனவே இது போன்ற மோசடியான செயல்களிலிருந்து சற்று விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தில் இளம் யுவதிகள் செய்த மோசமான செயல்.. விசாரணையில் வெளியான தகவல்.!!

கண்டியில்..

கண்டியிலிருந்து அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் பெண்ணொருவரின் தங்க நகையை சூட்சுமமாக திருடிய மூன்று இளம் யுவதிகள் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று யுவதிகளும் அம்பிட்டிய நோக்கி பயணித்த பேருந்தில் ஏறி ரது பொக்குவா சந்திக்கு செல்வதற்கு இரண்டு கிலோ மீற்றருக்கு முன்னதாக, அங்கு பயணித்த பெண்ணொருவர் கழுத்தில் தங்க நகை இல்லாததைக் கண்டு பேருந்தில் இருந்த சக பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து எவரும் வெளியேற அனுமதிக்காது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் பேருந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மூன்று யுவதிகளை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, ​​யுவதி ஒருவரின் நாடாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க சங்கிலியை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பேருந்தில் பயணித்த 18-22 வயதுடைய மூன்று யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தங்க நகையினை பயணியின் கழுத்திலிருந்து கழற்றிய போது இரு யுவதிகள் குடைகளாலும் கைப்பைகளாலும் மூடியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட யுவதிகள் புத்தளம், திருகோணமலை மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸாரிடமிருந்தும் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய மாணவன்!!

ஹட்டனில்..

ஹட்டன் தொடருந்து நிலையத்தில் தனிமையில் இருந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரை இன்று(19.06.2023) அதிகாலை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

தந்தை மற்றும் தாயாரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால் குறித்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற இரவு தபால் தொடருந்தில் பயணித்த அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் அம்பர் என்ற பாடசாலை மாணவன் திங்கட்கிழமை அதிகாலை ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இறங்கி நின்றபோதே பொலிஸாரின் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளார்.

தனது பெற்றோர் அநுராதபுரத்தில் வசிப்பதாகவும், தனது குடும்பத்தில் மூத்த சகோதரனும் சகோதரியும் இருப்பதாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து தான் பாடசாலை கல்வியை பெற்றதாகவும், 10 ஆம் ஆண்டு வரை கல்வி கற்கும் போது பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் விபரீத முடிவெடுத்த பட்டதாரி இளைஞன்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் பட்டதாரி இளைஞன் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் (18/06/2023) இடம்பெற்றறுள்ளதாக தெரியவருகின்றது.

சம்பவத்தில் முல்லைத்தீவு – குமுளமுனை பகுதியில் வசிக்கும் சதாசிவம் முரளிதரன் என்ற 28 வயது பட்டதாரி இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2022 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊஞ்சல் ஆடச்சென்ற சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. படுகாயமடைந்த தந்தை!!

தங்காலையில்..

தங்காலையில் சிறுமி ஒருவர் பாதுகாப்பற்ற முறையில் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தங்காலை நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெவிந்தி யஹாரா தேவ்மினி என்ற 9 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி நேற்று காலை (18) தனது தந்தையுடன் வீட்டில் உள்ள கொங்கிரீட் கம்பத்தில் ஊஞ்சல் ஆடச்சென்ற போதே இச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தந்தை படுகாயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.