நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்படும் இலங்கை பெண்கள்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

ஓமானில்..

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணிப்பெண்களை காப்பாற்றி நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு தடுத்து வைக்கப்பட்டோர் உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

இலங்கை முகவர்கள் ஊடாக ஒமானுக்கு பணிப்பெண்களாகச் சென்ற 75 பணிப் பெண்கள், அங்கு பணிபுரிந்து வந்த வீடுகளின் உரிமையாளர்களால் அடித்து மற்றும் நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் 9 மாதங்களாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளதாவது, தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்களை (சேவ் கவுஸ்) என்ற இடத்தில் தங்க வைத்துள்ளனர்.

மேலும், தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைத்துள்ளனர். பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கி வருகின்றதுடன், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன், இங்கிருந்து நாட்டுக்குச் செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இதனை வெளியிடுமாறு தெரிவித்துக் கதைத்து அனுப்பியுள்ளோம்.

எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம். என கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள காணொளியில் பதிவிட்டுள்ளனர்.

வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அடைப்பு – அகற்றுமாறு கட்டளை பிறப்பிப்பு!!

2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டானிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டானிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதோத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்படுகின்றது.

அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,

அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர், அரசாங்க அதிபர், கொழும்பு கமநல திணைக்கள ஆணையாளர் நாயகம், பொலிஸ் அத்தியஸ்தகர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாவும்,

கட்டிடங்கள் அனுமதி வழங்காமல் இருப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வவுனியா நகரசபை செயலாளருக்கும், பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வவுனியா பொலிஸ் நிலை பொருப்பதிகாரிக்கும்,

குறித்த வேலியினை அகற்றுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கமநல சேவை நிலையம் கோவிற்குளத்திற்கும் , பட்டானிச்சூர்புளியங்குளம் கிராம சேவையாளருக்கும் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார்.

கடன் வாங்கி விட்டு காணாமல்போன காதல் கணவர்… மன உளைச்சலில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

கோவிலம்பாக்கத்தில் காதல் கணவர் வாங்கிய கடனை கேட்டு வந்த தொல்லையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்து கோவிலம்பாக்கம் ஓம் சக்தி நகரை சேர்ந்த கோபியும், சிந்துஜாவும் காதலித்து பெற்றோர் சம்மத்துடன் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர்.

கோபி ஆடிட்டராக பணிபுரிந்து வருவதாகவும், இதற்கு முன்பு பலரிடம் கடன் பெற்று அரிசி மண்டி, டூவீலர் ஷோரூம், எண்ணை கடை , ஏலச்சீட்டு போன்ற தொழில்களில் ஈடுபட்டு அதில் அதிகளவு நஷ்டம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கோபிக்கு கடன் தொல்லை அதிகரித்து குடும்பத்தில் நிம்மதியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேடவாக்கம் வடக்குப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கோபி கடந்த 13ம் தேதி தனது மனைவி சிந்துஜாவை அழைத்துக் கொண்டு கோவிலம்பக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் விட்டுவிட்டு ஆந்திரா செல்வதாக கூறி சென்றுள்ளார்.

தன்னிடம் கடன் பெற்றவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக கூறி சென்ற கோபி கடந்த 24ம் தேதி மனைவிக்கு போன் செய்துள்ளார். அதன் பின்னர் கோபியை தொடர்பு கொள்ள முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோபிக்கு கடன் கொடுத்தவர்கள் சிந்துஜாவை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுக்கவே மனஉளைச்சலுக்கு ஆளான சிந்துஜா தனது மாமனார் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபியைத் தேடி வருகின்றனர்.

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை.. மணமேடையில் அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தங்கை!!

பீகாரில்..

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை மணமேடையில் வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி தங்கை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை வரணாக பார்த்துள்ளனர்.

மாப்பிள்ளை மாற்றும் பெண் வீட்டாருக்கு பிடித்து போகவே, ரிங்குவிற்கும் ராஜேஷிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதன்படி திருமணம் கடந்த 2-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்தது.

மணமகனும் – மணமகளும் மணமேடைக்கு வந்து மாலையை மாற்றிக்கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென வந்த ரிங்குவின் தங்கையான புதுல், ராஜேஷை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதனை கேட்டு இரு வீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். மேலும் தனக்கு அவரை கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்கை அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பெண் வீட்டாரோ மாலையெல்லாம் மாற்றியாச்சு. எனவே அது முடியாது என்று எவ்வளவோ எடுத்து கூறியும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர்.ஆனால் தங்கை புதுலோ தனக்கும் ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து பிரச்னை மேலும் மேலும் அதிகரிக்கவே அக்கா ரிங்கு, ராஜேஷை விட்டு கொடுத்தார். இருப்பினும் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்னை பூதாகரமான நிலையில், போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் புதுல் படிக்க வெளியூருக்கு சென்ற சமயத்தில் ராஜேஷிடம் பழகியுள்ளார். இருவரும் மணி கணக்காக போனில் உரையாடி பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருமே காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை கேட்டு இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாப்பிள்ளை ராஜேஷ், ரிங்குவிற்கு பதில் அவரது தங்கை புதுலின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞன்.. கடனை திரும்ப கேட்டதால் நடந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.

அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் பெரும் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரும்ப வழங்காததால் ஆதிரா, தான் கொடுத்த பணத்தை அகிலிடம் திருப்பி கேட்டு உள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் பணம் கொடுக்காமல் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வேலைக்கு சென்ற ஆதிராவை காணவில்லை என்பதால், அவரை கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆதிராவை கண்டுபிடித்து தரக்கோரி சனல் அங்கமாலி போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 29ம் தேதி ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள்.

தொடர்ந்து போலீசார் அகிலை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகில் கூறியதாவது, ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றேன். அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டேன், என தெரிவித்தார்.

மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்று ஆற்றின் கரையில் கிடந்த ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றினர்.

எனினும் சில பாகங்களை தேடி வருகிறார்கள். கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகனின் மனைவியை திருமணம் செய்துகொண்ட மாமனார் : வைரலாகும் வீடியோ!!

திருமணம்..

முதியவர் ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தனது மாமனாரை திருமணம் செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் தனது கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர். இது தெரிந்த ஊடகவியளாலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்கள் தனது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாகவும் இது முற்றிலும் திட்டமிட்டு வெளியிடப்பட்ட வீடியோவாகும்.

இந்த மாதிரி சம்பவங்கள் நாட்டில் அதிகமாக நடந்து வருவதாகவும்,அதை வெளிக் கொண்டுவந்து காட்டும் முயற்சியிலும் செய்தனர் என தெரிவித்தள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்க்காலில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம் : போட்டிபோட்டு அள்ளிய மக்கள்!!

பீகாரில்..

கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா – பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை ஒன்று கிடந்தது. அதோடு சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன.

இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து கிராம மக்கள் பணத்தை எடுக்க முண்டியடித்தனர்.

கழிவு நீரில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர். இந்நிலையில் அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலர் பண மூட்டையை கால்வாயில் வீசி சென்றதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாடசாலை மாணவியின் மர்ம மரணம்.. சிக்கிய கார் சாரதி!!

களுத்துறையில்..

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் கார் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வந்துள்ளமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது இளம் பெண் ஒருவரும், மற்றைய இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதுடன், ​​​​20 நிமிடங்களுக்கு பின் மற்றைய இளைஞனும் பதற்றத்துடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புகையிரத தண்டவாள பகுதியில் பெண்ணொருவர் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் விடுதிக்கு சென்ற ஆணொருவரும், பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர் இரு திருமணம் முடித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

களுத்துறையில்..

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த பிரதேசத்தின் நகர சபையில் போட்டியிடும் ஒருவரை பாடசாலைக்கு அழைத்து அவருக்கு அரசியல் இலாபம் கிடைக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மீறி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அதிபரின் நடவடிக்கையால் தங்கள் பெண் பிள்ளைகள் கூட சரியாக வளர்க்க முடியவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் அளித்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன்னர் இரண்டு இளைஞர்களுடன் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற 16 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளும் அதே பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.

மாலை நேர வகுப்பு என்ற போர்வையில் இரண்டு இளைஞர்களுடன் விடுதிக்கு சென்ற மாணவிகளில் ஒருவரின் நிர்வாண சடலம் விடுதிக்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் சடலங்களாக மீட்பு!!

கெட்டயாபத்தனையில்..

குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மத்துரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தில் கெட்டயாபத்தனை கிராமத்தில் வசித்த டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர (வயது 12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் சடலம் சம்பவ தினத்தன்று இரவு 09.30 மணியலவில் மீட்க்கப்பட்டுள்து.

அதேநேரம் நீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவிதித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து

வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்…

இலங்கை போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் 132 பேர் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும், அவர்களுக்கு இன்டர்போல் காவல்துறையினர் சிவப்பு வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள அகதிகள் என்பதுவும் இவர்களுக்கு டயஸ் போரா பாதுகாப்பு வழங்கி வருவதுவும் தெரியவந்துள்ளது.

மோதர பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் உட்பட 47 இலங்கை கடத்தல்காரர்கள் பிரான்சில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து 100 மைல் தொலைவில் அவை அமைந்துள்ளது.

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என சர்வதேச காவல்துறையினர் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை,பிரான்ஸில் கைதான அஞ்சுவை அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ். தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்ற முடியாது: சவேந்திர சில்வா

யாழ். தையிட்டி விகாரையை….

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது என தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டியில் கடன் வசதி! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

குறைந்த வட்டியில் கடன் வசதி!….

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடன் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடன் வசதியைப் பெறுவதற்கான ஒரே தகுதி வெளிநாட்டில் பணிபுரிவது அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்து திரும்பி வந்து இந்நாட்டில் தொழில் தொடங்குவது மட்டுமே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படாத வகையில் இந்த கடன் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சிறப்புத் திட்டம்

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்….

நாட்டின் சிறுவர்களுக்கான போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (07.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்கவுள்ளோம்.

அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்.

மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்துள்ள உணவை வழங்குவதற்குத் தேவையான உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு தயாரான இளம் தம்பதி நீரில் அடித்து சென்று மாயம்

திருமணத்திற்கு தயாரான இளம்…

வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இளம் காதலர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இளம் காதலர்கள் நீராடச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் திருமண பந்தத்தில் இணைய எதிர்பார்த்திருந்த 19 வயதுடைய இளம் காதலர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போன இளைஞன் வெயங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும், யுவதி குடாஓயா லபுதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன காதலர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு – 25 பேர் மரணம் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு…

இந்த வருடத்தில் சுமார் 300,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகலாம் என மருத்துவ திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், சமூகத்தில் மேலும் 10 நோயாளிகள் இருப்பதாக அனுமானித்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 30,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகர எல்லைக்குள் 1337 பேர் காய்ச்சலுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1138 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவும் தன்மை காணப்படுவதால் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் மூன்றாவது டெங்கு திரிபின் தீவிரத்தை தாங்கும் நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இல்லை என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோய்க்கு பலியாவதைத் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.