காதல் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை : கணவன் தப்பி ஓட்டம்!!

திருச்சியில்..

திருச்சியில் பாலடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 40). பெயிண்டர். இவருடைய மனைவி சபுராபீவி என்கிற நிஷா (35). இருவேறு மதத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் இவர் தனது மனைவி சபுராபீவியை பொன்மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே ரெயில்வேக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு நேற்று இரவு அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சபுராபீவியை கீழே தள்ளி அவரது கழுத்தை சேலையால் இறுக்கியுள்ளார்.

பின்னர் அவருடைய தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சபுரா பீவி வீட்டில் இல்லாதது குறித்து அவரது உறவினர்கள் பொன்மலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அந்த பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பாாத்துள்ளனர். அப்போது அங்கு சபுராபீவி கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் நடத்தையில் சந்தேகப்பட்டு சதீஷ்குமார் மனைவியை பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ்குமாரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஜாதி மாறி காதலித்த மகள்… கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை… ரயில் முன் பாய்ந்த காதலன்!!

கர்நாடகாவில்..

வேற்று ஜாதி இளைஞரை காதலித்த மகளை பெற்ற அப்பாவே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். காதலி இறந்ததையடுத்து காதலனும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் போடகுர்கி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது 20 வயது மகள் கீர்த்தி. அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த கீர்த்தி, அதே பகுதியை சேர்ந்த கங்காதர் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

24 வயதான கங்காதர் பட்டியலினத்தை சேர்ந்தவர். தினக்கூலியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கங்காதருடனான காதல் விஷயம் கீர்த்தியின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

கங்காதர் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு கீர்த்தியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த திங்கள் கிழமை இரவு கீர்த்தி வீட்டில் பெரியா களேபரமே நடந்ததாக தெரிகிறது.

இருப்பினும் தனது காதலில் உறுதியாக இருந்த கீர்த்தி, கங்காதரை திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதையடுத்து நேற்றுக் காலை மீண்டும் கீர்த்திக்கும் அவரது தந்தைக்கும் இதுதொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி பெற்ற மகள் என்றும் பார்க்காமல் கீர்த்தியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். தனது காதலி மரணமடைந்த தகவலை கேட்ட கங்காதர் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பின்னர் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், வண்டியை நிறுத்துமாறு கூறி இறங்கியுள்ளார். வண்டியில் இருந்து இறங்கிய கங்காதர் கண் இமைக்கும் நேரத்தில் அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்துள்ளார்.

இதில் கங்காதர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கம்மசமுந்த்ரா பகுதி போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்துள்ளனர்.

வேற்று ஜாதி இளைஞரை காதலித்த பெண்ணை அவரது தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் காதலனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது போடகுர்கி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

6 வயதுச் சிறுவனை அடித்துக் கொன்ற 13 வயதுச் சிறுவன்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுவன் ஒருவன், 6 வயது பிள்ளையை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரின் சிவில் லைன் பகுதியைச் சேர்ந்தவர் யோகேந்திரா. இவரது மகன் யோக் (6). இவரை மதியம் முதல் காணவில்லை என்பதால் யோகேந்திரா பல இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது பாழடைந்த கட்டிடம் ஒன்றின் அருகே தனது மகன் பிணமாக கிடந்ததைப் பார்த்துள்ளார் யோகேந்திரா. அதுவும் செங்கல்லால் தாக்கப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு யோகேந்திரா கதறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். பொலிஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியபோது அதிர்ச்சி காத்திருந்தது. யோகேந்திரா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 13 சிறுவன் தான் அவரது மகனை செங்கலால் தாக்கி கொலை செய்துள்ளான் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். எனினும் யோக்கை ஏன் சிறுவன் கொலை செய்தான் என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற கொடூர தந்தை.. விதிக்கப்பட்ட அதிரடி தண்டனை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் நார்தன்ட்ஸ் பகுதியின் கெட்டரிங் என்ற இடத்தில் (Kettering, Northants) உள்ள வீடு ஒன்றில் மனனவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 52 வயதுடைய கணவர் சஜு செலவலேல் கைது செய்யபட்டு இருந்தார்.

35 வயதுடைய மனைவி அஞ்சு அசோக் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்து இருந்த நிலையில், அவர்களது 6 வயது மகன் ஜீவா சஜு மற்றும் 4 வயது மகள் ஜான்வி சஜு இருவரும் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டனர்.

கெட்டரிங் பொது மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த மனைவி அஞ்சு அசோக் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் சஜு செலவலேல்(Saju Chelavalel) அவரை கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூன்று பேரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு சென்று சோதனை நடத்திய போது கணவன் சஜு செலவலேல் கையில் கத்தியுடன் தன்னைச் சுட்டுக் கொன்று விடுமாறு பொலிஸாரை வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையில் அருகில் உள்ள அறைகளில் இருந்து மனைவி உடல் மற்றும் இரண்டு குழந்தைகளை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணை நார்த்தாம்டன் கிரவுன் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மூன்று பேரை கொலை செய்த குற்றம் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கணவர் சஜு செலவலேல் மீது சுமத்தப்பட்டது.

அத்துடன் அவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கலாம் என தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் இறுதிவரை மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை எதற்காக கொன்றேன் என்ற காரணத்தை கணவர் சஜூ செலவலேல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி மோகத்தால் பலியான இரு இளைஞர்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பூரில்..

இன்றைய இளைய தலைமுறையினரிடையே செல்பி மற்றும் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. காலையில் எழுந்து பல் தேய்ப்பதிலிருந்து இரவு தூங்க செல்வதற்கு குட் நைட் செல்வது வரை ஒரே செல்பி மையம் தான்.

இதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் வாங்க துடித்து வருகின்றனர். அத்துடன் பைக் ரேசில் செல்பி கோவில்களில் செல்பி ஏன் துக்க வீடுகளில் கூட வீடியோ கால் அழைப்புகள் மோகம் தான் அதிகரித்து வருகிறது.

இதில் புதுவிதமான செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மூலம் அதிக லைக்குகள் பெற போட்டா போட்டியும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

இதனால் பூங்கா, சுற்றுலா தலங்களை கடந்து சாலை நடுவே செல்ஃபி, வாகனத்தில் பயணித்தபடி செல்ஃபி, ரயில் பயணங்களில் செல்பி, பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டே செல்பி என அபாயகரமான நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வகையான வீடியோக்களுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதால் இது போன்ற செய்திகளை எடுப்பதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இதற்கு ஒரு படி மேலே சென்று திருப்பூரில் ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் அருகே உள்ள அணைப்பாளையம் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியில் வசித்து வரும் இளைஞர்கள் பாண்டியன், விஜய் ஆகிய இருவரும் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி உள்ளனர்.

நேற்று ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ரயில் முன்பாக நின்று செல்பி எடுக்கப் போவதாக தன்னுடைய சக நண்பர்களிடம் பெருமையாக கூறிவிட்டு வந்தனர்.

இருவரும் அறையிலிருந்து கிளம்பி ரயில் செல்லும் போது செல்பி எடுப்பதற்காக ரயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டு இருந்தனர். சரியாக ரயில் வரும்போது செல்பி எடுக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக இருவர் மீதும் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரயிலுக்காக காத்திருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் இருவரது உடல்களையும் திருப்பூர் ரயில் நிலைய இருப்பு காவல் நிலைய போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற 2 இளைஞர்கள் மீது ரயில் மோதி 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டியூசன் செல்லும் வழியில் தந்தை கண் எதிரே மகளுக்கு நேர்ந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் கல்லூரி மாணவி ஒருவர், பேருந்து விபத்தில் தந்தை கண்முன்னே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கர்நாடக மாநிலம் மல்லீஸ்வரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தவர் திஷா (17). இவர் தினமும் தனது தந்தையுடன் டியூசன் வகுப்பிற்கு இருசக்கர வாகனத்தில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

நேற்றைய தினம் காலை 6 மணியளவில் திஷா தனது தந்தையுடன் சென்றுகொண்டிருந்தபோது, தனியார் பேருந்து ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் பேருந்து சக்கரத்தில் மாணவி திஷா சிக்கியுள்ளார். அவரது தந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து போக்குவரத்து பொலிஸார் கூறும்போது, பேருந்தை இயக்கிய சாரதி இருசக்கர வாகனத்தை ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளார். அதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் தந்தை மற்றும் மகள் இருவரும் பயணம் செய்தபோது தலைக்கவசம் அணிந்திருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.இந்த நிலையில் பொலிஸார் விபத்தை ஏற்படுத்திய சாரதியை கைது செய்து, பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலியை திட்டமிட்டு வரவழைத்து காதலன் செய்த மோசம்!!

லிந்துலையில்..

லிந்துலை பிரதேசத்தில் காதலியிடம் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.20 வயதுடைய காதலன் நானுஓயா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரிய வந்துள்ளது.

இந்த இளைஞன் பசறை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணுடன் உறவுமுறையில் ஈடுபட்டுள்ளார். குறித்த இளைஞனுக்கு பணத் தேவை இருந்ததால் திட்டமிட்டு தனது காதலியை லிந்துலை பிரதேசத்திற்கு வரவழைத்து,

தங்கப் பொருட்கள் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

வவுனியாவில் விருந்தினர் விடுதி முற்றுகை : 20 வயது இளம் பெண் உட்பட நால்வர் கைது!!

வவுனியா ஏ9 வீதி மூன்றுமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விருத்தினர் விடுதியில் பாலியல் தொழில் இடம்பெறுவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த விடுதியில் திடீர் சுற்றிவளைப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டனர் எனும் குற்றச்சாட்டில் விடுதியில் தங்கியிருந்த 20, 34 வயதுடைய இரு பெண்களும், போதைப்பொருள் பாவித்திருந்தமையுடன் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக செயற்பட்டனர் எனும் குற்றச்சாட்டில் இரு ஆண்கள் என நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரின் மருத்துவ அறிக்கைகள் பெறப்படவுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன்,

குறித்த விருந்தினர் விடுதியில் பாலியல் தொழிலானது முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரியின் பின்னணியில் இயங்குகின்றமையும் பொலிஸார் விசாரணைகளின் வெளியாகியுள்ளன.

ஒரே நாளில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,830 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அதேசமயம், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 152,800 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 145,850 ரூபாவாகவும், 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,230 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் திருமணமாகி ஒரே ஆண்டில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-07-2023) 12-00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அச்சுவேலி பகுதியில் தொழில் புரிந்து வரும் குறித்த குடும்பஸ்தர் நண்பர் ஒருவரை சாவகச்சேரியில் இறக்கிவிட்டு வடமராட்சி தேவரையாளி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்ற வேளை மோட்டார் சைக்கிள் மரத்துடன் மோதிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் வடமராட்சி தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் வயது 30 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர்.மேலும் அவருக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முயன்ற இரண்டு பிள்ளைகளின் தாய்!!

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (05.07.2023) காலை இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா பொலிஸாரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருநாகல் வரக்காபொல பகுதியில் வசித்து வரும் 34 வயதுடைய குறித்த பெண்ணிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களின் குடும்பத்தினுள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பிள்ளைகளையும் தந்தை அழைத்துச்சென்று இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த இரண்டு பிள்ளைகளின் தாய்க்கும் வன்னி இராணுவ தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் குடும்பஸ்தரான இராணுவ வீரருக்குமிடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. எனினும் சில வாரங்களாக குறித்த இராணுவ வீரருடைய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த குறித்த குடும்பப் பெண் அவரைத் தேடி வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு சென்ற போதிலும் குறித்த இராணுவ வீரரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பெண் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தீக்குளிக்க முற்பட்ட சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் அவர் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குறித்த பெண்ணுக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

இலங்கை வைத்தியசாலையில் தாய் உட்பட 3 சிசுக்களுக்கு நேர்ந்த சோகம்!!

ராகமவில்..

ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார்.

எனினும் அடுத்த நாள் கர்ப்பிணியான குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் இடம்பெற்றதாக உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.அதேவேளை, கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலையின் தவறினால் ஏற்பட்டதல்ல என ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகள் பல லட்சம் ரூபாய் செலவழித்து செய்கின்றன. இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள்.குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாகப் போகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த தாயையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக போராடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஏ9 வீதியில் வானுடன் மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : இளைஞன் ஒருவர் பலி!!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07.2023) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை ஏ9 வீதிஅரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் கனரக வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில்,

எதிர்த் திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதுடன் 600 மீற்றர் தூரம் வரையில் மோட்டார் சைக்கில் தரையில் இழுத்துச் சென்றுள்ளாதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ் விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமையுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியா ஊடக அமையத்திற்கும் USAID நிறுவனத்திற்கும் இடையில் வலுவூட்டல் தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்து!!

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த ஒப்பந்தம் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் திருமதி சபர்ஜா முகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், அமெரிக்க நிறுவன திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (04.07) கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்காவைத் தலமையகமாக கொண்டு இயங்கும் குறித்த நிறுவனம் (USAID) பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த மற்றும் போரால் பாதிப்படைந்த நாடுகளுக்கு தனது உதவித் திட்டங்களை வழங்கி வருகின்றனது.

அதன் ஒரு கட்டமாக வவுனியா ஊடக அமையத்தின் கோரிக்கைக்கு அமைவாக வவுனியா ஊடகவியலாளர்களை வலுப்படுத்தல், ஊடக அமையத்தை மாவட்ட மட்டத்தில் வலுவூட்டல், மாவட்ட மக்களின் காணிப் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்வு நோக்கி நகர்த்துதல்,

தென்பகுதி ஊடகவியலாளர்களுடன் தொழில்சார் தொடர்புகளை பேணல் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் ஊடகம் தொடர்பில் அறிவூட்டல் மற்றும் ஊடகப் பிரிவை ஆரம்பித்து வைத்தல் என்பவற்றை நோக்கமாக கொண்டு குறித்த ஓப்பந்தமானது கைச்சாத்திடப்பட்டது.

வவுனியா ஊடக அமையம் சார்பாக அதன் தலைவர் ப.கார்த்தீபன் , அமெரிக்க நிறுவனத்தின் சார்பாக அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இதற்கு அமைவாக எதிர்வரும் 4 மாதங்களுக்கு குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதில் வவுனியா ஊடக அமையத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் குப்பையை எரித்ததால் நடந்த விபரீதம்!!

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் பரவிய தீயை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று (04.07) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போது குறித்த தீயானது மண்டபத்திலும் தீப்பிடித்து எரிந்திருந்தது.

தீ பரவுவதை அவதானித்த உத்தியோகத்தர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் வவுனியா நகரசபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அருவியில் சாகசம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் சுமந்த் (23). இவர், சென்னையிலுள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் படித்து வந்தார். சென்னையிலேயே அறையெடுத்து தங்கிவந்தார். இந்நிலையில், ஜூன் 30ஆம் தேதி இவர் தனது நண்பர்களுடன் ஆந்திர மாநிலம், திருப்பதியிலுள்ள தலகோணா நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள நீர் வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தபோது சுமந்த் தனது நண்பர்களிடம், தான் அருவியில் குதிப்பதை வீடியோ எடுக்குமாறு கூறிவிட்டு பாறையில் இருந்து குதித்தார். தண்ணீரில் குதித்த சுமந்த் கீழே இருந்த பாறையில் சிக்கிக்கொண்டார். அதிலிருந்து மீண்டு வர போராடியும் அவரால் இயலவில்லை.

இதனை சற்றும் எதிர்பாராத சுமந்தின் நண்பர்கள் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் உதவி கேட்டு நாடினர். இருந்தபோதிலும், சுமந்தை காப்பாற்ற இயலிவில்லை.

உடனடியாக அவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுமந்தை மீட்க முயன்றனர். இரவு நேரம் ஆனதால் அவரை மீட்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 01) நீரில் மூழ்கிய சுமந்தை சடலமாக மீட்டனர். தொடர்ந்து, அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், இந்த தலகோணா நீர்வீழ்ச்சியில் தொடர்ந்து இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்து வருவதாகவும், இதுவரை மூன்று இளைஞர்கள் இதேபோல் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சில இளைஞர்கள் தடையை மீறி இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.