பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதி தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் (11) அனுமதிக்கப்பட்ட 21 வயதுடைய யுவதிக்கு ஊசி ஏற்றிய சிறிது நேரத்திலேயே உயிரிழந்திருந்தார்.பொத்தபிட்டிய அலகல்ல பகுதியைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்ன என்ற (21 வயது) யுவதியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

கடந்த 10ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மறுநாள் நோயாளர் காவு வண்டி மூலம் தனது தாயுடன் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதன்போது காலை 9:00 மணியளவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட யுவதி மதியம் 12:30 மணியளவில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து யுவதியின் உடல் நீல நிறமாக மாறியதாகவும், இதனையடுத்து உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாதி ஒருவரால் இரண்டு ஊசிகள் செலுத்தப்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தாயார் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விளக்கமளித்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்த யுவதியின் குடும்பம் தன்னுடன் நட்புடன் பழகி வந்த குடும்பம் என்ற வகையில்,யுவதியின் மரணம் தொடர்பில் தனது ஆறுதல்களை தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த யுவதி கடந்த தேர்தலின் போது தமக்கு தேர்தல் பணிகளுக்கு உதவியதாகவும்,இதனால் அமைச்சர் என்ற வகையில் மரணத்திற்கான காரணத்தை இரண்டு வாரங்களில் முழுமையாக கண்டறிந்து தெளிவுப்படுத்தவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களிடையே மோதல் : ஒருவர் ஆபத்தான நிலையில் மேலும் 4 பேர் காயம்!!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டர் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்பாக குறித்த மோதல் சம்பவம் நேற்று (16.07) இரவு இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் வவுனியா, யாழ் ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு,

மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்தவரின் சகோதரர் மீதும் குறித்த குழு வவுனியா வைத்தியசாலையில் வைத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வைத்தியசாலை முன்பாகவும் இரு இன இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

அதிலும் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் குறித்த சம்பவத்தால் மொத்தமாக 5 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் குறித்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா ஊடாக நீண்ட நாட்களின் பின் பயணத்தை மேற்கொண்ட யாழ்தேவி புகையிரதம்!!

கொழும்பு – காங்கேசன்துறை நோக்கிய பயணத்தை மீள ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி புகையிரத நிலையம் இன்று (15.07) காலை 11 மணிக்கு வவுனியாவை வந்தடைந்தது.

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹோ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது அனுராதபுரம் – ஓமந்தை வரையிலான புனரமைப்பு பணிகள் இரண்டு கட்டமாக செயற்படுத்தப்பட்ட நிலையில், வவுனியா – அனுராதபுரம் வரையிலான 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா – ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப் பெற்றதை தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தில் 100 கிலோமீற்றர் வேகத்தில் புகையிரத்தை இயக்க முடியும் தெரிவிக்கப்பட்ட நிலையில் பரீட்சார்த்தமாக யாழ்தேவி புகையிரதம் கடந்த 9 ஆம் திகதி பயணித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து பயணிகள் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பித்துள்ளது. கொழும்பில் இன்று காலை 5.45 இற்கு பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி புகையிரதம் காலை 11 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தனது பயணத்தினை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மணிக்கு 80 கிலோமீற்றர் தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் இதன்போது பயணித்திருந்தது.

தண்டவாளப் புனரமைப்பு பணிகளின் பின் மீள புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து அதிகளவிலான மக்கள் பயணங்களை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.

ஒரே வாரத்தில் பாரிய சரிவை சந்தித்தது இலங்கை ரூபா!!

இலங்கையில்..

இலங்கையில், தொடர்ந்தும் உயர்ந்து வந்த ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு வாரமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.கடந்த காலங்களில், அதிகம் செயற்றிறன் கொண்ட நாணயமாக காணப்பட்ட இலங்கை ரூபா விரைவில் வீழ்ச்சியடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருவதுடன், நேற்று முன்தினத்துடன்(13.07.2023) ஒப்பிடும் போது நேற்றையதினம்(14.07.2023) ரூபாவின் பெறுமதி சடுதியாக வலுவிழந்தது.

டொலருக்கு நிகராக மாத்திரம் இன்றி பிரித்தானிய பவுண்ட், யூரோ, கனேடிய டொலர் என பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவி்ன் பெறுமதி பாரிய சரிவை சந்தித்து வருகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 304.02 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 318.23 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 310.49 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் டொலரின் விற்பனை பெறுமதியானது, 06.44 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 06.47 ரூபாவால் அதிகரித்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கனேடிய டொலரின் பெறுமதியும் கடந்த ஐந்து நாட்களில் உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 226.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 240.83 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 235.46 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 249.34 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் கனேடிய டொலரின் விற்பனை பெறுமதியானது, 08.51 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 08.72 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோவின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று யூரோவின் கொள்வனவு பெறுமதி, 331.60 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 350.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) யூரோவின் கொள்வனவு பெறுமதி, 347.62 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 366.06 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் யூரோவின் விற்பனை பெறுமதியானது, 16.03 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 16.02 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, பிரித்தானிய பவுண்டின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 388.30 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 408.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 406.68 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 427.31 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் பிரித்தானிய பவுண்டின் விற்பனை பெறுமதியானது, 18.39 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 18.38 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, சிங்கப்பூர் டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று சிங்கப்பூர் டொலரின் கொள்வனவு பெறுமதி, 224.04 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 237.14 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) சிங்கப்பூர் டொலரின் கொள்வனவு பெறுமதி, 234.27 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 247.30 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் சிங்கப்பூர் டொலரின் விற்பனை பெறுமதியானது, 10.16 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 10.23 ரூபாவால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 201.42 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 214.02 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 212.64 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 225.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதியானது, 11.24 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 11.22 ரூபாவால் அதிகரித்துள்ளது.

வவுனியாவில் வீட்டை உடைத்த இளைஞர்களிடமே சாவியை கையளித்த பொலிஸார் : நீதி கோரி போராட்டம்!!

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு வாடகைக்கு குடியிருந்தோர் நீதி கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இரவிரவாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று (14.07) இரவு 9.45 முதல்  இன்று (15.07) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று (14.07) மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ரசிக்கா பிரியதர்சினியின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர்.
வாடைக்கு இருந்தோர் வெளியே சென்று வீடு திரும்பி அங்கு சென்ற போது அவர்களை உள் நுழைய தடுத்த இளைஞர் குழு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்யாததுடன், நீதிமன்றுக்கு போகுமாறு அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர்.
இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார். அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளனர்.

அத்து மீறி வீட்டை உடைத்து உள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, அவர்களிடமே வீட்டு சாவியை கொடுப்பது எந்தவகையில் நியாயம் எனத் தெரிவித்தும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கணவன், மனைவி ஆகியோர் இரவு 9.45 இற்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக வீதியோரத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

அங்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததுடன், விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் தனது வீட்டு சாவியை தரும் வரை செல்ல மாட்டேன் எனக் கூறி அவர்கள் தொடர்ந்தும் போராட்த்தில் ஈடுபட்ட நிலையில்,
அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியசகர் குறித்த குடும்பத்தை தமது வளாகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று (15.07) மாலை குறித்த பிரச்சனையை நீதியான முறையில் விசாரணை செய்து தீர்வை தருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவரது வாக்குறுதியையடுத்து குறித்த குடும்பத்தினர் அதிகாலை 1.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சென்றிருந்தனர். குறித்த போராட்டமானது மூன்றரை மணித்தியாலயத்திற்கு மேலாக இரவிரவாக இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, குறித்த காணிக்குரிய ஆலய உடன்படிக்கை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் அருளம்மாவின் மரணத்தின் பின் அவ் ஆவணம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், அவரது மகனின் பராமரிப்பின் கீழே குறித்த வீடு இருந்து வந்துள்ளதுடன் வாடகைக்கு குடியிருந்தோரே அருளம்மாவின் பெயரில் 15 வருடங்களாக ஆலயத்திற்கான நில குத்தகைப் பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே மீள புதுப்பிக்கப்படாத அருளம்மாவின் பேரில் இருந்த பழைய ஆவணத்தை வைத்து சட்டத்தரணி ஒருவரின் துணையுடன் அவரது மகள் பிறிதொரு நபருக்கு குத்தகை உடன்படிக்கையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

7 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 15 வயதுச் சிறுவன்.. இலங்கையில் நடந்த கொடூரம்!!

தங்கொட்டுவவில்..

தங்கொட்டுவ பிரதேசத்தில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இக் குற்றச்சாட்டின் பேரில் 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொடுவ – தும்மலகொடுவ பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்புணர்வுக்குள்ளான சிறுமி தங்கொட்டுவ அடியாவல பிரதேசத்தில் உள்ள தொழிலாளி ஒருவரின் வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோர விபத்து.. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தவருக்கு நேர்ந்த சோகம்!!

பளையில்..

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து பளை இத்தாவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த வான் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முள்ளியவளை பகுதியை 39 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

17 வயதுச் சிறுமி மாயம்.. கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் அவசர கோரிக்கை!!

கொழும்பில்..

கொழும்பு – தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று காலை வீட்டிலிருந்து வெளியேறி தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க உதவுமாறு தந்தை தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மேலும், காணாமல்போன சிறுமி தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் (077-3715446 -0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் குடும்பம் ஒன்றை வாழவைக்கும் முள்ளம் பன்றிகள்!!

புவக்தெனியவில்..

பொதுவாகவே முள்ளம் பன்றிகள் என்றாலே யாரும் அதனை நெருங்கவே பயப்படுவார்கள். ஆனால் அந்த முள்ளம் பன்றிகள் இலங்கையில் ஓர் குடும்பத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் ரம்புக்கனை – பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது.

அக்குடும்பம் தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டி அதன் மூலம் வரும் வருமானத்திலையே தனது குழந்தைகளுக்கான பாடசாலை செலவுகளை செய்து வருவதாக அதனை வளர்த்துவரும் குடும்பதலைவி கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது தனது கண் பார்வையிழந்த கணவரின் மருத்துவ செலவுகளையும் இதன் மூலம் பெறும் வருமானத்திலையே பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலரும் அஞ்சும் முள்ளம் பன்றிகளால் ஒரு குடும்பமே வாழ்ந்து வருகின்ற சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் : ஊசியால் தொடரும் சோகம்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த யுவதிக்கு வழங்கப்பட்ட ஊசி மற்றுமொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டு ஒவ்வாமைக்கு உள்ளான நிலையில் அவர் கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.

கண்டி தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.அனுலாவதி என்ற பெண்ணே இந்த கொடிய ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஊசி ஏற்றிய பின்னர் கடுமையான ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட குறித்த பெண்ணுக்கு தீவிர சிகிக்சை வழங்கி அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருவதாக தெரியவந்துள்ளது.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த சமோதி சந்தீபனி மதுஷிகா ஜயரத்னவின் மரணம் தொடர்பில் விளக்கமளித்த வைத்திய நிபுணர்கள், இவ்வாறான ஒவ்வாமைகள் மிகவும் அரிதாகவே பதிவாகும் எனவும், இதற்கு ஒன்றும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலிறுயுறுத்தியும் பேரணி!!

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்கு பற்றுதலுடன் குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (14.07) மாலை இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இனியும் கலவரம் வேண்டாம், பிரிவினைகள் வேண்டாம், சமூக ஒற்றுமையை குலைக்காதே, ஆட்சியாளர்களே இனவாததிதை தூண்டாதே, யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே, நாடு பூராகவும் ஜீலை கலவரத்தை திட்மிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாறி மாறி ஆடசிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பனவே இந்த நாட்டின் இன நல்லுறவு சீர்குலைத்து கலவரங்கள் ஏற்படக் காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15) வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் மருந்துகள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையை கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லான கூறுகிறார்.

அத்துடன் இந்திய கடன் உதவியின் கீழ் தரம் குறைந்த நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வதே இந்த நிலைக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பாணந்துறை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

கடுகண்ணாவவில்..

கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சுற்றுலா செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு அவரது அறையை உடைத்த பொலிஸார் அவரது உடைமைகள் சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.பெண் விடுதி திரும்பாததால் அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (13) முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் திரும்பி வருவாரா என்பதைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்திடம் பொலிஸார் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13) முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் Bupivacaine என்ற மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருந்தின் ஒரு தொகுதியில் ஒரு பதார்த்தம் குறைவாக இருந்தமையே உயிரிழப்பிற்குக் காரணம் என்பது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியிருந்த நிலையில் தற்போது அந்த மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த காலப்பகுதியில் பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கலில் பராமரிப்பற்ற காணியில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் பராமரிப்பற்ற காணியிலிருந்து இன்று (14.07) மதியம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று குறித்த கைக்குண்டுனை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டமையினையடுத்து அவர்கள் கைக்குண்டை பாதுகாப்பான முறையில் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

வவுனியாவில் 10 கிலோ 74 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.07) இரவு 11.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் குறித்த பேரூந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தின் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவில் புவனேகா முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தியமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.