பதவிய – முல்முதே பகுதியில் விவசாயி ஒருவர் தனது மகனின் திருமண நிகழ்வை நேற்றுமுன் தினம் (21.05.2023) நடுக்காட்டில் கோலாகலமாக நடத்தியுள்ளார். பதவிய – முல்முதே பகுதியினை சேர்ந்த நடுன் சதுரங்க மற்றும் தசாஞ்சலி ஆகியோருக்கு இவ்வாறு திருமணம் செய்யப்பட்டுள்ளது.
பதவிய – புல்முடே வீதி, உறுவ பிரதேசத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில், கொஹொம்பபிட்டிய ஏரியின் அடிவாரத்தில், தெப்பம் அமைக்கப்பட்டு, மணமகன், மணமகள் அமரும் நாற்காலி என்பன காட்டில் கிடைக்கப்பெற்ற பொருட்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வில் எவ்வித இசை கருவிகளும் பயன்படுத்தாது மெல்லிய இயற்கையின் சத்தத்துடன், பாரம்பரிய உணவு வகைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மணமகனின் தந்தை சமந்தா பிரேமலால் கூறுகையில், இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளை உணர்ந்து உலகில் வாழும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு காடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திருமண நிகழ்வில் இருதரப்பையும் சேர்ந்த சுமார் 300 உறவினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
வவுனியா ஓமந்தை புதியவேலர்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச்சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் தனது தென்னந்தோப்பில் இருந்த போது, மற்றொரு நபர் ஒழிந்திருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 52 வயதான நபரே காயமடைந்துள்ளதுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியா நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலிற்கு பயன்படுத்திய துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது பேர்காமோவைச் சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சஞ்சீவ பிரதீப் தனிப்பட்ட நோக்கத்திற்காக துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சஞ்சீவ பிரதீப் அவசர அம்பியுலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்திர் உயிரிழந்த சஞ்சீவ பிரதீப் இலங்கையின் மாரவில பிரதேசத்தை வசிப்பிடமாகவும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தாலியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பணிபுரிந்து வருகிறார்.
34 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலைச் சம்பவம் பற்றி பொலிஸ் அவசர சேவைப்பிரிவு இலக்கத்திற்கு 119 தொலைபேசி அழைப்பை எடுத்து ஒருவர் வழங்கிய தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவம் மாத்தறை மாவட்டம், ஊருபொக்க பொலிஸ் பிரிவில் அண்ணாசிவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கபுகே ஜினதாச என்பவர், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரால் கொல்லப்பட்டு அவர்கள் வாழ்ந்த தோட்டத்திலேயே புதைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
34 வருடங்களுக்கு முந்தைய கொலைச்சம்பவம் பற்றியே, பொலிஸ் அவசரசேவைப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அவசரசேவைக்கு வழங்கப்படும் எல்லா தகவல்களும் உண்மையாகவும், சரியாகவும் இருப்பதில்லை. இந்த தகவலின் உண்மைத்தன்மையை முதலில் பொலிசார் உறுதி செய்ய வேண்டும்.
அந்த தகவல், ஊருபொக்க பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. பிரதான பொலிஸ் பரிசோதகர் சமரவிக்ரம அப்போது ஊருபொக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்தார்.
34 வருடங்களுக்கு முந்தைய கொலை பற்றிய தகவலை உறுதி செய்யும் பொறுப்பு, உப பொலிஸ் பரிசோதகர் ஜே.பத்திரத்னவிடம் வழங்கப்பட்டது. அவர், குற்றப் பிரிவினருடன், தோலமுல்ல அன்னாசிவத்தைக்கு சென்றார். சிறு முயற்சியின் பின்னர், 34 வருடங்களுக்கு முன்னர், ஜினதாசா வாழ்ந்த வீட்டைக் கண்டுபிடித்தார்.
அந்த வளவுக்குள் இடிந்த பழைய வீடொன்றும், அருகில் புதிதாக கட்டப்பட்ட புதிய வீடொன்றும் காணப்பட்டன. ஜினதாசவின் மூத்த மகன் சுனில், மனைவி பிள்ளைகளுடன் புதிய வீட்டில் வசித்து வந்தார்.
தந்தை காணாமல் போனபோது சுனிலுக்கு வயது 16. இப்போது அவருக்கு 50 வயதாகிறது. ஜினதாசவின் மனைவி ரோசலின் தனது இளைய மகனுடன், கட்டுவனப் பகுதியில் வசித்து வந்தார்.
ரோசலினுக்கு தற்போது 83 வயது. அவர் பக்கவாதத்தினால் நடக்க முடியாத நிலையில் வாழ்கிறார். இதனால், பொலிசாரால் ரோசலினை சந்தித்து அவரது கணவரைப் பற்றி கேட்க முடியவில்லை.
அப்போது சுனிலாலும் தன் தந்தைக்கு நடந்ததைச் சொல்ல முடியவில்லை. 34 வருடங்களாக தனது தந்தையை காணவில்லை என்பது மட்டுமே தனக்கு தெரியும் என சுனில் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
1989 ஆம் ஆண்டு இவருடைய தந்தை காணாமல் போனபோது அவர் தெனிப்பிட்டிக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று கொண்டிருந்தார். தந்தை காணாமல் போனது பற்றி பொலிசில் முறையிட தாயார் அக்கறை காட்டவில்லை, ஜேவிபி புரட்சிக்காலத்தில் அவர் காணாமல் போய் விட்டார் என்றுதான் கூறினார் என மகன் குறிப்பிட்டார்.
பத்திரனவை பற்றி மேலும் விசாரிப்பதெனில் மனைவி ரோசலினிடமே கேட்க வேண்டும். அவர் பக்கவாதத்தினால் நடக்க முடியாமல் உள்ளார். அவரிடம் விசாரிக்க முடியாது. என்ன செய்வதென பொலிசார் திண்டாடினர்.
என்றாலும், 34 வருடங்களின் முன்னர் நடந்த கொலைச்செய்தி சுவாரஸ்யமாக இருந்ததால் பொலிசார் ஆர்வம் காட்டினர். இதனால், 119 அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பேற்படுத்தியவரிடம் இருந்து மேலதிக தகவல்களை கோருவது பொருத்தமானது என கருதினர்.
பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் அளித்தவர் யாரென அடையாளம் கண்ட பொலிசார் மேலும் ஆச்சரியப்பட்டனர். காரணம், அந்த தகவலை வழங்கியவர், காணாமல் போனதாக கூறப்பட்ட ஜினதாசவின் மகன் சுனில்தான். பொலிசார் மீண்டும் சுனிலை தொடர்பு கொண்டனர்.
“எனது தந்தை கொல்லப்பட்டாரா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவனுடைய அம்மா இப்படி ஒரு கதையை அத்தையிடம் சொன்னார்.’’ என சுனில் பேச ஆரம்பித்தார்.
சுனிலின் தாயார் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சுனில் சிறு வயது முதலே தாயாருடன் நெருக்கமாக இல்லை. தந்தை காணாமல் போனதற்கு தாயே காரணமென நம்பியதால் அவர் தாயுடன் நெருக்கமாக பழகவில்லை. அவரது சகோதரனுடனேயே தாயார் தங்கியிருந்தார்.
அம்மாவின் சகோதரிதான் ஒருமுறை இந்த கதையை தன்னிடம் தெரிவித்ததாக சுனில் குறிப்பிட்டார். தந்தையின் சகோதரிக்கு அம்மாவே அந்த தகவலை கூறினாராம். கட்டுவனவிலுள்ள வீட்டிற்கு ரோசலினை பார்ப்பதற்காக, ஜினதாசவின் சகோதரி சென்ற போது, ரோசலின் இந்த கொலை தகவலை வழங்கியுள்ளார்.
“ஜினதாச கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார். அதனால்தான் இன்று எனக்கு இந்த நிலைமை வந்துள்ளது“ என தனது பக்கவாத நிலமையை குறிப்பிட்டுள்ளார். கணவனை கொன்றது ரோசலினின் மனதை துன்புறுத்தியபடி இருந்துள்ளது.
இந்த தகவலை இரகசியமாக வைத்திருக்க வேண்டுமென ஜினதாசவின் சகோதரி நினைக்கவில்லை. அவர், சுனிலின் மனைவியை தொலைபேசியில் அழைத்து பேசிய போது, குறிப்பிட்டுள்ளார். மனைவி, சுனிலிடம் தெரிவித்தார்.
தனது தந்தையின் மரணத்தில் நீண்டகாலமாகவே சந்தேகமடைதிருந்த சுனில், இதனை 119 அவசர சேவை இலக்கத்தின் மூலம் பொலிசாருக்கு வழங்க முடிவு செய்தார்.
அப்போது சுனில் தெனிப்பிட்டிக்கு அருகில் உள்ள விகாரையில் தங்கியிருந்து, பெளத்த அநெறி பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தார். சுனிலை விகாரையில் தங்கியிருந்து நல்ல கல்வியை பெற வேண்டுமென்பதில் தந்தை ஜினதாச சிரத்தை எடுத்துக் கொண்டார்.
அதனால், சுனிலின் 12 வயதிலேயே – 1985ஆம் ஆண்டு, விகாரையில் உள்ள அறநெறி பாடசாலையில் இணைத்தார். சுனில் குடும்பத்தில் மூத்தவர். அவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.
ஒரு சகோதரர் 19 வயதில் விசம் அருந்தி இறந்துவிடுகிறார். தற்போது, கட்டுவனவில் உள்ளவர் மற்றொரு இளைய சகோதரர். சுனிலின் தந்தை ஜினதாச மாத்தறை கம்புருபிட்டியவில் உள்ள கல் பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இடையில் அருகில் உள்ள திருவானை தோட்டம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டத்திலும் வேலை செய்தார். அந்தக் குடும்பத்தின் மற்ற இரண்டு பிள்ளைகளை விடவும் ஜினதாச, சுனிலிடம் அதிகம் பாசம் காட்டியுள்ளார்.
அதனாலேயே சுனில் தன் தாயை விட அப்பாவை நேசித்தார். எவ்வளவு வேலைகள் இருந்தாலும், சுனிலை பார்ப்பதற்காக மாதம் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தெனிப்பிட்டிய விகாரைக்கு வருவதை ஜினதாச வழக்கமாக வைத்திருந்தார்.
அப்படியொரு முறை வந்த போதே, தந்தையை கடைசியாக பார்த்தார். மறக்கவில்லை. சுனில் தனது துக்கங்களையும் மகிழ்ச்சியையும் காண கோவிலுக்கு வந்தபோது தந்தையை கடைசியாக பார்த்தார்.
சுனிலுக்கு அந்த நாள் சரியாக நினைவில்லை என்றாலும், அது 89 ஆம் ஆண்டு என்பது நன்றாக நினைவிருக்கிறது. ஏனென்றால் அது பயங்கரமான காலகட்டம். ஜினதாச காணாமல் போனதும், தாயார் விகாரைக்கு சுனிலை பார்க்க வந்தார்.
சுனில் அப்பாவை பற்றி அம்மாவிடம் கேட்டதற்கு, அவர் சரியான பதில் சொல்லவில்லை. “அந்த ஆள் எங்கே போனாரோ?. பிள்ளையைப் பார்க்கக் கூட வர நேரமாமில்லாமல் இருக்கிறார்“ போன்ற பதில்களும் தாயிடமிருந்து வந்தன.
அதன் பின்னர், நான்கைந்து மாதங்கள் சுனிலை பார்க்க தாயாரும் வரவில்லை. தந்தை எந்த வேலையிலிருந்தாலும் தன்னை பார்க்க வருவார் என சுனில் நம்பினார். ஆனால் தந்தை வரவில்லை. இதனால் அழுத்தத்துக்கு உள்ளாகிய சுனில், பிக்குவிடம் கூறிவிட்டு, வீட்டுக்கு கிளம்பி விட்டார்.
எதிர்பாராத விதமாக சுனில் வீட்டிற்கு வந்தது, தாயாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. தாயின் வார்த்தைகளில் இருந்து உணர்ந்தார் சுனில். வீட்டில் தந்தை இருப்பதற்கான அறிகுறியையும் அவர் காணவில்லை. தந்தைக்கு பதிலாக, சோமதாச என்ற இளைஞன் அடிக்கடி வீட்டில் தங்கினான். தாயும், சோமதாசவும் நெருக்கமாக இருந்ததையும் சுனில் கவனித்தார்.
அப்போது, சுனிலின் தாயார் ரோசலினுக்கு 49 வயது. சோமதாச அவரை விட 14 வயது இளையவர். சோமதாசா அப்போது தந்தை இல்லாத வீட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தார். வீட்டில் சேமதாச தங்கியிருப்பது சுனிலுக்கு பிடிக்கவில்லை. ஆனால், தாயாரை மீறி எதுவும் செய்ய முடியாமலிருந்தார்.
ஒரு நாள் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சோமதாச, ரோசலினை அடிப்பதை சுனில் பார்த்தார். சோமதாசவின் பிடியில் இருந்து தனது தாயை காப்பாற்றிய சுனில், சோமதாசவை கடுமையாக தாக்கினார்.
அவரை அடித்து, இனி வீட்டுப்பக்கம் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டி கலைத்து விட்டார். அதன் பின்னர் சோமதாச அந்த வீட்டில் தங்கவில்லை. விரைவிலேயே திருமணம் செய்து, 2 குழந்தைகளின் தந்தையாக நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
“அப்பாவுக்கு என்ன நடந்தது என்று நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்டேன். அம்மா சரியான பதில் சொல்லவில்லை. அம்மாவிடம் போலீசில் போய் புகார் கொடுக்கச் சொன்னேன். அம்மா என் மேல் ஏறி விழுந்தார். கோபத்தில் வெடித்த அம்மா, அந்த மனிதனை கொல்ல வேண்டுமா? என்றார்.
தந்தை பணிபுரிந்த குவாரியில் துப்பாக்கிப் வெடிமருந்துகளை திருடிய போது பொலிஸார் அவரைப் பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது தந்தை ஓடிவந்ததாகவும் தாய் தெரிவித்துள்ளார்.
அப்போது நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டது. உனக்கு வேண்டுமானால் அப்பாவைப் பற்றி போலீசில் சொல்லு என்றார் அம்மா. அப்பாவை பிடித்து கொன்று ரோட்டில் வீசிவிடுவார்கள் என்றார்.”
சுனில் அப்பாவைப் பற்றி விசாரிக்கப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் இருந்து இப்படி ஒரு பதில்தான் வந்தது. அதனால் நாளடைவில் தந்தையைப் பற்றிய தகவல்களைக் கேட்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் விடத் தொடங்கினார்.
ஜினதாசவின் குடும்ப உறுப்பினர்கள் வந்து கேட்டால், “என் கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். நீங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை“ என்றார். காலப்போக்கில் இவையனைத்தும் எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப் போகிறது, நீண்டகாலத்தின் பின்னர் ரோசலின் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தபோது அவர் சொன்ன கதையுடன் ஜினதாசவின் நினைவு மீண்டும் எழுகிறது.
இதையெல்லாம் பொலிசார் முன்னிலையில் சுனில் குறிப்பிட்டாலும், தன் தந்தையைக் கொன்று புதைத்த இடம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. ஜினதாச கொல்லப்பட்டார் என அத்தையிடமிருந்து தகவல் கிடைத்த பின்னரும், சுனில் தாயாரை சந்தித்து, தந்தை பற்றி கேட்டார்.
ஆனால் ரோசலினின் பதில் மாறவில்லை. தந்தை பொலிசாரிடமிருந்து தப்பி எங்கோ ஓடிவிட்டார் என வழக்கம் போல கூறினார். இவற்றையெல்லாம் ஆராய்ந்த போது ஜினதாசவின் காணாமல் போனதன் பின்னணியில் பெரிய மர்மம் இருப்பதை பொலிசார் உணர்ந்தனர்.
இதையடுத்து, பொலிசார் அன்னாசிவத்தையை சுற்றியுள்ள முதியவர்களைச் சந்தித்து 34 வருடங்களாக காணாமல் போயுள்ள ஜினதாசவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றனர். ஆனால் ஜினதாசவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி அவர்கள் எவருக்கும் தெரியாது. ஜினதாச ஜேவிபி கலவரத்தில் பலியாகி விட்டதாக அனைவரும் நினைத்தனர்.
இதற்கிடையில் சுனிலும் தனது தாயை சந்தித்து தனது தந்தைக்கு என்ன நடந்தது என்று கேட்க கடந்த காலத்தை தோண்டத் தொடங்கினார். “அம்மா இன்னும் கொஞ்சக்காலத்தில் இறந்துவிடுவீர்கள். எனவே இப்போது உண்மையைச் சொல்லுங்கள். அப்பா இறந்து விட்டால் அவருக்குரிய இறுதிக்கடமைகளையாவது செய்யலாம்“ என சுனில் தன் தாயை உணர்வுபூர்வமாக அணுகிறார்.
தாயார் 34 வருடங்களின் முந்தையை சம்பவங்களை விபரிக்க ஆரம்பித்தார். அப்போது ரோசலன் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார். ஊர் மக்களைத் தவிர, அருகிலிருந்த எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் பீடி, வெற்றிலை வாங்க இங்கு வந்தனர்.
அப்படி வரும்போது சோமதாசவுக்கும், ரோசலினுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. சோமதாச, திருவானை எஸ்டேட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்ததோடு, கித்துல் தோட்டத்திலும் துப்புரவு தொழிலாளியாகவும் பணியாற்றினார்.
ரோசலினின் கடைக்கு வரத் தொடங்கிய சோமதாச, விரைவில் ரோசலினுடன் நெருக்கமாகி விட்டார். ஜினதாச வீட்டில் இல்லாத நேரத்தில் சோமதாச வீட்டுக்கு இரகசியமாக வந்து, ரோசலினுடன் உறவுகொள்ளத் தொடங்கினார்.
இந்த விடயம் ஜினதாசவுக்கு தெரிந்து விட்டது. மனைவியை கண்டித்தார். இனிமேல் இந்த உறவை தொடரக்கூடாது என கண்டிப்பாக கூறினார். ஒருநாள் சோமதாச வந்த போது, ஜினதாச கட்டிலில் உறக்கத்தில் இருந்தார். ரோசலின் ஒரு சாராயப் போத்தலை சோமதாசவிடம் கொடுத்து குடிக்குமாறு கூறினார்.
சோமதாச அரைப்போத்தல் சாராயத்தை குடித்தார். நல்ல போதை. அப்போது, ரோசலின் ஒரு கொட்டனை எடுத்து வந்து சோமதாசவிடம் கொடுத்தார். அதனால் ஜினதாசவை அடித்துக் கொலை செய்யுமாறு கூறினார்.
போதையிலிருந்த சோமதாச எதையும் சிந்திக்கும் நிலைமையில் இல்லை. ரோசலினை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள இதுதான் சரியான வழியென நினைத்து, உறங்கிக் கொண்டிருந்த ஜினதாசவின் தலையில் கொட்டனால் பலமுறை அடித்தார். தலை சிதைந்து, சம்பவ இடத்திலேயே ஜினதாச உயிரிழந்தார்.
ஜினதாசவின் உடல் மஞ்சள் படுக்கை விரிப்பில் சுற்றப்பட்டது. இருந்தாலும் இரத்தம் வடிந்து கொண்டிருந்ததால், மேலும் இரண்டு துணிகளால் சுற்றப்பட்டு, மலசலகூடத்துக்கு என வெட்டப்பட்ட குழிக்குள் போட்டு மூடப்பட்டது.
ஜினதாசவை கொன்று புதைக்க திட்டமிட்டு, ரோசலின் இந்த குழியை ஏற்கெனவே தயார் செய்திருந்தார். அன்று ஜினதாசவின் சடலத்தை சுற்றிய கட்டில் துணியின் நிறமும், அதில் பச்சை மற்றும் சிவப்பு நிற மலர் வடிவமும் ரோசலினின் நினைவில் இருந்தது. ஜினதாச நீல நிற கோடு போட்ட சட்டையும், மஞ்சள் நிற பெனியனும் அணிந்திருந்தார்.
இந்த விஷயங்களை அம்மா சுனிலிடம் கூறியிருந்தார். தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பற்றியும் கூறினார். அந்த இடம் இப்போது காட்டுக்குள் இருக்கிறது. அந்த இடத்தை அடையாளம் கண்டுகொண்ட சுனில் கடந்த 11ஆம் திகதி ஊருபொக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அம்மா சொன்னதை எல்லாம் சொன்னார். தந்தை காணாமல் போனது இனி மர்மம் இல்லை என்று கூறினார். இறுதியில் மொறவக்க நீதவான் நீதிமன்றில் அறிக்கையளித்து, 15ஆம் திகதி ஜினதாசவின் சடலத்தை மீட்பதற்கான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நீதவான் துமிந்த பஸ்நாயக்கவின் மேற்பார்வையில் மாத்தறை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் புத்திக லெயில்வல கலந்துகொண்டார்.
ரோசலினை சம்பவ இடத்துக்கு சுனில் அழைத்து வந்தார். ஜினதாசவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ரோசலின் அடையாளம் காட்டினார். ஜினதாசவின் உடல் ஒரு மஞ்சள் துணியில் சுற்றப்பட்டிருக்கிறது என்று அங்கேயும் ரோசலின் சொன்னார். அங்கு ஏழெட்டு அடி ஆழம் தோண்டும்போது மஞ்சள் பூத்துணி வெளிப்படுகிறது.
34 ஆண்டுகளுக்குப் பிறகும், துணி அப்படியே இருந்தது. அதுமட்டுமல்லாமல் அன்று ஜினதாச அணிந்திருந்த நீல நிற கோடுகள் கொண்ட வெள்ளை நிற மேல்சட்டையும், மஞ்சள் பெனியனும் இருந்தன.
அதுமட்டுமல்லாமல் ஜினதாசவை போர்த்திய கதவு துணியும், ஜினதாச கட்டியிருந்த கருப்பு சாரமும் 34 ஆண்டுகளாக எந்த சேதமும் இல்லாமல் இருந்தது. என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
உடைகள் அழிக்கப்படாவிட்டாலும் ஜினதாசவின் சடலம் மக்கி விட்டது. சில எலும்புத் துண்டுகள் மட்டுமே காணப்பட்டன. கால் எலும்பு துண்டு, சில பற்கள் மட்டுமே இருந்தன. கழிவறை குழியில் இருந்து இவை அனைத்தையும் மீட்டெடுத்த பொலிசார், 34 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜினதாச கொலையில் ரொசாலின்ட் என்பவரை முதல் சந்தேக நபராக கைது செய்தனர்.
அதன் பிறகு சோமதாச கைது செய்யப்படுகிறார். 69 வயதான சோமதாச அப்போது தனது இரண்டு பிள்ளைகளுடன் ஹிரிபிட்டியவில் வசித்து வந்தார். ஜினதாச கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்ட இருவரும் மொறவ நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
“ரோசலினால்தான் இந்தக் குற்றம் நடந்தது. அவர் எனக்கு குடிக்கக் கொடுத்தார், அவரைக் கொல்லச் சொன்னார். நான் இல்லை என்றேன். அவர் வலியுறுத்தினார். அதனால் தான் ஜினதாசவை கட்டையால் அடித்து கொன்றேன்.
உடலை அடக்கம் செய்யும் இடத்தையும் அவர்தான் காட்டினார்” என சோமதாச மாஜிஸ்திரேட் முன் அனைத்தையும் ஒப்புக்கொண்டார். ரோசலின் “நான் இறக்கும் நிலையில் கூட நான் செய்த குற்றத்திற்காக நான் தண்டிக்கப்பட்டேன்” என்று நீதிவான் முன்னிலையில் கூறினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கோணஞ்செட்டியூர் பகுதியில் வசிக்கும் சேட்டு என்பவரின் 18 வயதுள்ள ராஜேஸ்வரியை கடந்த ஒரு வருடமாக துக்கியாம்பாளையம் ஊராட்சி வடக்கு காடு பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் சக்திவேல் (வயது 24) என்ற வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசம் அடைந்த அந்த ராஜேஸ்வரின் அண்ணன் சதீஷ்குமார் (23) மற்றும் ராஜேஸ்வரின் சித்தி மகனான துக்கியாம்பாளையம் வடக்கு காடு முனியப்பன் மகன் மணிகண்டன் (17) ஆகிய இருவரும் சக்திவேலை துக்கியாம்பாளையம் வடக்கு காட்டிற்கு அழைத்து சென்று சரமாரி தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த சக்திவேல் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு மேற்கொண்டார். பின்னர் கொலையில் தொடர்புடைய இருவரையும் கைது செய்தார்.
சக்திவேல் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில், தங்கைக்கு செல்போன் வாங்கிக்கொடுத்து காதல் வலையில் வீசியதால் கொலை செய்தோம் என இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழகம் , புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் சுமார் 7797 மாணவர்களும், 7618 மாணவிகள் என மொத்தம் 15 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 6700 மாணவர்களும், 7038 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும்.
கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி விகிதம் குறைவு. இந்நிலையில், காரைக்காலில் 10ம்வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டம் எம்ஜிஆர் நகரில் வசித்து வருபவர் ஓட்டுநர் ஐயப்பன். இவரது மகன் ராகவன், இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் ராகவன் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டார்.
ஏற்கனவே தேர்வு சரியாக எழுதவில்லை என கூறி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காரைக்கால் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவன் ராகவன் உடலை பார்த்து பெற்றோர், கதறி அழுதனர்.
பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதன்படி, பொதுத்தேர்வில் மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
தவிர, பள்ளிகளில் மாணவர்கள் கொடுத்திருக்கும் அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
யாழ். வசாவிளான் பகுதியில் வீதியில் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதாக கூறப்படும் இராணுவ வீரரை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் இன்றைய தினம் (22.05.2023) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத் தினமாக இன்றைய தினம் தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்து சென்ற குறித்த இராணுவ வீரர், அவரிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளனார்.
குறித்த சம்பவத்தின்போது மாணவி குரலெழுப்பிய நிலையில், அங்குக் கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ வீரரை நையப்புடைத்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ் இராணுவ வீரரான குறித்த நபர் கடந்த காலத்திலும் இவ்வாறான சில்மிஷங்களில் சிக்கியிருந்தாரெனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 3 இலங்கைதமிழ் இளைஞர்கள் வீதியில் வீடியோ எடுத்துகொண்டே சென்று விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் குறித்த இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் பைக்கில் செல்வதை வீடியோ எடுத்தபடி சென்றபோது அவர்களுக்கு முன்னே சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது அந்த லாரியில் மோதி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த மூவரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
சம்பவத்தில் 19 வயதே ஆன தயாளன் , சார்லஸ் 21 வயது, ஜான் 20 வயது ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணையையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை உயிர் காக்கவென நாட்டைவிட்டு வெளியேறி காணொளி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் (20) என்ற இளைஞர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு கட்டுமான வேலையில் ஈடுபட்டார். நவீன்குமார் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்.
அதோடு எங்கு சென்றாலும் ரீல்ஸ் எடுத்து அதனை பதிவிட்டு லைக்ஸ்களை பெறுவதில் ஆர்வம் காட்டிவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நவீன்குமார் வீட்டில் தனது அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டுக்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு குடியாத்தம் தாலுகா போலீசார் அனுப்பி வைத்தனர்.
நவீன் குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடை மேலும், நவீன்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் இன்றைய தேதியிட்டு ஆர்பிஐ (RIP) என ரீல்ஸ் செய்து அதையும் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதன் பின் அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ஊராட்சி ராமாபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவது மகள் அனிதா (17). சிறுமி அனிதா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு தேர்வில் அனிதா 600க்கு 435 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால், மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வந்ததாக கூறி அனிதா மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், அனிதா வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து போலீசார் அனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தற்கொலைச் செய்திருப்பதால், நீட் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தில் தற்கொலையா? வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்த நாராயணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவரது மகன் ஹரியும் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமா என்ற பயத்தில் தேர்வு முடிவு வெளியாகும் அன்றைய நாள் காலையிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
2022 – 2023 கல்வியாண்டில் மொத்தம் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
பொதுத் தேர்வில் 47 ஆயிரத்து 934 மாணவர்கள் தோல்வி அடைந்து இருந்தனர். இதன் அடிப்படையில், தோல்வி அடைந்த மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொண்டது.
குறிப்பாக, சென்னை டிஎம் எஸ் வளாகத்தில் உள்ள 104 உதவி மையத்தில் இருந்து 20 மனநல ஆலோசகர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஆசிரியர்கள், பெற்றோர்கள், மனநல மருத்துவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் மற்றும் மனநல ஆலோசகர்களால் சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் தோன்றாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இன்று (22.05.2023) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரதேச செயலகங்களில் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகளை சேகரிக்க மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதேவேளை இவ்வருடத்திற்குள் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமை தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அவ்வாறான அச்சுறுத்தல் இருக்கலாம் என எனக்கு புலனாய்வு அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வருமென்று அறிந்தே இந்த பொறுப்பை ஏற்றேன்.
இப்போது நான் இங்கு இருக்கும் போதே போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக செயற்பாடுகளை ஒழிக்க வேண்டும். அப்படி மிரட்டல்கள் இருந்தாலும் ஒரு அடி கூட பின்வாங்கமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை சலவை இயந்திரத்தில் வைத்து கொலை செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தியின் உண்மையின் தன்மை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு கத்தாரில் பேருந்து ஒன்றில் உயிரிழந்த நான்கு வயது குழந்தையின் புகைப்படங்களே இவ்வாறு போலியாக பகிரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் நஜக்காவில் பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி பேருந்தின் கதவுகளைத் திறக்க முடியாமல் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டு வெலிகம பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகளை கொலை செய்துள்ளதாக தகவல்கள் பரவியுள்ளது. இந்த செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கை இந்தாண்டில் மோசமான நிலைமை எட்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க டொலர் மாற்று விகிதம் சுமார் 330 முதல் 350 ஆக இருக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சுமார் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக அமெரிக்க டொலர் 300 ரூபாவுக்கு குறைந்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் டொலர் அதிகளவில் வெளிச்செல்லும். இதன்மூலம் டொலருக்கான கேள்வி மீண்டும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினை தொடர்ந்து, உலக வங்கி (WB) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ADB போன்ற பலதரப்பு நிறுவனங்களில் இருந்து பெரிய அளவிலான வரவுகள் கிடைக்கவுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பை 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தற்போது அந்நிய செலாவணி கிடைப்பதால், இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் கட்டுப்பாட்டினை விரைவில் நீக்க வேண்டி நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகப்புத்தக கணக்கின் ஊடாக நடிகையிடம் இருந்து 65 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து ஏமாற்றிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு சட்டத்தரணிகளை திருமணம் செய்வதாக கூறி 99 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே அந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மஹர சிறைச்சாலையினரால் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரத்னபுர கஹவத்தை பகுதியைச் சேர்ந்த பி.எல்.லசந்த லியனகே என்ற 27 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளம் பெண் தற்போது கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருவதுடன் நடிகையும் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களுடன் கூடிய முகப்புத்தக கணக்கை, சமூக நல ஆர்வலர் எனக் கூறி சந்தேகநபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கொழும்பு நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணி ஒருவரை முகபுத்தகத்தில் கணக்கின் ஊடாக திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் அதே நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி.எம்.எஸ் சார்ள்ஸ் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (22.05.2023) காலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது.
வவுனியா வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா நகரசபை வளைவில் இருந்து வாகன பவனியாக அழைத்துவரப்பட்ட ஆளுனர் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலய கல்விப்பணிப்பாளரால் வரவேற்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து வவுனியா தனியார் விடுதியில் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது வர்த்தகர் சங்கத்தின் செயலாளர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர், முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட உறுப்பினர்கள், கந்தசாமி கோவில் நிர்வாகத்தினர், வர்த்தகர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.