ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக பலி!!

தூத்துக்குடியில்..

அனுபவம், பக்குவம் வேறு படிப்பு வேறு. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அந்த காலத்து பழமொழி. நர்சிங் படித்த கல்லூரி மாணவி ஜலதோஷத்திற்காக வெந்நீரில் மாத்திரை போட்டு ஆவி பிடிக்க முகம் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்து மாத்திரைகளை பயன்படுத்துங்கள், சுய மருத்துவம் மிகப்பெரிய சிக்கலில் கொண்டு விட்டுவிடும் என மருத்துவர்கள் மாறி மாறி எடுத்துக் கூறி வருகின்றனர்..

இருந்தாலும் இளைய தலைமுறையின் அலட்சிய மனோபாவத்தால் விபரீதங்கள் விளைந்து விடுகின்றன. இதை பார்த்தாவது இனி வரும் இளசுகள் தம்மை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் சரிதான்.

தூத்துக்குடி மேல சேர்ந்த பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19வயது கௌசல்யா.

அதே பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு என சிரமப்பட்டு வந்த கௌசல்யா, அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிய கவுசல்யா, அதன்முன்பு வெந்நீரில் மருந்தைப் போட்டு ஆவிப் பிடித்துள்ளார். ஆவிப் பிடித்த அடுத்த நிமிடமே மயக்கமான கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனால் கவுசல்யா தன் முன்பாக இருந்த வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து மயங்கி விழுந்தார். கீழே விழுந்தும், வெந்நீர் பட்டும் அவர் காயமடைந்துள்ளார். இதனை பார்த்த கவுசல்யாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சளி பிரச்னைக்கு ஆவிப்பிடித்து மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 குழந்தைகளை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

திருச்சி..

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருபவர் 33 வயது மனோஜ்குமார். இவருடைய மனைவி 26 வயது ஷோபனா. இவர்களுக்கு 3 வயதில் தஷ்வன், 11 மாதமே ஆன கபிஷன் என இருக்குழந்தைகள்.

பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்தத்தொழிலை விட்டுவிட்டு தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள சாந்தி பர்னிச்சரில் பணிபுரிந்து வருகிறார்.

தொழிலில் நஷ்டமடைந்த பின் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையும், சச்சரவும் தொடர்ந்தது.

இந்நிலையில் பணி நிமித்தமாக மனோஜ் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.

மனைவி மற்றும் குழந்தைகள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை கண்டு மனோஜ் குமார் அலறிக் கூச்சலிட்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இச்சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்… ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தான் பாலியல் பலாத்காரங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என நினைத்தால், உத்தரப் பிரதேச மாநிலத்தில், பொள்ளாச்சி சம்பவங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அளவுக்கு சமூகத்தில் புரையோடி இருக்கிறது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பள்ளியில் வைத்து 10 வகுப்பு மாணவியைக் கதற கதற கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைச் செய்த சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. இது குறித்து எந்த விதமான கண்டனங்களும் இல்லாமல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்து, அதனுள்ளே பழைய செங்கோலை வைத்து சந்தோஷப்படுகிறோம்.

அதே டெல்லியின் இன்னொரு ஓரத்தில், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராடி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் சன் பீம் என்ற தனியார் பள்ளியின் முதல்வர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீவஸ்தாவாவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார்.

பள்ளியின் முதல்வர் அழைத்ததால், காலை 9 மணிக்கு மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

பதறிப் போன பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து கேட்ட போது பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தந்துள்ளனர்.

மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்தகறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தேகமடைந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அயோத்தி போலீசார் பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுபன் சிங் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொலைக் குற்றத்திற்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு!!

கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதன் பின் அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றம் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அரச சட்டவாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கரவண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோவதை தடவியல் பொலிசார் மன்றில் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால்,

முதலாம் சந்தேகநபருக்கு மரணதண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர்!!

திண்டுக்கல்லில்..

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் குடும்ப பிரச்சனையில் மனைவியை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மனைவி மாலதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து போதையில் மாலதியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .

இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி , மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார் .

மதியம் இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு வெகு நேரமாகிய வீட்டில் மின்விளக்குகள் எரியாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாலதி சடலமாக கிடந்திருக்கிறார். இதன் பின்னர்அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .

போலீசாரின் மேற்கட்ட விசாரணையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

பழனி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனையால் மனைவியின் தலைவியில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கிளிநொச்சியில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : கணவனுக்கு வலைவீச்சு!!

கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இளம் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இளம் மனைவியின் கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.

அதேவேளை தாக்குதலுக்குள்ளான பெண் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தவர் என கூறப்படும் நிலையில், பெண்ணின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புத்தேடி பணிப்பெண்களாக சென்று பல்வேறு காரணங்களால் இலங்கை திரும்ப முடியாது நிர்க்கதியாகியுள்ள பெண் தொழிலாளர்களை உடனடியாக இலங்கைக்கு திரும்பி கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு – கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (01.06) காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை அரசே வெளிநாடு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்,

அரச இலாபத்திற்காக பெண்களை விற்காதே, பெண்களை விலைக்கு வாங்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியில் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரை ஊடகங்களுக்கு வாசித்து காட்டியிருந்தனர். அதன் பிரதிகளை மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், அலி சப்ரி – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்,

பொது முகாமையாளர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெட்கத்தில் தலைகவிழ்ந்த சுட்டிக் குழந்தை.. 1000 கவலையை மறக்க வைக்கும் காட்சி!!

டுவிட்டரில்..

15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த தந்தையை பார்த்து மகள் வெட்கப்படும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்பொழுதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுவார்கள்.

அதிலும் அவர்களின் ரியாக்ஷன், சேட்டைகள் இவை எல்லாம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இங்கு ஆயிரம் கவலைகளை மறக்க செய்த குழந்தையின் கியூட் ரியாக்ஷனை நீங்கள் காணலாம்.

அதாவது தனது தந்தையினை 15 நாட்கள் கழித்து பார்க்கும் குழந்தை ஒன்று பயங்கர வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வெளிப்படுத்திய ரியாக்ஷன் காண்பவர்களை கவலை மறக்க செய்துள்ளது.

வவுனியாவில் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.

அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தாண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (31.05) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாண்டிக்குளம் – ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.

இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.

பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் மற்றும் பொலிசார் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரணத்திற்குப் பின்னர் என்ன நடக்கும்… மீண்டு வந்த பெண் ஒருவர் கூறிய அதிர்ச்சித் தகவல்!!

மரணத்திற்குப் பின்னர்…

மரணத்தில் இருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்ன என்பதை தாம் உணர்ந்ததாக கூறியுள்ள 32 வயது தாயார் ஒருவர், இறந்த பிறகு பயப்பட ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

கோர்ட்னி சாண்டியாகோ என்பவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதன் தாக்கம் காரணமாக சுமார் 40 நொடிகள் மரணப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் பலபேர்களுக்கு மார்பக புற்றுநோய் காணப்படுவதாக கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர்ஐ மார்பக ஸ்கேன் எடுத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மருத்துவர்கள் IV ஐச் செருகியதும் அவரது உடல் அதிர்வடையத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி இதனால் அவரது இரத்த அழுத்தம் குறைவதற்கும் இதயத் துடிப்பு வெகுவாகக் குறைவதற்கும் காரணமாகியுள்ளது.

இந்த தருணத்தில் கோர்ட்னி சாண்டியாகோ சுய நினைவை இழந்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவர் தெரிவிக்கையில், அந்த நொடியில் தாம் முழுமையான அமைதியினை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எனது உடல், எனது உயிர், எனது மகன் அல்லது எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்வதைப் பற்றி அப்போது தாம் கவலைப்படவில்லை, இவை எதுவும் அப்போது முக்கியமானதாக உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் ஒருமுறை கூட சந்தித்திராத ஒரு கனவுலகில் நுழைந்தது போன்ற உணர்வு, தாம் ஒரு கடற்கரையில் நின்றிருந்ததாகவும், வாழ்க்கையில் ஒருமுறை கூட சந்தித்திராத ஆனால் நன்கு அறிமுகமான ஒருவரை அங்கே சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் சரியாகிவிடும், ஆனால் இது உரிய தருணம் அல்ல எனவும் அந்த நபர் இவரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் தமது சுற்றும் திடீரென்று மாறத் தொடங்கியது எனவும், பின்னர் ஒரு மலையில் தாம் காணப்பட்டதாகவும், தமது சிறுவயது வீடு, அங்குள்ள தோட்டம் உள்ளிட்ட தமக்கு நெருக்கமான பல பகுதிகளை தாம் நேரில் கண்டு உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த விசித்திர சம்பவத்திற்கு பின்னர் கண் விழித்த பிறகு, தம்மால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை எனவும், உடல் உறைந்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது அந்த மரணத்தை சந்தித்ததாக கூறப்படும் நிலைக்கு மருத்துவ ரீதியான காரணங்களை கூறியுள்ளனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை திறக்க முனைப்பு : இராஜாங்க அமைச்சர் மஸ்தான் பார்வையிட்டார்!!

வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையமானது 291 மில்லியன் பெறுமதியில் பல இழுபறிகளுக்கு மத்தியில் வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் அமைக்கப்பட்டது.

எனினும் தற்போது மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கடும் நிபந்தனைகள் மற்றும் அரசாங்கத்தின் மந்த செயற்பாடுகளால் திறக்கப்படாமல் காணப்பட்டது.

இந்நிலையில் பல தடவைகள் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பார்வையிட்டபோதும் திறக்கப்படாமல் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்காக பார்வையிட்டிருந்தார். இதன்போது விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர், வவுனியா அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் : வெளியான புதிய விலை விபரம்!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும். மேலும், இதே அளவான விலைத் திருத்தங்களை செய்வதாக லங்கா ஐஓசியும் அறிவித்துள்ளது.

வவுனியாவில் ஊடகவியலாளர் நடேசனுக்கு அஞ்சலி!!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (31.05.2023) நடைபெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவர் தொடர்பான நினைவு பகிர்வுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் நிகழ்த்தியிருந்தார். நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

உலகையே சுற்றிவர ஆசைப்பட்ட அவுஸ்திரேலிய இளம்பெண்- பெற்றோர்கள் முன்னிலையில் நேர்ந்த பரிதாபம்.!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் இரவு உணவு உண்ணும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அப்பெண், குடும்ப விருந்தின்போது துரதிர்ஷ்டவசமாக தனது பெற்றோர் முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.

26 வயதான டேனியலா டுச்சாடெல் (Dani Duchatel), மே 21 அன்று இரவு 10 மணிக்குப் பிறகு பிரிஸ்பேனின் மோர்டன் பேயில் உள்ள தனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.

அரசு ஊழியரான இவருக்கு சமீபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து பெற்றோருடன் தங்கி இருந்தார். அறுவை சிகிச்சையின் காரணமாக, இரத்த உறைவு ஏற்பட்டு நுரையீரல் தக்கையடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் மருத்துவர்கள் இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். டேனி டுச்சாடெல் மயங்கி விழுந்தபோது, அவரது தாயார், கே டுச்சாடெல், அவருக்கு CPR செய்ய முயற்சித்தார், ஆனால் டேனியலாவைக் காப்பாற்ற முடியவில்லை.

மகளின் சோகமான மரணத்தை அவரது தாயார் பேஸ்புக்கில் அறிவித்தார். மேலும், டேனியின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க GoFundMe தொடங்கப்பட்டதில், இதுவரை 20000 அவுஸ்திரேலிய டொலர் திரட்டப்பட்டுள்ளது.

விடுதி முதலாளியை கொடூரமாக கொலை செய்த காதல் ஜோடி!!

கேரளாவில்..

கேரளாவில் தங்கும் விடுதி முதலாளியை கொடூரமாக கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவின் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58) என்பவர், கோழிக்கோடு இரங்கி பாலத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த மே 18ஆம் திகதி இவர் காணாமல் போனதாக, அவரது மகனால் காவல் துறையினர் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.

பின்னர் கேரளாவின் அட்டப்பாடியில் இறந்த சித்திக்கின் உடல் பாகங்கள் பெரிய பையில் அட்டப்பாடி அருகே காட்டுப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சித்திக் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருப்பதாகவும், அவரது மார்பு பகுதி மற்றும் தலையில் பலமாக தாக்கியிருப்பதால் உயிரிழந்திருப்பதாகவும், பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் சித்திக்கின் ஹோட்டல் சிசிடிவியை பரிசோதிக்கையில், சிபிலி(22) என்ற நபரும் அவரது காதலியான ஃபர்ஹானா என்பவரும் விடுதிக்குள் வந்திருப்பது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இறந்த சித்திக்கின் மகன், தனது அப்பாவின் ஏடிஎம் கார்ட்டில், ஒரு லட்சத்திற்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடியுள்ளார்.

பின்னர் சென்னையில் தலைமறைவாக இருந்த அந்த காதலர்களை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் சிபிலி என்பவர் அந்த விடுதியில் பணிபுரிந்ததாகவும், அவர் முதலாளிக்கு தெரியாமல் பணத்தை திருடியதற்காக, அவரை சித்திக் பணியை விட்டு நீக்கியதாக தெரிய வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது காதலியான ஃபர்ஹானா உடன் சேர்ந்து, திட்டமிட்டு சித்திக்கை கொலை செய்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, அட்டப்பாடி காட்டுப் பகுதியில் வீசியதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதலாக சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அதனை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.