அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்கொள்ள 95 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஏமாந்துள்ளார் வெளிநாட்டிலிலுள்ள பெண் ஒருவர் மட்டக்களப்பு பெண்ணுடன் சில காலம் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பெறுமதியான பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் கேட்டுள்ளார்.

அதனை நம்பிய இலங்கை பெண் முதற்கட்டமாக 95 ஆயிரம் ரூபாவை வெளிநாட்டு பெண் வழங்கிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.அதன் பின்னர் குறித்த வெளிநாட்டு பெண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் போதே அவர் ஏமாற்றப்பட்டுள்ள விடயத்தை அறிந்துள்ளார். அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட குழப்பநிலை!!

வாதுவவில்..

வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.

தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த 19 வயதுடைய இளைஞரின் இறுதிக்கிரியைகள் நேற்று வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.

அங்கு சுமார் 50 மோட்டார் சைக்கிள்களில் ஆர்பாட்டமாக வந்து இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போவதாக கூறி ஆபத்தான சாகச செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

பலர் அதை கோபத்துடன் பார்த்த போதிலும் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குறித்த தந்தையை, ஏறக்குறைய 30 இளைஞர்கள் கொண்ட குழு ஹெல்மெட்களால் தாக்கியதுடன் எட்டி உதைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.பின்னர் அங்கு வந்த பலர் அவரை தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றிய நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐயோ என்னை காப்பாத்துங்க… பைப்பில் தொங்கியபடி அதிகாலையில் போலீஸுக்கு போன் செய்த சிறுமி!!

ஆந்திர பிரதேசத்தில்..

தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் பகுதியில் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்து தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார்.

வேறு எந்த தகவலும் கூறாத அந்த சிறுமியை போலிசார் அலைந்து தேடி வந்தனர். இந்த சூழலில், அவர் போன் செய்த எண் உள்ளிட்டவையை வைத்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை போலிசார் அரிந்துகொண்டனர்.

பின்னர் சிறுமி இருக்கும் இடமான கோதாவரி ஆற்றின் மேல் இருக்கும் பாலத்தில் தேடினர். அப்போது சிறுமி அந்த பாலத்தில் பிளாஸ்டிக் பைப் ஒன்றை பிடித்தவாறு தொங்கி கொண்டிருந்தார்.

இதனைக் கண்டதும் அதிர்ந்துபோன போலிசார் உடனடியாக சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் நடந்தவற்றை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமி தான் பைப்பில் தொங்கியதற்கான காரணத்தை குறித்தும், தனது விவரங்களையும் கூறினார். அதாவது கீர்த்தனா என்ற 13 சிறுமி, தனது தாய் பப்பாலா சுஹாசினி (36) மற்றும் ஒரு வயதுடைய ஜெர்சி என்ற தங்கை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இவர்களுடன் சிறுமியின் தாயின் ஆண் நண்பரான உலவா சுரேஷ் என்ற நபரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அனைவரும் காரில் ராஜமகேந்திரவரம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ரவுலாபாலம் மேம்பாலம் அருகே கார் வந்தபோது செல்பி எடுக்கலாம் என்று கூறி அந்த நபர் அனைவரையும் கீழே இறங்க கூறியிருக்கிறார். அப்போது பாலத்தின் அருகே செல்பி எடுக்க நின்றபோது, அங்கே இருந்து 1 வயது குழந்தை உட்பட 3 பேரையும் பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் சிறுமி மட்டும், அந்த பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப் ஒன்றை இறுக்கமாக பற்றிக்கொண்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாரும் வரவில்லை என்பதால் தனது ஆடையில் செல்போன் இருப்பதாய் உணர்ந்த சிறுமி உடனே அவசர எண் ‘100’-ஐ தொடர்புகொண்டுள்ளார்.

இதையடுத்தே போலீஸ் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியின் வாக்குமூலத்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் 1 வயது குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய உலவா சுரேஷையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பண்ணை எவருக்கும் இல்லை : வடக்கு ஆளுநர் திட்டவட்டம்!!

வவுனியாவில்..

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை வேறுதேவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுனர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காதலன் மறுத்ததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : மலையகத்தில் நடந்த சோகம்!!

கண்டியில்..

காதலன் வரமறுத்ததால் ரயிலின் முன்பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கண்டியிலிருந்து இன்று (09) காலை பதுளை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பேய்து பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை – டயகம பிரதேசத்தில் வசித்து வந்த 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். எனினும் , அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெண்ணின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : புலனாய்வுத் துறை உத்தியோகத்தர் மீதும் தாக்க முயற்சி!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்கச் சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் வீதியில் நின்ற சில இளைஞர்கள் மீது மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த சிலர் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதுடன், சிறிது நேரம் அப்பகுதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.

இதனால் அவ் வீதியில் பயணித்த தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று வந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் வீதியோரத்தில் அச்சத்தில் நின்றுள்ளனர்.

இதன்போது அப் பகுதிக்கு வந்த புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இளைஞர்களை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவர் தான் புலனாய்வுத்துறை என்பதை உறுதிப்படுத்திய போதும் அவர் மீது வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்த போது வாள்களுடன் நின்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மொடலிங்கில் ஈடுபட்ட இலங்கைப் பெண் மாயம் : மண்டபம் போலீஸார் தீவிர விசாரணை!!

ராமேசுவரத்தில்..

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 270 பேரை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்.22-ம் தேதி இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரதீப் (32), அவரது மனைவி கஸ்தூரி (29) ஆகியோர் தங்களது 2 குழந்தைகளுடன் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், பிரதீப் மண்டபம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்: எனது மனைவி கஸ்தூரி `மாடலிங்’கில் நாட்டம் கொண்டவர். இதற்காக சென்னை, திருச்சி போன்ற ஊர்களுக்கு சென்று வருவார்.

ஜூலை 27-ம் தேதி `மாடலிங்’ படப்பிடிப்புக்காக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு அவரை ரயிலில் அனுப்பி வைத்தேன். சென்னை சென்ற முதல் 2 நாட்கள் மனைவியிடம் பேசினேன். அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

சென்னை சென்று பார்த்த போது மனைவி கொடுத்த முகவரி போலி எனத் தெரியவந்தது. எனவே, அவரை கண்டு பிடித்துத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் மண்டபம் முகாமிலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆனால், இலங்கை அகதிப் பெண் அடிக்கடி வெளியூர் சென்று வந்தது குறித்து உளவுத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் மாணவனின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.இந்த நிலையில் மாணவனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.

இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.

அந்தவகையில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது தொடர்பில் மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.பாடசாலை நிர்வாகத்தினர் குறித்த விடயத்தினை வெளியே கசிய விடாமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

மேலும் மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.

யாழில் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் : கதறும் தாய்!!

யாழில்..

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ் விடயம் தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்ள சிறுமி பணிபுரிந்த வீடு மற்றும் சிறுமியில் வீட்டுக்கு சென்று தகவலை சேகரித்துள்ளனர்.

பல முயற்சிகள் எடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரது ஒத்துழைப்பு எமக்கு கிடைக்காததால் முழுமையாக தகவலை வெளியிட முடியவில்லை, இருப்பினும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஊரவர்கள் இந்த சிறுமிக்கு நடந்தது அநீதி அதற்கு நீதி கிடைக்கவேண்டும் என தமது ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர்.

சிறுமியை வீட்டுப்பணிக்கு இருத்தியது ஏன்? சிறுமிக்கு நடந்த அநீதியை பெற்றோர் கண்டுகொள்ளாதது ஏன்? பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் சடலத்தை எதற்காக எரித்தார்கள்? என்ற பல கேள்விகளுடன் சமூக வலைத்தளங்களிலும் பலர் சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.

இதனடிப்படையில் பொதுமக்களின் ஆதங்கங்களையும் கேள்விகளையும் ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.முதலில் குறித்த சிறுமியின் குடும்ப நிலவரம் தொடர்பில் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, முதலிகோயிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா. இவர் கடந்த 2006.11.03 இல் பிறந்தவர். சிறுமியின் தாய் தற்போது 2வது திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் 2 பிள்ளைகள் உள்ளனர். சிறுமியின் குடும்பம் சிறிய குடிசை வீடொன்றில் வசிக்கிறார்கள். தாயாரின் இரண்டாம் தார கணவன் கூலி வேலை செய்து வருகிறார்.

குறித்த உயிரிழந்த சிறுமி, கடந்த 2021ஆம் ஆண்டு பாடசாலையிலிருந்து இடைவிலகி தனது 14 வயதிலிருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் அறிய கிடைத்துள்ளது.

இந்த சிறுமி கடந்த 4 மாதங்களாக கல்வியங்காட்டில் உள்ள வீட்டில் பணிபுரிந்துள்ளார். மாதாந்தம் ரூ.25,000 ரூபா சம்பளம் பேசப்பட்டுள்ளது. சிறுமிக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் வீதமே கொடுக்கப்பட்டுள்ளது.

மீதிப்பணத்தை வீட்டு உரிமையாளர்கள் பிடித்து வைத்துள்ளனர். மீதிப்பணத்தில் சிறுமிக்கு சங்கிலியொன்று செய்து கொடுக்குமாறு சிறுமியின் தாயாரே தம்மிடம் கேட்டதாக வீட்டு உரிமையாளர்கள் மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் தாயார் கூறுகையில்,வீட்டின் வறுமை நிலை காரணமாக எனது மகளை வேலைக்கு அனுப்பிவைத்தேன். எனவும் தனது மகளை சித்திரை மாதம் 16ம் திகதி வீட்டு வேலைக்கென அழைத்து சென்றனர்.

அதன் பின்னர் நான் போய் பார்த்து வந்திருந்தேன் என்றார்.மாதத்தில் ஒருநாள் 10ஆம் திகதிகளில் மகளுடன் குடும்பத்தினரை தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் குடும்பத்திடமும் தொலைபேசியில்லை. சிறுமியிடமும் தொலைபேசியில்லை. குறிப்பிட்ட நாளில் சிறுமியின் குடும்பத்தினரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வீட்டிலுள்ள ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு சிறுமி மிஸ்ட் கோல் ஏற்படுத்திய பின்னர் குடும்பத்தினர் அழைப்பேற்படுத்தி பேசுவார்கள்.

கடந்த இரண்டு மாதங்களாக ஆசிரியர் ஒருவரின் தொலைபேசி மூலம் மகளுடன் கதைத்ததாகவும் அதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி மகள் தன்னுடன் கதைப்பார் எனவும் தாயார் குறிப்பிட்டார்.

இனி சிறுமியின் மரணம் தொடர்பில் தாயார் கூறியவற்றை பார்க்கையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுமியின் கால்கள் இரண்டும் தரையில் காணப்பட்டன. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் சிறுமியின் உயிரற்ற உடலின் கழுத்தில் தூக்கு மாட்டிய துணி காணப்பட்டது.

சிறுமியின் இரண்டு முழங்கால்களும் தரையில் முட்டிக் கொண்டிருந்தன. தமது மகளின் சடலமாக காணப்பட்ட போது, முழங்கால்கள் தரையில் ஊன்றியிருந்ததன் அடிப்படையில், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குறிப்பிட்டனர்.

கடந்த 23ம் திகதி தான் விறகு கட்டச் சென்ற இடத்தில் தனது தம்பி விறகு கட்டிய அக்காவிடம் தொலைபேசியில் சொன்னதன் பிற்பாடே தான் உடனடியாக பதறியவாறு ஓடிவந்ததுடன் அங்கு நின்றவர்களது உதவியோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்ற போது நான் பிள்ளையை பார்க்கவில்லை.

அதேவேளை அங்கிருந்த வீட்டுக்காரியிடம் ஏன் என்ன நடந்தது எனவும் எனக்கு உடனடியாகவே போனில் கூறியிருக்கலாமே என தான் கேட்டதற்கு ‘லூசுப் பெட்டை என்னவெல்லாம் செய்திருக்கால் தெரியுமோ என கூறியபோது என்ன லூசுபெட்டை என்கிறாய் என குறித்த வீட்டுக்காரியை பேசியதாக குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

என்ன நடந்தது என கூறுமாறு வீட்டுக்காரியிடம் சிறுமியின் தாய் வினவியபோது அவர்கள் வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை. அதேவேளை தாங்கள் விட்டுட்டு செல்லும் போது குறித்த சிறுமி பாண் சாப்பிட்டதாகவும் கூறினார்கள்.

அதேவேளை தன்னுடைய மகளின் தலையில் புழுதி படிந்திருந்தாகவும் அவர் உள்ளாடைகள் எதுவும் இல்லாமல் தனியே ஒருசட்டை மாத்திமே அணிந்த நிலையில் தனது மகளின் சடலத்தை பார்த்ததாகவும் வழமையாக தனது மகள் உள்ளாடைகள் இன்றி இருப்பதில்லை என்றும் உறுதிபட கூறுகின்றார்.

நடந்த சம்பவத்தை தனக்கு 3.30 தான் அறிவித்ததாகவும் அதற்கு முதல் இரு தடவை அழைப்பு எடுத்தும் சொல்லவில்லை எனவும் கூறியதற்கு வீட்டுக்கார பெண்மணி “தங்களுக்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே சொல்லவில்லை” எனவும் தெரிவித்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

மேலும், மகளில் சடலத்தை பெற்றுகொண்ட பின்னர் வழக்கு நடைபெறுவதால் சடலத்தை புதைக்கவேண்டுமா என மரணவிசாரணை அதிகாரியிடம் கேட்டபோது “வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை நீங்கள் விரும்பினால் சைவ முறைப்படி எரிக்கலாம்” என்று கூறியதாலே தான் தாம் எரித்ததாகவும் சிறுமியின் தாயாரும் மாமன்முறை உறவினரும் கூறுகின்றார்.

அதேவேளை இரண்டு இலட்சம் பணத்தை தாம் வாங்கியதாகவும் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும், மரணவிசாரணை அதிகாரி, “உயிரிழந்த பிள்ளையை எரிக்கப்போகின்றீர்களா தாக்கப்போகின்றீர்களா” என கேட்டபோது நாங்கள் சைவம் என்று கூறியதற்கு அப்படி என்றால் நீங்கள் சைவமுறைப்படி செய்யுங்கள் என தெரிவித்தார்.

அதேவேளை சைவமுறைப்படி செய்தால் வழக்காடலாமா என தனது மாமா கேட்டபோது வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை வழக்கு வழக்குத்தான் நீங்கள் உங்கள் பிள்ளையை விரும்பியபடி செய்யுமாறும் 85,000 பிள்ளை வேளை செய்த காசு, அதைவிட செத்த வீட்டிற்கென 2 இலட்சம் ரூபாவும் வேண்டித் தந்திருப்பதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார்.

தமது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே தயார் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி எல்லா றிப்போட்டையும் பதிவு செய்து முடிவடைந்த பின்னர் கூறியிருந்தார் நீங்கள் எனி சிறுமியை கொண்டுபோகலாம் என தெரிவித்தார்.

அதற்கு நாங்கள் சிறுமியை தாக்கப்போகின்றோம் என கூறியபோது, இல்லை நீங்கள் உங்கள் சமய முறைப்படி எரிக்கலாம் என தெரிவித்தார். அதன் பின்னரே நாம் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்திற்கு கொண்டு வந்து தகனம் செய்தோம் எனவும் மாமனார் தெரிவித்தார்.

இதேவேளை சிறுமி வேலை பார்த்த இடத்தில் வயது முதிர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களின் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வசிக்கின்றனர்.குறித்த வீடு வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது. இருப்பினும் தற்போது அங்கு குறித்த குடும்பம் வாடகை அடிப்படையில் குடியமர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சிறுமியின் மரணத்தின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளை அழைத்து சிறுமியை வேலைக்கு அனுப்பியது தொடர்பில் ஆராயுமாறு பணித்திருந்தார்.

அதேவேளை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சென்று கள ஆய்வை மேற்கொண்டிருந்த போதும், அவர்களுக்கு சிறுமியை பணிக்கு அமர்த்திய விடயம் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.இவ் விடயத்தை அறிந்த அயலவர்கள் யாராவது தமக்கு தகவல் தந்திருந்தால் உடனடியாக தாம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.இருப்பினும் இதுதொடர்பாக பொலிஸாரிடம் மேலதிக விடயங்கள் அறிய முற்பட்ட போது, விசாரணை முடிவடையும் வரை தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.எனினும், இந்த மரணம் தொடர்பில் செய்தி வெளிட்ட சில ஊடகங்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான நபர் அடித்துக்கொலை : வெளியான புதிய தகவல்!!

சுன்னாகத்தில்..

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியை அழைத்துச் சென்ற 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. குறித்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர்.

இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், படுகாயமடைந்த நிலையில் அந்த ஆண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இவ்வாறான நிலையில், தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தடயச் சான்றான, உயிரிழந்த நபரின் சாறத்தை எரித்த குற்றச்சாட்டின் கீழ் யுவதியின் அண்ணாவையும்  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார்.  அதன்பின்னர் உயிரிழந்தவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் கடத்தப்பட்ட தாயும் இரண்டு பிள்ளைகளும் : தென்னிலங்கையில் சினிமா பாணியில் சம்பவம்!!

தென்னிலங்கையில்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7 மற்றும் 15 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.

முதல் திருமணத்தில் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், சில காலம் வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்த பெண், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவர்கள் காலி தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தனர். எனினும் இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் பண்டாரகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் மற்றுமொரு நபருடன் காரில் வந்த சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளார்.​​

கலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கார் நிறுத்தப்பட்டவுடன், அந்த பெண் காருக்குள் இருந்து ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டுள்ளார்.அப்போது கலனிகம அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் சுஜீவ உடனடியாகச் செயற்பட்டு காரை நிறுத்தி சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காரை சோதனையிட்டபோது, ​​அதில் பெரிய கத்தி ஒன்றும் சிக்கியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்கலன் ஒன்றுடன் மோதிய தொடருந்து : முற்றாக ஸ்தம்பித்த போக்குவரத்து!!

வில்வத்தயில்..

வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று தொடருந்துடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக தொடருந்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.

தொடருந்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடருந்து சமிஞ்சை, மின்கம்பங்கள், தொடருந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதென என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தால், தொடருந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இளம் தம்பதி சுட்டுக்கொலை : பொலிஸாரிடம் தாய் வழங்கிய முக்கிய தகவல்கள்!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளம் தம்பதி கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் வசிக்கும் என்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா என்ற தம்பதியே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதி, கணவரின் தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், தனது மகன் தனது மருமகளை சுட்டுக் கொன்றபோது, ​​அயலவர்களிடம் உதவி பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே தாய் ஓடியதாகவும், வீடு திரும்பியபோது, ​​தனது மகனும் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மகன், மருமகள் மற்றும் நானும் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம். அன்றைய தினம் இரவு மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் இரத்த காயங்களுடன் கிடந்தார்.

மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விட்டதாகவும் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.நான் அயலவர்களை அழைப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டனர் ” என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலமே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.நீதவான் விசாரணைக்கு பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் கோர விபத்து : இளம் தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயங்களுடன் நோயாளர் காவுகை வாகனத்தில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 26 வயதுடைய மனைவி இடைவழியில் உயிரிழந்துள்ளார்.

இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த இளம் தம்பதியினர் அனுராதபுரம் – பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

77 வயதில் 9ம் வகுப்பு… 3 கி.மீ நடந்தே பள்ளி செல்லும் முதியவர்!!

மியான்மரில்..

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக்கொண்ட மிசோராம் முதியவர் ஒருவர் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மியான்மர் எல்லையில் கடந்த 1945-ல் குவாங்லெங் (Khuangleng) என்ற கிராமத்தில் பிறந்தவர் லால் ரிங்தாரா. தனது 2 வயதிலே தன்னுடைய தந்தையை இழந்தார். இதனால் தாய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தனது பள்ளி படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக் கொண்டார்.

அதன்பிறகு பல்வேறு பகுதிகளுக்கு தனது தாயோடு இடம்பெயர்ந்த இவர், 1995-ம் ஆண்டு மிசோராம் மாநிலம் ஹ்ருவைகான் (Hruaikawn) என்ற கிராமத்திற்கு வந்தார். பிறகு அங்கேயே தனது புதிய வாழ்க்கையை தொடங்கிய இவர், பாதுகாவலாராக பணிபுரிந்து வந்தார்.

இருப்பினும் தனது படிப்பை பற்றிய கனவுகள் இவருக்குள் இருந்துள்ளது. இதனால் தனக்கு 70 வயதை தாண்டிய பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஹ்ருவைகான் கிராமத்தில் இருக்கும் RMSA பள்ளியில் சேர்ந்தார். அங்கே தனது 5-ம் வகுப்பை முடித்த இவர், அந்த பள்ளியில் இருந்து வெளியேறினார்.

பின்னர் தனது படிப்பை தொடர எண்ணிய இவர், 8-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து மீண்டும் RMSA பள்ளியில் 9-ம் வகுப்புக்கு சேர்ந்தார். தற்போது இவருக்கு 78 வயதாகும் நிலையில், அவரது வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரம் வரை தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.

இதுகுறித்து முதியவர் லால் ரிங்தாரா கூறுகையில், தனக்கு மிசோ மொழியில் பேசவும், எழுதவும் தெரியும் எனவும், ஆனால் ஆங்கிலத்தில் எழுத பேச வேண்டும் என்று விருப்பபட்டதாகவும், அதற்காக பள்ளிக்கு சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதோடு ஆங்கிலம் படிக்க எழுத தெரிந்தால்தான் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றும், செய்திகளை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்றார். இது போன்ற ஒரு விசயத்தை ஊக்குவிப்பதில் தங்களுக்கு பெருமை என்றும், இதில் தாங்களும் ஒரு பங்காக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் அந்த பள்ளியின்ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக்கொண்ட மிசோராம் முதியவர் ஒருவர் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு நடந்த விபரீதம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் அருகே பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு கத்தி குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்கள் அதிகமாக காணப்படுகிறது.

அவ்வப்போது இந்த பழக்கவழக்கத்தால் சில உயிரிழப்புகளும் நிஅழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரிலும், அதித கஞ்சா போதையால் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கிரண் குமார், துர்கேஸ்வரி தம்பதி. துர்கேஸ்வரின் தங்கை வெளியூரில் இருப்பதால் அவர்களுடைய மகள்கள் இருவரும் துர்கேஸ்வரியின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கஞ்சா போதையில் தங்கை மகள்களிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்கேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் துர்க்கேஸ்வரி வீட்டின் முன்பு அளவுக்கு அதிகமான கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில் அமர்ந்திருந்த சண்முகம், மீண்டும் துர்கேஸ்வரியின் தங்கை மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்க முயன்றள்ளார். அப்போது துர்க்கேஸ்வரியின் தங்கை மகள்களின் நண்பர் வல்லரசு என்பவர் தடுக்க முயன்ற போது, சண்முகம் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் துர்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வல்லரசுயின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வல்லரசை கொலை செய்த சண்முகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா அடிக்க கூடாது என கூறியதன் காரணமாக தன்னை கொலை செய்த வந்த இடத்தில் தனது மகள்களின் அப்பாவி நண்பரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.