கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய ரயில்கள்… 261 பேர் பலி… 900 பேர் படுகாயம்!!

சென்னையில்..

நேற்று அடுத்தடுத்து மூன்று ரயில்கள் தொடர்ந்து மோதிக் கொண்டதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் மூன்று ரயில்கள் மருத்துவ உபகரணங்களுடன் ஒடிசா விரைகிறது. மீட்பு பணிகள் ட் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

நேற்று வழக்கம் போல கொல்கத்தாவில் இருந்து, மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே தினசரி இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென, தண்டவாளத்தில் இருந்து வெளியேறி, பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தெரிகிறது.

இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அறியப்பட்டிருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் துரதிர்ஷ்டவசமாக தடம் புரண்டன.

புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைப்பெற்றதால் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரயிலுடன் மோதி நின்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்தை ஏற்படுத்திய நிலையில், சற்று நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இந்த இரு ரயில்களின் மீது மோதியதில், அந்த ரயிலும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் 261 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக 50 ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்பு பணிகள் நடைப்பெற்றன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அவசர கட்டுப்பாட்டு அறை எண், +91 6782 262 286, அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் (பாலசோர்) +91 6782 262 286 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து இன்று கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஒடிசா விரைந்துள்ளனர்.

வவுனியாவில் தமது நியமனங்களை வழங்ககோரி செயற்திட்ட உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்களை உடனடியாக மீள வழங்குமாறு கோரி வடமாகாண செயற்திட்ட உதவியாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.06) காலை ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுசந்தியை அடைந்து அங்கிருந்து வவுனியா, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உப அலுவலகம் வரை சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், நல்லாட்சி அரசாங்கம் 2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் மூலம் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

பிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன. பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது.

நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் எமது கடமைகளை தொடர்புடைய அலுவலகங்களில் நாம் ஏற்றுக்கொண்டோம்.

இந்தச்சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதால், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது.

அதற்கமைய நாம் பணியிலிருந்து ஒதுங்கியிருந்தோம். தேர்தல் முடிவடையும் வரை காத்திருந்தோம். அதன் பின்னர் மீண்டும் பணிகளை பொறுப்பேற்க சென்ற போது எம்மை சேவையில் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.

எங்கள் நியமனங்கள் நிதி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.

நான்கு வருடங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். தற்போதைய ஜனாதிபதியே அப்போது பிரதமராக இருந்தார். தற்போது வேலையில்லாமையால் நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.

எனவே, இந்த அரசு எமக்கு நியமனம் வழங்குவீர்களா, இல்லையா என்பதையாவது உறுதியாக கூறும்படி கேட்டு நிற்கின்றோம். எமக்கு நீதி கிடைக்காது விடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

குறித்த பேரணியில் நியமனம் இடைநிறுத்தப்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநெச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தை சேர்ந்த செயற்திட்ட உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

புகாரளித்த மனைவி கொலை… தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நடந்தது என்ன?

கேரளாவில்..

தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன தம்பதியினர் வரை இடம்பெற்றிருந்தனர்.

இந்த வழக்கை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தவர் கோட்டயம் கறுக்கச்சால் பகுதியைச் சேர்ந்த ஜூபி ஜேக்கப் (28) என்ற இளம்பெண்தான். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜூபி ஜேக்கப் போலீஸில் புகாரளித்தார்.

அதில், தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துதான் பெரிய நெட்வொர்க்கை போலீஸார் சுற்றிவளைத்தனர்.

இந்த வழக்கைத் தொடர்ந்து புகாரளித்த இளம்பெண் ஜூபி ஜேக்கப் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ஜூபி ஜேக்கப் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரின் கணவர் ஷினோ மேத்யூ இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என ஜூபி ஜேக்கப்பின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜூபி ஜேக்கப்பின் கணவர் ஷினோ மேத்யூவை போலீஸார் தேடிச் சென்றபோது அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஷினோ மேத்யூ சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். பார்ட்னர் ஸ்வாபிங் முறைக்கு அடிமையான கணவன், அவரால் பாதிக்கப்பட்ட மனைவி என இருவரின் உயிரும் பறிபோன சோக சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.

திருமணத்தன்று காணாமல் போன மணப்பெண்.. 13 நாட்கள் மண்டபத்திலே காத்திருந்த மணமகன்!!

ராஜஸ்தானில்..

ராஜஸ்தானில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகன் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில், 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மணமகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மணமகள் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், தான் வீட்டை விட்டு ஓடியிருக்கிறது என தெரிய வந்துள்ளது.

இதனைக் கேட்டு மனமுடைந்த மணமகன், எப்படியும் மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில், மண்டபத்திலேயே காத்திருக்கிறார், ஆனால் மணபெண்ணோ வந்தபாடில்லை.

இதனிடையே மணமகனின் உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மணமகன் மண்டபத்தை விட்டு வரவில்லை. மேலும் தொடர்ந்து 13 நாட்கள் மணமகன் திருமண தலைப்பாகையை கழற்றாமல் கூட மணமகளுக்காக காத்திருந்திருக்கிறார்.

இந்நிலையில் மணமகளை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிஸார், மணமகளை தேடி பிடித்து மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் சமாதானம் அடைந்து மணமகன் காத்திருந்த அதே மண்டபத்தில்,அ மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மரத்தின் மீது மோதிய கார்.. தீ பிடித்து எரிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி தீ பிடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலிஸார் தீயை அணைத்து காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரில் இருந்தவர்கள் உடல் கருகிய நிலையிலிருந்தனர். இதையடுத்து அவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி உட்பட 4 பேர் திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்!!

உலக சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,450 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,750 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று (02.06) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்க பவுனின் விலை 147,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை 152,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்க பவுனின் விலை 5,600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது. இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க பவுன் இன்றைய தினம் 159,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 வயது மாணவி கொலை : காதல் விவகாரத்தால் ஆத்திரமுற்ற அண்ணன் வெறியாட்டம்!!

பியகமவில்..

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று (01.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா என்ற 18 வயது உயர்தர வகுப்பு மாணவி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் சில நாட்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரமுற்ற மாணவியின் மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சித்திரவதையைத் தனது காதலனுக்குக் ஹிருணிகா தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தியுள்ளார். கடும் கோபமடைந்த ஹிருணிகாவின் காதலன், ஹிருணிகாவின் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹிருணிகாவின் மூத்த சகோதரன், காதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சகோதரியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உடன்படாத நிலையில், கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து வெறியாட்டம் புரிந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிருணிகாவை, அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறிவிழுந்த சாரதியால் தறிகெட்டு ஓடிய பேருந்து : பயணிகள் உயிரை காத்த இராணுவ வீரருக்கு பாராட்டு!!

கண்டியில்..

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார்.

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸில் பயணித்த இளைஞன் நந்தன யசரத்ன தடுத்து நிறுத்தி பயணிகளினுயிரை காப்பாற்றியிருந்தார்.

இலங்கையின் நான்காவது காலாட்படையின் கோப்ரல் கே.எம்.பி.ஆர்.கே.எல் கருணாரத்ன என்ற கோப்ரலே இவ்வாறு பயணிகளின் உயிரை காப்பற்றி பாராட்டைப் பெற்றவராவார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஆலோசனையின் பேரில், குறித்த கோப்ரல் வியாழக்கிழமை (01) இராணுவத் தளபதியின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, இராணுவத் தளபதியினால் அவருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.

உடுதும்பர பிரதேசத்திலிருந்து குறித்த பஸ் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், வளைவில் திரும்பும் போது சாரதியின் ஆசனத்திலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டதில், பஸ் சாரதியின்றி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

இந்நிலையில், அந்த பஸ்ஸில் பயணித்த இராணுவ கோப்ரல் துரிதமாக செயற்பட்டு சாரதி இருக்கைக்குச் சென்று பெரும் பிரயத்தனத்தின் பின்னர் பஸ்ஸை நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்த உழவு இயந்திரம்!!

புங்குடுதீவில்..

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் பாலத்திலிருந்து உழவு இயந்திரமொன்று சரிந்து கடலில் வீழ்ந்துள்ளது . இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

புங்குடுதீவு மக்களின் நிதியில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால் கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றதாக சமூக ஆர்வலகள் கூறுகின்றனர்.

நீண்டகாலமாக இலங்கையின் நீளமான கடற்பாதையாக புங்குடுதீவு வாணர் பாலம் காணப்படுகின்றது . மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்பாலத்தினை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்நிதி ஒதுக்கீடு மீளப்பெறப்பட்டு புனரமைப்பு பணி திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் முப்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சராக குப்பை கொட்டுகின்ற டக்ளஸ் தேவானந்த இதுகுறித்து எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தீவக மக்களின் வாக்குகளால் 1994 ல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிய டக்ளஸ் தேவானந்த, தனக்கு வாக்களித்த மக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறைகிறதா?

கையடக்க தொலைபேசி..

நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறிப்பாக கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.

இதற்கமைய 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த பொருட்களின் மொத்த மதிப்புக்கான பண வைப்பு வரம்பை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதன்போது இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கைத்தொலைபேசிகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்து காணப்பட்ட நிலையில் விரைவில் அவற்றின் விலைகள் மீண்டும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் வியப்பை ஏற்படுத்திய பிரபல அரசியல்வாதியின் மகளின் திருமணம்!!

தென்னிலங்கையில்..

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.

எனினும் இந்த திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும். நீண்ட காதல் உறவுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட அமாவுக்கும் குஷானுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலமானவர்கள் தமது திருமணங்கள் வெகு விமர்சையாக அரசியல்வாதிகளுடன் இடம்பெறும். ஆனால் பிரபல அரசியல்வாதியான சம்பிக்கவின் வீட்டுத் திருமணத்தில் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமை குறித்து அதிகம் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு நகர மத்தியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

எரிபொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளுக்கான முன்கூட்டிய பதிவினை மேற்கொள்ளமையினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலையிடம் விளையாடி கையை இழந்த நபர்.. வைரலாகும் வீடியோ!!

முதலை..

ACசமூக வலைதளங்களில் காலக்கட்டத்தில் நாம் இப்போது உள்ளோம். செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு கிடைப்பது எளிதாகிறது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இப்படியான சூழலில் நாள்தோறும் பல்வேறு வகையான வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு முதலை தொடர்பான நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்கிறார். அந்த நபர் அந்த முதலையை கத்தியால் தாக்க முயற்சிக்கிறார்.

இதனை உணர்ந்த முதலை, அந்த நபர் முதலையை தாக்க வரும்போது அது, அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அவர் கையை கவ்வி பிடித்துக்கொள்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் துடிக்கிறார்.

இந்த வீடியோ @crazyclipsonly என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மனிதன் தாக்கினான்…முதலை பதிலடி கொடுத்தது’ என்று இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு பயனர், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என கமெண்ட் செய்துள்ளார்.

ஆண் வேடமிட்டு மாமியாரைக் கொலைசெய்த மருமகள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

நெல்லையில்..

நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.

அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமலெட்சுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீதாராமலெட்சுமியின் மகன் ராமசாமிக்குத் திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி மகாலட்சுமி. ராமசாமி-மகாலட்சுமி தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

மூத்த மகனுக்கு ஐந்து வயதும், இளைய மகனுக்கு 10 மாதமும் ஆகிறது. திருமணமானதிலிருந்தே மகாலட்சுமிக்கும் அவருடைய மாமியாருக்குமிடையே சுமுகமான உறவு இருக்கவில்லை என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமியார்-மருமகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் ராமசாமி தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர்களைத் தனியாக அனுப்ப விரும்பாத சீதாராமலெட்சுமி, தனது வீட்டின் பின்பக்கத்தில் தனியாக வீடு கட்டிக் கொடுத்து அதில் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

அருகருகே மாமியார்-மருமகள் வசித்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. அதனால் ஆத்திரத்திலிருந்த மகாலட்சுமி, ஒருகட்டத்தில் தன்னுடைய மாமியாரைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என நினைத்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அண்மையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், மாமியார் சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்த மருமகள் மகாலட்சுமி, தனக்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்திருக்கிறார். அதனால் அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்.

40 முறை கத்தியால் குத்தி, கல்லைப் போட்டு சிறுமி படுகொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்லவே அச்சத்தில் உள்ளனர்.

நிர்பயா விவகாரம் தொடங்கி துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நாய்களுக்கு போட்ட கொடூர ஷ்ரத்தா கொலை வரை திகிலில் உறைய வைக்கிறது. அந்த வரிசையில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது சாஹல் என்ற 20 வயது காதலன், சரமாரியாக கத்தியால் 40 முதல் 50 முறை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அத்துடன் நில்லாமல் ஆத்திரத்தில் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய எடுத்து மீது பலமுறை போட்டு சிறுமியின் தலையை நொறுக்கினார்.

இந்த கொடூர கொலையில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அந்தப்பக்கம் சென்றவர்கள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை. அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை.

அந்த இளைஞரை பார்த்து பயந்து பின்வாங்கினர். ஆனால் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில் “நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர்,

ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிக் கொண்டு வருகிறது ” என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் இந்த கொடூர சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“டெல்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகி விட்டனர், காவல்துறைக்கு பயம் இல்லை. எல்ஜி சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கூறி உள்ளார்.

வவுனியாவில் 5 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை 4 இலட்சத்தை கடந்தது : மின் துண்டிப்பு!!

வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 55 கடைத் தொகுதிகளும் உள்ளன.

குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாது உள்ள நிலையில் அதன் மின்சாரப் பட்டியலுக்கான கொடுப்பனவு நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

தனித்தனி கடைகளுக்குமான மின்சாரப் பட்டியல்களின் ஒருமித்த தொகையே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் கதரணமாக அங்கு கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பொருளாதார மத்திய நிலையமானது திறக்கப்படாத போதும் கோவிட் தொற்று காலப்பகுதியில் அது சிகிச்சை நிலையமாக குறிப்பிட்ட சில மாதங்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் கேட்ட போது, குறித்த பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாத போதும் கொவிட் தொற்றாளர்களின் பராமரிப்பு நிலையமாக தொழிற்பட்டது.

ஆனால் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்கு முன் மின்கட்டண நிலுவை செலுத்தி மீள் மின்னிணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.